மத்திய கிழக்கு ஆசிய - வட ஆப்பிரிக்க நாடுகளின் எழுச்சி முன்னிறுத்தும் படிப்பினை

சமூக நெருக்கடிகள் கிளர்ச்சிகளை உருவாக்கும் சரியான இலக்கை நோக்கியவையாக அவை ஆக அமைப்பு அவசியம்

மதவாதத்தில் மூழ்கி பல வகை பின்தங்கிய போக்குகளின் நிலைக்களனாக விளங்கியதும் உலக நாடுகளின் வளர்ச்சியோடு இணைந்து செல்லாமல் தனித்து விடப்பட்ட தீவுகள் போல் சமூக பொருளாதார கலாச்சார நிலைகளில் பெரும்பான்மை மக்களை வைத்திருந்தவையுமான பல மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் தோன்றி தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாஸ்மின் புரட்சி என்ற பெயரிலான மக்கள் எழுச்சி சமீபகால வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நாடுகள் அனைத்திலும் மன்னராட்சி அல்லது ராணுவ ஆட்சிகளே இருந்தன. இந்நாடுகளின் ஒட்டுமொத்த மக்கட்தொகை 33.3 கோடி. அதில் 32.5 கோடி மக்கள் வாழும் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட ஆட்சி இல்லை. அந்நாடுகளின் மிக முக்கிய இயற்கை வளம் எண்ணெய் ஆகும்.

அதனை அந்நாடுகளில் ஆளும் வர்க்கக் குழுமங்கள் தங்களுடையதாக்கி அதன் மூலம் வரும் வருவாய்களை அபகரித்து வைத்துக் கொண்டு அந்நாட்டு மக்களுக்கு ஒருசில சலுகைகளை மட்டும் வழங்கிவிட்டு மீதமுள்ள மிக அதிக வருவாயைத் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும் அந்நிய நாடுகளில் முதலீடுகள் செய்து தங்களது குடும்பத்தினரின் எதிர்காலத்திற்கும் என ஏற்பாடு செய்து செயல்பட்டு வந்தன.ஆட்சியாளர்கள் அவர்களுடைய இத்தகைய எதேச்சதிகாரச் சுரண்டலுக்குச் சாதகமாகக் காலாவதியாகிப் போன மதவாதச் சட்டங்களைப் பயன்படுத்தி வந்தனர். சாதாரண மக்கள் கல்வியின் மூலம் பொதுஅறிவு பெறுவதைத் திட்டமிட்டுக் கட்டுப்படுத்தி வந்தனர். ஏனெனில் பொதுஅறிவு பெற்றவர்களாக நாட்டு மக்கள் ஆகிவிட்டால் கேள்வி கேட்பாரற்ற சுரண்டலை அவர்களால் நடத்த முடியாதல்லவா? அதற்காகவே அவ்வாறு செய்தனர்.

எதிர்மறை நிலை

ஆனால் பரந்துபட்ட மக்கள் மத்தியில் நிலவிய இந்தப் பின்தங்கிய சமூகச் சூழ்நிலைகளுக்கு எவ்வகையிலும் ஒத்துப் போகாத விதத்திலான ஒருவகை நவீன வளர்ச்சி அந்நாடுகளில் எண்ணெய் வளத்தைக் கொண்டு நிலை நாட்டப்பட்டது. அதாவது வெளிப்படையாகப் பார்க்கும் போது கண்ணுக்கு பளிச்செனப்படும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நவீன வளர்ச்சியும் ஆனால் மக்களது கருத்துக்கள் கண்ணோட்டங்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் மிகவும் பின்தங்கிய நிலையும் என்று ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாத ஒரு வினோத நிலை அந்நாடுகளில் நிலவியது.

இஸ்ரேலின் ஏவல் அரசு

அந்நாடுகளில் ஈரான், ஈராக் மற்றும் லிபியா இந்த 3 நாடுகளின் ஆட்சியாளர்களைத் தவிர பிற அனைத்து ஆட்சியாளரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நாடுகளின் எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் செயற்கையாக யூதர்களுக்கான நாடு என்ற பெயரில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கி அந்நாட்டிற்கு அனைத்து வகைப் பொருளாதார ராணுவ உதவிகளையும் செய்து, நவீனரக ஆயுதங்களை வழங்கி தனது நலன்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் ஒரு ஏவல் அரசாக அதனைச் செயல்பட வைத்தது. செயற்கையாக அந்நாட்டை உருவாக்கியதால் பல லட்சக் கணக்கான அப்பகுதிகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களை இடம் பெயர்க்க வேண்டி வந்தது.

தங்களது வசிப்படங்களையும் வாழ்வாதரங்களையும் விட்டுத் தீடீரென்று தூக்கியெறியப்பட்ட அவர்களின் நியாயமான போராட்டங்கள், அவற்றிற்கு அப்பிராந்திய மக்களிடையே கிட்டிய ஆதரவு, அமெரிக்காவின் பின்பலத்துடன் இஸ்ரேல் அவர்கள் மீது அடிக்கடி நடத்திய தாக்குதல் ஆகியவை அப்பகுதியில் பதட்ட நிலைகளை எப்போதுமே இருக்கச் செய்து கொண்டிருந்தன.

பாலஸ்தீனியர்களின் போராட்டங்களை ஒடுக்கி யூத மக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்கிறோம் என்ற சாக்கில் இஸ்ரேலைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளின் மீது நவீனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் தொடுத்து அவற்றை அமெரிக்காவின் அடிவருடிகளாக ஆக்குவதற்கு இஸ்ரேல் பேருதவி செய்தது.

இந்நாடுகளைச் சேர்ந்த மிகப் பெரும்பான்மை மக்கள், பாலஸ்தீனியர்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டதற்கு எதிராகவே இருந்ததால் ஆரம்பத்தில் மக்களின் ஏகோபித்த விருப்பத்தை உதாசீனப்படுத்த முடியாமல் அந்நாடுகள் பலவற்றின் ஆட்சியாளர்களும் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை எடுத்தவர்களாகவே இருந்தனர். இஸ்ரேலின் இடைவிடாத நவீன ஆயுதங்களின் மூலமான தாக்குதல் அதற்கு அமெரிக்கா அளித்துவந்த நேரடி மற்றும் மறைமுக ஆதரவு அத்தாக்குதலை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு ராணுவ ஆயுத வலிமைகளை இந்நாடுகள் கொண்டிராத நிலை ஆகியவற்றின் காரணமாக படிப்படியாக அவற்றில் பல நாடுகள் அமெரிக்காவின் வழிக்கு வந்தன.

