தமிழில் : தி.சு. சதாசிவம்

துன்ப-துயரங்களின் தோற்றுவாய்: மனித சமுதாயத்தில் சொத்துடமை தோன்றிய நாளிலிருந்தே ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களால் பல்வேறு கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் அவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை சுரண்டல்தன்மை கொண்ட அதிகாரம், துயரம், நோவு - நலிவு, அடிமைத்தனம், பொருளற்ற சமயச் சடங்குகள் மற்றும் சொர்க்கம்-நரகம் என்னும் கற்பனைக் கருத்துக்களை நியாயப்படுத்தின. இத்துடன் குடியாட்சி பற்றிய பழைய கருத்துக்கள் மறைந்து, சமூக, பண்பாட்டு அமைப்புகள் சுரண்டல் தன்மை கொண்ட அரசுகளின் முழுமையான ஆளுகைக்கு உள்ளாக்கப்பட்டன....

ஒரு பொருள் - விரிந்த தொலைநோக்கு: முழுமையான முடியாட்சியின் தோற்றமும் குடியரசுகளின் வீழ்ச்சியும், பகவான் புத்தரின் “தம்மா” உருவாக்கத்தோடு ஒரே காலத்து நிகழ்வுகளாக அமைந்தன. இம்மாபெரும் கருணையுள்ளம் கொண்ட முற்றுமறிந்த ஞானி, செல்வக்குவிப்பு, செல்வத்தையும் - அதிகாரத்தையும் அடைவதற்கான பயங்கரப் போராட்டங்களின் விளைவான பெரும்போர்கள், அதன்பின்னான வன்முறைகள், வளர்ந்து கொண்டே வரும் சமத்துவ மின்மை, துயரம், நோவு-நலிவு, அடிமைநிலையை கூர்மையாக உற்றுணர்ந்தார். “தம்மா” கருத்தாக்கச் சக்கரத்தைச் சுழற்றி துயரங்களுக்கெல்லாம் தோற்று வாய் எதுவெனக் காட்டினார். துயரங்களே இல்லாமலாக்குவதற்கான வழிகளை பகுத்தறிந்தார்; சுரண்டல் தன்மை கொண்ட கோட்பாடுகளையும் சமூக அமைப்பையும் அவற்றால் உண்டாகும் நடைமுறைகளையும் வன்மையாகக் கண்டித்தார். இருப்பினும் முற்றான்மை கொண்ட முடியாட்சியும் சுரண்டல் அரசும் நொருங்கிப் போய்விடவில்லை. அல்லது செல்வமும் அதிகாரமும் ஒரே இடத்தில் குவிவதும் தடுக்கப்பட்டு விடவில்லை. அடிமைத்தளை கழன்று மக்கள் விடுதலை பெற்றுவிடவில்லை. செல்வமும் அதிகாரமும் சமூகத்தின் உடமையாக்கப்பட்டு பரவலாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் நிலை பெறவில்லை. மேலும் மேலும் பல போர்கள் நடைபெற்றன. அடிமைகளின் எண்ணிக்கை பெருகிற்று.

யாரெல்லாம் அதிக அதிகாரத்தையும், செல்வத்தையும் போர்க் கருவிகளையும் கையில் வைத்திருந்தார்களோ அவர்களே மேலும் பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளின் சொந்தக்காரர்களாயினர். நாடுகளே முழுமையாகவும் அடிமைகளாயின. ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே தடுத்து நிறுத்த முடியாத நிலைக்குப் போயிற்று. நிலவி வந்த சமூக மற்றும் அறிவுநிலை முறைமைகள் “வருணம்” மற்றும் வகுப்பு வேறுபாடுகளை வளர்த்து வளப்படுத்திக் காத்த தத்துவங்களால் மேலும் ஆழமாக்கப்பட்டன. சமூக ஒருங்கிணைப்பு என்னும் முழுப் பின்னலே ஏற்றத்தாழ்வு என்னும் தீயால் கொளுத்தப்பட்டு சீர்குலைந்தது. பகவான் புத்தரின் ‘சங்க’த்தில் மட்டுமே ஒரு மக்களாட்சி சமூகத்தைக் கண்டெடுக்க முடியும். அங்கேதான் ஆறுகள் கடலை நோக்கிப் பாய்வதைப் போல வெவ்வேறு சாதிகள் மற்றும் வகுப்புகள் சார்ந்த மக்களும் ஒன்றிணைய முன்வருவர். சமூக மக்களாட்சி வடிவத்தில் சமத்துவமும் அமைதியும் நிறைந்த ஒரு மகிழ்வான வாழ்வை வாழ்வார்கள்.

சுரண்டல் தன்மை கொண்ட அரசமைப்பின் இயல்பு: சுரண்டல் தன்மையுள்ள அரசு ஒரு தனித்த தன்மையைக் கொண்டது. அதன் சுரண்டல் இயல்பை மேலும் வளர்த்தெடுப்பதற்கு உதவும் தத்துவங்களையும் நிறுவனங்களையும் மட்டுமே அது வாழவும் வளரவும் விடும்; அவ்வரசுக்கு ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் மிகவும் தேவை. எனவே அது அவைகளைக் காத்து, பெருக்கச் செய்யும். அதற்கேற்றவாறு எண்ணங்களையும் பண்பாட்டையும் வடிவமைக்கும். மறுபுறம், ஏற்றத்தாழ்வையும், தீண்டாமையையும் எதிர்க்கும் ஆக்கவகையிலான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒன்று முழுமையாக அழித்து விடும் அல்லது அடக்கு முறைக்கு உள்ளாக்கி மாசுபடுத்திவிடும்.

கடவுள் மறுப்பு கொள்கையும் நாத்திகமும் தனது வகுப்பு நலன்களைக் காக்கத் தவறிவிடும், எதிராகவே செயல்படும் என்பதை ஆளும் அதிகார வகுப்பு உணர்கிறது. இக்கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டால் “எல்லாம் வல்ல இறைவன், அவனது புனிதத்தன்மை” என்னும் கருத்தாக்கத்தை அவைகள் தாமாகவே மறைந்துபோக செய்துவிடும். அத்துடன் அந்த புனிதத் தன்மையைப் பகரான்மைப்படுத்தும் (Represent) மத வகையிலான தண்டிக்கும் அதிகார அமைப்பையும் கூட அவை மறைந்து போகச் செய்துவிடும். தாழ்ந்தவர் உயர்ந்தவர்க்கிடையில் மதத்தால் இடப்பட்டு இறையருள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் புனித எல்லைகள் இல்லாமலாக்கப்பட்டுவிடும். கடவுளால் உண்டாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஏற்றத் தாழ்வுகள் சடுதியில் மறைந்துபோகும். அத்தகைய சூழ்நிலைகளில் எந்த ஒருவராலும் வெறும் தகுதி மற்றும் சாதனை, திறமைகளின் அடிப்படையில் உயர்வது இயலக்கூடியதாக இருக்கும். இவையாவுமே வல்லாண்மை அரசுக்கு சாவுமணி அடிப்பவைகளாகும். மறுபுறம், கடவுள் மறுப்பு மற்றும் நாத்திகக் கோட்பாடுகளே குடியாண்மை அரசுக்கு உயிர்நாடியாகும். உண்மையில் அக்கோட்பாடுகள் அதன் உடனுறைபவையாகும்.

ஏற்றத்தாழ்வின் மீது அமைக்கப்பட்ட சுரண்டல் தன்மை கொண்ட அரசாகவோ அல்லது சமூகத்தை இயல்பாக மாற்றியமைத்துவிடும் ஒன்றாகவோ பௌத்தவியல் இருக்க முடியாது. அவ்வரசின் தன்மையான சமத்துவமின்மையை - அது தன்னெழுச்சியாக எதிர்ப்பதால், முற்றான்மை முடியாட்சி அரசு தன்னையே விவுபடுத்திய போதெல்லாம் அதை எதிர்த்து பௌத்தவியம் ஒரு வழிகாட்டும் ஆற்றலாக மாற முடிந்தது. எப்படியாயினும் அது ஒரு இலக்காக மட்டுமே செயல்பட முடியும். தனிப்பட்ட சில மனிதர்கள், அல்லது சிறு குழுக்கள் அதை ஒரு வழிகாட்டும் ஒளியாக கொண்டனர்; அதனால் கவரப்பட்டனர். படிப்படியாக அவர்கள் “சங்கத்தில்” சேர்ந்தனர். புத்தபிட்சுக்கள்- ஒடுக்கப்பட்ட, ஒடுங்கிப்போன, ஆளும் - என எல்லா வகுப்புகளிலிருந்தும் வந்தவர்களாவர். பௌத்த சங்கத்தில் அவர்கள் ஒரு சாதியற்ற, வகுப்புகளற்ற சமூகத்தின் மகிழ்வான வாழ்க்கையை நுகர்ந்தனர். மக்கள்திரள் நலனில் அக்கறைகொண்டு அதற்கான பணிகளில் பங்கேற்றனர். சங்கம் பாலைவனத்தில் ஒரு சோலையாக விளங்கியது. அன்று முழு சமூகமுமே சுரண்டல் தன்மையுள்ள அரசுக்கு ஆதரவாக இருந்தது. இதனாலேயே ஒரு சமூக ஒழுங்கமைவும் உயர்வுநிலையும் கொண்ட சமூக அடிப்படையை அமைப்பதற்கு பௌத்த கோட்பாடுகளை சுரண்டல் தன்மையுள்ள அரசால் அனுமதிக்க முடியவில்லை. ஆகையினால் பௌத்தவியம் இதற்கு எதிராக எல்லா மட்டங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் போராடி வருகின்றது. சுரண்டல் தன்மை கொண்ட ஆளுகை தன் உச்ச நிலையை எட்டியதோடு, ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் சமூக பண்பாட்டு கட்டுமானத்திற்குள் மிக ஆழமாக ஊடுருவிவிட்டன.

ஜாதகக் கதைகளின் கதைத் தலைவனான போதிசத்வன், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளிலிருந்து வரவே முடியாத அளவுக்கு அந்த அழிவு ஊடுருவல் ஆழமாக அமைந்துவிட்டது. கதைத் தலைவர்களில் பலர் பார்ப்பனர்கள், சத்தியர்கள், வைசியர்களே. ஏன் பறவைகளும் விலங்குகளும் கூட இருக்கின்றன. ஆனால் ஒப்புநோக்கில் வெகு சிலரே ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து வந்தவர்கள். காரணம் ஒடுக்கப்பட்ட வகுப்புகளுக்கும் போதிய வாய்ப்பு நலங்கள் இல்லாமையேயாகும். அதாவது, தீண்டாமைக் கருத்தாக்கம் வேறுபல கருத்தாக்கங்களோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டிருப்பதும் எல்லா சட்டதிட்டங்களும் ஆட்சியதிகாரங்களும்- ஆளும் அமைப்புகளும் இதை ஒரு இயற்கையான பண்பமைவாக இயல்பான நிகழ்வாக ஏற்றுக் கொண்டிருப்பதும் தான்.

சொத்துடமை : வருணமும் சாதியும்: பிறப்பின் அடிப்படையிலேயே வருணமும் சாதியும் தீர்மானிக்கப் பட்டன. செல்வம், அதிகாரம், உயர்ந்த ‘சமூக அந்தஸ்து’ மீதான முழுமையான பிடிப்பை தன்னிடமே தக்கவைத்துக் கொள்வதை உறுதிப் படுத்திக்கொள்ள ஆளும் வகுப்பு விரும்பியதே இதற்குக் காரணம். மேலும், ஒடுக்கப்பட்டோர் மீது திணிக்கப்பட்ட துயரம், தொல்லைகள், அடிமைநிலை சமூகத்தின் மற்ற பகுதியினருக்கும் மாற்றப்பட்டுவிடக் கூடாது என்று அவர்கள் விரும்பியதும் மற்றொரு காரணமாகும். முற் பிறவியில் புரிந்த (கர்மங்களுக்கு) நல்வினை தீவினைக்கு ஏற்பவும் தெய்வத்தின் அருளுக்கும் நீதிக்கும் ஏற்பவுமே இப்பிறவியில் பிறப்புக்கள் ஏற்படுகின்றன என்னும் நம்பிக்கைகள் வலிந்து உருவாக்கப் பட்டது அந்நிலையில் தவிர்க்க முடியாததாகும். இது உறுதியாகவும் மாற்ற முடியாத வகையிலும் ஒரு தனிநபரைக் குறிப்பிட்ட ஒரு வருணம் மற்றும் ஒரு குறிப்பிட்ட சாதியில் பொருத்தி வைத்தது.

