2000 -இன் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் ஒரு விவாதம் நடந்தது. வரலாற்றுப் பாடப் புத்தகம் தொடர்பான விவாதம் அது.

பி.ஜே.பி அரசு, NCERT தயாரித்த - நேர்மையான உண்மையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் - வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் மீது கோபமுற்றுத் தூக்கி எறிந்து விட்டு இந்துத்துவத்தை மையப்படுத்திய இந்திய வரலாற்றை எழுதக் கட்டளையிட்டது. ஹரப்பா நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்றுதான் என்று புதிய பாடப்புத்தகங்கள் பேசின. ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்லர்; இந்தியாவின் பூர்வகுடிகள் தான் என்று வரலாறு திருத்தப்பட்டது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இஸ்லாமிய அரசுகளின் பங்களிப்பு, இஸ்லாமியப் பண்பாடு-குறிப்பாக கட்டடக் கலை, சூஃபிசம் ஆகியவை இந்தியப் பண்பாட்டில் செலுத்திய தாக்கம் போன்றவற்றின் மீது பாடப்புத்தக வெளிச்சம் விழாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. கபீர்தாஸ் போன்ற ஞானிகள் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்தியா முழுவதும் கல்வியாளர்கள் பெருங் குரலெடுத்து இதைக் கண்டித்தார்கள். பேசினார்கள்; எழுதினார்கள்.

ஆனால், இந்தப் புதிய பாடப்புத்தகங்களைக் கற்பித்த வகுப்பறைகளில் என்ன நடந்தது? ஆசிரியர் கள் சலனமின்றிக் கற்பித்தார்கள். மாணவர்கள் வழக்கம்போல மனப்பாடம் செய்து தேர்வு எழுதி னார்கள். இது வகுப்பறைப் பண்பாடு!

பாடப்புத்தகம் இந்தியப் பள்ளி வகுப்பறை களில் புகுந்த காலத்தில் இருந்தே (சுமார் 175 ஆண்டு களுக்கு முன்) பாடப்புத்தகங் களின் மீது ஆதிக்கம் செலுத்திக் கைப்பற்ற அரசும், மதமும், வர்த்தகமும் முனைந்து வந் திருக்கின்றன.

1947க்கு முன், ஐரோப்பியப் பண்பாடு ஏன் உயர்வானது? ஐரோப்பியர்கள் எப்படி இந்தி யர்களை விட உயர்வானவர் கள்? என்பதைத்தான் வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் மையப் படுத்திக் கற்பித்து வந்தன.

சுதந்திரத்திற்குப் பின்னும் ஐரோப்பிய நிழல்தான் நம் பாடப்புத்தகங்களின் மீது படிந்து கிடந்தது.

1961 இல் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. NCERT என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. ஆழ்ந்த கல்விப் புலமை கொண்ட ரோமிலா தாபர், ஆர்.எஸ்.சர்மா, சதீஸ் சந்திரா, பிபன் சந்திரா போன்றோர் NCERT அமைப்புக்காக வரலாற்றுப் பாடங்களை எழுதினார்கள். வரலாற்றில் ஐரோப்பியப் பார்வை தகர்ந்தது; அதே நேரம் வரலாற்றை இந்துத்துவ கோணத்தில் வடிவமைக்க வும் இடம் தரவில்லை. கல்வியாளர்களால் கொண்டாடப்பட்ட பாடப்புத்தகங்கள் அவை. அவைதாம் பி.ஜே.பி யின் கண்ணை உறுத்தி மூக்கில் புகை வரவழைத்துக் கொண்டிருந்தன.

பாடப்புத்தக உருவாக்கத்தில் முற்போக்குப் பார்வை உடையோர் இடம் பெறுவது அரிது. இடம் பெற்றாலும், சந்தேகக் கண்ணோடுதான் அரசு அவர்களைக் கண்காணிக்கிறது.

அறிவொளியின் முதல் பாடப்புத்தகத்தில் ‘பசி’ என்றொரு வார்த்தை இடம் பெற்றது. ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட மாவட்டங்களின் அறிவொளிப் புத்தகங்களில் ‘பசி’ இருந்தது. இதை ஆபத்தான வார்த்தையாகக் கருதி பின்னால் வந்த அறிவொளி மாவட்டங்களின் பாடப்புத்தகத்தில் இருந்து ‘பசி’யை நீக்கி விட்டார்கள்.

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம் - வீணில்

உண்டு களித்திருப்போரை

நிந்தனை செய்வோம்

- என்ற பாரதி பாடலின் இரண்டாவது வரியை சென்ஸார் செய்து (கோபத்தைத் தூண்டுகிறதாம்!) எடுத்த அனுபவமும் அறிவொளியில் உண்டு.