அமெரிக்காவை எதிர்க்கும் மக்கள்; அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர்கள்

அவ்வாறு வரத் தயங்கிய நாடுகளின் ஆட்சியாளர்களை அமெரிக்கா தனது தந்திர மற்றும் சதித்தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் மூலம் மாற்றியது. ஒருபுறம் இஸ்ரேலை முழு மூச்சுடன் ஆதிரிப்பது மறுபுறம் எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயைத் தேசியமயமாக்கிய போது அந்நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பிய ஆங்கில, பிரெஞ்ச் ஏகாதிபத்தியங்களை ஆதரிக்காமல் நாசரை ஆதரிப்பது போல் பாவனை செய்தது ஆகியவை அமெரிக்காவின் மேற்கூறிய தந்திர மற்றும் சதித்தன்மைவாய்ந்த செயல்பாடுகளுக்கு எடுத்துக் காட்டாகும். இந்த நடைமுறையின் காரணமாகத்தான் தான் தற்போது நிலவும் ஒரு விநோத நிலையான அமெரிக்க எதிர்ப்பு மனநிலை கொண்டவராக அந்நாடுகளின் மிகமிகப் பெரும்பான்மையினரான மக்கள் இருப்பது அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் மட்டும் அமெரிக்க ஆதரவாளர்களாக இருப்பதுமான சூழ்நிலை நிலவுகிறது.

நவீன வளர்ச்சியையும் சுதந்திர வர்த்தகத்தையும் மனிதாபிமானக் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட நாகரீகத்தை மலரச் செய்தவர்கள் என்று மார்தட்டிக் கொண்ட முதலாளித்துவவாதிகள் இத்தகைய வளர்ச்சிகளைத் தங்களது தேவைகளின் அடிப்படையில் தான் உலகெங்கிலும் எடுத்துச் சென்றனர். முதலாளித்துவப் பொருள் உற்பத்திமுறை தோன்றிய நாடுகளின் விற்பனைத் தளங்களாக உலகம் முழுவதும் இருந்த வேளையில் அதன் பொருளாதாரத்தில் நெருக்கடி தோன்றவில்லை. அந்நிலையில் மேற்கூறிய நாகரீகத்தை முனைப்புடன் பிரச்சாரம் செய்த முதலாளித்துவம் முற்போக்கானதாக இருந்தது. ஆனால் அதனால் அதன் உற்பத்தி முறையின் அடிப்படைக் கோளாறின் காரணமாக அந்த முற்போக்குத் தன்மையைத் தொடர்ந்து பல காலம் பராமரிக்க முடியவில்லை.

சமூகரீதியான உற்பத்தி, உற்பத்தியின் பலன்களைத் தனிநபர்ரீதியாக அபகரிப்பது என்ற அதன் போக்கு சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியது. முதலாளித்துவச் சுரண்டலினால் சூறையாடப்பட்ட மக்களின் வாங்கும் சக்தி வெகுவேகமாகக் குறையத் தொடங்கியது. வாங்கும் சக்திக் குறைவு சமூகத்தில் நெருக்கடிகளைத் தோற்றுவித்தது. நெருக்கடியில் ஆட்பட்ட முதலாளித்துவம் பிற்போக்காக மாறியதால் சுதந்திர வர்த்தகம், நவீன வளர்ச்சி, மனிதாபிமானம் ஆகிய அனைத்தையும் தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல முடியாததாக ஆகியது. அந்தப் போக்கின் விளைவு தான் மத்திய கிழக்கு நாடுகளின் இத்தகைய பின்தங்கிய நிலையினை அந்நாடுகள் கைவைக்காமல் பாதுகாத்துப் பராமரிப்பதாகும்.

 

இதன் பொருள் முதலாளித்துவம் அது விரும்பினால் முன்னேற்றத்தைக் கொண்டுவரும்; விரும்பாவிட்டால் அதனைக் கொண்டு வராது என்பதல்ல. அத்தனை கறார்த் தன்மையுடன் சமூக வளர்ச்சிகளை உருவாக்கவோ தடுத்து நிறுத்தவோ முடியாது. ஏனெனில் சமூக வளர்ச்சிகளை, எத்தனை பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் தனிநபர்கள் அல்லது தனிப்பட்ட ஏகாதிபத்திய அமைப்புகள் அவர்களது இனிய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது. ஏனெனில் அவை சமூக விதிகளின் அடிப்படையில் நிகழ்பவை.

முதலாளித்துவ சமூக அமைப்பின் ஒரு அடிப்படை விதி திருவாளர் மூலதனத்தைக் கட்டுபடுத்தி வைக்க முடியாது என்பதாகும். அந்த அடிப்படையில் மூலதனத்தின் உருவாக்கத்தையோ அவை தேவைப்படும் இடங்களுக்கு சென்று முதலீடுகளாக மாறுவதையோ யாராலும் காலங்காலமாகத் தடுக்க முடியாது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மூலதனத் திரட்சியை வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளின் பங்கு வர்த்தகத்தின் வளர்ச்சிக்குப் பலகாலம் பயன்படுத்தினர். ஏனெனில் மத்திய கிழக்கு நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கு பாதுகாப்பானதாகவும் இருந்தது.

அந்த ஆளும் வர்க்கங்களும் ஆட்சியாளர்களும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை. எனவே அவர்கள் மக்களுக்குப் பயந்து தங்கள் முதலீடுகளை அன்னிய நாடுகளில் வைத்திருக்கவே விரும்பினர். ஆனால் கல்வி, தொழில்நுட்பம், மருத்துவ சேவை ஆகிய அனைத்துமே சந்தைச் சரக்குகளாகிவிட்ட இன்றைய நிலையில் இவற்றில் பின் தங்கியிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இவற்றைக் கொண்டு செல்வதில் அக்கறை கொண்டவர்களாக உலகின் பல நாடுகளின் முதலாளிகள் இருந்தனர்.

கல்வியிலும் தொழிலிலும் வளர்ச்சி

வளர்ச்சியடைந்த நாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் ஈட்டிய லாபம் அந்நாடுகளில் தொடர்ச்சியாக நிலவும் நெருக்கடி காரணமாக அதிக அளவிலானதாக இல்லாததால், அதிக அளவு லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாகத் தோன்றிய கல்வி, மருத்துவ சேவை போன்ற துறைகளில் தங்களது நாடுகளிலேயே முதலீடு செய்து பொருளீட்ட மத்திய கிழக்கு நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் விரும்பின. அதனால் பல காலமாகக் கடின வேலைகளுக்கு ஆசிய நாட்டுத் தொழிலாளரையும், நுட்பமான வேலைகளுக்கு ஐரோப்பிய நாட்டு வல்லுனரையும் பயன்படுத்தி ஆளும் வர்க்கங்களுக்குத் தேவைப்பட்ட நவீன வளர்ச்சிகளையும், வசதிகளையும் அடைந்து வந்த மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டிலிருந்தும் தொழிலாளர் உருவாகி வளரத் தொடங்கினர். அதற்குத் தொழில் நுட்பக் கல்வியை உள்ளடக்கிய வெளிநாட்டுக் கல்வி, கல்வி முதலாளிகளால் தொடங்கப்பட்ட கல்வித் தொழிலின் வளர்ச்சி உதவி செய்தது.