இது உண்மையில் சொத்துடமை அமைப்பை நியாயப் படுத்துவதற்காக - மிகுந்த அறிவுத்திறனுடனும் மாபெரும் சூழ்ச்சித் தன்மையுடனும் அடையப்பெற்ற ஒரு சாணக்கியத்தனமான (மாக்யவல்லிய) துரோகத்தனமான அரசியல் தந்திர நடவடிக்கையாகும். இதன் விளைவாக, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டு அச்ச மேற்படுத்தும் அளவிற்கு சமூகம் பிளவுண்டுபோனது. தமது வகுப்பு நலன்களைக் காத்துக் கொள்வதற்காக இத்தகைய சிதைவுகள் ஆளும் வகுப்புகளுக்குத் தேவையாயிற்று. அடிப்படையான முதன்மைப் பிரிவு என்பது தெய்வத்தின் பகராண்மையராக (பிரதிநிதிகளாக) தங்களையே கற்பித்துக் கொண்டு செல்வம், வாழ்க்கை வளம், அதிகாரம், கடவுளுக்கு நெருக்கமாக இருத்தல் ஆகியவற்றை பிறப்பாலேயே உரிமையாக பெற்றிருந்த மக்கள் ஒருபுறம்; கடவுளாலும் மதங்களாலும் பழிக்கப்பட்டதாகக் கூறி, துயரம்-துன்பங்கள், அடிமைத்தனம் மற்றும் தீண்டாமை மட்டுமேயான வாழ்க்கைக்கு நிலையாகத் தள்ளப்பட்ட மக்கள் மறுபுறம். தெய்வீக சாபம், பழிப்புக்கு ஆளாதல், கோபத்தால் வஞ்சந்தீர்க்கப்படல் மற்றும் கடவுளின் ஆணை, இச்சை போன்றவைகளின் பேரால் இரண்டாவதாக கூறப்பட்ட மக்களுக்கு விடுதலை, வீடுபேறு, கதிமோட்சம், மீட்பு ஆகியவற்றின் எந்த நிலையும் மறுக்கப்பட்டன. அதன் விளைவாக அவர்கள் முழுமையாகவும் சமூக உற்பத்தியின் செயல்பாட்டிலிருந்தும் ஒதுக்கப்பட்டுவிட்டனர். சமூக உற்பத்தி சாதனங்களிலும் அவற்றின் உடைமையாளர்களுக்கிடையிலும் மாற்றம் நிகழ்வதென்பது வகுப்புக் கட்டுமானத்தில் மாற்றங்கள் நிகழந்து அதன் பலனாக சமூக முன்னேற்றத்தில் கொண்டு விடுவதாகும். ஆனால் சமூக உற்பத்திச் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லாததால், வகுப்புக் கட்டுமானத்தில் நிகழ வேண்டிய இம் மாற்றங்கள் கூட ஏற்படாமல் போயின.

தெய்வீகத்தின் தோற்றுவாய்: பாவ-புண்ணிய நடவடிக்கைகள், முன்வினைக் கர்மங்கள், மறுபிறப்பு, ஊழ்வினைக் (விதி) கோட்பாடு, வீடுபேறு (மோட்சம்) போன்ற கவைக்குதவாத எண்ணங்கள், தெய்வீகத் தன்மை கொண்டவர்களாகவும் சமய ஆசான்களாகவும், மடாதிபதிகளாகவும், அவதாரங்களாகவும், தங்களைத் தாங்களே மேல்நிலைக்கு உயர்த்திக் கொண்டவர்களால் பரப்பப்பட்டு புனிதத்தன்மை அளிக்கப்பட்டன. அநீதி, அடக்குமுறை, துயரம், துன்பங்களை உண்டாக்கிய ஒடுக்கும் வகுப்பும் சுரண்டல் தன்மை கொண்ட சமூகக் கட்டுமானமும் வேண்டுமென்றே தெரிந்தே மறைக்கப்பட்டு அவைகளின் சுயநலக் கருத்துக்களைப் பரப்புவதற்காக நம்பிக்கைகளில் மட்டுமே இருப்பதும் உண்மையில் புலனுக்கெட்டாததும் உருவமற்றதுமான கடவுள் கருத்து முன் வைக்கப்பட்டது. இப்படியாக, ஒடுக்கப் பட்டோர் உண்மையான ஒடுக்கு முறையாளர்களை என்றுமே வெளிப்படையாக காண முடியாமல் இருப்பதன் விளைவாக சுரண்டலுக்கு எதிராக ஒடுக்கப் பட்டோர் (தலித்துக்கள்) அனைவரும் கூட்டாக எழுச்சி பெற்று எதிர்க்குரல் எழுப்பிப் போராடியதற்கு தடயங்கள் ஏதும் இல்லை. இச்சமூக அமைப்பு அது வடிவமைக்கப்பட்டுள்ள வகையில் ஒடுக்கப்பட்டோர் தங்களின் பரிதாபகரமான அவலமான நிலையை உணர்ந்து கொள்வதற்கும் கூட எப்போதும் அனுமதித்ததேயில்லை. இந்திய வாழ்க்கை முறை உண்மையில் கூட்டுச் செயல்பாட்டை எப்போதும் ஏற்பதே இல்லை, கண்டித்தே வந்துள்ளது. மோட்சம் என்னும் வீடு பேற்றை-பரமநிலை எய்துதல், ஆன்ம விடுதலை பெறல், முக்தியடைதல் என்றெல்லாம் விளக்கப்படும் ஒன்றை தனி மனிதராகத்தான் முயன்று அடைய வேண்டும் என்ற கோட்பாட்டை அது முன் வைக்கின்றது.

ஒடுக்கு முறையாளர்களின் கருத்துப்பரப்பல் பின்வரும் வடிவத்தைக் கொண்டது: எல்லா துன்பங்களுமே மனித உடலில்தான் தோன்றுகின்றன; மனித உடம்பு இல்லையென்றால் துன்பம் என்பதும் இல்லை. தொல்லைகளும் தீவினைகளும் இல்லை. துன்பங்களும் தீவினைகளும் இறப்போடு முடிவடைகின்றன. எனவே வாழ்வது என்பதே துன்பங்கள் நிறைந்தது தான்; வாழ்க்கை, ஆசை மற்றும் காமத்தால் விளையும் செயல்களில் ஈடுபடச் செய்கிறது. ஆகையினால், வாழ்வையே நாம் துறக்க வேண்டும். இத்தகைய கருத்துப்பரப்பல் (கூட்டுணர்வுநிலை மற்றும் கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றிலிருந்து எழும்) சமூக உணர்வுநிலை, தோழமை உணர்வு, சினம், எதிர்ப்புத் தன்மை ஆகியவற்றை தாமாகவே மழுங்கடிக்கின்றது. சாதாரண மனிதன், தன் நிலையையும் நோவு நலிவுகளையும் உணர்வதற்கும், நடைமுறை மெய்மையை புரிந்து கொள்வதற்கும், தான்படும் துன்பத் துயரங்களுக்கெல்லாம் யார் காரணம் என்று பார்ப்பதற்குமான ஆற்றலை இழக்கும்படி இந்துமத நிலவுடமை எல்லா மட்டங்களிலும் செயலாற்றி கவனமாகப் பார்த்துக் கொள்கிறது. இத்துடன், இராணுவம், காவல் துறை, சிறைச்சாலை, மற்றும் சமய நூல்களை ஏற்படுத்தி இவற்றுக்கெல்லாம் ஒரு மேலான புனிதத் தன்மையையும் வழங்கியுள்ளது.

இதன்மூலம் வரலாற்றுக் காலகட்டத்தில் ஆளும் வகுப்பானது அறிவு சார்ந்ததும் சமூக நீதியானதுமான அமைப்பை எதிர்க்கின்ற ஒரு சில கருத்துக்களை வாழவும் வளரவிடவும் விட்டிருக்க முடியும் என்பதை உய்த்துணர முடிகிறது. இறை மறுப்பியல், நாத்திகம், பகுத்தறிவுவாதம் மற்றும் முற்போக்கான போக்குகள் வளர்வதற்கு அரசு அனுமதித்தபோது பௌத்தவியம் செழித்தோங்கியது. ஆனால் சுரண்டல்தன்மை கொண்ட அரசு, அது தனக்கு உடன்பாடாக இல்லை என்று கண்டபோது, இராணுவத் துணை கொண்டோ அல்லது வேறு வழிகளிலோ அதை அழித்தது. எனவே, தவறு ஒரு குறிப்பிட்ட சாதியால் என்பதைவிட இந்து நிலவுடமை அமைப்பால்தான் என்பதே சரியாயிருக்கும். முழு சமூக அமைப்பும் முடியாட்சியின் மீது நிறுவப்பட்டது. காலமும்கூட அதற்கு ஓர் உயர்வைத் தந்து தூயதன்மை, புனிதத்தன்மை, கடவுள்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அல்லது அவதாரங்களாக காட்சிதரும் கருத்தாக்கங்களை வளர்த்தெடுத்தது. இக்காலகட்டத்தில்தான் வருவதுரைக்கும் எல்லா திருநாவுரையர்களின் (தீர்க்கதரிசிகள்) - ஞானிகளின் -மதங்களின் முதல் வருகை / தோற்றம் அமைந்தன என்பதை நாம் காண்கிறோம்.

போர் விரும்பும் மாதர்கள்: இந்துத்துவத்தால் புனிதத் தன்மையும் தெய்வத்தன்மையும் ஏற்றிக் கூறப்பட்ட வீரநாயகர்கள் எல்லோருமே உண்மையில் அதிகாரத்திற்காக போர் புரிந்தவர்களே. அவர்களின் போர்களும் அவர்களைப்பற்றி கூறப்பட்ட கதைகளும் புராணக்கதைகளாக மறை நூல்களாக புனிதமாக்கப் பட்டன. மேலும் அநேக இந்துமத விழாக்களும்கூட உண்மையில் அத்தகைய போர்களை கொண்டாடு பவைகளே. இப்போர்களில் வென்றடக்கப்பட்ட அரசர்கள் அரக்கர்களாக்கப்பட்டனர், வென்றவர்கள் புகழாரம் சூட்டப்பெற்று தெய்வங்களாயினர். பொறாமை, காழ்ப்பு, இகழ்ச்சி, வெறுப்பு, பகைமை மற்றும் பழிவாங்கும் தன்மை போன்ற வன்முறையின் அடிப்படைத் தன்மைகள் ஒரு பண்பாட்டு முக்கியத்துவத்தோடு போற்றி வளர்க்கப்பட்டன. இந்துத்துவ மதிப்பீட்டுக் கட்டுமானத்தில் (இந்து பண்பாட்டு அமைப்பில்) போர் என்பது முதன்மை நிலையில் இருப்பதையே இப்போக்குகள் தெளிவாகக் சுட்டிக் காட்டுகின்றன. அதிகாரமும் ஆட்சியும் மற்றொரு வருணத்திற்கு-மற்றொரு குழுவிற்கு மாற்றப்பட்ட போது, அங்கு சமரசத்தன்மை கொண்ட புதிய கருத்தாக்கங்கள் எழுந்தன. இப்போக்குகளாவது தொடர்ந்திருந்தால் சீதையையும் சூர்ப்பனகையையும் அவமானப்படுத்தியவனும், காண்டவவனத்தை எத்தவனுமான நாயகன் (ராமன்) புராணப் புத்தகங்களிலும் கோயில்களிலும் இடம் பெற்றிருக்கமாட்டான். அவன் ஒரு புராணப்புனைவு (தொன்மக்கனவு) முன்மாதியாக கொண்டாடப்பட்டிருக்கமாட்டான். ஆனால், அதிகாரமும் ஆட்சியும் தொடர்ந்து பார்ப்பனர் மற்றும் சத்தியர் கைகளிலேயே இருந்துவிட்டன.

