காலத்தின் தேவைக் கருதி நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கம் தத்துவார்த்த விவாதத்திலும், நடைமுறை விவாதத்திலும் நீண்ட காலத்தினைச் செலவிட்டு இருக்கிறது. நடைமுறையின் செயல்பாட்டில், தான் எடுத்த அரசியல், தத்துவார்த்த நிலைபாடு சரி என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அளவில் உணர்த்தியுள்ளது. சிறந்த எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருவதையும், மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் மாற்று அரசியல் குறித்த புரிதலையும் உருவாக்கி மக்களின் அங்கீகாரத்தை வலுவாகக் கொண்டிருக்கிறது.

நந்திகிராமம், சிங்கூர், லால்கர் ஆகிய மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு, இடது அதிதீவிர சித்தாந்தத்திற்கும், நடைமுறைக்கும் மக்களிடையே வரவேற்பு அதிகரித்து விட்டது போன்ற உணர்வைத் தேசீய ஊடகங்களும், சில அறிவு ஜீவிகளும் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது. அதை சரி செய்து மக்களை வென்றெடுப்போம் என உறுதியாகத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி தாராளமய கொள்கைகளை தாராளமாக அமலாக்கிட காங்கிரஸ் கட்சிக்கு உதவியுள்ளது. அப்படி யானால் இது உழைக்கும் மக்களுக்கான தோல்வி என்ற அரசியலை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

ஆனால் என்ன நடைபெறுகிறது? உழைக்கும் மக்களின் ஓற்றுமையைச் சிதைக்கும் தத்துவார்த்த சீர்குலைவு சர்ச்சை வலுப்பெறுகிறது. அது வளர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரைக் கொல்லும் சித்தாந்தப் போராட்டமாக மாவோயிஸ்டுகள் தங்கள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக் கின்றனர். இதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கமும், பன்னாட்டு நிறுவனங்களும், சிக்கலின்றித் தங்கள் லாபத்தைச் கொள்ளை லாபமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். எப்போதெல்லாம் எங்கெல்லாம் இதுபோன்ற சித்தாந்தப் போராட்டத்தில் சிதைவுகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு, இடது தீவிரவாதம் துணைபுரிந்துள்ளது என்ற வரலாற்றை நக்சலிஸம் முதல் மாவோயிசம் வரை தெளிவாக வரிசைப்படுத்துகிறது.

இன்றைய இளம் தலைமுறை 40 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய நக்சல்பாரி இயக்கம் குறித்தோ, அதன் பின்னணி குறித்தோ முழுமையாக அறிந்திருக்க நியாயம் இல்லை. அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் முழுமையான ஆய்வினை மேற்கொண்டு வரலாற்று ரீதியான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய 7 மாநிலங்களில் 250 மாவட்டங்களில் அரசை ஆட்டி வைக்கும் சக்தியாக மாவோயிஸ்டுகள் உள்ளனர் என்ற சித்திரம் வரையப்படுகிறது. இந்தச் செய்தியை மட்டும் படிக்கும் தமிழ்நாட்டின் வாசகர்களின் உலகில் வேறு கம்யூனிஸ்டுகள் இல்லை எனத் தவறாகப் புரிந்து கொள்வர். 600 மாவட்டங்களைக் கொண்ட இந்தியாவில், 250 மாவட்டங்களில் பெரும் சக்தியாக இருப்பது உண்மையென்றால், ஏன் புரட்சியைத் துவக்கவில்லை?