நல்லதற்கும் கெட்டதற்கும் பயன்பட்ட மதம்

இப்போக்குகளின் மூலம் பல காலமாக ஆளும் வர்க்கங்களால் மக்களிடையே பராமரிக்கப்பட்டு வந்த பின்தங்கிய மனநிலை மற்றும் போக்குகளை இனிமேலும் தொடர்ந்து பராமரிக்க முடியாது என்ற நிலை தோன்றியது . அது வளர்ந்து வரும் உள்நாட்டு உழைக்கும் மக்களின் எண்ணிக்கையையும் பின்தங்கிய மனநிலையையும் ஓரளவு மாற்றவும் செய்தது.

இந்நாடுகளில் நிலவிய இன்னொரு நிலை மதம் ஆட்சியாளர்களால் அவர்களின் தேவைக்குகந்த விதத்திலெல்லாம் பயன்படுத்தப் பட்டதாகும். ஈரான், ஈராக், லிபியா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் மதத்தை அமெரிக்க எதிர்ப்புக்குப் பயன்படுத்தினர். அதே சமயத்தில் சவுதி அரேபியா, பக்ரீன், ஏமன், எகிப்து போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் சமூக வளர்ச்சி நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து எவ்வளவோ தூரம் சென்றுவிட்ட நிலையிலும் நபிகள் முன்வைத்த சட்டங்களையே நாட்டின் சட்டங்களாக்கித் தாங்கள் இஸ்லாமுக்கு அத்தனை உண்மையானவர்கள் என்று காட்டிக் கொண்டனர். அதன் மூலம் மக்களின் மத உணர்வைப் பயன்படுத்தித் தங்களது அமெரிக்க ஆதரவுப் போக்கினையும் மூடி மறைத்தனர். மதம் ஒரு நிறுவனம் என்ற ரீதியில் சமூக வளர்ச்சிக்குத் தேவைப்படும் எந்த மாற்றத்தையும் கொண்டுவரத் திராணியுள்ளதாக இன்று இல்லை. மதங்களை நிறுவியவர்களின் உணர்வுகளல்ல இன்று அந்த மதங்களை வழி நடத்துவது. மாறாக அந்த உணர்வுகளுக்கு அன்றிருந்த நிலையில் நீடித்த மற்றும் நிரந்தர வடிவம் கொடுப்பதற்காக அவர்கள் உருவாக்கிய சில சடங்குகளும், அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியைச் சுமூகமாக நடத்துவதற்காக மத குருக்களின் துணையோடு புதிதாக உருவாக்கிய பல சடங்குகளுமே இன்று மதங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

மதங்களின் ஆளும் வர்க்கங்களுடனான சுமூக உறவு

உள்ளபடியே மதங்களை உருவாக்கியவர்கள் அன்று நிலவிய அநீதி அதர்மப் போக்குகளுக்கு எதிராகவே போராடினர். அதனால் தான் அன்றைய ஆளும் வர்க்கங்களால் அவர்கள் பல பாதிப்புகளுக்கு ஆளாயினர். அப்போக்கு அடுத்தடுத்து வந்த மதத்தை நிறுவியவர்களின் சீடர்களால் கடைப்பிடிக்கப் பட்டு அவர்களும் போராட்டக்காரர்களாக ஆகியிருக்க வேண்டும். ஆண்டான், அடிமை என்ற நிலையிருந்த அடிமை சமூகத்தில் அடிமைகளும், விலங்குகள் போலவே நடத்தப்பட்டனர். அடிமைகளின் உயிருக்குக் கூட உத்திரவாதம் இல்லை. அந்நிலையை மதங்கள் மாற்றின. கடவுளின் படைப்பில் அனைவரும் சமம். எனவே அவர்கள் சமமான சகமனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்ற அளவிற்குப் போராடின.

நிலங்கள் போன்ற நிரந்தர உற்பத்திச் சாதனங்களை மையமாக வைத்த விவசாய உற்பத்தி வளரும் தன்மை கொண்டதாக மாறிய சூழ்நிலையில் மதங்களின் இக்கருத்துக்கள் தோன்றின. அவ்வுற்பத்தி முறை அடிமை சமூகத்திலிருந்து நிலவுடைமை சமூகம் தோன்ற வழிவகுத்தது. அடிமை எஜமான ஆட்சி முறையிலிருந்து மன்னராட்சி தோன்றவும் அது வழி வகுத்தது. மன்னராட்சியை வலுப்படுத்த மதங்கள் உதவின. மன்னராட்சி முறைக்கு உகந்த நீதி, ஒழுக்க நெறிமுறைக் கண்ணோட்டங்களை வளர்த்தெடுத்துப் பராமரிப்பதில் மதங்கள் முன்னிலை வகித்தன.

அதனால் மன்னர்களால் மத நிறுவனங்களும் போற்றிப் பராமரித்து வளர்க்கப் பட்டன. எனவே ஆளும் வர்க்கத்துடனான சுமூக உறவைப் பராமரிப்பவைகளாகவே அடிப்படையில் மன்னராட்சிக் காலத்தில் மதங்கள் இருந்தன. அந்நிலையில் மதவாத வரையறைக்குள் இருந்து கொண்டு அனைத்து அநீதிகளையும் எதிர்ப்பது மதங்களுக்குச் சாத்தியமானதாக இருக்கவில்லை. எனவே மதங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிரானவையாகச் செல்லும் தன்மைகளை அடிப்படையில் கொண்டிருக்க வேண்டும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது.

அரசியல் வளர்ச்சியில் தேக்க நிலை

முதலாளித்துவம் தோன்றி மன்னராட்சி யுகம் முடிவுக்கு வந்த நிலையில் தோன்றிய அரசியல் போன்ற சமூக நிறுவனங்கள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றவையாயின. மன்னராட்சிக் காலத்தில் இல்லாத கட்சி ஆட்சிமுறை மக்களாட்சியில் கட்டாயமாகியது. அந்நிலையில் சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடும் பங்கும் பணியும் அரசியல் துறைக்கு மாறியது. அத்தகைய அரசியல் தேவைப்படும் அளவிற்கு தோன்றி வளராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் பல மத்திய கிழக்கு நாடுகளை வாரிசு முறையில் ஆட்சி செய்த மன்னர்கள் செய்தனர்.

அதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் போன்ற ஜனநாயகத்தின் தூண்களும் பேருதவி செய்தன. ஹாமாஸ், சால்வேன் முன்னணி, முஸ்லீம் பிரதர் கூட் போன்ற அமைப்புகள் கட்சிகள் என்ற பெயரில் இருந்தாலும் அவற்றிற்கு ஏகாதிபத்திய நாடுகளின் அங்கீகாரம் இல்லை. ஆட்சியாளர்களோடு மேலோட்டமாகத் தொழில் நுட்ப ரீதியில் உறவு வைத்துக் கொண்டு அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆதாயம் கிட்டும் வகையில் ஒருபுறமும் தங்கள் நாட்டின் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் எரிபொருளான எண்ணெய் தடையின்றி கிட்டும் வகையில் மறுபுறமும் ஏகாதிபத்தியங்கள் செயல்பட்டன.

இந்தப் பின்னணியில் தான் தற்போது மகத்தான மக்கள் இயக்கங்கள் டுனீசியா, எகிப்து போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் ஜோர்டான், பக்ரீன், சவுதி அரேபியா, ஏமன், சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் தோன்றி அந்நாடுகளின் முகத் தோற்றத்திலேயே மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளன. இந்நாடுகளில் டுனீசியாவிலும் எகிப்திலும் ஜனநாயகம் என்ற பெயரிலான ஆட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிற அனைத்து நாடுகளிலும் மன்னர் ஆட்சிகளே இன்றும் உள்ளன. ஆனால் மக்களாட்சி என்ற பெயரில் இந்த ஆப்பிரிக்க நாடுகள் இரண்டில் நடைபெறுபவையும் ஏதேச்சதிகாரத் தன்மை வாய்ந்த ஆட்சிகளே. இந்நாடுகள் அனைத்திலும் ஆளும் வர்க்கங்கள் தங்களது ஆட்சிகளைத் தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தியது மதவாதமாகும். இந்த நாடுகள் அனைத்திலும் தொழிலாளி வர்க்கத்தின் வளர்ச்சி கூடுதலாக உள்ள நாடு டுனீசியாவாகும். மதவாதத்தின் செல்வாக்கு ஒப்பு நோக்குமிடத்துக் குறைவாக இருப்பதும் இந்த நாட்டில் தான். கல்வி வளர்ச்சி ஒப்பு நோக்குமிடத்து இந்நாடுகளிலேயே டுனீசியாவில் தான் அதிக அளவு இருக்கிறது.

டுனீசியா

உலகமயப் பொருளாதாரப் பின்னணியில் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; அதற்காக அன்னிய மூலதனத்தைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நாட்டின் அரசு கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தது. கல்வியின் மூலம் தான் அந்நிய முதலீட்டால் உருவாகும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் தொழில் நுட்பம் கற்ற தொழிலாளரை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அந்த அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆனால் 2008ல் தோன்றிய முதலாளித்துவ உற்பத்தித் தேக்க நெருக்கடியால் எதிர்பார்த்த அளவிற்கு அந்நிய மூலதனம் டுனீசியாவிற்குள் வரவில்லை. அதனால் படித்த வேலையில்லாதோரின் எண்ணிக்கை அந்நாட்டில் மிகப் பெருமளவு அதிகரித்தது. அதுவே டுனீசியாவில் தோன்றிய கிளர்ச்சிக்கு மூல காரணமாகும்.

சிறு நிகழ்ச்சி பற்றவைத்த பெரு நெருப்பு

கிளர்ச்சி மனநிலையில் உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்த படித்த இளைஞர் படையை ஒரு சிறு நிகழ்ச்சி கொதித்தெழச் செய்தது. படித்த வேலையில்லாத இளைஞன் ஒருவன் நகரின் அரசு அலுவலகம் ஒன்றின் முன் பழச்சாறு விற்கும் கடை ஒன்றினை நடத்தி வந்தான். நக்கும் நாய்க்கு செக்கும் தெரியாது சிவன் கோவிலும் தெரியாது என்பார்கள். அதை ஒத்த விதத்தில் செயல்படும் அதிகார வர்க்கம் அனுமதி பெறாமல் அந்தக் கடையை நீ நடத்துகிறாய் என்று கூறி கடையைக் காலி செய்தது. அதனால் தனது வாழ்வாதாரத்தை இழந்த அந்த இளைஞன் தன்னைத் தானே தீயிட்டுக் கொழுத்திக் கொண்டு மரணமடைந்தான்.

நாட்டை விட்டு ஓடிய ஆட்சியாளர்

அந்த நிகழ்ச்சி படித்த இளைஞர் மற்றும் உழைக்கும் மக்களின் உள்ளக் குமுறல்கள் பீறிட்டுக் கிளம்புவதற்குப் போதுமானதாக அமைந்தது. நாடு முழுவதும் மகத்தான மக்களின் கொந்தளிப்பும் கிளர்ச்சியும் உருவாகின. சிவப்புக் கொடிகளும் பதாகைகளும் போராட்டக் காரர்களால் தாங்கப் பெற்று போராட்டப் பெரு முழக்கம் விண்ணை முட்டியது. போராட்டக்காரர்களின் பெரும் திரள் நகரங்களின் வீதிகளை நிரப்பியது. பல தற்காலிக நிவாரணங்களை வழங்குவதாக ஆட்சியாளர்கள் முன்வைத்த உறுதிமொழிகள் போராட்டக் காரர்களை அமைதிப் படுத்தவில்லை. அந்நிலையில் உயிருக்குப் பயந்து அந்நாட்டின் ஆட்சியாளன் கொடுங்கோலன் பென் அலி விமானத்தில் தனது நாட்டை விட்டே ஓடிப்போய் சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தான். சிறிது காலம் கழித்து அவனது பிரதமரும் பதவி விலகினார்.

அதைத் தொடர்ந்து எகிப்தில் கிளர்ச்சி வெடித்தது. தொடர்ச்சியான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுப் போக்குகளைக் கொண்டிருந்த அந்நாட்டின் அதிபர் முபாரக்கின் மேல் அந்நாட்டு மக்களுக்கு எப்போதுமே மரியாதை இருக்கவில்லை. தொடர்ச்சியாக ஒருவகை ராணுவ சர்வாதிகார ஆட்சியில் கீழ் இருந்ததால் அம்மக்களுக்கு முபாரக் மேல் ஒருவகை அச்ச உணர்வே மிகுந்திருக்கிறது. மதவாதத்தைத் தன் பங்கிற்கு முபாரக்கும் பெருமளவு பயன்படுத்தியே வந்தார்.