விளைவாக, அவர்களது ஆட்சியின் நிலைபேற்றிற்கு துணைபுரிந்தோரெல்லாம் அவர்கள் வீரமாந்தர்களாகவும், கடவுள்களாகவும் போற்றிப் புகழப்பட்டனர். இந்த ஆளும் வருணங்களின் விருப்பங்களுக்கு ஏற்பவே சமூக அமைப்பும் கட்டப்பட்டது /உருமாற்றப்பட்டது. விளைவாக, புராணப் புனைவியல் (தொன்மவியல்) மற்றும் பண்பாட்டு உணர்வுநிலை அவர்களின் கருத்தாக்கங்களுக்கு ஏற்பவே அமைந்தன. இலக்கியமும் அவர்களின் இசைவுகளுக்கேற்பவே உருவாக்கப் பட்டன. அவமதிப்பு. காழ்ப்பு, செருக்கு, இறுமாப்பு போன்ற ஏற்றத்தாழ்வின் உள்விளைவுகள் கொண்டாடப்படும் தன்மைகளாகத் தொடர்ந்தன. அதே வேளையில் அன்பு, கருணை, தோழமை மற்றும் சமத்துவம் ஆகிய நற்பண்புகள்-இலக்கியத்திலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்டன.

கிருஸ்து- மாறுபட்ட முன்மாதிரிகள்: ஏசுகிருஸ்து கடவுளின் இருப்பையும் அவரது வானுலக அரசாங்கத்தையும் முன்னுரைத்தார். தன்னையே பிதாவின் நெருங்கிய பிரியமுள்ள குமாரனாக கருதினார். முதலும் அசலுமான பாவத்தை ஆதாமும் ஏவாளும் செய்ததால் அவர்கள் விண்ணுலகின் ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். உடலுறவு பாவமானதாக நம்பப்பட்டது. மாறாக, நீங்கள் ஏசுவை பின்பற்றினால் அதாவது நீங்கள் அன்பு, கருணை, தொண்டு, தோழமை (சகோதரத்துவம்) சமத்துவம், தன்மறுப்பு (தியாகம்) பொறுமை போன்ற நற்பண்புகளைக் கைக்கொண்டால் கடவுள் உங்கள்மீது கருணையைப் பொழிவார் என்றும் நம்பப்பட்டது. கடவுளின் அன்பை மனம் வருந்துதல் (பாவமன்னிப்பு), தொழுதல் மூலமாகவும் கூட அடைய முடியும். இக்கோட்பாடுகளே கிருத்துவ சமுதாயப் பண்பாடு மற்றும் இலக்கியங்களின் அடிநாதமாக இருக்கின்றன. இம்மதிப்பீடுகளால் உள்ளவர்-இல்லாதவர், ஏழை-பணக்காரரிடையே பிரிவினை இருந்த போதிலும் மக்கட்திரளில் மிகவும் தீவிரமான துன்பத் துயரங்களாலும் தீவினையாலும் பாதிக்கப்பட்டோருக்கும் கூட கிருத்துவ சமூகத்திலும் இலக்கியத்திலும் ஒரு இடமுள்ளது. மாறாக, சாதிகளிலேயே மிகத் தாழ்ந்த சாதியினரும் சாதியக் கட்டமைப்பிற்கு வெளியேயே வைக்கப்பட்டோருமான சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் இந்துக்களின் மத ரீதியான மற்றும் மதச்சார்பற்ற இலக்கியங்களில் எந்த இடத்தையும் பெற முடியவே இல்லை.

இந்துத்துவத்தின் கடவுள்களும் புராணங்களும் உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களை, நலிந்த மக்களை எதிரிகளாக நடத்தி அவர்களுக்கு எதிராக மோசமான கருத்துப் பரப்பலில் ஈடுபடுவதுதான் இதற்குக் காரணம். இப்போது கடவுளும் அவரது புராண நூல்களுமே, வெறுப்பு, இகழ்ச்சி, தூற்றல், செருக்கைப் பரப்புவதில் ஈடுபடும்போது சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் சமூகத்திலும் இலக்கியத்திலும் இடம் பெறுவதை நாம் எதிர்பார்க்க முடியுமா? இக்காரணத்தால் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், பகுத்தறிவுத் தன்மை மற்றும் அண்மைக்கால கருத்துக்களான குடியான்மை, சமூகவுடமை போன்ற மதிப்பீடுகள் இந்துக்களின் சமூகத்திலும் இலக்கியத்திலும் புனைவு மயக்க (தொன்ம) சிறப்பான்மைகளைப் பெறவில்லை. இந்துத்துவத்தில் அவைகளுக்கான வேர்கள் இல்லை, தகுதி வாய்ந்த அடிப்படை இல்லை. திருத்தொண்டர்களின் இலக்கியமும்கூட அவர்களுக்கு உரிய இடத்தை தர தவறி விட்டது. அதற்கு மாறாக அவற்றிலும் இனவெறி வல்லாண்மை (ஆட்சிவெறி & பாசிசம்) வக்கத்த போக்கு ஆகியவையே பெரும்பாலானவற்றில் இடம் பெற்றுள்ளன.

வடமொழி (சமஸ்கிருத) இலக்கியம்: வடமொழியின் மத இலக்கிய, செவ்வியல் இலக்கிய நாயகர்கள் ஆளும் பகுதியினரையும் இந்துத்துவத்தின் மதிப்பீட்டுக் கட்டமைப்பிற்கு பங்களிப்பு செய்த பகுதியினரையுமே சேர்ந்தவர்களாவர். இந்த நாயகர்களுக்கு தெய்வீகத் தன்மை அளித்து கோவில்களில் வைக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இலக்கியங்களில் அவர்களின் வாழ்க்கை மட்டுமே கருப்பொருளாயின. மத, ஆட்சி- அதிகாரங்களால் பழிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டோரில் யாரும் தெய்வீக, நாயகப் பெருமையை, ஏன் துணைநாயகன் இடத்தையும் கூட பெறவில்லை. வட மொழியின் மதரீதியானவையும், வெறும் கற்பனைவாத இலக்கியங்களும் மத நிறுவனங்களுக்கும் ஆளும் அமைப்புகளுக்குமே ஊழியம் செய்ய உறுதி பூண்டிருப்பதே இதன் தெளிவான பொருளாகும். மேல் வருணங்களைச் சார்ந்த அரசர்களையும், பேரரசர்களையும் புகழ்ந்தும் கடவுளரைப் போற்றியுமே அது பெருமளவில் செழித்தது. பார்ப்பனர், சத்தியர் தவிர மற்றெந்த வருணமும் வடமொழி இலக்கியத்தில் தோன்றியதேயில்லை.

விதிவிலக்காக ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுக்கள் இருக்கலாம். செல்வம், அதிகாரம், கல்வி மூன்றுமே ஆளுமை செலுத்தி வந்த அந்த இரு வருணங்களின் முற்றுடைமையாக (ஏகபோகமாக) இருந்தன. அதன் விளைவாக வடமொழி இலக்கியம் ஸ்மிருதி அல்லது மறை நூல்களின் வரையறையை மீற முடிந்ததில்லை. அதுவே அவ்விலக்கியத்தை சலிப்பூட்டும் ஒன்றாக மாற்றிற்று. வருணாசிரம அமைப்பிற்கும் அதற்கு அடி நாதமாய் அமைந்துள்ள அறிவார்ந்த கட்டமைப்பிற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வடமொழி இலக்கியம் ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியத்திற்கான புனைவியல் (தொன்ம) அடிப்படையையும் முழுமையான மரபு வழிகளையும் படைத்தளிக்காது.

திருத்தொண்டர்களின் இலக்கியம்: பிறகு இசுலாமிய ஊடுருவல் இந்தியாவை குலுக்கியது. இசுலாமிய அதிகாரத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்து அரசுகளின் அழிவு தொடங்கிய காலகட்டத்தில் திருத் தொண்டர்களின் இலக்கியம் தோன்றியது. அதன் முகாமையான செயல்பாடாக நொறுங்கிக் கொண்டிருந்த இந்து அரசைத் தாங்கி நிறுத்துவதும் பெருகிவளரும் இசுலாத்தை தடுத்து நிறுத்துவது மாகவே இருந்தது. விளைவாக, வருணாசிரம அமைப்பின் அடிநாதமாக இருந்த கருத்தியலை பரப்புவதில் மட்டுமே அது வெற்றி கண்டது.

அரசுகள் நிலைகுலைந்து குழப்பம் மிகுந்திருந்த அக்காலகட்டத்தில் இந்துத் திருத்தொண்டர்கள் குறைந்து கொண்டும் இசுலாமிய திருத்தொண்டர்கள் கூடிக் கொண்டும் வந்த காலக்கட்டத்தில் - (சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து) சூத்திரர், ஆதிசூத்திரர் மற்றும் பெண்களிடமிருந்து சிந்தனையாளர்கள் தோன்றத் துவங்கினர். இசுலாமிய தாக்குதலின் கீழ் இந்து ஒடுக்குமுறை அதிகாரம் நொறுங்காமல் போயிருந்தால் இவ்வகுப்புக்களிலிருந்து கலைஞர்கள், அறிவார்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் தோன்றிய அற்புதங்களை நாம் கண்டிருக்க முடியாது. இந்து ஒடுக்குமுறை எந்திரம் கலகலத்துப்போனதன் காரணமாகவே சிறிதே காலமாயினும் சமூகம் படைப்பாக்கம் கொண்டதாக மாறிற்று.

பிறகு முசுலிம் அரசு நிலைபெற்றது. இந்து அரசர்களும் ஆளுவோரும் முசுலிம் ஆட்சியின் கீழ் ஒரு அடிமைத்தனமான நிலைமையை ஏற்றுக் கொண்டோ அல்லது தனியரசுகளாக நின்றோ வாழ்ந்தனர். இந்நிலை, ஒடுக்குமுறை வருணாசிரம அமைப்பு மீண்டும் தலை தூக்கவே உதவியது. முசுலிம் ஆட்சியாளர்கள் தங்களின் ஒடுக்குமுறை செயல்பாடுகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருப்பதைக் கண்டதால் இந்து சமூக கட்டமைப்பையே நிலை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தனர். ஆங்கிலேயர் வந்த போது சமூகத்தின் படைப்பாக்கத்திறன் முழுவதுமே நசிந்து போயிருந்தது. உண்மையில் திருத்தொண்டர்களின் இலக்கியம் இந்த மாறிவரும் காலகட்டத்தைச் சேர்ந்ததுதான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் போர்க்கால பின்னிலையை எதிர்த்துத்தான் அது எழுதப் பட்டது. இவ்வகைக் காலத்தில் வேறு எப்படிப்பட்ட இலக்கிய வகையை நாம் எதிர்பார்க்க முடியும்?

(போர்க்காலத்தில் இயற்றப்பட்ட) இத் “திருத்தொண்டர்” இலக்கியம் ( அதாவது இந்து திருத்தொண்டர்களின் ) வருணாசிரம அமைப்பு அதன் அறிவுசார்ந்த நிலை, இலக்கியக் கோட்பாடுகளுக்கு முழுவதுமாக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தது. வடமொழி இலக்கியம் உருவாக்கி வைத்திருந்த கட்டுத்திட்டங்கள்-அதன் கருத்தாக்கம், தெரிவியல் (Theory), நாயகர்கள், ஒடுக்கு முறையை வளர்க்கும் கோட்பாடுகள் - எல்லாமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருத்தொண்டர் இலக்கியமும் அவற்றை முழுமையாக வெளிப்படுத்தியது. விளைவாக சுரண்டல் தன்மை கொண்ட வருணாசிரம அமைப்பு மேலும் வலுவாக்கப்பட்டது. இந்தியாவிலிருந்த இசுலாமிய சமூகமும் கூட சாதிய அமைப்பையும் அதன் அடிநாதமான மதிப்பீட்டுக் கட்டமைப்பையும் உள்வாங்கிக் கொண்டது. (திருத்தொண்டர்கள் வெளிப்படுத்திய) பக்தி அல்லது ஒப்படைப்பு உணர்வால் சமூக சமத்துவத்தின் செய்தியை பரப்ப முடியவில்லை. அவர்களின் மாறுபட்ட நடுநிலை முயற்சிகள் சமூக முன்மாதிரிகளாகவோ, புனைவுக் (தொன்மக்) கோட்பாடுகளாகவோ உருமாறத் தவறி விட்டன. ‘பக்திமார்க்கம்’ என்னும் வழிபாட்டுப்பாதை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் சாதிய அமைப்புமுறைக் கருத்தியலை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்ட பல்வேறு வழிபாட்டு பிவுகள் தொடர்ந்து நிலைக்கவே செய்தன. விதி அல்லது ஊழ் வினையில் நம்பிக்கை, முன்வினைப்பயன், மறுபிறவிச் சித்தாந்தங்கள் தொடர்ந்து பற்றிப் படர்ந்தன. அதே போன்று ‘கடவுள் எப்படி படைத்தானோ அப்படியே இருத்தல்’ நடவடிக்கையும் பரப்பப்பட்டது. அத்தகைய தொரு அறிவு மற்றும் சமூக அமைப்பே இந்து நிலவுடமை அரசுக்கு தேவையாக இருந்தது, எனவே அந்நிலை தொடர்ந்து நீடித்தது.

