வாழ்க்கை விழுமியங்களில் நுட்பமான சமூக மதிப்புகளும் சமூக நடைமுறையின் பொருளாதார மதிப்புகளும் மிகுந்த இடைவெளியைத் தங்களுக்குள் கொண்டிருப்பதை மூவாயிரம் ஆண்டுகளாக சங்கப்புலவர்கள் உணர்த்தி வருகின்றனர். எனினும் அறியாமையின் வயப்பட்ட உலக சமுதாயம் செல்வர்களை அறிவாளிகளாகவே ஏற்கின்றனர். இதனைத் தெளிவுபடுத்தவே பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,

       ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்

       மூத்தோன் வருக வென்னாதவருள்

       அறிவுடை யோனாறரசுஞ் செல்லும்

என்கிறார். சமூக மதிப்பிற்குரியது செல்வச் செழிப்பெனினும் தலைமையிடம் பெறுவது தெளிந்த அறிவு என்பதனைத் திருவேறு தெள்ளியராதலும் வேறு என்ற தொடரால் உறுதி செய்கின்றார் திருவள்ளுவர்.

இரு வேறு உலகம்:

வான்புகழ் வள்ளுவரின் திருக்குறளில் பூவுலகமும் பொன்னுலகமும் பேசப்படுகிறது, எனினும்,

       இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

       தெள்ளியராதலும் வேறு.

என்று கூறுவதேன்? மாஞாலம், மாயிறுஞாலம், வியன்ஞாலம், வியன்உலகம் என்று சுட்டப்படுவது மண்ணுலகம். மேல் உலகம், உயர்ந்த உலகம், புத்தேளிர் வாழும் உலகம், தாமரைக்கண்ணினான் உலகம் என்று சுட்டப்படுவது விண்ணுலகம். இவ்விரண்டையும் இருவேறு உலகம் என்கின்றாரோ? எனில் இதுவேறு உலகம் என்கிறார். திருவேறு என்று திருத்தமாகச் சொல்கின்றார். திரு என்பது திருமகள், நற்பேறு, செல்வம் என்ற பொருள்படுவதாக வெக்காமை, ஒப்புரவறிதல், காலம் அறிதல், தெரிந்து வினையாடல், வெருவந்த செய்யாமை, ஆள்வினையுடைமை, வரைவின் மகளிர், கயமை ஆகிய அதிகாரங்களில் அமைந்துள்ளது. திருவேறு எனில் திருமகள் அருள்பெற்ற நற்பேறு என்பது வேறு, திருமகள் அருள்பெற்ற செல்வம் என்பது வேறு என்னுமிடத்தில் திரு என்னும் சொல்லிலே பின் ஓட்டமாக இடம்பெறாத ஆர் விகுதியும் வியங்கோள் உம்மையும் தெள்ளியராதலுடன் இடம் பெற்றதன் காரணம் என்ன? திரு எனும் சொல் உயர்திணைப் பின் ஓட்டுப் பெறாமல் நின்றதேன்? திருவை ஆள்பவர் திருவாளர் எனில் திருவினால் ஆளப்படுபவர்....? புதையலைக் காக்கும் பேய் உயர் திணையின் பாற்படுவதில்லையே.

       அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

       பேய் கண்டன்னது உடைத்து.

பெருஞ்செல்வம், நெடுஞ்செல்வம், பழகிய செல்வம், உடைச்செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம், செவிச்செல்வம் என்று செல்வம் பலபடப் பேசப்படினும் அறிவுச் செல்வம் உடையவரே திருவுடையார். பேரறிவாளனிடத்தில் இருக்கும் திரு மட்டும் உலக விருப்பத்திற்குடையது. திருவேறு தெள்ளியராதலும் வேறு என்பதனால் செல்வம் சார்ந்த உலகமும், அறிவில் தெளிவு சார்ந்த உலகமும் ஒரே வகைப்பட்டதல்ல, செல்வர்களும், அறிஞர்களும் வெவ்வேறு இயல்பினை உடையவர்கள். செல்வர்களின் அறிவும் அறிஞர்களின் செல்வமும் பயன்பாட்டால் வேறுபட்டவை என்கின்றார் திருவள்ளுவர்.

பொருளா..... செல்வமா......?