சுற்றுலாவே முக்கிய தொழில்

ஆனால் எகிப்து மற்ற எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஒரு அம்சத்தில் வேறுபட்டதாக இருந்தது. சுற்றுலா மூலமாக வரும் வருவாய் தான் அந்நாட்டின் மிக முக்கிய வருவாயாகும். எனவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரமிடுகள் போன்றவற்றைப் பார்க்க வருபவருடனான தொடர்புகள் அந்நாட்டின் மக்களுக்கு எப்போதுமே இருந்தன. கல்வியறிவிலும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளை விட எகிப்து மேம்பட்டிருந்தது. சாதாரண மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மத நம்பிக்கை இருந்ததே தவிர அது மத வெறியாக இல்லை. எனவே அவர்களிடம் ஆட்சியாளர்கள் மீதிருந்த அதிருப்தி மன அளவில் மட்டுமின்றி ஓரளவு செயலளவிலும் வெளிப்படுவதற்கான வாய்ப்பிருந்தது.

இந்த நிலையில் தான் டுனீசியாவில் ஏற்பட்ட கிளர்ச்சி அந்நாட்டு மக்களையும் பற்றிக் கொண்டது. எந்த வகையான அமைப்பு ரீதியான வழிகாட்டுதலும் இல்லாமல் அவர்கள் முபாரக்கிற்கு எதிராக அணிதிரளத் தொடங்கினர். அமைப்பின் வழிகாட்டுதல் இல்லையே தவிர மக்களிடையே இவ்விசயத்தில் ஒரு உள்ளார்ந்த ஒற்றுமை இருந்தது. முதலாளித்துவ நாடுகளின் மக்கள் இயக்கங்களைப் பெரிதும் பாதிக்கவல்லதாக இருக்கும் தனிமனித வாதமும், சமூக அக்கறையற்ற போக்கும் இந்நாட்டு மக்களிடையே இல்லாதது இதன் மிகப்பெரும் வலிமையாகும். இதனை அடிப்படையாக வைத்துத்தான் லட்சக் கணக்கான மக்கள் நாட்கணக்கில் தாக்ரிர் சதுக்கத்தில் கூடி தங்களது ஒற்றுமையையும், ஆட்சியாளர் மீதான எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

இந்தச் சூழ்நிலை தோன்றியவுடன் முபாரக்கும் எதுவும் செய்யாதிருக்கவில்லை. இந்த வளர்ச்சிப் போக்கு நீடித்து நிற்காது அதாகவே வலிமை குன்றி ஓய்ந்து விடும் என்று அவர் எதிர்பார்த்தார். அது நடக்காமல் போகவே தனது ஆதரவாளர்களை அணிதிரட்டிப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை நிலைகுலையச் செய்து அதன் பின்னர் ராணுவத்தைக் கொண்டு கிளர்ச்சியை ஒடுக்கி விடலாம் என எண்ணினார். சிறிய அளவில் தற்காலிகமாக ஏற்பட்ட நிலைகுலைவைத் தவிர அந்நடவடிக்கை வேறெதையும் சாதிக்கவில்லை. அதனைச் சமாளித்துக் கொண்டு போராட்டக் காரர்கள் முபாரக்கின் ஆதரவாளர்களைத் துரத்தியடித்தனர்.

இராணுவமும் டாங்குகளுடன் அச்சதுக்கத்தைச் சுற்றி அணிவகுத்து நின்றனவே தவிர மக்களுக்கு எதிராக அவை எதையும் செய்யவில்லை; ராணுவத்தினர் நினைத்திருந்தால் கூட அவர்களால் வெறெதையும் செய்திருக்கவும் முடியாது. ஏனெனில் லட்சக் கணக்கான மக்கள் தங்களையும், டாங்குகளையும் சுற்றி வளைத்துத் தங்களில் ஒரு சிலரின் உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து திருப்பித் தாக்கத் தொடங்கி விட்டால், தங்களது சொந்த மக்களைக் கொல்லும் செயலில் ராணுவம் ஈடுபட நேர்ந்திருக்கும். அது ராணுவத்திலும் பிளவு ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். அந்நிலையில் உருவாகும் மாற்றம் தங்களது கையை மீறியதாக ஆகிவிடும். இந்த வாய்ப்பைக் கருதி ராணுவமும் எதுவும் செய்யவில்லை.

ஆனால் அமைப்பு ரீதியான வழிகாட்டுதல் இல்லாதது போராட்டத்தில் அதன் விளைவை ஏற்படுத்தவே செய்தது. அதாவது இந்நிலை தோன்றியவுடன் பலகாலம் எகிப்தில் முபாரக்கை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த கட்சியை இச்சூழ்நிலையைக் கையாள விட்டுவிடக் கூடாது என்பதில் முஸ்லீம் பிரதர்கூட் என்ற மதவாத அமைப்பும், இராணுவமும் உறுதியாக இருந்தன.

அக்கட்சித் தலைவரின் மகனை சில பத்திரிக்கையாளர்களோடு சேர்த்துக் கைது செய்துவிட்ட காவல்துறை அவர் கட்சித் தலைவரின் மகன் என்று தெரிந்து கொண்டவுடன் உடனேயே அவரை விடுவிக்க முன் வந்தது. ஏனெனில் அவர் கைது செய்யப்பட்ட செய்தி பரவினால், தலைமை ஏதுமின்றி நடந்து கொண்டிருக்கும் மக்கள் போராட்டத்திற்கு அக்கட்சி தலைமை ஏற்கும் சூழ்நிலை தோன்றிவிடும் என்று ஆட்சியாளர் பயந்தனர்.

ஆனால் அக்கட்சித் தலைவரின் மகனோ அனைவருடனும் சேர்ந்து தான் சிறையில் தான் இருப்பேன் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார். இந்தச் சித்திரவதைச் சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கு இது நல்ல வாய்ப்புதானே என பத்திரிக்கையாளரில் ஒரு சிலர் அவர்களுக்கே உரிய சராசரி மனநிலையோடு அவரிடம் கூறியபோது நான் அவ்வாறு வளர்க்கப்பட வில்லை என்று அவர்களது முகத்தில் அறைந்தாற் போல் அவர் கூறிவிட்டார்.

இறுதிக்கட்ட முயற்சிகளும் பலிக்கவில்லை

இந்தச் சூழ்நிலையில் முபாரக் ஒன்றன் பின் ஒன்றாகப் பல வாக்குறுதிகளை அள்ளி வீசி தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கினார். ஆனால் போராட்டக் காரர்களின் ஒரே முழக்கம் முபாரக் ஒழிய வேண்டும் என்பதாக அப்போதே ஆகிவிட்டது. அவர் அமெரிக்கா தன் ஆதரவிற்கு வரும் என்று எதிர்பார்த்தார். திடீரெனத் தோன்றிய இப்போராட்டம் இந்த அளவிற்குச் செல்லும் என்று எதிர்பார்க்காத அமெரிக்க ஆட்சியாளர்கள் பதட்டமின்றி யார் கை மேலோங்குகிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்கணக்கில் ஏற்பட்ட எதிர்மறைச் சூழ்நிலைகள் எதையும் பொருட்படுத்தாது எதையும் தாக்குப் பிடிக்கும் தன்மையுடன் நிலை குலையாது நின்ற எகிப்து மக்களின் உறுதித் தன்மை அவர்களை முபாரக்கைக் கைகழுவும் மனநிலைக்குக் கொண்டு சென்றது.