ஆங்கிலேயர்களினதும் அறிவியலினதும் வருகை: ஆங்கிலேயர்கள் இந்து-முசுலீம் திருத்தொண்டர்களைத் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர். அவர்கள் கூடவே புதிய அறிவும் அறிவியலும், புதிய எந்திரங்கள், தொழில் நுட்பங்கள், புதிய தொழில்களும் வணிகமும் வந்தன. உற்பத்திக்கான சமூக மாற்றம் மேற்கொள்ளத் துவங்கியது. அத்துடன் பழைய கட்டமைப்பும் நொறுங்கி விழத் தொடங்கியது. ஒரு புதிய அறிவார்ந்த அமைப்பு வேர் கொள்வதற்கான போதிய வாய்ப்பும் வசதியும் உருவாயின. மேற்கத்திய அறிவுநிலையின் (ஞானத்தின்) புதிய விழிப்புணர்வு உள்ளங்களை ஒளிப்பெறச் செய்தன. விளைவாக, சுய-திறனாயவுத் சிந்தனைகள் உருவாக முடிந்தது. இச்சுய திறனாய்வுப்போக்கு, கற்பனைத் திறன் வாய்ந்த இலக்கிய ஆய்வுடன் இணைந்து புதிய இலக்கிய வெளிப்பாட்டிற்கு வழி வகுத்தது. முதன் முதலாக இலக்கியம் வெறும் உளநிலை சார்ந்த, அறிவு நிலை மீறிய அகநிலை சார்ந்த, அல்லது மதரீதியானவைகளுக்கும் அப்பால் சமூக கருப்பொருட்களை வெளிப்படுத்துவதற்கு முயன்றது.

கடந்த காலங்களில் உயர் வருணங்கள் மதத்தால் அவைகளுக்கு அருளப் பெற்ற உயர்நிலையினால் சமூக வாழ்வின் முன்னிலையில் இருந்தபடி பொருளியல், மத, அரசியல் அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தனர். இப்போது தங்களின் சொந்த குடும்பச்சிக்கலையே மையக்கருத்தாக வைத்து அதே வருணத்தார் சமூக இயக்கங்களின் தலைவர்களாயினர். அதே நபர்கள் கவிகளாகவும்-எழுத்தாளர்களாகவும் வெளிப்படத் தொடங்கினர். தங்களது சொந்த குடும்பச் சிக்கல்களையே வெளிப் படையாக முன்வைத்து விவாதிக்கவும் தொடங்கினர். ஆனால் இந்த விவாதங்களிலும் கூட இந்துத்துவத்தை திறனாய்வுடன் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயினர். அத்தகைய திறனாய்வு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோன்றியது. இத்திறனாய்வுடன் கூடிய அலசல்கள் சீர்திருத்தங்களை கோரின. உளஆய்வுடன் கூடிய முன்னேற்றம் என்னும் கண்ணோட்டத்திலிருந்து இத்தகைய நடவடிக்கைகள் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டன.

பெண்கள்: நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் இலக்கியத்தின் கருப்பொருளாயினர். பல்வேறு வடிவங்களில் அவர்கள் இலக்கியங்களில் தோன்றத் தொடங்கினர்: ஒரு குழந்தைக் கைம்பெண்ணாக, குழந்தை மணப்பெண்ணாக, திருமணமான (அவளது கொண்டான் வீட்டான் கருணையில் வாழும்) பெண்ணாக இன்னும் இதுபோன்ற இந்துக் கூட்டுக் குடும்பத்தால் கசக்கிப் பிழியப்பட்ட பல்வேறு பெண்களின் வடிவங்களில். புதிய அறிவியலும் தொழில் நுட்பங்களும், தொழில்கள் மற்றும் வாணிகத்தின் புதிய வடிவங்களும் புதிய இலக்கியம் மற்றும் அறிவு சார்ந்த கருத்துக்களும் உண்மையில் பெண்களின் வாழ்வை படம்பிடித்து காட்டும் துணிவான முயற்சியில் இறங்க மிகுந்த ஊக்கமளித்தன.

சூத்திரர்கள் யார்?: பெண்களைப் போன்றே அதுவரை புறக்கணிக்கப் பட்டு வந்த சூத்திரர்கள் மற்றும் ஆதி சூத்திரர்களைப் படைத்துக் காட்டுவதில் இப்போது எந்த இடரும் இல்லை. மேலும் ஒரு வலுவான பெரும் பேரரசு முழுமூச்சுடன் குடியாட்சி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்தது. அரசு மட்டுமல்ல, சமூக சீர்திருத்த இயக்கங்களும் கூட இவற்றை ஆதரித்தன. இராமாயண கால சம்புகனைப் போலல்லாமல், புதிய ஆட்சியாளர்கள் இந்த எழுத்தாளர்களுக்கு எதிராக பார்ப்பனர்களால் தொடுக்கப்பட்ட விஷமத்தனமான குற்றச்சாட்டுகளை (முறையீடு) கேட்டு, தங்களின் எழுத்துக்களில் பெண்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியதற்காக அந்த எழுத்தாளர்களைத் தண்டிக்கத் தயாராக இல்லை. உண்மையில் எழுத்தாளர்களின் சார்பாகவே சட்டம் நின்றது. மேலும் பார்ப்பனர்கள் இதற்குள்ளாக புதிய தொழில்களையும் புதிய பதவிகளையும் மேற் கொண்டிருந்தனர். விளைவாக அந்த வகுப்பே சற்று பிளவுண்டிருந்தது. வரலாற்றிலேயே முதன்முறையாக, சீர்திருத்தக்காரர்கள், பழைய பஞ்சாங்கங்கள் (சனாதனவாதிகள்) என்று பார்ப்பனர்களில் இருபிவினர் தோன்றி முரண்பட்டு நின்றனர்.

பெண்களைப் போலவே சூத்திரர்களுக்கும் இலக்கியத்தில் இடம் பிடிப்பது கடினமான ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் சூத்திரர், ஆதி சூத்திரர் போன்று அதே ஒத்த நிலைமையிலிருந்த மிகவும் எளிய ஏழை மக்களின் வாழ்வை அன்றைய ஆங்கிலப் புதினங்கள் படம் பிடித்துக் காட்டியிருந்தன. இப்படியெல்லாம் ஒரு சுமூகமான சூழ்நிலைமை இருந்தும் கூட ஏன் சூத்திரர்களுக்கும் ஆதி சூத்திரர்களுக்கும் இலக்கியத்தில் உரிய இடம் மறுக்கப்பட்டது? இது எழுத்தாளர்கள் அழகியல் பார்வை அல்லது கலை கலைக்காகவே என்னும் கருத்தாக்கத்திற்கு அடிமைப்பட்டு அதில் தீவிரமாக இருந்ததினாலா? அவர்கள் புதிய அறிவு விளக்கம் (ஞானம்) பெற விரும்பாததினாலா? அல்லது துன்ப-துயரங்கள், வாழ்க்கைத் தொல்லைகள் அடிமைத்தனம், ஒடுக்கப் பட்டோரின் நோவு-நலிவுகள் இந்த எழுத்தாளர்களின் சொற்திறமைக்கும் எழுத்தாற்றலுக்கும் மீறி வெகு தூரம் தள்ளி இருந்ததாலா?

எழுத்தாளர்கள் திறமையில் குறைந்தவர்கள் என்று கூற முடியாது. அவர்களுமே சமூக சீர்திருத்தத்தையும் அறிவொளிவியக்கத்தையும் விரும்பினர். ஆனால் சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் கவனிக்கத் தவறிவிட்டனர். அவர்களின் சொந்த பண்பாட்டு நிலையாக்கமும், உளப்பாங்கும் புராணப் புனைவுமே (தொன்மம்) ஒடுக்கப்பட்டோரை தங்களின் எழுத்துக்களில் படம் பிடித்துக் காட்ட விடாமல் அவர்களைத் தடுத்த உண்மைத் தடைகளாகும்.

முன்மாதிரி சீர்மைகள் (Classics - செவ்வியல்கள்): ஆங்கில எழுத்தாளர்கள் ஏழை எளியவர்களைப் பற்றி உணர்வுபூர்வமாக அறிந்திருந்தனர். காரணம் ஏசு கிருத்துவானவர் அம்மக்களைப் பற்றி அவ்வாறே கண்டறிந்திருந்தார். கடவுளின் திருக்குமாரனாக இருந்தபோதிலும் கூட, ஏழை எளியோரை புனிதமற்றவர்களாகவோ வெறுக்கத்தக்கவர்களாகவோ அவர் நடத்தவில்லை. பாவ புண்ணிய கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் பிறப்பு அல்லது சாதியின் அடிப்படையில் அதற்கான தகுதி அல்லது பழி பாவம் சுமத்தல் என்பதை அவர் முன்வைத்ததில்லை. அவர் தன் இருகைகளையும் விரித்து அன்பையும் கருணையையும் ஏழை எளியோர் மீது பொழிந்தார். இதனாலேயே கிருத்துவமும், அதன் நிறுவனங்களும், அச்சமூகமும் அதன் அறிவார்ந்தவர்களும் எழுத்தாளர்களும் ஏழை எளியோரை தங்களின் உற்றார் உறவினராக பாவிக்கின்றனர். கிருத்துதான் இம்முன்மாதியான சீர்மைகளை, இலக்கியத்திற்கு இத்தொன்ம மதிப்பீடுகளை (புனைவு இலக்குகளை) அளித்தார். ஆகையினால் அன்பு, கருணை, எதிர்ப்புச் சினம் ஆகியவற்றை அடிமையாகக் கொண்டு எழுந்த புரட்சிகர இயக்கங்களும் கூட ஏசுகிருத்துவிலிருந்து அகத்தூண்டுதல் பெற முடிந்தது.

மூடத்தனம்: சூத்திரர், ஆதிசூத்திரர் பற்றி இந்து எழுத்தாளர்களால் உற்றுணர முடியாமல் போனதற்கு காரணம் கடவுள்தன்மை கொடுக்கப்பட்ட இந்து நாயகர்களும் தெய்வீகப் படைப்புக்களாகக் கருதப்படும் புனித புராணநூல்களும் ஏழை எளியோரைப் பற்றி என்றுமே கவலை கொள்ளாமல் இருந்ததே. கணக்கற்ற அவதாரங்களும் திருத்தொண்டர்களும் இருந்தபோதிலும் அவர்கள் அனைவருமே சூத்திரர் ஆதிசூத்திரர் பெண்களின் நோவு நலிவுகளை காணத் தவறிவிட்டனர். கடவுள்கள், திருத்தொண்டர்கள், மதங்கள் அனைத்துமே ஏழை எளிய மக்கள் மீது வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் போது, இந்துக்களால் ஏற்படுத்திக்கொண்ட மதிப்பீட்டு கட்டமைப்பு-புராணப்புனைவு (தொன்ம) ஆகியவைகளில் சூத்திரர்கள் என்ன இடத்தைப் பெறமுடியும்? அன்பு, கருணை, தோழமைக்கு இந்து வருணாசிரம அமைப்பில் என்றுமே எந்த இடமும் இருந்ததில்லை.

