பெரியார் திராவிடர் கழகத்தோடு தோளோடு தோள் நின்று களப் பணியாற்றும் காஞ்சி மக்கள் மன்றத்தின் இளம் தோழர் செங்கொடி, 3 தமிழர்கள் உயிர் காக்கவும், மரண தண்டனை ஒழிக்கவும், உயிர்த் தியாகம் செய்து விட்டார். நமது நெஞ்சை உலுக்குகிறது. ஆக. 28 ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் காஞ்சிபுரம் வட்டாட்சி அலுவலக வளாகத்தில் செங்கொடி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்டு விட்டார். 

“தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல், இந்த 3 தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன்படும்” என்ற உருக்கமான கடிதத்தை எழுதி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டார். உலக வரலாற்றில் மரண தண்டனை ஒழிப்புக்காக - மரணத்தைத் தழுவிய பெண் போராளி என்ற வரலாற்றுச் சிறப்புக்குரியவராகி விட்டார் செங்கொடி! நெஞ்சை அழுத்தும் துயரத்துடன், பெரியார் திராவிடர் கழகம் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்துகிறது! 

தீக்குளிப்பு வேண்டாம்: கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை 

ஈழத் தமிழர் உரிமைப் பார்வையில் போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க தமிழக மக்களும் தமிழக அரசும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழர் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதல்லாமல் மனிதமே அதிர்கிற வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற மைய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இது பேரதிர்ச்சியாகவே இருந்தது. 

அதற்கென மக்கள் திரள் போராட்டங்களும் சட்டப் போராட்டமும் நடந்து வருகிற இவ்வேளையில் இக் கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி தீக்குளித்ததாக வந்துள்ள செய்தி அனைவரையும் மேலும் அதிர வைத்துள்ளது. கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்த ஆயிரம் வழிமுறைகள் இருக்க, போராடும் சக்திகள் தங்களையே அழித்துக் கொள்ளும் இம்முறையை அருள்கூர்ந்து யாரும் தொடர வேண்டாம் என வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறோம். 

அவர்களது உணர்வுகள் நமக்குப் புரிகிறது. ஆனால் அதிகார வெறி கொண்ட மத்திய பாசிச ஆட்சியாளர்களுக்கு இது சிறு அசைவையாவது ஏற்படுத்துமா என்பது அய்யமே. நாம் தொடர்ந்து நமது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை வலியுறுத்திப் போராடுவோம்.

Comments

1 comment

1
kumanan
mani annan andru kan kalangi vittar.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.