அமெரிக்காவின் தொனி மாறியது

சூழ்நிலையைப் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக முதலில் கூறிய ஹில்லாரி கிளிண்டன் படிப்படியாகத் தனது தொனியை மாற்றி அமெரிக்கா எப்போதுமே ஜனநாயகத்திற்கான போராட்டங்களின் பக்கம் நிற்பதாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார். அதன் பின்னர் தான் முபாரக் பதவி விலகித் தன் நாட்டைவிட்டு வெளியேறினார்.

கடுமையான அடக்குமுறை

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா, ஜோர்டான், ஏமன் போன்ற நாடுகளிலும் இறுதியாக லிபியாவிலும் இப்போது சிரியாவிலும் கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின. ஆனால் எகிப்தில் ஏற்பட்டது போன்ற மிகப்பெரும் மக்கள் திரளை ஒருங்கு திரட்டியதாக இந்நாடுகளில் தோன்றிய கிளர்ச்சிகள் இருக்கவில்லை. முபாரக் அளவு கொடுங்கோலன் என்ற பெயரினை ஏமனின் சாலேயைத் தவிர இந்நாடுகளின் பல ஆட்சியாளர்கள் எடுக்காதிருந்ததும் அதற்கு ஒரு காரணமாகும். எனவே இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் கைவசமிருந்த அடக்குமுறைக் கருவிகளை மக்கள் இயக்கங்களுக்கு எதிராக ஏவி விடத் தயங்கவில்லை. இந்நிலையில் தற்காலிகமாக இந்த இயக்கங்கள் சற்றே ஓய்ந்தது போல் இப்போது காட்சியளிக்கின்றன. தலைமை, கூடுதல் தயாரிப்பு ஆகியவற்றிற்காக அவை காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் இந்நாடுகளில் நிலவுகிறது.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

நாம் ஏற்கனவே பார்த்தது போல் இந்நாடுகளில் லிபியா மட்டும் அமெரிக்காவுடன் ஒத்துப் போகாத ஒரு நாடாகும். அதன் அதிபர் கடாபி ஆரம்பம் முதற்கொண்டு அமெரிக்க எதிர்ப்பாளராகவே இருந்தவர். அந்நாட்டிற்கு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களை எதிர்கொண்ட அனுபவமும் உண்டு. எனவே எகிப்து உட்பட பிற நாடுகள் அனைத்திலும் கிளர்ச்சிகள் தோன்றிய போது அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பக்கமே இருந்த அமெரிக்கா லிபியாவில் கிளர்ச்சி தோன்றியவுடன் அந்தக் கிளர்ச்சியை முழுமையாக ஆதரித்து கடாபியைத் தூக்கி எறிய இதுவே தருணம் என்று கருதிக் களமிறங்கிச்செயல்படத் தொடங்கியது.

கிளர்ச்சியை முபாரக்கால் அடக்கவே முடியாது அது அவர் கையைவிட்டுப் போய்விட்டது என்ற நிலை தோன்றியவுடன் தான் எகிப்தின் கிளர்ச்சியாளர் பக்கம் அமெரிக்காவின் பார்வை திரும்பியது. அதாவது நீண்டகாலம் ஒருவன் அதன் எடுபிடியாக இருந்திருந்தாலும் கூட இனிமேல் அவன் தனக்கு எடுபிடியாக முன்போல் இருக்க முடியாது; ஏனெனில் மக்கள் சக்தி அவனுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது என்று தெரிந்து கொண்டவுடன் அவனைக் கைகழுவிவிட்டு புதிதாக உருவாகும் ஆட்சியாளரில் யார் தனக்குச் சாதகமானவர் என்று பார்த்து அவரைக் கைக்குள் போடுவதே உசிதமானது என்ற வழக்கமான முடிவிற்கு அமெரிக்கா வந்தது.

ஆனால் லிபியாவின் வியத்திலோ கடாஃபியைத் தூக்கியெறியும் வாய்ப்புக் கிடைத்தவுடன் அதன் ‘ஜனநாயக வேட்கை’ பன்மடங்கு ஆகிவிட்டது. தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு சென்று அங்கு கடாபியின் ஆட்சிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேறச் செய்தது லிபியாவின் மீது வான்வெளித் தாக்குதலை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் தொடங்கின.

உள்ளபடியே சொல்லப் போனால் இக்கிளர்ச்சி அத்தனை வலுவுள்ளதாக லிபியாவில் தோன்றவில்லை. அதன் தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சியின் சுவடே இல்லை. நாடு தழுவிய அளவிலும் இந்த எழுச்சி கிளர்ந்தெழவில்லை. இருந்த போதிலும் தலை நகரிலிருந்து 100க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஒரு நகரில் தோன்றிய கிளர்ச்சிக்கு ஆதரவாக தனது ராணுவ வலிமையைப் பயன்படுத்தி லிபியா முழுவதையுமே அமெரிக்கா தாக்கத் தொடங்கியிருக்கிறது. லிபியாவைக் காட்டிலும் பெரிய அளவில் எழுச்சிகள் தோன்றிய சவுதி அரேபியா, ஜோர்டான், , பக்ரின் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்கு இணக்கமானவர்கள் என்பதால் அங்கு கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட மறைமுகமாக உதவி செய்ததோடு அவை அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களால் கொடூரமாக ஒடுக்கப்படுவதை அமெரிக்கா உள்பட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் லிபியாவில் மட்டும் உடனடியாக இத்தகைய நன்கு ஒருங்குதிரட்டப்பட்ட தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

ஒருபடி முன்னேற்றம்

நாம் ஏற்கனவே பார்த்தது போல் இந்த கிளர்ச்சி மனநிலை உருவாகவும் நிலை பெறவும் இந்நாடுகளிலும் வளரத் தொடங்கிய கல்வியும் உள்நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்புகளும் முக்கிய காரணங்களாக இருந்தன. அறிவும் உழைப்பும் ஒருவரது அகக் கண்களையும் புறக் கண்களையும் திறக்கின்றன. அவற்றின் பரவல் அங்கு நிலவும் பத்தாம் பசலிப் போக்குகளை அகற்றப் பாடுபடுகிறது.

இந்தப் பின்னணியில் இந்த கிளர்ச்சியினால் இந்த நாடுகளின் சமூகங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை நோக்கி ஒருபடி முன்னேறியிருக்கின்றன. அதாவது முதலாளித்துவ ஜனநாயக கருத்துக்களின் அடிப்படையிலான ஆட்சி அமைப்புகள் கொடுங்கோல் மன்னர் ஆட்சி அமைப்பு இருந்த இடத்தில் உருவாகும் சூழ்நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.