விளைவாக, சூத்திரர் ஆதிசூத்திரர்களுக்கு இந்து சமூகத்திலும் இலக்கியத்திலும் இடமிருந்ததில்லை. ஆகையால் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டுவர யாரும் எண்ணியதுமில்லை. அவர்களிடையில் இருக்க யாரும் முயன்றதில்லை அல்லது ஒரு போராட்டத்திற்காக அவர்களை யாரும் எழுச்சிபெற வைத்தது மில்லை. ஒரு போராட்டத்திற்காக அவர்களை தயார்படுத்துதல் என்பது விதி (ஊழ்வினைக்) கோட்பாடு, மறுபிறவி, சுரண்டல் ஆகியவற்றைப் போற்றி வளர்த்த சமூக அமைப்பையும் அதன் அறிவார்ந்த நிலையையும் அழித்தொழிப்பது என்பதாகும். எனவே அது இயலாத ஒன்றே. எனவே எல்லோருமே வருணாசிரம அமைப்பின் தேவைகளில் தோன்றிய புனைவு மயக்க மதிப்பீடுகள் மற்றும் கோட்பாடுகளை போற்றி வளர்க்கவும் பரப்பவுமே செய்தனர்.

பௌத்தவியம் இருந்திருந்தால்: மக்களின் மனப் பாங்கை ஆளுமை கொள்ளும் ஒரு வடிவமைக்கும் ஆற்றலாக பௌத்தவியம் தொடர்ந்து நீடித்திருந்தால் இந்திய மரபில் அன்பும், கருணையும், முதன்மைப் பெற்றிருக்கும். கிருத்துவ நிறுவனங்களைப் போலவே ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்யும் எண்ணற்ற பள்ளிகள் அனாதை இல்லங்கள், மருத்துவ மனைகள், மற்றும் சமய நிறுவனங்களை கொண்டிருந்திருப்போம். அவற்றின் மூலமாக சமூகத்தில் பல்வேறு மனிதநேய சீர்மைகள் தோன்றியிருந்திருக்கும். மேலும் கடவுள் மறுப்புக்கொள்கை, நாத்திகம், பகுத்தறிவுக் கோட்பாடு, முற்போக்கான நடவடிக்கைகள் ஆகியவை அறிவியல் மற்றும் சமூக உற்பத்திச் சாதனங்களின் தொடர்ந்த வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கும். உற்பத்திச் சாதனங்கள் மட்டும் வளர்ச்சி பெற்றபோது சமூகக் கட்டமைப்பு மாற்றம் கொண்டது, அச்சாதனங்களின் உடைமை நிலை மாறும்போது அது புரட்சிகரமான நிலைமையை மேற்கொள்கிறது. இவைகள் வெறும் சமூக மாற்றங்கள் அல்ல. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் தளங்களில் மாற்றங்களை கொண்டுவரும் புதிய ஆய்வுகளுக்கு அவைகள் செயலூக்கிகளாகவும், தூண்டுதல்களாகவும் விளங்குகின்றன.

இந்திய மருத்துவம், வேதியியல், இலக்கணம், சட்டம், மெய்யியல், மற்றும் கலை ஆகிய துறைகளில் ஒரு மாபெரும் பங்களிப்பை பௌத்தவியம் செய்திருக்கின்றது. பௌத்தவியம் செயலாற்றல் கொண்டது, முற்போக்கானது, புரட்சித்தன்மை கொண்டது. மற்றும் கடவுள் மறுப்பானது. ஆத்திகம் (கடவுள் ஏற்புக் கோட்பாடு), இறையியல் கோட்பாடுகளைப் போன்று, இது ஒரு சலனமற்ற அசையா பரம்பொருளின் முழு முதல் பிம்பமாக இருக்க முடியாது. புத்தரின் மெய்யியல் அதன் அடிப்படைக் கோட்பாடுகளின் துணைக் கொண்டு சமூகத்தை குடியாண்மைக்குக் கொண்டு சென்றிருக்க முடியும். மக்களது உள்ளுணர்வின் ஒரு பகுதியாக வடிவம் கொள்ள குடியாண்மையைக் கொண்டு செல்லும்போது (பதப்படுத்தும் போது) பொருளாதார ஏற்றத்தாழ்வும், செல்வந்தர்களின் கையிலேயே அதிகாரம் இருந்தாலும், நிலைத்திருந்தாலும் கூட எளிய மனிதன் தீண்டத்தகாதவனாகவும் புறக்கணிக்கப்பட்டவனாகவும் வெறுக்கத்தக்கவனாகவும் தொடர்ந்திருக்க முடியாது. சாதாரண மனிதப் பிறவியாக எண்ணிப் பார்ப்பதற்குரியவனாக சிந்திக்கக் கூடியவனாக இருந்திருக்க முடியும். இதுதான் பௌத்தவியத்திற்குள் நடைபெற்று வந்தது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் ‘தெர்’ மற்றும் தெரிகதாக்களில் உரிய இடத்தை பெற்றிருந்ததற்கு இதுவே காரணம்.

புராண புனைவு (தொன்ம) மதிப்பீடுகள் உள்ளுணர்வையும் கலை இலக்கியத்தையும் நகல் படுத்தி நவீன இலக்கியம் தோற்றம் கொள்ள தொடங்கியபோது ஆளும் அதிகாரத்தின் உட்சாரம் மாறியது. புதிய அரசு அதிகாரம் மற்றும் புதிய உற்பத்தி சாதனங்களின் காரணமாக பிறந்த புதிய அறிவின் துணைக்கொண்டு பாவ-புண்ணிய செயல்பாடுகள் கர்மவினை புனிதத்தன்மை ஆன்மா, பிறப்பின் உள்நோக்கை விளக்க புதிய மெய்யியலுக்கு தற்போது திறன் வந்துள்ளது. தீண்டாமை எப்படி சுரண்டலுக்கும் பகைமைக்கும் வெறுப்புக்கும் காரணமாகயிருந்தது என்பதை அது இப்போது தெளிவு படுத்தி காட்டமுடியும். ‘மகாத்மா பூலே’ உண்மையில் அத்தகைய உண்மை வெளிப்பாடுகளின் செல்வத்தையே நமக்களித்தார். இக்கருத்து மற்றும் பணியின் துணை கொண்டு, குடியாண்மை, சமூக சீர்திருத்தத்தின் கருத்தாழத்தை, சிந்தனையாளர் வகுப்பு பெற்றிருக்க முடியும். ஆயினும் அது நடைபெறாமலேயே போயிற்று. காரணம் இந்திய சிந்தனையாளர் வகுப்பு எப்போதுமே நிலை பெற்றிருந்த எண்ணத்திற்கும் முறைமைக்குமே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தது தான்.

நமது சிந்தனையாளர்கள் உண்மையில் நடப்பிலுள்ள சமூக அமைப்பின் உற்பத்திப் பண்டங்கள் மற்றும் அதன் பிம்பங்களேயன்றி வேறல்ல. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் முன்வைத்த கேள்விகளில் ஒன்று மிகத் தெளிவாக நமது சிந்தனையாளர் வகுப்பின் அடித்தளத்தை ஆணிவேரை நமக்கு வெளிப்படுத்துகின்றது. அவர் கேட்டார்: அத்தகைய தொரு அறிவு களஞ்சியமான நீண்ட பாரம்பயம் -ஞானத்தின் மரவுவழி இருந்தும் கூட ஒரு ஒற்றை வால்டேயரையும் கூட இந்த பார்ப்பனர்களால் உற்பத்தி செய்யமுடியாமல் போனது ஏன்? எப்படி? ஒரு வால்டேயர் ஆவதற்கு ஒடுக்குமுறை மதம் மற்றும் அரசியல் சார்ந்த அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒருவன் துணிந்து நிற்கவேண்டும். இந்தியப் பார்ப்பனர்களாலும் கற்றறிந்த சிந்தனையாளர் வகுப்பாலும் அத்துணிவைப் பெறமுடியாது. அப்படி எதிர்த்து நிற்கமுடியாது. காரணம் தங்களின் சொந்த நலனுக்காக மதம், அரசியல் அதிகாரம், மற்றும் சுரண்டலை போற்றி வளர்க்கும் இம்முழு சமூக அமைப்பை அவர்களே உருவாக்கி வைத்திருப்பதுதான். அதே வருணத்தை சார்ந்த எழுத்தாளர்களாகயிருப்பதால் அவர்களின் எழுத்தும்கூட “மனுஸ்மிருதி”யால் வகுக்கப்பட்ட எல்லைகளுக்கு உள்ளாகவேதான் இருக்கும் என்பதும் வெளிப்படையானது.

தேசிய விழிப்புணர்வு: தேசிய விழிப்புணர்வு ஏற்பட்ட போது, சாதிகளின் எழுச்சிகள் ஏற்பட்டு அதுவே இந்து வருணாசிரம அமைப்பிற்கு அறை கூவலாக நின்றது. பார்ப்பனர்கள் திறனாய்விற்கும் தூற்றுதலுக்கும் இலக்காவது தவிர்க்க முடியாததாயிற்று. ஆனால் உள்ளபடி பார்க்கப்போனால் பார்ப்பனர்களும் சத்தியர்களும் சேர்ந்தே ஒரு நியாயமற்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்ததில் சமமான பொறுப்பாளர்களாக இருந்தனர். பார்ப்பனர்கள் மத அதிகாரத்தை வைத்திருந்தபோது, சத்தியர்கள் அரசியல் அதிகாரத்தை வைத்திருந்தனர். பல்வேறு சாதிகளிலிருந்தும் உருவெடுத்துவந்த இயக்கங்களுக்கு கற்றறிந்த சிந்தனையாளர் வகுப்பு உண்மையில் தலைமை தாங்கி வழி நடத்தியிருக்க வேண்டும். சிதறிக்கிடந்த இயக்கங்களுக்கு ஒரு குடியாண்மை தோற்றத்தை கொடுத்து பொருளியல், அரசியல் உள்ளுணர்வின் அடிப்படையில் தேசிய விடுதலைக்கான ஒரு பெரும்புரட்சிகர இயக்கமாக அதை அவர்கள் தான் மாற்றியிருக்க வேண்டும். ஆனால் அச்சிந்தனையாளர் வகுப்போ, (அதாவது இந்திய தேசியத் தலைமை) தேசிய விடுதலை இயக்கத்தையே பிளந்துவிட்டது. அவர்கள் எழுச்சிப் பெற்று வந்த விழிப்புணர்வையே, எதிர்த்துப் போடும் இரு குழுக்களாகப் பிளந்து விட்டனர்.

ஒன்று அரசியல் இயக்கம் மற்றது சமூக இயக்கம். மேலும் சமூக இயக்கங்களைக் கட்டியவர்களையும் வேளாண்மை மற்றும் தொழில்கள் மீது புதிய கருத்துக்களை உருவாக்கியவயர்களையும் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாகவும், காட்டிக் கொடுப்பவர்களாகவும் குற்றம் சுமத்தினர். தேசிய இயக்கமே வரலாற்று - புராண இயக்கமாகவும் முன்னோரை வழிபடும் வடிவமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. உண்மையில் பழங்கால போர்களையும் அவற்றின் நாயகர்களையும் வழிபடுவதற்கு எந்த காரணமும் இல்லை. கடந்த காலத்தில் சாமானிய ஆணோ அல்லது பெண்ணோ அடிமையாகவே இருந்தனர். எனவே அந்த கடந்த காலத்தைப்பற்றி சாதாரண மனிதனுக்கு பெருமைப்பட ஏதுமில்லை. உண்மையில் அவன் மிக கொடுமையாக ஒடுக்கப்பட்டான். ஒரு கொத்தடிமையாக சுரண்டப்பட்டும், நசுக்கப்பட்டும், உள்நாட்டு போர்களிலும், சூறையாடும் கொள்ளைக் காரர்களின் தொல்லைகளாலும் அழிக்கப்பட்டான். புதிய காலம் வந்த பிறகுதான் தனது சொந்த அடையாளத்தையே அவன் போராடிப் பெற்றான். அறிவியலின் காரணமாகவும் உற்பத்திச் செயல்பாட்டில் அவன் கொண்டிருந்த பங்கினாலும் அவனது இருப்பு மற்றும் சமூகநிலை தீர்மானகரமானதாகவும் இன்றிய மையாததாகவும் ஆயிற்று. குடியாண்மைக் கருத்திய லும் பரந்துபட்ட மக்களின் எண்ணிக்கை வலுவும் சேர்ந்து போராட்டத் தன்மையையும் தலைமையையும் அவன் மீது சுமத்தின.

