ஒரு காலத்தில் நீக்ரோ, கறுப்பர், வருணத்தார் போன்றவை இழிச்சொற்களாகக் கருதப்படவில்லை. சொல்லப்போனால், இளைய மார்ட்டின் லூதர் கிங் கூட கறுப்பர்களை நீக்ரோ என்றே குறிப்பிட்டார். ஆனால் காலப் போக்கில் கறுப்பின மக்களுக்கு ஒன்று மாற்றி ஒன்று சூட்டப்பட்ட பெயர்கள் எல்லாம் பின்னர் இழிச்சொற்களாகிப் போயின. சமூகத் தளத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் மொழியில் மட்டும் புதுப் புதுச் சொற்களைப் புனைந்து செல்வதன் மூலம் எந்த மனித இழிவுகளையும் அழித்து விட முடியாது. தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அட்டவணைச் சாதியினர், ஆதி திராவிடர்கள், தலித்துகள் என எந்தப் பெயரைச் சூட்டினாலும் அது அவர்கள் வாழ்நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதில்லை, உள்ளபடியே அந்தச் சொற்களே கூட அவர்களுக்கான இழிச்சொற்களாகிப் போவதையே நாம் பார்த்து வருகிறோம். சமூகஅநீதிகளுக்கு மொழி பொறுப்பாகாது என்பதே இங்கு நாம் உணர வேண்டிய செய்தி.

இன்று கறுப்பின மக்கள் தங்களுக்குள்ள எந்தப் பெயர்களையும் விரும்பவில்லை, அவர்கள் தாங்கள் வாழும் நாட்டைப் பொறுத்துத் தங்களை ஆப்பிரிக்க அமெரிக்கர், ஆப்பிரிக்க பிரெஞ்சுக்காரர், ஆப்பிரிக்க பிரித்தானியர் என்றே அழைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.

ஆங்கில மொழி நடை என்றில்லை, ஆங்கிலப் படைப்புகளிலும் கூட மிக எளிதாக இழிச் சொற்கள் பயன்படுத்தப்படுவதை மேலே கண்டோம்.

இன்றுங்கூட சிறுவர் கதைகள், புதினங்கள், திரைப்படங்கள் என எந்த ஆங்கிலப் படைப்பாக இருந்தாலும் கறுப்பர்களை மறைமுகமாகப் பின்னுக்குத் தள்ளும் செயல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. கறுப்பின மக்கள் 1940, 50களில் வெளியான ஆங்கிலத் திரைப்படங்களில் வேலைக்காரர்கள், விபச்சாரத் தரகர்கள், போக்கிரிகள் போன்ற வேடங்களிலேயே நடித்து வந்தனர். 1970கள் தொடங்கி இன்று வரை வெள்ளையர்களின் ஏவலாளராக, உதவியாளராக நடித்து வருகின்றனர். எந்தப் படைப்பிலும் கறுப்பினத்தவர் ஒரு வெள்ளையருக்கு வழிகாட்டுபவராக இருக்க மாட்டார்கள். ராக்கி 4, அபோகேலிப்ஸ் நவ், பிரிடேட்டர் போன்ற ஆலிவுட் மசாலாப் படங்களில் எல்லாம் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் துணைக் கதாபாத்திரத்திரகளில் மட்டுமே நடிப்பார்கள். அவர்கள் வெள்ளைக் கதாநாயகர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து விட்டுக் கடைசியில் உயிரைத் தியாகம் செய்து அவர்களைக் காப்பாற்றுவார்கள் (தமிழ்ப் படங்களிலும் காதலைத் தியாகம் செய்பவர்தானே துணை நாயகர்!).