சலித்துப் போய் நாங்கள் நல்லதங்காள் கதையைப் பாடமாக்கி வாசித்துக் கொண்டிருந்தோம். கதையின் இறுதியில் சில கேள்விகள் இருக்கும்- ‘நல்ல தங்காள் தற்கொலை செய்து கொண்டது சரியா?’ என்பதுபோல. அறிவொளியின் ரகசியக் கண்காணிப்பாளர்கள் இந்தக் கேள்விகளைக் கையில் வைத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உயரதிகாரிகளோடு கவலையோடு குசுகுசுத்து, தாங்க முடியாத மனப்பாரத்தோடு வீட்டுக்குப் பஸ்ஏறிப் போனதையும் பார்த்திருக்கிறோம்.

அறிவொளியில் நடந்த விவாதங்கள் அறிவொளிக்குள்ளேயே அடங்கிப் போய்விட்டன. வெளியில் கேட்கவில்லை.

இன்று வீடுவரை கேட்கிறது-சமச்சீர் கல்விப் பாடப்புத்தகம் குறித்த விவாதம்! பழைய பாடப் புத்தகமா? புதுப் பாடப் புத்தகமா?

சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் முழுமை யானவை அல்ல - ஆனால் பழைய பாடப் புத்தகங் களில் இருந்து நிச்சயமாய் முன்னேறியவை என நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். ‘மாணவரை மையப்படுத்திய பாடப் புத்தகம்’ என்ற கருத்து மெல்ல மெல்ல வலுப்பட்டு வருவதையும் சமச்சீர் பாடப்புத்தகங்களில் சில உணர்த்துகின்றன.

இதன் காரணமாக நாம் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வரவேற்கிறோம்.

பணக்காரன், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி அனைவரும் சமமாக அமர்ந்து, சமமான கல்வி வாய்ப்புகள் பெற்றுக் கற்கக் கூடிய ஒரு லட்சியத்தை நோக்கிய முதல் எட்டு என்பதாலும் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் நம் விருப்பத் துக்குரியவை ஆயின.

கல்விக் கூடங்களுக்குள்ளும், கல்விக் கொள்கை களுக்குள்ளும் ஆபத்தான கைகளை எப்போதும் பார்க்கிறேன். குழந்தைகளை அடிக்கும் கைகளும், முன்னேறி வரும் பாடத்திட்டங்களை மறிக்கும் கைகளும் தாம் அவை. இரண்டுக்கும் அடிப் படையானது -கோபம்! அர்த்தமற்ற, பிற்போக் கான கோபம்!

ஏன் இந்தக் கோபம்? உயர்நீதி மன்றம் சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய பிறகும் உச்ச நீதிமன்றத்துக்கு உந்தித் தள்ளும் கோபம் ஏன்? 200 கோடி போனாலும் போகட்டும் என்று அச்சடித்த பாடப் புத்தகங்களைக் குப்பையில் கொட்டத் துடிக்கும் ஆத்திரம் ஏன்?

அப்படி அந்தப் பாடங்களில் என்னதான் இருக்கிறது? தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையை வாசித்தேன். வேடிக்கை யான அறிக்கை! கணிதப்பாடப் புத்தகங்கள் குறித்து அறிக்கை எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. 7,8,9,10 - தமிழ்ப் பாடப்புத்தகங்களின் மொழி, உள்ளடக்கம், பயிற்சி, இலக்கணம் குறித்தெல்லாம் அறிக்கை எதுவும் பேசவில்லை. ஆட்சேபகர மானவை என்று இரு பாடங்களை அறிக்கை முன் வைக்கிறது. ஒன்று - முன்னாள் முதல்வர் மு.கருணா நிதி எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலுக்கு விளக்கம் எழுதப்பட்ட கட்டுரை; மற்றொன்று- நாடகக் கலை வரலாறு பற்றிய கட்டுரை. இக் கட்டுரையில் தமிழ் நாடகக்கலை வளர்ச்சியில் பங்காற்றியவர்கள் பெயர்ப்பட்டியலில் மு.கருணா நிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஒரு பெட்டிச் செய்தியும் ஆட்சேபணைக்குரியதாகக் காட்டப்பட்டுள்ளது. அப்பெட்டிச் செய்தியில் தமிழக முதல்வர் (பெயரில்லை) புலிக்குட்டிக்குப் பெயர் வைத்த தகவல் உள்ளது.

இவ்வளவுதான்! இதற்கு இத்தனை கோபமா? இதனை நம்ப முடிகிறதா?