எகிப்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு இராணுவத்தின் கைவசம் ஆட்சி சென்றாலும் இப்போது ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சி நிச்சயமாக முபாரக் நடத்திய கொடுங்கோன்மை ஆட்சி அளவிற்கு மிக மோசமாகப் போவதற்கு வாய்ப்பில்லை. புதிதாக உருவாகியிருக்கும் ஆட்சியை நடத்துபவர்கள் நடைபெற்ற கிளர்ச்சியின் மகத்தான தன்மையினையும் அது நடந்த உறுதியையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் போகவே முடியாது. அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகம் போல் காட்சியளிக்கும் ஒரு ஆட்சி முறையையாவது விரைவில் கொண்டு வருவதற்கான வேலைகளை ஓரளவாவது செய்வர்.

முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்கள் வருவதற்கு உள்ள வாய்ப்பு

எகிப்து தவிர்த்த வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள் கிளர்ச்சியைப் பெருமளவு ஒடுக்கி விட்டது போல் தோன்றினாலும் அவர்களாலும் பழைய முறையில் இனிமேலும் தொடர்ந்து ஆட்சி செய்வது முடியாது. அந்நிலையில் அவர்களும் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படையிலான சில சீர்திருத்தங்களையாவது குறைந்த பட்சம் தங்கள் நாடுகளில் கொண்டு வந்தே ஆகவேண்டும்.

அதுதவிர இக்கிளர்ச்சியின் மிகப் பெரும் அம்சமே மதம் எந்த முக்கியப் பங்கும் ஆற்றாது, மதம் மக்களின் தனிப்பட்ட விருப்பம் என்பது போன்ற நிலையினை மத நிறுவனங்களே இக்கிளர்ச்சி நடந்த காலகட்டம் முழுவதும் எடுக்க வேண்டி வந்ததாகும். எகிப்திலும் முஸ்லீம் பிரதர் கூட் - ன் கரங்களுக்கு ஆட்சியதிகாரம் செல்லவில்லை. அதன் வெளிப்பாடு தான் இத்தகைய மகத்தான மக்கள் எழுச்சியில் தாலிபான் போன்ற மதவெறி அமைப்புகளுக்கு ஒரு பங்கும் இல்லாமற் போனதாகும். அந்த வகையில் ஒப்பு நோக்குமிடத்து மதச் சார்பற்ற போக்குகளும் இந்நாடுகளில் மேலோங்கியிருப்பது ஜனநாயகப் பாதையில் இந்நாடுகள் எடுத்து வைத்துள்ள மற்றொரு அடியாகும். இதையொட்டி இந்நாடுகளிலும் கட்சிகள் உருவாகும் நிலை தோன்றும் போது அது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அரசியல் பொருளாதாரத்தை முந்திச் செல்லாத நிலை

இந்நாடுகளின் மாறுபட்ட போக்கே இந்நாடுகளில் மற்ற நாடுகளைப் போல் அரசியல் பொருளாதாரத்தை முந்திச் சென்று செயல்படாத நிலை ஏற்பட்டது தான். ரஷ்யாவில் அன்னிய முதலீடுகளும், உள்நாட்டில் நிலப் பிரபுத்துவப் போக்குகளும் நிறைய இருந்த போதே அந்நாட்டில் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி கெரன்ஸ்கி தலைமையில் ஏற்பட்டது. அதனைக் கணக்கிற் கொண்டே லெனின் ரஷ்யாவின் புரட்சிக் கட்டம் சோசலிசத்தை நோக்கியதாக ஆகிவிட்டது என்று கூறினார். அந்நிலையில் தான் அவர் அரசியல் பொருளாதாரத்தை முந்திச் செல்லும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

ஆனால் இந்த நாடுகளைப் பொறுத்தவரை பொருளாதாரம் முதலாளித்துவப் பொருளாதாரமாக ஆகியுள்ளது. அதாவது அவர்களது நாட்டின் இயற்கை வளமான பெட்ரோலியம் உலகச் சந்தையின் சரக்காகி உள்ளது. அதன் விலை குறையாமல் காப்பதற்காக அதன் உற்பத்தியை ஒபெக் (Orgaisation of Petroleum Exporting Countries ) கட்டுப் படுத்துகிறது. அதன் மூலம் பெறப்படும் பணம் பல நாடுகளின் பங்குகளில் முதலீடு செய்யப் படுகிறது. அதில் ஒரு பகுதி மக்களின் வாய்களை அடைப்பதற்காக அவர்களின் தேவைப் பொருட்களுக்கான மானியங்களாக வழங்கப் படுகிறது.

எண்ணெய் வளத்தின் மீதான கட்டுப்பாடு விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது கரங்களில் மட்டும் இருப்பதால் அவர்கள் வெளிப்படையாக முதலாளிகளாகக் காட்சியளிக்கவில்லை. அது முதலாளி, தொழிலாளி உறவு வெளிப்படையாக உருவாவதில் முட்டுக் கட்டையாக இருக்கிறது.

பெட்ரோலிய விற்பனை மூலம் கிடைக்கும் தொகைகளே அபரிமிதமானதாக இருப்பதால் அவர்கள் தங்களது சொந்த நலன் கருதி உள்நாட்டில் நுகர் பொருட்களுக்கான தொழிற் சாலைகளை உருவாக்காமல் இருந்தனர். சேவைத்துறைத் தொழில்கள் பெரும்பாலும் வெளிநாட்டினரினால் செய்யப் பட்டன. இந்த மாறுபட்ட நிலையின் பராமரிப்பிற்கு அதாவது அரசியலின் முந்திச் செயல்படும் தன்மைக்கு முட்டுக் கட்டை போட்டது மதவாதமாகும்.

எனவே அந்த மதவாதம் பின்னுக்குச் செல்வது நிச்சயமாக சமூக வியங்களில் அரசியல் முன்னிலை வகிப்பதற்கு நிச்சயம் உதவும். அத்துடன் மதத்தால் மறைக்கப்பட்டிருந்த முதலாளி தொழிலாளி உறவும் இதன் பின் முன்னிலை வகிக்கத் தொடங்கும். இவ்வாறு உலக நாடுகள் முழுவதன் அடுத்தகட்ட மாற்றம் சோசலிசத் திசை வழியை நோக்கியதாக ஆவதற்கு இக்கிளர்ச்சிகள் வழிதனைத் திறந்து விட்டிருக்கின்றன.