ஆங்கிலத்தில் கறுப்பர்களை இழிவுபடுத்தும், வெள்ளையரைப் போற்றும் பழமொழிகள் பல உண்டு. சிலவற்றைப் பாருங்கள்: கருப்பனைக் கருப்பன்னுதானே சொல்ல முடியும் (To call spade a spade), நீ சுதந்திரமானவன் மட்டுமா, வெள்ளையன் நீ, அதுவும் 21 வயது கடந்த இளைஞன் நீ, கொண்டாடு மகனே (You're free, white, and over 21), ஒரு கழுதை செத்தால் இன்னொரு கழுதை வாங்கு, பணியில் ஒரு கறுப்பன் செத்தால் இன்னொரு கருப்பனை அமர்த்து (Kill a mule, buy another one; Kill a nigger, hire another one), கனி கருக்கச் சாறு சுவைக்கும் (The blacker the berry the sweeter the juice - கறுப்புப் பெண்ணைக் காம நோக்கில் செய்யும் நையாண்டி), விறகு வண்டியில் முழிக்கும் கறுப்பன் (Nigger in the woodpile - திருடும் கறுப்பர்கள் விறகு வண்டியில் ஒளிந்து கொள்வதை வைத்து உருவான பழமொழி, முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறான் என்னும் தமிழ்ப் பழமொழியுடன் ஒப்புநோக்குங்கள், புரியும்).

மீனா கந்தசாமி சொல்வது போல் தமிழில் சாதிக் குறியீடு உண்டு என்றால், ஆங்கிலத்திலும் நிறவெறிக் குறியீடு வழிய வழிய உண்டு என்பதை இது வரை தெளிவாகக் கண்டு விட்டோம்.

தமிழ் ஒரு சாதிய மொழி எனக் காட்டுவதற்கு வேறொரு கருத்தையும் அவர் அண்மையில் வெளிப்படுத்தினார். விஜய் தொலைக்காட்சியில் அண்மையில் விடுதலை நாள் அன்று (15.08.2011) நடைபெற்ற நீயா? நானா? என்னும் நிகழ்ச்சியில் ஆங்கிலம் கலவாது தமிழ் பேசுவது குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அவர் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது சரியே என வாதிட்டோரின் பக்கம் நின்று பேசினார்.

சாதியத் தமிழால் தம் பள்ளி வாழ்க்கையில் தான் பெரும் இன்னல்களைச் சந்தித்ததாகக் கூறினார். அவர் பள்ளியில் அவருடன் படித்தவர்கள் பெரும்பாலும் பார்ப்பன மாணவிகளாம். அவர்கள் இவர் பேசும் தமிழைக் கிண்டலடித்தார்களாம். வெட்கம் தாங்காமல் இவரும் ஆங்கிலத்தில் பேசித் தன்மானம் காத்துக் கொண்டாராம். அது மட்டுமல்ல, அவர்கள் ஏச்சிலிருந்து தப்பிக்க அங்கயற்கண்ணி என்ற தம் பெயரை மீனா என மாற்றிக் கொண்டாராம். தன் தமிழ்ப் பெயரிலும் தன் மொழியிலும் நம்பிக்கை வைக்காது சமற்கிருதத்தின் மீதும், ஆங்கிலத்தின் மீதும் அவர் நம்பிக்கை வைத்தது, தனது தாய்த் தமிழின் மீது அவருக்குள்ள நம்பிக்கையின்மையையே காட்டுகிறது. இங்கு மீனா என்ற பெண்ணின் தனிமனிதச் செயற்பாடுகளை விமர்சிப்பது எனது நோக்கமன்று. இங்கு ஆங்கிலம் தமிழர்களைச் சுற்றியும், முற்போக்குச் சிந்தனையர்களைச் சுற்றியும் எப்படிப்பட்ட மாய வலையைப் பின்னி வைத்துள்ளது என்பதைப் புரிய வைக்கவே இதைக் குறிப்பிட்டேன்.

மீனா அதைத் தொடர்ந்து ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி 'மாமன்' என்னும் சொல்லுக்கு 'பறைப்பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர்' (Tamil Lexicon, University of Madras, தொகுதி 5, பக்கம்: 3162) என்று ஓர் அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாக மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஒரு சாதியைத் தமிழ்ப் பேரகராதியே இழிவுப்படுத்துவதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? தமிழை ஒரு சாதிய மொழியாகக் கருதுவதில் என்ன தவறு? என்றெல்லாம் மிக உருக்கமாகக் கேட்டார். இது போலத்தான் மீனாவைப் போன்ற பெரியார்வழிச் சிந்தனையர்களும் தமிழ் இலக்கியங்களில் சாதிக் குப்பையைத் தவிர வேறொன்றுமில்லை என்கின்றனர்.