பொருளை முதல் என்றும் ஊதியம் என்றும் பொருள் முதல் வாதம் பேசும் இக்காலத்தில் முதல் இல்லார்க்கு ஊதியமில்லை என்ற திருவள்ளுவரின் கூற்று வாணிகம் சார்ந்த அறிவுரைபோலத் தொனிக்கின்றது. பொருட்செல்வம் என்ற சொல் பொருள் வேறு, செல்வம் வேறு என்ற சிந்தனைக்கு இடமளிக்கிறது. பொருளே செல்வம் என்றும் செல்வமே பொருள் என்றும் மயக்கம் கொண்ட மானுட வாழ்க்கையில் திரு வேறு தெள்ளியராதல் வேறுதான்.

       முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

       இன்மை புகுத்தி விடும்.

என்று ஆள்வினை உடைமை அதிகாரம் குறிப்பிடும். "முயற்சி திருவினை யாக்கும்" என்னும் தொடர் விவாதத்திற்குரியது. முயற்சியின் பயனாய் திரு ஆகிய செல்வம் சேர்க்கும் என்றும் முயற்சியின் பயனாய் செயலூக்கம் கிட்டும் என்றும் சிந்திக்க இடமுள்ளது. திரு என்னும் சொல்லை செல்வத்தைக் குறிக்கப் பயன்படுத்தியவர்,

       அருள் என்னும் அன்பின் குழுவி பொருள் என்னும்

       செல்வச் செவிலியால் உண்டு.

என்று கூறுகின்றார். செல்வத்திற்கு செவிலியாகப் பொருள் இயங்குகின்றமையால் பொருளைப் பொய்யா விளக்கம் என்பதுடன் உறுபொருள், உல்குபொருள், அரும்பொருள், ஆன்றபொருள், நற்பொருள், சொற்பொருள், செம்பொருள், பெரும்பொருள், நுண்பொருள், எண்பொருள், ஒண்பொருள், கைப்பொருள், மெய்ப்பொருள் என்று வகைப்படுத்தியவர், பிறன் பொருள் என்று பெண்ணைக் கூறுகின்றாரே....?

       பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

       அறம்பொருள் கண்டான்கண் இல்.

என்று கள்ளாமை அதிகாரத்தில் பிறன் பொருள் என்று மாற்றான் மனைவியைத் திருவள்ளுவர் குறிப்பது சரியா என்று சிந்திக்குமிடத்தில், பிறர் கையாளும் பொருளாகத் தனக்கென்று தனித்த குணப்பண்புகளின்றி, பெண் நீர் வழிப்படும் புனைபோல, உணர்வு வழிப்பட்டு, ஒழுக்க வழக்க முரண்பாடுகள் நிறைந்து, அக்றிணை போல, நுகர்வுப் பொருளாக மட்டுமே இயங்குவதால் பிறன்பொருள் என்று திருவள்ளுவர் குறிப்பது சரிதான்.

தம் பொருள் என்ப தம் மக்கள் என்னும் தொடரில் மக்களையும், சினத்தைப் பொருள் என்று கொண்டவன் என்னும் தொடரில் கருவியையும், பொருள் அல்லவற்றை பொருளாக என்னும் தொடரில் மதிப்பையும் பொருள் என்னும் பொய்யா விளக்கம் என்னும் தொடரில் ஒளியையும் பொருள் என்னும் செல்வச் செல்வி என்னும் தொடரில் வசதியையும் குற்றமே காக்க பொருளாக என்னும் தொடரில் இலக்கையும், தேறுக தேறும் பொருள் என்னும் தொடரில் பண்பையும் பிறர் வாய் நுண்பொருள் என்னும் தொடரில் வாக்குமூலத்தையும் ஒற்றொற்றித் தந்த பொருள் என்னும் தொடரில் தகவலையும் தீதின்றி வந்த பொருள் என்னும் தொடரில் உழைப்பின் ஊதியத்தையும் செய்க பொருள் என்னும் தொடரில் உற்பத்தியையும் உருபொருள் என்னும் தொடரில் உரியவரின்றி வருவதையும் உல்குபொருள் என்னும் தொடரில் சுங்கவரியையும் தெறுபொருள் என்னும் தொடரில் கப்பத்தையும் நற்பொருள் நன்குணர்ந்து என்னும் தொடரில் விளக்கத்தையும் சொற்பொருள் சோர்வு என்னும் தொடரில் உரையினையும் பொருள் அல்லவற்றை பொருள் என்னும் தொடரில் உண்மையையும் குறிக்கின்றார் திருவள்ளுவர்.

உயிருக்கு ஊதியமா.....?