உண்மை என்ன என்பதை “நக்சல் கோஷ்டிகளின் வீழ்ச்சி” என்ற 33வது அத்தியாயம் விவரிக்கிறது’’ 12,476 காவல் நிலையங்கள் அடங்கிய பகுதிகளில் 509 காவல் நிலையங்களின் வரம்பிற்குள் உள்ள பகுதிகளில்தான் மாவோயிஸ்டுகளின் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஊடகங்களின் சித்தரிப்பிற்கும், உண்மைக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி. உண்மையில் நக்சல் அமைப்புகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு உள்ளனர் என்பதைப் பலர் குறிப்பிட்டுள்ளனர். சுனந்தா பானர்ஜி, 2009 தேர்தலில் மாவோயிஸ்டுகளின் அறைகூவலை நிராகரித்து வாக்களித்துள்ளனர் என்ற விவரங்களை EPW அக்டோபர் 2009 இதழில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மாவோயிஸ்டுகளை ஏற்கவில்லை என்ற கையறு நிலையிலேயே வன்முறைகளை அதிகரிக்கின்றனர். அதிலும் சி.பி.எம் ஊழியர்களைச் சொல்வதன் மூலம், தனது சித்தாந்தத் தோல்விக்கு விடைகாண்கின்றனர். இது போன்ற விவரங்கள் நூல் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.

நக்சல்பாரி கிராமத்தில் பிறந்த காலத்தில் இருந்து குழப்பத்தில் இருப்பதை, மிகத் தெளிவாக நூல் விளக்குகிறது. 1969ல் துவங்கிய சில நாள்களிலேயே சித்தாந்தம் சிதைந்து அராஜகம் தலையெடுத்ததை நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இன்றைய இடது தீவிர சிந்தனையாளர் “குழப்பங்கள் தீர்ந்து மாவோயிஸ்டுகள் ஒரே அணியாக இணைந்து விட்டனரே’’ எனக் கேட்கலாம். புரட்சி குறித்து குழப்பத்திலும் அவசரத்திலும் இருக்கும் தீவிர சிந்தனையாளர்களால், மக்களை வென்றெடுக்க முடிவதை விட கிரிமினல் குற்றவாளிகளை வென்றெடுப்பது எளிதாக இருக்கிறது என்பதையும் நூல் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சி.பி.எம் இயக்கத்தைத் தாக்குவதில் இருந்து கிரிமினல்களுடன் மாவோயிஸ்டு களுக்கு உள்ள உறவை அறியலாம்.

இன்று மட்டுமல்ல 1969ல் துவங்கிய காலத்திலும் 1970முதல் 75 வரை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட்கட்சி ஊழியர்களைத் தாக்கிய அதே ஃபார்முலாவை, மாவோயிஸ்டுகள் பின்பற்றுகின்றனர். கொல்கத்தா நகரில் மார்ச் 1970 முதல் அக்டோபர் 1971 வரையிலான 20 மாதங்களில் 528 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைக் கொன்றழித்தவர்கள்தான், நக்சல் சீர்குலைவாளர்கள். இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 20 மாதங்களில் 240 ஊழியர்களைக் கொன்றுள்ளனர். இக்கொலைகள் குறித்தோ, மனித உரிமைகள் இருப்பது குறித்தோ அரசு சாரா அமைப்புகளோ, ஊடகங்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ பேசுவதில்லை என்பது புதிய அரசியல் நாகரீகமாகவும் சொல்லப்படுகிறது.

1971ல் நக்சல் இயக்கம் ஒருபுறம் தேர்தல் புறக்கணிப்புக் கோஷத்தை முன்னிறுத்தியும், மறுபக்கம் சி.பி.எம்.க்கு எதிரான தேர்தல் சீர்குலைவு என இரட்டை நிலையை மேற்கொண்டனர். அதே நிலைபாட்டை இன்றைய மாவோயிஸ்டுகள் மேற்கொள்கிறார்கள். இத்தகைய அரசியல் நிலைபாடு காரணமாக, மறைமுகமாக ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