இங்கும் சொல்கிறேன், தமிழ் இலக்கியங்களின் சாதிய ஆதரவு குறித்தோ, அல்லது மீனா கூறுவது போல் தமிழ்ப் பேரகராதியின் இழிவான சாதிய நோக்கு குறித்தோ விமர்சிப்பதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. தமிழ்ப் பேரகராதி மாமனுக்குக் கூறியுள்ள அந்தப் பொருளை ஒட்டத் துடைத்தெறிய வேண்டும் என்பதே ஞாயமான மனிதநேயப் பார்வையாக இருக்க முடியும். இப்போதும் நமக்கு எழும் கேள்வி, ஆங்கில நூல்கள் அனைத்தும் மாந்தநேயக் கருவூலங்களா? பார்த்து விடுவோம்.

என்சைக்ளோபிடியா பிரித்தானியா (Encyclopaedia Britanica) எனப்படும் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் உலகப் புகழ்பெற்ற குறிப்பகராதி ஆகும். 1768 முதல் இன்று வரை நான்கு நூற்றாண்டுகளில் தடம் பதித்துப் பல பதிப்புகளைக் கடந்து ஆங்கிலத்தின் மிகப் பழமையான பேரகராதி என்ற பெருமை படைத்தது. இந்தப் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் நீக்ரோக்கள் என்ற சொல்லுக்குக் கொடுத்த விளக்கம் என்ன எனக் காண்போம்.

1911இல் 11ஆம் பதிப்பாக வெளிவந்த பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் 344ஆம் பக்கத்தில் நீக்ரோக்கள் குறித்து ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதியை அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறேன், பாருங்கள்:

நீக்ரோ: சில பண்புக்கூறுகளை வைத்துப் பார்க்கும் போது, வெள்ளையர்களுடன் ஒப்புநோக்கின் நீக்ரோக்கள் படிமலர்ச்சித் தட்டில் (evolutionary plane) இன்னுங்கீழே இருப்பவர்கள் என்றும், மனிதக்குரங்கு இனத்தில் (anthropoid) உச்சநிலையில் உள்ள மனிதக்குரங்குகளுக்கு இன்னும் மிக நெருக்கமானவர்கள் என்றும் தோன்றுகிறது.

அறிவு வகையில் நீக்ரோக்கள் வெள்ளையர்களை விடத் தாழ்வானவர்களே. அமெரிக்க நீக்ரோக்கள் குறித்து மிக நீண்ட ஆய்வு செய்து (சமூகவியலர்) ஃபிலிப்போ மனேட்டா முன்வைத்த கருத்து மொத்த இனத்துக்கும் பொதுவாகச் சரியானதே என எடுத்துக் கொள்ளலாம். அவரது கூற்று: "நீக்ரோச் சிறுவர்கள் கூர்மதியும் அறிவுத்திறமும் மாளாத் துடிதுடிப்பும் வாய்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் வயதுவந்த பருவத்தை நெருங்க நெருங்க அவர்களிடம் ஒரு மாற்றம் மெதுமெதுவாக ஏற்படத் தொடங்குகிறது. அறிவுத்திறம் மங்கத் தொடங்குவதாகப் படுகிறது, உயிர்த்துடிப்பான இடத்தில் சோம்பல் வந்து குடிபுகுகிறது, சுறுசுறுப்பின் இடத்தைச் சோம்பேறித்தனம் பற்றிக் கொள்கிறது. நீக்ரோக்களின் வளர்ச்சியும், வெள்ளையர்களின் வளர்ச்சியும் வெவ்வேறு வழிகளில் நடைபெறுவதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