கடந்த காலத்தில் உயர் சாதி வருணங்கள் மற்றும் இனங்கள் என்று சொல்லப்பட்டவையே பெருமை கொண்டதாகயிருந்தன. ஆனால் இயந்திரயுகமும் அதன் அறிவியலும் தொழில்நுட்பமும், அதிகார சமன்மையை முழுவதுமாக மாற்றிவிட்டன. மேல்நிலையோர் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏற்றத் தாழ்வைப் போற்றி வளர்த்து சமூகம் குடியாண்மையாவதை விரும்பாதவர்கள் வரலாறு புராண கதைகள், கடந்து போன காலம் ஆகியவற்றை புகழவும், மேன்மைப்படுத்தவும் துவங்கினர். காரணம் அந்த புராணக் காலத்திலும் வரலாற்றுயுகங்களிலும் அவர்கள் மாபெரும் வெற்றியாளர்களாகவும், தலைவர்களாகவும் இருந்தனர். இதே காரணத்தால் தான் இந்திய கற்றறிந்தார் வகுப்பும் இன்று பின்நோக்கிச் சென்று கடந்த காலத்தை வழிபடுகின்றனர். சூத்திரர்கள் ஆதி சூத்திரர்களின் அடிமைநிலை, துன்ப துயரங்களைப் பேசிய- வருணாசிரம அமைப்பைக் கண்டித்து, சமூக, பொருளியல், அரசியல் மறுகட்டமைப்பு கோரிய- பூலே, ஆகார்கர், கோகலே, ராணடே, போன்றோர் எதிரிகளாக அறிவிக்கப்பட்டு எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கப்பட்டனர். கற்றறிந்த வகுப்பு வெற்றி பெற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தையே ஒரு சமநிலையற்ற சண்டையாக மாற்றி மற்ற இயக்கங்களையும் இரண்டாம் நிலைக்கு தரம் தாழ்த்தி விட்டனர்.

ஐரோப்பாவில் இதற்கு எதிர்மாறாக நடைபெற்றது. அங்கு புதிய சிந்தனை, புதிய ஆய்வு, புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புதிய உற்பத்தி சாதனங்கள் போன்றவற்றை நிறுவுவதற்காக ஒடுக்குமுறை மத அரசியல் அதிகார மையத்தை எதிர்த்து மக்கள் போராடினர். அவர்கள் மரணத்தையும், மரண தண்டனையும் தழுவி ஏற்றனர், மக்கள் திரள் இயக்கங்களும் மக்கள்திரளின் வாழ்க்கையும் அவர்களின் ஈகத்தால் (தியாகத்தால்) முன்னேறின. ஏன் இந்த வேறுபாடு? பிறப்பு, மதத்தால் மேல்நிலையை வழங்கிய ஒரு சாதி அமைப்பின் அடிப்படையில், தானே உயர்ந்ததாகவும் சிறப்புமைகள் கொண்டதாகவும் ஐரோப்பிய கற்றறிந்தோர் வகுப்பு காட்டிக் கொள்ளவில்லை. அரசியல் அதிகாரம், சமூக மேல்நிலை அல்லது செல்வம் ஆகிய எதைப் பெறுவதிலும் அவர்களுக்கு எந்தச் சிறப்பு சலுகையும் அவர்களின் மதத்தால் அளிக்கப்படவில்லை. அவர்களின் சொந்தத் திறமையின், சாதனைகளின் அடிப்படையில் அவர்கள் உயர் நிலை பெறமுடியும். அதற்கு மாறாக இந்தியக் கற்றறிந்தோர் வகுப்பு கடந்த காலத்தையே விரும்பினர். காரணம் அவர்களின் முன்னோர்களுக்கு ஒரு நாயகனின்-ஒரு கடவுள் அல்லது ஒரு மிகப் பெரும் கடவுளின் அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்ததுதான்.

எந்திரயுகம் அதன் அறிவியல், தொழில் நுட்பம் காரணமாக தற்கால நிலைமையில் அக்கடந்தகால அந்தஸ்தின் உண்மையான மதிப்பீட்டை வெளிப்படுத்தி உழைப்பாளிகளுக்குத் தனிச்சலுகை தருகின்றது. ஆனால் இந்திய மேல்மட்ட சிந்தனையாளர் தற்காலத்தை அதன் புரட்சிகரமான ஆற்றல் வளத்தோடு ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

இங்குள்ள அறிவார்ந்தவர்கள் புதிய அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் அதன் உற்பத்தி சாதனங்களுடன் விரும்புகின்றனர். காரணம் இவைகள் அதிகாரத்தையும் வலிமையையும் அடைய அவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் அதன் புரட்சிகரமான ஆற்றல் வளத்தை மட்டும் சொந்தம் கொண்டாட விரும்புவதில்லை. அவர்கள் சமூக உடமையை ஏற்றுக் கொள்வதில்லை. மீண்டும் வருணாசிரம அமைப்பை மேற்கொள்ளவே விரும்புகின்றனர். சீர்திருத்தம் பற்றிக் கவலைக்கொள்வதில்லை. ஒருசிலரை மட்டும் மேல் நிலைக்குக் கொண்டு வருவதற்காக வேதகாலத்து அதிகார அமைப்பையே திணிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. வகுப்பு, சாதி, மற்றும் வருணங்களின் வேறுபாட்டை தனிசிறப்புகளை அழித்து சமத்துவத்தை நிறுவக்கூடிய ஒரு முழுபுரட்சி போன்ற எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இதனாலேயே இவ்வறிவார்ந்தவர்கள் முழு புரட்சிகளாக வளர்வதற்கு நம்பிக்கையூட்டும் சமூக குடியாண்மைக் கான போராட்டங்களைத் தடுத்தனர். விடுதலைப் போராட்டத்திலிருந்து அப்போராட்டங்களை அவர்கள் தனிமைப்படுத்தி பழமைவாதத்தின் துணை கொண்டு தங்களின் சொந்த வகுப்பு மற்றும் சாதி நலன்களுக்காக இந்திய விடுதலைப் போராட்டத்தையே வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டனர்.

நாட்டு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட நவீன இந்திய இலக்கியம் அச்சமூக சூழ்நிலையின் அத்தகைய போக்கின் உற்பத்திப் பொருளாகும்.

நாட்டு விடுதலைப் போராட்டம், சமூக - அரசியல் - பொருளியல் மற்றும் பண்பாட்டு சீர்திருத்தங்களுக்கான போராட்டமாக வளர்வது தடுக்கப்பட்ட போது டாக்டர் அம்பேத்கர் சமூக புரட்சி மற்றும் குடியாண்மைக்கான தனது இயக்கத்தை துவக்கினர். அது வாழ்க்கையின் இன்றியமையாத வெளிப்பாடாகவே இருந்தது. கடந்த கால சமூகப் போராட்டங்கள் நேரிட்டதைப்போன்ற எதிர் வினையையே இந்த இயக்கமும் சந்திக்க நேர்ந்தது. அவற்றைப் போலவே இதுவும் கூட ஒரு நாடு தழுவிய இயக்கமாக மாறிவிடாமல் இருப்பதற்காக பொது நீரோட்டத்திலிருந்து இதையும் தனிமைப் படுத்தும் முயற்சி நடைபெற்றது. பாபா சாகேப்பிற்கு இது தெரியும். இருந்தும் போராட்டத்தை துவக்கினார். தானே உண்மையாக பட்டறிந்து துன்பதுயரங்களை உணர்ந்திருந்ததால் போராட்டத்தை துவக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அவரே ஒரு பெரும் ஊழித்தீயாக மாறினார். ஆழமான பவுணர்வும் அடங்காச் சீற்றமும் இணைந்த போது ஒரு புரட்சி பிறந்தது. ஒரு புதிய யுகம் துவங்கியது.

பாபாசாகேப் பேசத் துவங்கினார்; தனது போராட்டத்தைத் துவக்கினார். பல ‘பரமநிலை’கள் அழிந்தன. ஏழை, எளிய ஒடுக்கப்பட்டோர் நல் வாய்ப்பற்ற மக்கள் அதற்கு முன்பு அழுதேயிராத, போராடியேயிராத நலிந்த மக்கள் தங்கள் தலை மீதிருந்த நசுக்கும் சுமைகளைத் தூக்கியெறிந்து போராட்டத்தில் சேர்ந்து “எங்கே எதிரி?” என்று கூவினர். எதி உண்மையில் இந்தியத்தன்மை முழுமையிலும் ஊடுருவி நீக்கமற நிறைந்திருந்திருந்தான். மரபுகளிலும், வழி முறைகளிலும் கட்டுமானத்திலும், அமைப்பிலும், நூல்களிலும், உள்ளங்களிலும், சொற்களிலுமாக மறைந்திருந்தான். மறுபுறத்தில் நண்பர்களோ, தேசிய இயக்கத்தில் தோற்கடிக்கப்பட்டுக் கிடந்தனர்.

சமூகவுடைமையர்களும், பொதுவுடைமையர்களும், தேசிய இயக்கத்தை தொழிலாளர் மையம் கொண்டதாக ஆக்க முயன்றனர். வெற்றிபெறாமல் போயினர். இயக்கம் முழுமையாக நிலவுடைமை மற்றும் முதலாளித்துவ சக்திகளின் கட்டுபாட்டிற்குள் இருந்தது. மனேவேந்திரநாத் போன்ற பெரும் புள்ளிகள் அடங்கிய புரட்சியாளர்கள் வீதியோரம் வீழ்த்தப்பட்டனர். இக்கட்டத்தில்தான் முதல் முறையாக சூத்திரர்களும் ஆதிசூத்திரர்களும் இந்திய இலக்கியத்தில் நாயகர் துணை நாயகர் ‘அந்தஸ்தைப்’ பெற்றனர். எப்படியாயினும் அவர்கள் அம்பேத்கர் வழிச் சிந்தனைகளை வெளிப்படுத்தவில்லை. அவர்களால் முடிந்திருக்காது. காரணம் நாட்டுப்பற்று இயக்கம் வருணாசிரம அமைப்பை ஒதுக்கியிருக்கவில்லை. சாதிய அமைப்பு முழு சமூகத்தின் வாழ்க்கையை எங்கும் ஊருடுவியிருந்தது. சிந்தனையாளர் வகுப்போ மதத்திற்கு கட்டுப்பட்டிருந்தது. முதலாளி வகுப்பு புரட்சியை வழிநடத்த முடியாது. காரணம் அது நிலவுடமை மேட்டுக் குடியினருடன் உறவு கொண்டு கைகோர்த்து நின்றிருந்தது.

அறிவார்ந்தவர்கள் முதலாளித்துவ வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் புனைவுநிலைச் (தொன்ம மதிப்பீடுகள்) சிந்தனை மற்றும் உளப்பாங்கு ஆகியவை இருக்கும் அமைப்பிற்கே துணைபோகக் கூடியவர்களாக இருந்தனர். வருணமும் சாதியும் ஒரு தனித்தன்மையான குணாம்சம்தைக் கொண்டிருந்தன. வறுமைமிக்க ஏழைகளிடமும் சரி மாபெரும் செல்வந்தர்களிடமும் சரி வகுப்பு உணர்வை அவை வளரவிடாமல் தடுத்து வைத்தன. அதேபோன்று ஊழ்வினை கோட்பாடு போன்ற இந்துமத தத்துவார்த்த கருத்தாக்கங்களும் கூட வகுப்பு உணர்வை தளர செய்தே வந்தன. ஆகையால் அறிவியல் கண்ணோட்டத்துடன் பகுத்தறிவுப் போக்கைக் கொண்டிருந்த கலகக்காரனான அம்பேத்கரிய நாயகனோடு ஒத்துப் போவதை இந்து எழுத்தாளர்கள் கடினமானதாக உணர்ந்தனர். மறுபக்கம் கர்ணன், ஏகலைவன் போன்ற நாயகர்கள் அவர்கள் உள்வாங்கியிருந்த பண்பாடு மற்றும் புனைவு நிலை (தொன்ம) மதிப்பீட்டு கட்டுமானத்துடன் முரண்படாமல் ஒத்து நின்றனர்.