எங்கள் முழக்கம் விவசாயம் புரட்சி எனக் குறிப்பிடும் மாவோயிஸ்டுகள் ஏதாவது ஒரு இடத்தில் வெகுஜனங்களையோ, விவசாயிகளையோ திரட்டி சாதித்து இருக்கிறார்களா? தாங்கள் கைப்பற்றியதாக அறிவித்த பகுதிகளில், நிலச்சீர்த்திருத்தம் செய்ததற்கான சுவடுகள் உண்டா? போன்ற கேள்விகளை மாவோயிஸ்ட்டுகள் உதாசீனப்படுத்துவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இவற்றை மாவோயிஸ்டு களாலும் அவர்களுக்கு முந்தைய மூதாதையர்களாலும் சாதிக்க இயலாததற்கு ஒரே காரணம், நக்சல் சீர்குலைவாளர்களின் செயலும், திரிணாமுல் அல்லது காங்கிரஸ் போன்ற கட்சிகளின் செயலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதே ஆகும். இந்த விவரங்களை யெல்லாம் நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை நூலில் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் அன்வர் உசேனின் உழைப்பும் நூலின் அமைவுக்கு அடிப்படை என்பதை மறுக்க முடியாது.

இடது தீவிரவாதத்தின் தொட்டில் பழக்கம் கொஞ்சமும் மாறாமல் தொடர்கிறது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’’ என்பது பழமொழி. அதை நினைவு படுத்துவது போலவே இடது தீவிர சிந்தனையாளர்களின் செயல் அமைந்திருக்கிறது. நக்சல்பாரி கிராமம் துவங்கி, இன்றைய லால்கர், ஜாக்ராம் செயல்கள் வரை பழைய மொந்தையை புதிய பாட்டிலில் அடைத்ததைப் போலவே இருக்கிறது. ஆம் நக்சலிஸம் என்ற பெயர் மாவோயிஸ்டுகளாக மாறினாலும், குணமும், செயலும் ஒரே தன்மையில் அமைந்திருப்பதை நூல் அருமையாக விவாதிக்கிறது.

நக்சலிஸம் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பேரா. பிப்ளவ தாஸ் குப்தா எழுதிய ஆங்கிலப் புத்தகம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வுக்குழுவின் பொறுப்பாளர் டாக்டர். பிரசென்ஜித் போஸ் எழுதி சமீபத்தில் லெப்ட்வேர்டு நிறுவனம் வெளியிட்ட நூல், மறைந்த தலைவர் அனில்பிஸ்வாஸ் எழுதிய நூல், மற்றும் சமீபத்தில் www.progoti.org இணைய தளத்தில் தோழர். கிரிமாங்லோ எழுதி வெளிவந்துள்ள கட்டுரை ஆகியவற்றையும், தீவிர வாசகர்கள் படிப்பது அவசியம். ஏனெனில், மாவோயிஸ்டுகள் சிந்தாந்த ரீதியில் எவ்வளவு பின்னடைவை சந்தித்துள்ளார்கள் என்பதையும், தெரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் மறைந்த மாவோயிஸ்டு ஆதரவாளர் கே.கே. பாலகோபால், “உண்ணாவிரதம், தர்ணா போன்றவற்றில் சோர்வுறுவோர் ஆயுதப் போராளிகளாக மாறுவதும், ஆயுதப் போராட்டத்தில் சோர்வுறுவோர், அரசு சாரா நிறுவனங்களின் பணிகளிலும் ஈடுபட்டு புரட்சியைத் தேடுகிறார்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சிந்தனைப் போக்கை உலகமயம், தனியார்மயம், தாராளமய சிந்தனைகள் உரமூட்டி வளர்க்கிறது. அமைப்பு ரீதியான செயல்பாட்டை வெகுஜனங்களின் எழுச்சி மிக்க வீதிப் போராட்டத்தை தகர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ உலகமய கொள்கைகள், அப்படித்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

இருந்தாலும் இடதுசாரி சிந்தனை மட்டும் போதாது. வெகுஜன எழுச்சி மூலம் இந்திய ஆட்சியாளர்களை எதிர் கொள்வதே, மானுட விடுதலைக்கு வழிவகுக்கும். இதை அழுத்தமாகக் குறிப்பிடும் நூல் நக்சலிஸம் முதல் மாவோயிஸம் வரை ஆகும். இடதுசாரி ஊழியர்களின் வீடுகளில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை

அன்வர் உசேன்

பாரதி புத்தகாலயம்

பக்: 145 | ரூ. 80புதிய புத்தகம் பேசுது | சூலை 2010 15

Pin It