வெள்ளையர்களைப் பொறுத்த வரை, அவர்களின் மூளைப் பருமன் கபால விரிவாக்கத்துக்கு ஏற்ப மென்மேலும் வளர்ந்து செல்கிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக நீக்ரோக்களைப் பொறுத்த வரை, அவர்களுக்குக் கபாலப் பொருத்துவாய்கள் முற்பட்டு மூடிக் கொள்வதாலும், கபால முன்னெலும்புகள் மேற்புறத்திலிருந்து அழுத்தம் தருவதாலும் அவர்களின் மூளை வளர்ச்சி தடைப்படுகிறது." இந்த விளக்கம் நீக்ரோக்களின் அறிவுக் குறைவுக்கு ஒரு காரணமாவது ஞாயமானதே, சொல்லப் போனால், நம்பத்தகுந்ததே. ஆனால் இந்தக் கருத்துக்குப் போதுமான சான்று இல்லை. நீக்ரோக்கள் பருவமெய்திய பிறகு அவர்களின் வாழ்விலும் சிந்தனையிலும் பாலியல் உணர்வுகள் முதலிடம் பிடித்துக் கொள்வதுதான் அவர்களின் மூளை வளர்ச்சி தடைப்பட்டுப் போவதற்கு, ஏன், கெட்டுப் போவதற்கே கூட காரணம் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.

படித்துப் பார்த்தீர்களா? நீக்ரோக்கள் மனிதக் குரங்குகளுக்கு மிக நெருக்கமானவர்கள், சரியான மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் என்பதெல்லாம் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் உதிர்த்த முத்துக்கள். உருப்படியான எந்த அறிவியல் சான்றேதும் அதனிடம் இல்லை, அவர்களிடம் பாலியல் உணர்வுகளே ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களது மூளை வளர்ச்சி கெட்டுப் போயிருக்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லையாம். இது அப்பட்டமான நிறவெறிக் கொழுப்பு இல்லையா?

ஆனால் 1929இல் வெளியான பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் 14ஆவது பதிப்பு நீக்ரோக்கள் உள்ளார்ந்த வகையில் அறிவுத் தாழ்வு படைத்தவர்கள் என்ற கருத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியது. ஆனால் படிமலர்ச்சித் தட்டில் அவர்களின் கீழ் நிலை குறித்த கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பதிப்பின் 193ஆவது பக்கத்தில் நீக்ரோக்கள் குறித்த தலைப்பில், கார்-சாண்டர்ஸ் என்னும் பிரித்தானியச் சமூகவியலர் கூறியுள்ள கருத்தைப் படியுங்கள்:

"அவர்களுக்கு (வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும்) இடையே உள்ளார்ந்த அறிவுத்திறத்தில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த வேறுபாடுகள் உளப்பாங்கிலும் சிந்தனைப் போக்கிலுமான வேறுபாடுகளே ஆகும்."

அதே பக்கத்தில் கார்-சாண்டர்ஸ் மேற்கொண்டு இதற்குரிய தீர்வையும் கூறுகிறார்: "நீக்ரோக்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்கப்பட்டால், அவர்களால் உலோகம், தச்சு, சிற்பம் போன்ற தொழில்களில் நல்ல திறமான கைவினைஞர்களாக விளங்க முடியும்."

நீக்ரோக்கள் உடலுழைப்பு செய்யவே தகுதியானவர்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது பிரித்தானியா.

இதே பதிப்பின் 368ஆம் பக்கத்தில் 'வேறுபாட்டு உளத்தியல்' (Differential Psychology) என்னும் தலைப்பிலான கட்டுரை இவ்வாறு கூறுகிறது:

"நீக்ரோக்கள் மூளைத் திறத்தில் வெள்ளையர்களை விடத் தாழ்ந்திருப்பது பலநேரம் ஒப்பீட்டு ஆய்வுகளைக் கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாட்டுக்கு நீக்ரோக்களின் அகவயப் பண்புகளோ, புறவயப் பண்பாடுகளோ எந்தளவுக்குக் காரணம் எனக் கூறுவது கடினம்."

இந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது:

"நீக்ரோக்களிடம் எந்தளவுக்கு வெள்ளைக் குருதிக் கலப்பு ஏற்படுகிறதோ செயற்பாட்டில் அவர்கள் அந்தளவுக்கு வெள்ளையர்களை நெருங்கிச் செல்வார்கள்."