"செத்தான் செயக் கிடந்தது இல்" என்று நன்றியில் செல்வத்தில் சினந்தும் "துஞ்சினார் செத்தாரின் வேறல்லா" என்று கள்ளுண்ணாமையில் கடிந்தும் உயிர் உடம்பின் நீக்கியாரைக் கொல்லாமையில் கோபித்தும் இறந்தார் இறந்தார் அனையர் என்று வெகுளாமையில் எச்சரித்தும் இசையிலா யாக்கை என்று வசைபாடியும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது என்று புகழ்ந்தும் சாதலின் இன்னாதது இல்லை என்று ஈகையில் இடித்தும் செத்தாருள் வைக்கப்படும் என்று ஒப்புரவறிதலில் உணர்த்தியும் என்புதோல் போர்த்த உடம்பு என்று அன்புடைமையில் ஏசியும் மக்கட்பதடி என்று பயனில சொல்லாமையில் வெகுண்டும் சாதல் அறங் கூறும் ஆக்கந் தரும் என்று அறிவுறுத்தியும் தள்ளும் உயிர் நிலை என்று கள்ளாமையில் தவித்தும் உயிருக்கு இறுதியாகச் சாக்காட்டை பார்க்கும் திருக்குறளில் உயிருக்கு உறுதியாக்கும் வழிவகைகளை உயிருக்கு ஊதியமாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.

ஊதியத்தை சம்பளம் என்கிறது உலகம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று விவிலியம் கூறுகிறது. நடைமுறைச் சமூகப் பொருளாதார வழக்கத்தில் சம்பளம் என்பது உடல் உழைப்பிற்குரியது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமாகிய ஐந்து புலனுக்குரிய களம் ஆகிய உடம்பின் தீய செயல்களால் ஏற்படும் துன்பமே பாவம். பாவச் செயலின் ஊற்றுக் கண்ணாகிய உடம்பு கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் செயற்களால் மரணம் என்னும் சம்பளத்தைப் பெறுவதாக மதவாதிகள் நம்புகின்றனர்.

              இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

              பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

என்று கூறுவதன் வாயிலாக மரணத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு தாயின் கருவறை என்னும் இருட்டறையில் கொண்டு சேர்ப்பது நல்வினை, தீவினை எனும் இருவினைகள். எனவே ஊதியத்தை உடம்புக்கு வழங்காமல் உயிருக்கு வழங்கத் தீர்மானித்தார் திருவள்ளுவர். ஊதியம் என்ற சொல்லை நற்பேறு, ஆக்கம், பயன் என்ற பொருள்பட அமைத்துள்ளார். "முதல் இல்லார்க்கு ஊதியமில்லை" என்று பெரியாரைத் துணைகோடல், அதிகாரத்திலும் "ஊதியமில்லை உயிர்க்கு" என்று புகழ் என்னும் அதிகாரத்திலும் "வழிபயக்கும் ஊதியம்" என்று தெரிந்து செயல்வகை என்னும் அதிகாரத்திலும்,

              ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார்

              கேண்மை ஒh&இ விடல்.

என்று நட்பாராய்தல் என்னும் அதிகாரத்திலும்,

              பேதமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

              ஊதியம் போக விடல்.

என்று பேதமை என்னும் அதிகாரத்திலும் ஊதியம் என்னும் சொல்லைத் திருவள்ளுவர் தேர்வு செய்து பயன்படுத்தியுள்ளார்.

பொருள் இல்லார்க்கு.......?

சமூக - அரசியல் - பொருளாதார - உள்ளொளி - பண்பாட்டுக் காரணிகளை உள்ளடக்கியது "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு" என்னும் தொடர். 'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை' என்று நேரிடையாகத் தெளிவுபடுத்திய திருவள்ளுவர் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் ஆற்றும் எதிர்வினைகளை உட்கிடையாக்கி உள்ளுறைக்கும் செய்திகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளது யாங்கு என்னும் சொல்.

              அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

              இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

என்று அருளுடைமை அதிகாரத்தில் பொருள் இல்லாதவருக்கு இந்த உலகம் இல்லை என்று கூறாமல் இல்லாகியாங்கு என்று கூறுவதேன்? பொருள் என்னும் சொல்லுக்குத் திருக்குறளில் கிடைக்கும் விளக்கம் பலப்பல.

