ஒளிரும் நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும்
அக்ஷயாவை எனக்குப் பிடிக்கும்
பகல் பொழுதுகளில்
தேம்பியழும் அவளுக்கு
புற்களில் பூத்த
மஞ்சள் பூக்களைக்
காட்டி வைத்தேன்.
வாசலின் புங்கை மரக்கிளைகளில்
பற்றிப் படரும்
கோவைப் பழங்களைத்
தின்னவராத அணில்களை நான்
தேடுகையில்
அவள் நட்சத்திரங்களைப் பறித்துவிட்டாள்.
நட்சத்திரங்களைச் சூடிக்கொண்டிருக்கும்
அக்ஷயாவில் நான் சொக்கிப்போகிறேன்
அவள் கைகள் நிறைய நட்சத்திரங்கள்
அவற்றை அவள்
பொம்மைக்குச் சூடுகிறாள் என்
புத்தகங்களில் இறைக்கிறாள்
வீடு முழுவதும் நட்சத்திரங்கள்
அணில் வந்துவிட்ட வேளை
நட்சத்திரங்களை அக்ஷயா
கசக்குகிறாள்
அடுத்த பகற்பொழுதில் பூக்கத் தவறிய
நட்சத்திரங்களுக்காகத் தேம்பியழும்
அக்ஷயாவை மெல்லத் தூங்கச் செய்கிறேன்
கோவைப் பழங்களைத் தின்ற
அணில்களின் கண்கள்
நின்று ஒளிர்கின்றன.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.