கடுமையான சட்டங்கள் அல்ல காரணம்

இந்தக் கட்டத்திற்கு வந்துள்ள மக்கள் அவர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள்

தோன்றும் போது நிச்சயமாக சோசலிசத் திசை வழியை நோக்கிய அடுத்த கட்டப் போராட்டங்களை நோக்கிப் போவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் போர்க்குணத்தை உள்ளிருந்தே முடமாக்கும் தன்மை வாய்ந்த நியாய உணர்வற்ற போக்குகள் இந்த நாடுகளின் மக்களிடம் மிகப் பெருமளவிற்கு இல்லை.

அதற்கான காரணம் கடுமையான முகமதியச் சட்டங்கள் எனப் பலர் கருதுகின்றனர். பெரும்பாலும் அத்தகைய கடுமையான சட்டங்கள் மக்களின் உரிமைகளையும், ஆட்சியாளர்களை எதிர்த்த அவர்களது போராட்டங்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுமே தவிர, அத்தகைய சட்டங்கள் நியாய உணர்வினை உருவாக்குவதும் இல்லை; பாதுகாத்ததும் இல்லை; பாதுகாக்கப் போவதுமில்லை.

சட்டங்களைக் கடுமையாக்கிக் குற்றங்களைக் குறைக்க முடியாது. அதனால் ஊழலும், கையூட்டுமே பெருகும் என்பதே நமது அனுபவம். இந்நாடுகளில் மக்களது வாழ்க்கைத் தேவைகளில், அடிப்படையானவற்றில் பல குறைந்த விலைக்குக் கிடைப்பதற்கு ஆட்சியாளர்கள் செய்யும் ஏற்பாடுகள் அன்றாட மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு நெருக்கடியில்லாமல் வைத்திருக்கிறது. எண்ணெய் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஆட்சியாளர்கள் மானியமாக வழங்கி மக்களின் அன்றாடத் தேவைப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். உள்நாட்டின் தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியமும் ஓரளவு அதிகமாக இருப்பதால் தேவைக்காகக் குற்றங்கள் செய்வது குறைவாக உள்ளது. எனவே இவர்களின் நேர்மையான வாழ்க்கையின் மீது இனிவரும் தாக்குதல்கள் நிச்சயமாக இவர்களை நிமிர்ந்தெழுந்து போராடச் செய்யும். மேலும் இந்நாட்டின் சராசரி மக்களுக்கு இந்தியாவின் பெரும்பான்மை மக்களிடம் காணப்படும் தனிச்சொத்து மனப்பான்மையும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அங்கு எண்ணெய்க் கிணறுகள் போன்ற பெரும் ஆதாயம் தரும் சொத்துக்களைச் சாதாரண மக்கள் நெருங்கவே முடியாது.

படிப்பினைகள்

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இப்போது தோன்றியுள்ள எழுச்சி பல முக்கிய படிப்பினைகளை இயக்க ஆதரவு சக்திகள் முன் நிதர்சனமாக நிறுத்துகிறது. அதாவது போராட்டங்கள் வருவதற்குப் பெரும் தயாரிப்புகள் தேவையில்லை. போராட்டத்தின் கரு அவை தோன்றும் சமூகத்தில் உள்ள பிரச்னைகளை மையமாகக் கொண்டதாகவே இருக்கிறது. அவை தயாரிப்பு மற்றும் வழிகாட்டுதல்களுடன் நடைபெறும் போது உரிய இலக்குகளை எட்டுகின்றன. இல்லாவிடில் இலக்கின்றி ஆங்காங்கே முட்டிமோதி அல்லாடுகின்றன. இது முதல் படிப்பினையாகும்.

ஏற்றத் தாழ்வுகளையும் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புகளை ஆட்சி புரிவோர் அவர்கள் எத்தனை தகிடுதத்த வேலைகளைச் செய்து எதிர்ப் பேதுமில்லாமல் நிம்மதியாக இருப்பது போல் தோற்றம் காட்டினாலும் அவர்களின் நிலை எரிமலை மீது அமர்ந்திருப்பவர்களின் நிலையினை ஒத்ததே. இது நமக்குக் கிடைக்கும் இரண்டாவது படிப்பினை ஆகும்.

நீண்ட காலமாக வெளிப்படையாக உறங்கி வழிவதுபோல் தோன்றும் சமூக அமைப்புகள் கிளர்ச்சி மனநிலை இல்லாத அமைப்புகளாக ஆகிவிட்டன என்ற முடிவுக்கு வருவது அபத்தமானதாகும். அவை எத்தனை காலம் உறங்கிக் கிடந்தவையாகத் தோன்றினவோ அவை அனைத்திற்கும் சேர்த்து அளவிலும் பரிமாணத்திலும் பெரியவையான கிளர்ச்சிகள் ஒருநாள் வட்டியும் முதலுமாக அந்த சமூக அமைப்புகளில் தோன்றும் இது நமக்குக் கிடைக்கும் மூன்றாவது படிப்பினையாகும்.

படிப்பினைகள் வழிநடத்தும்

இந்த எழுச்சியின் பலவீனமான அம்சமே இது அமைப்பு ரீதியாக வழிநடத்தப் படாததும் குறிப்பிட்ட இலக்கை நோக்கியதாக இல்லாதிருப்பதுமே என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இப்போது நடைபெற்றுள்ள இயக்கங்கள் அந்த மக்களுக்கு வழங்கியுள்ள செறிந்த படிப்பினைகள் நிச்சயம் சரியான அமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பெரிதும் உதவும். இந்நாடுகளில் பெருகிவரும் கல்வி கற்றோரின் எண்ணிக்கையும் தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையும் நிச்சயம் உழைக்கும் வர்க்க மனநிலை உருவாவதற்கும் அதன் விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இலக்குகள் தீர்மானிக்கப் படுவதற்கும் இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் வழி வகுக்கும். அதாவது எந்த டுனீசிய நாட்டின் கிளர்ச்சி இந்த நாடுகள் அனைத்திலும் கிளர்ச்சிகளைப் பற்ற வைத்ததோ அந்த டுனீசிய நாட்டில் தொழிலாளி வர்க்க இயக்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளன. இயக்கப் பரவலுக்கு வழிவகுத்த அந்நாடு சரியான சமூகமாற்றச் சிந்தனையின் பரவலுக்கும் நிச்சயம் வழிவகுக்கும்.

Comments

1 comment

1
kesav
Change may come from within, gradually or unannounced like it did in Kyrgyzstan. Change could also be triggered from outside events, actions or influences.

The role that Afghanistan could play as a destabilizing factor is on everybody’s mind. Uzbekistan’s blocking of hundreds of train cars of supplies for the Tajik agricultural industry or disrupting the transit of energy destined to Tajikistan could play a destabilizing role and have a boomerang effect if Tajikistan ends up in a desperate economic and social situation. Ergo, further instability at the Uzbek border is not a good prospect.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.