பொருள் வழங்கும் பொருள்

தம் பொருள் என்ப தம் மக்கள்                    புதல்வர்

சினத்தைப் பொருள் என்று கொண்டவன்     கருவி

பொருள் அல்லவற்றை பொருளென்று       உண்மை

தேறுக தேறும் பொருள்                           பண்பு

பிறர் வாய் நுண்பொருள்                   வாக்குமூலம்

குற்றமே காக்க பொருளாக                 நோக்கம்

மெய்ப்பொருள் காண்பது                   இலக்கு, தன்மை

ஓற்றொற்றித் தந்த பொருள்                 தகவல்

பொருள் அல்லவற்றைப் பொருளாக         மதிப்பு

பொருள் என்னும் பொய்யா விளக்கம்       ஒளி

பொருள் என்னும் செல்வச் செவிலி          வசதி

தீதின்றி வந்த பொருள்                           உழைப்பின் ஊதியம்

உறுபொருள்                              உரியவரின்றி வருவது

உல்குபொருள்                            சுங்கவரி

தெறுபொருள்                             கப்பம்

செய்க பொருளை                         உற்பத்தி

நற்பொருள் நன்குணர்ந்து                   விளக்கம்

சொற்பொருள் சோர்வு                     உரை

பிறன்பொருள்                             மாற்றான் மனைவி

பட்டியலில் விளக்கம்பெற்ற பொருட்கள் தனிமனித வாழ்வில் குடும்ப - சமூக விழுமியங்களைச் சேர்ப்பவை. இங்கே பொருட்கள் என்று சொல்லப்பட்ட மேற்கண்டவைகள் ஒரு மனிதனிடத்தில் இருக்க வேண்டியது. சமூக அரசியல் பொருளாதார சூழல்களில் அவசியமனதாகும்.

சமூக - அரசியல் - பொருளாதார - உள்ளொளி - பண்பாட்டுக் காரணிகளைக் கீழ்க்கண்டவாறு பகுத்து,

சமூகம் அரசியல் பொருளாதாரம் உள்ளொளி பண்பாடு

புதல்வர் தகவல் கருவி உண்மை பண்பு

சுங்கவரி உழைப்பின் ஊதியம் வாக்குமூலம் மதிப்பு

ஒளி உரியவரின்றி வசதி இலக்கு

வருவது

விளக்கம் கப்பம் உற்பத்தி நோக்கம்

உரை 

அட்டவணை வழங்கும் பொருள் இல்லார்க்கு இவ்வுலகில் என்ன இல்லை....? என்ற கேள்விக்கு.

* புதல்வர், ஒளி, விளக்கம், உரை என்னும் பொருள் இல்லார்க்கு இவ்வுலகில் நிகழ்கால மகிழ்வும் எதிர்கால இருப்பியலும் இல்லை என்ற சமூகப் பார்வை பதிலாகிறது.

* ஒற்று ஒற்றித் தந்த பொருள், உறு பொருள், உல்கு பொருள், தெறு பொருள் இல்லார்க்கு அரசியலில் நிலைப்பாடில்லை.

* கருவி, உற்பத்தி, உழைப்பின் ஊதியம் இல்லார்க்கு இவ்வுலகில் பொருளாதார பலம் இல்லை.

உண்மை, வாக்குமூலம், இலக்கு, நோக்கம் என்னும் உள்ளொளி இல்லார்க்கு இவ்வுலகில் இணக்கம் இல்லை.

பண்பு, மதிப்பு என்னும் மானுட குணநலன் இல்லார்க்கு இவ்வுலகில் வாழும் உரிமை இல்லை.

எனவே,

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எக்கதனிற் கூரியது இல்.

என்று பொருள் செயல் வகை அதிகாரத்தில் கட்டளையிட்டுக் காரியத்தின் வீரியம் உணர்த்துகின்றார் திருவள்ளுவர். பொருள் வழங்கும் பொருள் விளக்கம் பெற்றவைகளில் புதல்வரைத் தவிர பிற பொருட்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொள்ளல் அவசியம். ஏனெனில் சமூக - அரசியல் - பொருளாதார - உள்ளொளிப் பண்பாட்டுக் காரணங்களுக்கு அகப்புறவயமான பகைக் குணப்பண்புகளின் வேரறுக்க வல்ல ஆயுதம் அவைதான். புதல்வர் எனும் பொருளைத் தொடர்ந்து உற்பத்தி செய்துவிடின்....? செறுநர் செறுக்கறுப்பதற்குப் பதிலாகக் குடும்ப - சமூக - தேசத்தின் செறுக்கறுக்கும் கூரிய வாளாக மக்கள் தொகைப் பெருக்கம் அமைந்துவிடும் என்பது திண்ணம்.

- பேரா. முனைவர் மு.குருவம்மாள்,

தமிழ்த்துறை, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்தி கிராமம்.

Pin It