நீக்ரோக்கள் மூளைத் திறத்தில் வெள்ளையர்களை விடத் தாழ்ந்தவர்களாம், ஆனால் அவர்கள் வெள்ளையர்களுடன் உடலுறவு கொண்டால் அறிவாளிகளாக வாய்ப்புண்டாம். என்னே பிரித்தானியாவின் அறிவியல் பார்வை! இப்படிப்பட்ட ஆங்கிலந்தான் தமிழகத்துப் பெரியார்வழிச் சிந்தனையர்களுக்கு முற்போக்கு மொழியாகத் தெரிகிறது.

பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் இந்த நிறவெறிப் போக்கு 1974 வரை தொடர்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆண்டு வெளிவந்த பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் 15ஆவது பதிப்பில் நீக்ரோக்கள் என்ற தலைப்பே நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சிறுபான்மையினரும் இனக் குழுவினரும் (Minorities and Ethnic Groups) என்னும் புதுத் தலைப்பு சேர்க்கப்பட்டது. மக்களிடையே அறிவிலும் பண்பிலும் காணப்படும் வேறுபாடுகளுக்குச் சமூகப் புற நிலைகளே காரணம் எனக் கூறியது.

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒரே ஓரிடத்தில் மறைமுகமாகச் சாதிய இழிவுக் கருத்து ஒன்றைக் குறிப்பிட்டதற்கே மீனா அந்த அகராதியின் மீதும், தமிழின் மீதும் சினங்கொள்கிறார். மீனா எடுத்துக் காட்டும் இந்த அகராதி 1982 பதிப்பு. ஆனால் உலகம் போற்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் 1974 வரை 'நீக்ரோக்கள் அறிவில் தாழ்ந்தவர்கள்' என நேரடியாகவே அவர்களை இழிவுபடுத்தி வந்துள்ளதே, இதற்கு மீனா என்ன சொல்லப் போகிறார்?

பிரித்தானியாவின் நிறவெறிக் கொழுப்புக்கு முடிவே இல்லை. அது நிறவெறிக்கு ஆதரவான அனைத்துப் பிற்போக்கு அமைப்புகளுக்கும் ஆதரவாக இருந்துள்ளது.

கு க்ளஸ் க்ளான் (Ku Klux Klan - KKK) என்பது அமெரிக்காவில் செயல்படும் ஓர் அமைப்பாகும். இதனைத் தமிழில் நம்மவர் வட்டம் எனக் கூறலாம். வெள்ளையர் மேலாண்மை, வெள்ளையினத் தேசியவாதம், வெள்ளையினத் தூய்மைவாதம், கறுப்பர் எதிர்ப்பு, யூதர் எதிர்ப்பு, கத்தோலிக்க எதிர்ப்பு, பொதுவுடைமை எதிர்ப்பு என அனைத்துப் பிற்போக்குக் கருத்துகளையும் தமது கொள்கைகளாகக் கொண்டு செயல்படும் ஒரு தீவிர வலதுசாரி அமைப்பிது.

இதனை அமெரிக்காவின் ஆர்.எஸ்.எஸ். எனலாம். 1950களில் அமெரிக்காவில் எழுந்த குடியியல் உரிமை இயக்கத்தை (Civil Rights Movement) இந்த அமைப்பு எதிர்த்தது என்பதை வைத்து இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் 11ஆவது பதிப்பு இந்த அமைப்பை ஆதரித்தது. வெள்ளைக்காரிகள் மீது அடிக்கடி வன்புணர்ச்சியில் ஈடுபடுவதாக நீக்ரோக்கள் மீது அப்பதிப்பு குற்றஞ்சாட்டியது.

எனவே நீக்ரோக்களைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கு இப்படி ஓர் அமைப்பு தேவை என ஈவிரக்கமற்றுக் குறிப்பிட்டது. (குறிப்பு: கு க்ளஸ் கான் இன்று அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதன் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இன்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வருகின்றன.) பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் இந்த நிலையுங்கூட 1974 வரை தொடர்ந்தது.

நீக்ரோக்களின் பாலியல் உணர்வால் அவர்களுக்கு அறிவு வளரவில்லை என பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறியதை மேலே கண்டோம். இங்கு அது ஒரு படி மேலே சென்று அவர்களைக் காம வெறி பிடித்த மனிதர்களைப் போல் சித்திரிக்கிறது.