கர்ணன், ஏகலைவன், போன்ற நாயகர்கள் உண்மையில் வருணாசிரம அமைப்பிற்கு இசைவான போக்கையே கொண்டிருந்தனர். அவர்கள் துணிவுமிக்கவர்கள்தான்; ஆனால் அந்த அமைப்பில் அவர்களுக்குரிய இடம் மறுக்கப்பட்டிருந்ததால் துன்பத் துயரங்கள் கொண்டதாக மட்டுமே அவர்கள் வாழ்க்கையைப் பார்த்தனர். மதத்தால் அவர்கள் மறுக்கப்பட்டிருந்ததால் இந்த நாயகர்கள் விதியின் கைகளில் விளையாட்டு பொம்மைகளாயினர்... இத்தகைய நாயகர்கள் ஏராளமான துன்பத் துயரங்களை, உயர்ந்த நாடகத்தை, முரண்பாட்டின் ஆழ அகலத்தை, ஆழமான அழகியல் இன்பத்தை வழங்குவர். அவர்கள் மிகசுலபமாக ஒரு ஊழ்வினைக் கோட்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவார்கள். இது வகுப்பு சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப சதி செய்துகொண்டு போவதற்காக மதத்திற்குள் புகலிடம் தேடுவதைத் தவிர வேறில்லை. இத்தகைய நாயகன் படிப்பவரை வாழ்க்கை என்பதே துன்பத் துயரத்தை தவிர வேறில்லை என்று நம்ப வைக்க தொடர்ந்து முயற்சிப்பான். படிப்பவரும் நம்பத் துவங்கிவிடுவார். இத்தகைய நாயகனின் படப்பிடிப்பு தனது சொந்த பட்டறிவையே மீண்டும் உணர்ந்து இன்ப மடையும் வாய்ப்பை படிப்பவர்க்குத் தருகின்றது. அத்தகைய கலைப்படைப்பு இந்து புனைவுநிலை (தொன்ம) மதிப்பீடுகளையும் உள்ளுணர்வையுமே வெளிப்படுத்துகிறது. அதன் தோற்றம் எவ்வளவுதான் நவீனமாக இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட முன்மாதிகளை ஒத்துப்போகும் இலக்கியம் பிற்போக்கானது.

இந்து மதிப்பீட்டுக் கட்டமைப்பை உள்வாங்கிக் கொண்ட எழுத்தாளர்கள் பூலே, அம்பேத்கரின் தத்துவக் கோட்பாடுகளிலிருந்து பெறப்படும் சிந்தனைகள், கதை, கருத்துகள், நாயகர்கள், ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். அத்தகைய ஒரு வாழ்க்கை வடிவத்தை வெளிப்படுத்தும் திறன் அவர்களுக்கு இல்லை. மார்க்சிய எழுத்தாளர்களும் கூட இந்து புனைவுகளை (தொன்ம) மதிப்பீடுகள் மற்றும் உள்ளுணர்வுகளோடு ஒத்துபோகும் நாயகர்களுக்கே முதலிடம் தருகின்றனர். பூலே அம்பேத்கர் கோட்பாடுகளின் அடிப்படையில் மாதிரியாக்கப்பட்ட நாயகன், உண்மையில் சாதி மதம் மற்றும் அவைகளின் மீது சார்ந்திருக்கும் பொருளியல் சமூக அமைப்புகளை ஒதுக்கித்தள்ளி தன்னிச்சையாகவே குடியாண்மை சமூகவுடைமையை ஏற்றுக்கொள்கிறான். ஏற்றத் தாழ்வை கடுமையாக எதிர்ப்பவனாக இருப்பதால் அவன் ஏற்றத்தாழ்வின் மீது அமைந்த ஒரு சமூக அமைப்பிலிருந்து பிறப்பிக்கப்படும் தெய்வீக பிறவிகள், அவதாரங்கள் அதிமனிதபிறவிகள் போன்ற கருத்தாக்கங்களை எதிர்த்து போடுகிறான்.

பூலே, அம்பேத்கர் தத்துவங்கள் இயல்பாகவே இக் குடியாண்மைச் சமூகவுடைமை என்ற தொலை நோக்கிற்கு இட்டுச் செல்கின்றன. மேலே விவரிக்கப்பட்ட வகையான நாயகன் மார்க்சிய எழுத்தாளர்களை கவர்ந்தாலும் அத்தகைய ஒரு நாயகனை விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் முழுமையாக புரிந்து கொள்ள தவறிவிட்டனர் என்பதுதான் உண்மை. இதற்குக் காரணம் இந்த எழுத்தாளர்கள் சாதி அமைப்பிற்கு துணை போய்விட்டார்கள் என்பதினால் அல்ல. அவர்கள் பெற்ற மதிப்பீட்டு கட்டமைப்பும் வகுப்பு வரையறைகளும் எவ்வளவு ஆழமான அகழியை உருவாக்கியுள்ளன என்பதையே அது வெளிக்காட்டுகின்றது. இக்காரண விளக்கமே முற்போக்காளர்களாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் இருந்த எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் பற்றி ஏன் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள் என்பதை தெளிவாக்குகின்றது. இந்திய சமூக சீர்திருத்தத்தின் வரலாறு விடுதலை போராட்ட வரலாற்றை விடவும் மிகப்பெரியதாகும். விடுதலை என்னவோ வந்தது. ஆனால் அதிக எண்ணிக்கையிலான சமூக பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. நாடு குடியாண்மையை ஏற்றுக் கொண்டது.

தீண்டாமையை அரசியல் அமைப்பு சட்டப்படி நீக்கியுள்ளது. அதனால் ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான மதம் மற்றும் சமூக கட்டமைப்பை செல்லாததாக்கி உள்ளது. எனினும் இந்துத்துவத்தை அரசியல் அமைப்பு ஆற்றல் இழக்க செய்துள்ளது என்னும் உண்மை ஒருபுறம் இருந்த போதிலும் தீண்டாமையும் ஏற்றத்தாழ்வும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதுவே எல்லாம் அல்ல. இன்று இந்தியாவில் குடியாண்மையும் வருணாசிரமும் கூடியே வாழ்கின்றன. அதே போன்றுதான் பீம்ஸ்மிருதியும் (டாக்டர் அம்பேத்கரின் கருத்தியலும்) மனுஸ்மிருதியும் சேர்ந்தே நிலவுகின்றன. இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு வாழ்வியல் முறையை வாழ்ந்து வருகின்றது. ஒன்று இருபதாம் நூற்றாண்டினது மற்றொன்று இடைக்காலத்தைச் சேர்ந்தது. அது இருவேறு வாழ்க்கை வடிவங்களாக இரண்டு சமூக முறமைகளாக பிளவுண்டு கிடக்கின்றது.

ஏன் இந்நாடும், மக்களும் தங்களையே இப்பிளவு களுக்கிடையில் வைத்திருக்க வேண்டும்? சாதிப் பிரிவினைகளோடு குடியாண்மை எப்படிச் சேர்ந்து வாழ முடியும்? அவைகள் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதால் அப்படி வாழ முடியாது. வருணாசிரம அமைப்பிற்கும் இடம் தரும் குடியாண்மை ஆற்றல் மிக்கதாக இருக்க முடியாது. ஆனால் இந்தியாவில் அது சேர்ந்து இருக்கிறதென்றால்- அது இந்தியக் குடியாண்மை வெறும் வடிவத்தில் மட்டுமே இருக்கின்றது-உள்ளடக்கத்தில் அது முதலாளித்துவக் குடியாண்மையாகவே உள்ளது என்பதே பொருள். முதலாளித்துவக் குடியாண்மைதான் பொருளியல், மதம் மற்றும் இனம் சார்ந்த ஏற்றத்தாழ்வுக்கு இடம் தரும்; தீண்டாமையும் சாதியமும் பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்துக் கொண்டுள்ளது என்னும் உண்மையை கண்டும் அது மன உறுத்தலே கொள்ளாது.

முதலாளித்துவக் குடியாண்மை சட்டங்களை இயற்றுமே தவிர நடைமுறைப்படுத்த நாள் கடத்திக் கொண்டே போகும். அது தீண்டாமையால் எந்த பாதிப்பையும் அடையாது. தனி மனித ஆளுமையின் அழிவிற்கும் ஆளாகாது. மேலும், இந்திய முதலாளித்துவம் எந்தவொரு சமூகத் தேவையினாலோ வளர்ச்சியினாலோ தோன்றியதல்ல, அல்லது உற்பத்திச் சாதனங்களின் உடமைக்கான போராட்டத்தின் வந்ததுமல்ல அல்லது புதிய அறிவியல், தொழில் நுட்பங்களுக்காக போராடிய எந்த வரலாற்று போலிருந்தும் விளைந்ததுமல்ல. மாறாக செல்வத்தையும் அதிகாரத்தையும் முற்றுடைமையாக்கிக் கொள்ள மதத்தால் சிறப்பான சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட்டிருந்த வகுப்பு வாரிசுரிமையால் பெற்ற செல்வத்தைக் கொண்டு இயந்திரங்களை வாங்கியும், தொழிற்சாலைகளைக் கட்டி பெருக்கியும் லாபம் பெற முடிந்தது. எந்திரயுகத்தில் இவ்வகுப்பு அக்காலகட்டத்தின் தேவைக்கேற்ப தன்னெழுச்சியாக எந்தத் தலைமையையும் வழங்கவில்லை. பாட்டாளிய வகுப்பு, சாதி மற்றும் மதம் என்னும் பிரிவுகளால் பிளவுண்டு கிடக்கும்போது ஒரு வகுப்புப் போரைத் தொடுத்து, ஒரு வகுப்புகளற்ற சமுதாயத்தை அமைப்பது கடினமே. இக்காரணத்தால் மதத்தால் பிளவுண்ட ஒரு சமூகம் முதலாளித்துவத்திற்குத் தேவைப்படுகின்றது.

நாட்டு விடுதலைக்கு பிறகு முதலாளித்துவம் குறிப்பிடும்படியான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. சிறிய சண்டைகளில் வெற்றி பெறும் அளவிற்கு தனது அதிகாரத்தையும் வளர்த்துக் கொண்டுள்ளது. ஆனால் அதே வேதத்தில் சமூக ஏற்றத்தாழ்வு மறைந்து போகவில்லை. முரணாக வறுமையும் சொத்துடைமையும் எதிரெதிர் எல்லைக்கே சென்றுள்ளன. முதலாளித்துவத்தின் மூலமாக ஏற்படும் பொருளாதார வளர்ச்சி சமூகப் பிரச்சினைகளைக் கட்டாயம் தீர்க்கும் என்ற நிலையில்லை. அதற்குமாறாக முதலாளித்துவ வளர்ச்சியானது வரலாறு நெடுக நாம் கண்டதைப்போல் போர், நாடுகளை காலனியமயமாக்கல், பாசிச ஒடுக்கு முறைக்கு வழிவகுக்கின்றது. இம்முதலாளித்துவம் தான் மனித இனத்தின் மீதும் அதன் வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற போர்களைத் திணித்தது. நாடுகளை காலனிகளாக மாற்றுவதற்கும் சந்தைகளைப் பிடிப்பதற்கும் போர்களை தொடுத்தது. அதன் கருத்தியலுக்கு எதிராக எழுந்த மெய்யியல்களையும் இயக்கங்களையும் ஒடுக்க போர்களை நடத்தியது.

இவ்வாறு இலாப நோக்குடன் மட்டுமே கூடிய பொருளாதார வளர்ச்சி உறுதியாக சமூகப் பிரச்சினைகளை தீர்க்கவே செய்யாது. என்றாலும் சமூக இயக்கங்களும் கூட தாங்களாகவே தீண்டாமையின் சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடியவில்லை. இதன் காரணமாகவே ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் தனது சொந்த சமூகக் கண்ணோட்டங்களை வெளிப்படுத்தும்போதே பின் வரும் பிரச்சினைகள் குறித்தும் கூட விவாதிக்கின்றது: பொருளியல், அரசியல் இயல்பு எப்படியிருக்க வேண்டும்? அதிகாரத்துவம் எவ்வாறு அமைய வேண்டும்? இப்பிரச்சினைகளையும் அவற்றிற்கு அடித்தளமாக இருக்கும் தத்துவார்த்த சிக்கல்களையும் கூட அது விவாதிக்கின்றது. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றது. காரணம் அவைகள் ஒடுக்கப் பட்டோரின் வாழ்வோடு நேரிடையாக தொடர்பு கொண்டுள்ளன.

