காங்கிரசின் துரோகத்தை எதிர்த்து சீர்காழியில் இரவிச்சந்திரன் என்ற காங்கிரசுத் தமிழன் தீக்குளித்தான். உணர்வுள்ள காமராசர் வழி வந்த காங்கிரசுத் தமிழர்களால் இந்த பார்ப்பனிய துரோகங்களை சகிக்க முடியவில்லை என்பதற்கு மற்றொரு சான்றாகத் திகழ்கிறவர், தமிழருவி மணியன். காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளரான அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் தனது தமிழின உள்ளத்தைத் திறந்து காட்டிவிட்டார்.

“இராசபக்சேவின் பாஸ்பரஸ் வெடிகுண்டுகளால் நாள்தோறும் கொத்துக்கொத்தாய் தமிழினம் அழிந்துக் கொண்டிருக்கும் சூழலில், சோனியாகாந்தி ஈழத் தமிழரின் நிலை குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை. இவருடைய தலைமையில் இயங்கும் காகித நியமன காங்கிரசில், என் மொழி, இன அடையாளங்களை அடகு வைக்க என் இதயம் இடம் தரவில்லை. எனவே நான் இன்று முதல், அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினர், மாநிலப் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விடுபடுகிறேன்” - என்று அறிவித்துள்ளார். கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, “பெரியார் 1925 இல் காங்கிரசை ஒழித்தே தீர வேண்டும் என்று கூறிய கருத்தின் நியாயத்தை - 40 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் அனுபவத்துக்குப் பிறகு உணருகிறேன். இனி எந்த அரசியல் கட்சியிலும் நான் சேரப் போவதில்லை. நாம், ஒரே தளத்தில் செயல்படக் கூடிய வாய்ப்புகள் எதிர்காலத்தில் இருக்கின்றன” என்று உணர்ச்சி பூர்வமாகக் குறிப்பிட்டார். தன்மானமுள்ள அந்தத் தமிழனின் எழுத்தும் பேச்சும் தமிழின உரிமைப் போருக்கு வலிமை சேர்க்க வாழ்த்துவோம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.