இப்படி பிரித்தானியக் கலைக்களஞ்சியம் பிற்போக்கு அமைப்புகளை மட்டுமல்ல, புதிதாக உருவாகும் பிற்போக்குக் கொள்கைகளையும் ஆதரித்துள்ளது. யூஜெனிக்ஸ் என்னும் மனிதவிரோதக் கருத்து மேலை உலகில் உருவாகி வளர்ந்த போது பிரித்தானியக் கலைக்களஞ்சியம் என்ன கூறியது எனப் பார்ப்போம்.

யூஜெனிக்ஸ் (Eugenics) என்பது 20ஆம் நூற்றாண்டுத் தொடக்க வாக்கில் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் புகழடையத் தொடங்கிய ஒரு கருத்தியலாகும். 'இனமேன்மையியல்' என்பதே இதன் பொருள்.

இதன்படி குறைபாடுடைய ஓர் இனம் வருங்காலத்தில் ஓங்கி வளராமல் பார்த்துக் கொள்ளப்படும். இந்தக் கொள்கை 1900களில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் 1920களிலும், 1930களிலும் பெல்ஜியம், ஸ்வீடன், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் மனநோயாளிகளை மலடாக்கும் முயற்சி நடைபெற்றது. சொல்லப்போனால் அன்றைய அரசுகள் சில குறிப்பிட்ட 'மேன்மையான' இனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களின் இனப்பெருக்கத்தை மட்டும் அதி விரைவாகப் பெருக்கி நல்ல மரபீனி (gene) கொண்ட இனக்குழுக்களை வளர்த்தெடுக்க முடியும் என நம்பின, இதற்காக இனமேன்மையியல் கொள்கைக்கு ஆதரவளித்தன.

பல பல்கலைக்கழகங்களில் இனமேன்மையியல் துறைகள் இயங்கின. இந்தக் கொள்கை மேலும் வலுப்பெற்று ஒரு மோசமான நிலையை அடைந்தது. ஏழைபாழைகள், மன நோயாளிகள், செவிடர்கள், குருடர்கள், ஓரினச் சேர்க்கையர்கள், வரைமுறையற்ற பாலுறவு கொள்ளும் மகளிர், வாழத் தகுதியற்றவர்கள் எனக் கருதப்பட்ட ரோமானிகள் (ஜிப்சிகள்), யூதர்கள் போன்ற இனக் குழுவினர்கள் ஆகியோரில் தனியாட்களை அல்லது அவர்களின் குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களை மலடர்களாக்க வேண்டும், ஏன், தேவைப்பட்டால் நோகாது சாகடித்து விட வேண்டும் என்னும் கருத்து பின்னர் மெதுமெதுவாகப் பரவத் தொடங்கியது. அப்போதுதான் இந்தக் கருத்தின் ஆபத்தை மனித உரிமையாளர்கள் உணரத் தொடங்கினர். குறிப்பாக இட்லர் இனத்தூய்மையாக்கல் என்ற பெயரில் யூதர்களையும், முதியோர்களையும் கூட்டங்கூட்டமாகக் கொலை செய்த போது இனமேன்மையாக்கல் கொள்கைக்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதைத் தொடர்ந்து ஐநா நெறிப்படி மேற்கண்ட நடவடிக்கை இனப்படுகொலை (Genocide) என்றான பிறகு அக்கொள்கை முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த செய்தி என்னவென்றால், இந்த இனமேன்மையாக்கல் கொள்கையை பிரித்தானியக் கலைக்களஞ்சியம் ஆதரித்தது என்பதே. மீண்டும் 11ஆம் பதிப்பிற்கே செல்கிறோம். அந்தப் பதிப்பு நாகரிகம் (Civilization) என்னும் தலைப்பின் கீழ் இவ்வாறு கூறியது:

"அறிவுத்திறத்தில் கீழ்நிலையானவர்களை மென்மேலும் வளர விடுவதும் சரி, மாந்தஇன வளர்ச்சிக்கு ஒரு தடையாகவும் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிற ஏழைபாழைகளுக்கு, மனநோயாளிகளுக்கு, குற்றவாளிகளுக்கு உணவளிப்பதும் சரி, இரண்டுமே அறிவுக்குகந்த செயலன்று."

பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் பார்வையில் யார் கீழ்நிலையானவர்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை. கீழ்நிலையில் உள்ளோர் இனப்பெருக்கம் செய்வது பிரித்தானியக் கலைக்களஞ்சியத்துக்குப் பிடிக்கவில்லை. ஏழைகளுக்கு உணவளிக்கக் கூடாது என்னும் பிரித்தானியாக் கலைக்களஞ்சியத்தின் கொடூரச் சிந்தனை தமிழின் எந்த இலக்கியத்திலும், எந்த அகராதியிலும் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். பெரியார்வழிச் சிந்தனையாளர்களே இப்போது சொல்லுங்கள், உங்கள் இலக்கணப்படியே கூட எது காட்டுமிராண்டி மொழி? தமிழா? ஆங்கிலமா?

அடுத்து, 2ஆம் மாயையில் சந்திப்போம் . . .

பின்குறிப்பு: இன்று மரபீனி அறிவியலில் மரபீனியியல் வரைபடம் (Genetic Map), பல்படியாக்கம் (cloning) போன்ற கண்டுபிடிப்புகளால் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகளின் காரணமாக, இந்த இனமேன்மையியல் கொள்கை அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் இன்று வேறு வடிவத்தில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது மரபீனித் துறையில் நிகழ்ந்து வரும் இந்த வளர்ச்சிகளைக் கொண்டு, வளமான மரபீனியைக் கொண்ட ஒரு செந்தூயத் தலைமுறையை வருங்காலத்தில் உருவாக்க வேண்டுமாம், வாழ்க ஆங்கிலத்தின் முற்போக்கு!

(01-15.11.2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியான கட்டுரை.)

- நலங்கிள்ளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

4 comments

4
பாலா
அவர்கள் இவர் பேசும் தமிழைக் கிண்டலடித்தார்களாம். வெட்கம் தாங்காமல் இவரும் ஆங்கிலத்தில் பேசித் தன்மானம் காத்துக் கொண்டாராம்.

நண்பரே இந்தப் பகுதியை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். மீனா தமிழைப் பேசுவதாலேயே மானம் போய்விட்டதாகக் கூறவில்லை. மாறாக தமிழைத் தான் உச்சரிக்கும், பேசும் பாணியைக் கொண்டு தான் ஒரு தலித் என்பதை அறிந்துகொள்கிறார்கள் என்றும் அந்த அவமானத்தைப் போக்கவே ஆங்கிலத்தில் பேசியதாகவும் கூறுகிறார்.

ஆங்கிலம் சிறந்த மொழி என்று அவர் கூறவில்லை.
Nagarajanjayam
உண்மையான கருததாழம் கொண்டுள்ளது . வாழ்த்துக்கள்.
மாறி
தமிழகததில் இட ஒதுக்கீடு முறையில் இல்லங்களில் தமிழ் பேசாதோர், சாதி சான்றிதழ்கள் வாங்கும் செல்வாக்கு செல்வ வசதி உள்ளவர்கள் ஆகியோர் கைப்பற்றுகின்றனர். மாறாக இட ஒதுக்கீட்டு முறையில் விலக்கப்பட்ட ஏழை எளியவர் நிலைகளில் முன்னேற்றமும் இல்லை.

சாதி கலவரங்கள் இன்னமும் நடைபெற்று தான் இருக்கிறது. தமிழகத்தை ஆளும் 'தமிழ்' அரசியல்வாதிகள், 'திராவிட' கட்சிகள் ஆகியவற்றிற்கெல்லாம் இது வசதி தான்.

சாதி முறையை ஒழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழகத்தில் தேவை, சாதிக் கட்சிகள் தேவையில்லை.
ashwin
அதென்ன "நம்மவர் வட்டம்"...சரியன மொழியக்கம் (Ku Klux Klan - KKK) "வெள்ளை இன வெறி குழு"

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.