அத்தகையதொரு விரிவான அனைத்தும் சார்ந்த கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை இலக்கியம் ஏன் மேற்கொள்ள வேண்டும்? உண்மையாகவே ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்திற்கு அது மிகவும் தேவைப்படுகிறது. சமூக அக்கறை கொண்டவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் எழுத்தாளர்களுக்கு, ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை பகராண்மைப்படுத்துவதாக கூறிக்கொள்வோருக்கு அத்தகையதொரு பரந்த கண்ணோட்டத்தை வளர்ப்பதற்கு அது மிகவும் தேவைப்படுகின்றது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் மாபெரும் புனைவு மயக்க ஆதாரமாக விளங்குகின்றார். அவரே முன்மாதிரி. அவரே புனைவு நிலைக்கு வரையறை. ஒடுக்கப்பட்டோர் தன்மானத்திற்கான கருத்துருவம். அவரே அதன் அதி உன்னத தொன்மப் படிவம். இந்த எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் அழமாக சிந்தனைத் தெளிவைத் தந்தவர் அவரே. அவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடுத்தவர் அவரே. இந்திய குடியாண்மைக்கான ஒரு முன்மாதிரியை நிறுவுவதற்காக, கடவுள் மறுப்பு, நாத்திகத்தின் மெய்யியலான ஆற்றல் வளமும் மனித நேய கண்ணோட்டமும் கொண்ட மெய்யியலான பௌத்தவியத்தை மறு சீரமைப்பு செய்தார். நிலம், வணிகம், தொழிலை தேசியமயமாக்கவும் அவர் வாதாடினார். வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளின் மீதும் தன் கருத்துக்களை முன்வைத்து அவற்றிற்கு ஆதரவாக போராட்டங்களையும் தொடுத்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் திரளின் சிக்கல்கள்/பிரச்சினைகள் தாம் ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் சிக்கல்களும் கூட.. இவ்விலக்கியம் பொதுமக்களோடு ஒடுக்கப்பட்ட (தலித்) மக்கள்திரளோடு தன்னையே இணைத்துக் கொண்டுள்ளது. அதனால், அது நிறுவனமாக்கப்பட்டு விட்டவைகளை எதிர்க்கின்றது. அதன் தொடர்ச்சியாக அது இடதுசாரித்தன்மை கொண்டதாகின்றது. இவ்வாறாக அது இந்தியாவின் எதிர்காலத்தையே வடிவமைக்கும் வல்லமை வாய்ந்தது.

எதிர்ப்பு நிலையும் ஏற்பு நிலையும்: வருணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் இந்தியாவின் பெரிய மதம். பௌத்தவியம் நிலைபெற்றிருந்த போதும், இந்துத்துவமே இந்திய சமூகத்தின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் அதாவது மக்கள் திரளின் உளப்பாங்கின் மீது மிகவும் முகாமையான/முழுமையான ஆளுமையைச் செலுத்தி வருகின்றது. இந்தியாவின் ஒரு பெரிய பெரும்பான்மை மக்கள்தொகை இந்துமதத்தைப் பின்பற்றி வருகின்றது.

வேதம், உபநிஷத்துக்கள் மற்றும் பல்வேறு மதம் சார்ந்த, பகுதி மதம்சார்ந்த புராணவியல் நூல்களிலிருந்து பல கருத்தாக்கங்கள் உண்மையாக, மெய்மைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூல்களில் வரும் கடவுள்களும் அரக்கர்களும் பெரும்பாலான இந்தியர்களால் முறையே வழிபடவும் வெறுக்கப் படவும் செய்கின்றனர். இந்துக்களே இந்தியாவின் பெரும்பான்மையோர். ஆகையினால் அரசு ஏந்திரம், பொருளியல் மற்றும் பண்பாட்டு அமைப்புக்கள் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. இந்திய முசுலிம்கள் தங்களின் தனி அடையாளங்களைக் காத்துவந்த போதிலும் அவர்களின் மனப்போக்கு என்னவோ இந்துநிலை சார்ந்ததே. மேலும் எல்லாம் வல்ல இறைக்கோட்பாடு, ஆன்மா, சொர்க்கம், நரகம், பாவ புண்ணிய நடவடிக்கைகள் ஆகிய அனைத்துமே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே உண்மையில் இவ்வகையில் இந்தியாவில் உள்ள மற்ற மதங்களும், இந்துத்துவத்திற்கு உறவுநிலை கொண்டவைகளாகவே உள்ளன. இந்துக்களும் இந்து அல்லாதவர்களும் ஒரே வகையான உளப்பாங்கையே கொண்டுள்ளனர். அதன் விளைவாகவே, அவர்களின் இலக்கியமும் கூட ஒரே வகையானதே, இந்துக்கள் உளப்பாங்கு புனைவுநிலை மதிப்பீட்டு கட்டமைப்பு ஆகியவை மற்றவர்களின் இலக்கியத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட குடியாண்மை சமூகவுடமை நவீன காலகட்டத்தின் தத்துவமாகும். இந்திய உளப்பாங்கு மற்றும் புனைவுநிலை மதிப்பீட்டு கட்டமைப்பில் இந்த மெய்யியலின் வேர்கள் கால்கொண்டிருந்ததில்லை. திருத்தொண்டர்களின் இலக்கியமும் முன் மாதிரி வடிவங்களில் எந்த பொருத்தமான மாற்று நிலைபாடுகளையும் கூட கொடுத்ததில்லை. மறுபுறத்திலோ ஃபாசிசவெறி, வருணங்களின் ஆதிக்கம், தனிமனித வழிபாடு, செருக்கு, பழி சுமத்தல், காழ்ப்புணர்வு, வெறுப்புணர்வு - ஆகிய அனைத்தும் இலக்கிய மற்றும் அறிவார்ந்தவர் ஆதரவு பெற்றிருக்கின்றன.

குடியாண்மை சமூகவுடமை, புதிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் புரட்சிகரமான தற்காலம் ஆகியவை ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்தின் உட்சாரத்தை உருவாக்குகின்றன. எனவே அது கடந்தகால மரபுகளைச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒடுக்கப் பட்டோர் இலக்கியத்தின் மரபுவழியும் புனைவுநிலை (தொன்ம) மதிப்பீட்டு ஆக்கமும் புரட்சிகர உலக இலக்கியத்தில் கண்டெடுக்கப்பட வேண்டும். சாதாரண எளிய மனிதனை கதைமாந்தனாக்கும் இலக்கியமே சமூகவுடமையை முன்வைக்கும் இலக்கியமே ஒடுக்கப்பட்டோர் இலக்கியத்திற்கு முன் மாதிரியாகும்.

ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம்: ஒரு மனிதப்பிறவி பிறப்பிலேயே ஒடுக்கப்பட்ட (தலித்) புறக்கணிக்கப்பட்ட தீண்டத்தகாத பிறவி இல்லை. இந்த அமைப்புதான் அவனை அந்நிலைக்குத் தாழ்த்துகின்றது. அமைப்பு மாறும்போது மனிதப்பிறவியும் தனது மனித உட்சாரத்தை திரும்பப் பெறுகின்றது. ஆகையால், மனிதப்பிறவியை படம் பிடித்துக்காட்டும் இலக்கியம் உண்மையில் ஒடுக்கப்பட்டோர் இலக்கியமே இல்லை. இதை உணர்ந்த பிறகும் கூட ஒரு பெரும்பான்மை இலக்கியப்போக்கு எல்லா சீயத்தன்மையோடும் தன்னை ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியம் என்று அழைத்துக் கொள்கிறது. சாதியால் வழி நடத்தப்படும் சமூகமும் அதன் இலக்கியமும், ஒடுக்கப்பட்டவனை (தலித்) இழிவானவன், புறக்கணிக்கத்தக்கவன், குற்றம் புரிபவன், கீழானவன், கடந்த பிறவியில் செய்த தீவினைகளின் காரணமாக பலியானவன் என்றே பார்க்கின்றன. அவன் இப்பிறவியில் துயரத்தையே கொள்பவன், ஏழை, மானமில்லாதவன், வரலாறு இல்லாதவன், கோயில்களிலோ, புனித நூல்களிலோ மதிப்பையும் மரியாதையையும் பெறமுடியும் என்ற நம்பிக்கையை என்றுமே கொண்டிருந்திராத முன்னோர்களைக் கொண்டவன் என்றே பார்க்கப் படுகிறான்.

இது உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான துன்பதுயரம், நோவு-நலிவு, அடிமைத்தனம், மரியாதைக்குறைவு, புறக்கணிப்பு, இழிவாகும். ஆனால் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் மட்டுமே அந்தச் சுமையை தன் தலையில் சுமந்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் ஒடுக்கப்பட்டோர் தன்மையை (அதாவது, சமூக நிலையை) ஏற்றுக் கொண்டுள்ளது, புத்தர் மக்களின் துன்பத்துயரங்களை ஏற்றுக் கொண்டதைப்போல அல்லது அனேக புரட்சியாளர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளானோரின் நிலையை ஏற்றுக் கொண்டதைப் போல. பகற்கனவும், நிறுவனமாக்கப்பட்ட சமூக அமைப்பும் அதற்குச் சொந்தமான எல்லாவற்றையும் பற்றிய படப்பிடிப்பும் (அத்துடன் அதிகாரமும் இணைக்கப்பட்டிருப்பதால்) அழகானதாகவே தோற்றம் அளிக்கலாம். ஆனால் இந்த நிறுவனமாக்கப்பட்ட சமூக அமைப்புதான் பெண்களையும் சூத்திரர்களையும் அடிமையாக்கி அவர்களைத் தீண்டத்தகாத நிலைக்குத் தள்ளி வைத்திருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. கூடாது. டாக்டர் அம்பேத்கர் சமூகப்புரட்சியின் உட்சாரமாகவே இருந்தார். ஒடுக்கப்பட்டோரின் இலக்குக்கு மாதிரியாக விளங்கினார்.

அவர்களின் தொன்ம (புனைவு நிலை) மதிப்பீட்டு கட்டமைப்பிற்கு கருத்துருவமானார். மகர் என்னும் கீழ்சாதியினராக இருக்கின்றார் என்பதால் மட்டுமே ஒடுக்கப்பட்டோருக்கு அவர் தலைவராகி விடவில்லை. அவர்கள் படும் துன்பதுயரங்களை, தீண்டாமைத் தொல்லையை, சாதியப் பாகுபாடுகளைக் களைவதற்காகவே அவர் அவர்களின் தலைவரானார். பிறப்பு, சாதி, வருணம், வகுப்பு ஆகியவற்றைக் கொண்டு பாகுபாடுகளை வலிமை கொள்ளச் செய்யும் முற்பிறவியின் பாவபுண்ணியக் கோட்பாட்டின் அடிப்படையிலான கருத்தியலுக்கு மதிப்பளிக்காத காரணத்தால் அவர் ஒரு ‘ஒடுக்கப்பட்டவராக’ (தலித்தாக) மாறிவிடவில்லை. அவர் ஒரு மாபெரும் புரட்சிகரப் போராளி. ஒரு மாபெரும் கற்றறிந்தமேதை, இருந்தும் அவர் தன்னையே தீண்டத்தகாத ‘தலித்’ (ஒடுக்கப்பட்டவன்) என்று அழைத்துக்கொண்டார்.

இதே காரணத்திற்காகத்தான் இன்றைய மற்றும் நாளைய எழுத்தாளர்கள் மாபெரும் உலக இலக்கியங்களின் மரபில் வைத்து எண்ணப்படும் தகுதியுள்ள படைப்புகளை ஆக்கும் எழுத்தாளர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட (தலித்) எழுத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதுவரை அங்கீகரிக்கப் பட்ட இந்திய இலக்கியம் இந்து இலக்கியம். ஆனால் புதிய அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக் கொள்வதற்கான புரட்சிகரமான ஆற்றலை பெற்று ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டுவரப்போவது ஒடுக்கப்பட்டோர் (தலித்) இலக்கியமே. ‘தலித்’ (ஒடுக்கப்பட்டோர்) என்பது முழுப்புரட்சிக்கான புதியப் பெயர்: அது புரட்சியின் அவதாரம்.

Pin It