காலங்காலமாக அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் எழுதிப் பின்னர் தமிழாக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தான் இருந்தது. எஸ்.எஸ்.ராஜகோபாலன் போன்ற கல்வியாளர்களின் தொடர்ந்த வற்புறுத்தலால் தமிழில் பாடப்புத்தகங்கள் எழுதி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொள்ளும் முறை உருவானது. இன்னும் 85 சதவீதம் மாணவர்கள் தமிழ்வழியில் தான் கற்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. ஆங்கில மொழி பெயர்ப்பில் காணப்படும் சிறுசிறு குறைகளை - சில மணித்துளிகளில் சரி செய்யக்கூடியவற்றை - சகிக்க முடியாத பெரும் பிழைகளாக நிபுணர் குழு முன்வைக்கிறது. பழைய முறைப்படி பாடங்களை ஆங்கிலத் தில் எழுதிப் பிறகு தமிழாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பது குழு வெளிப்படுத்தி யிருக்கும் ஆசை. ‘நகர்ப்புற, மேட்டுக் குடி மாணவர்களுக் காகப் பாடங்களை எழுதுவதுதானே நியாயம்?’ என்பது அறிக்கைக்குள் ஒளிந்திருக்கும் குதர்க்கம்.

சாரமற்ற இந்த அறிக்கையை நிராகரித்து வீதி களிலும், மேடைகளிலும் அர்த்தமுள்ள பேச்சு கேட்கிறது. நம்பிக்கை கொள்ளத்தக்க தொடக்கம்! போக வேண்டிய தூரம் இன்னும் கிடக்கிறது.

சமச்சீர் கல்விப்புத்தகங்களின் முன்னேற்றம் சமமாக இல்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டிய விசயம்.

மெட்ரிக்குலேசன் பள்ளிகளையும் மிரட்டும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தின் சுமை சற்று அதிகம். அறிவியல் பாடங்களின் வளர்ச்சி குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கிறது. அணுகுமுறைகள் மாறி இருக்கின்றன. சமூக அறிவியலிலும் முன்னேற்றமான அணுகுமுறையைக் காணமுடிகிறது.

எல்லாப் பாட நூல்களிலும் பயிற்சிகளும் மதிப்பிடும் முறைகளும் மாணவரை நோக்கித் திரும்பியிருக்கின்றன.

ஏழு, எட்டாம் வகுப்பு சமச்சீர் கல்வித் தமிழ்ப் பாடங்களை வாசித்த போது உற்சாகமும் கவலையும் கை கோர்த்துத்தான் வந்தன. வடிவ ரீதியாகத் தமிழ்ப்பாடப் புத்தகங்கள் மாணவரைக் கவரும் வகையில் உள்ளன. உள்ளடக்கம், மொழி நடை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை.

மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்க கிருபானந்த வாரியார் சொன்ன பகுத்தறிவுக்கு முரணான அபத்தமான கதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விவாதத் திறனை வளர்க்க ஒரு பக்திப்பாடல் தரப்பட்டுள்ளது. பக்திப் பாடலை முன்வைத்து எந்த மாணவன் பேசுவான்? காலங்காலமாக பாடப்புத்தகம் சுமந்த இந்துத்துவப் பாரம் இன்னும் குறையவில்லையே எனக் கவலையுற்றேன்.

இன்னொரு பாரம் - பாடப் புத்தகத் தமிழ்! ஆம்! பாடப் புத்தகத்துக்கென்று ஒரு தமிழ் இருக்கிறது. உதாரணம் வேண்டுமா? ‘சிறந்த நாகரிகம்’ என்று நீங்கள் சொன்னால், அது சாதாத் தமிழ். -‘சீர்த்த நாகரிகம்’ என்றால் பாடப்புத்தகத் தமிழ். அதே போல் ‘கூர்த்த அறிவு’! - ‘பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார்’ என்று சாதாரணமாகப் பாடப் புத்தகத்தில் எழுதிவிடக்கூடாது. -’தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க, பாரினிற் சிறந்த தமிழ்நாட்டில், எட்டயபுரம் என்னும் சிறுநகரில், மகாகவி பாரதிப் பெருமகனார் தோன்றி அருளினார் ’ என்று எழுதினால் பாடப் புத்தகம் ஏற்றுக் கொள்ளும்.

இந்தத் தமிழின் ஆதிக்கம் புதிய சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களிலும் (7,8,9,10) தென்படுவது கவலைக்குரிய கூறு. குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர் விருப்பப்படி செயற்கை யான ஒரு முயற்சியில் எழுதுவதைத் தரம் என்று ஒரு சிலர் கருதுவதுதான் இதற்குக் காரணம்.

தீர்வு என்ன? ‘மாணவரை மையப்படுத்திய பாடப்புத்தகம் வேண்டும்’ என்ற குரல் தீர்க்க மடைய வேண்டும். வகுப்பறை தொடங்கி சமூக இயக்க மேடைகள் வரை ஒலிக்க வேண்டும்-தொய் வின்றி, தொடர்ச்சியாக!

சமச்சீர் கல்வி வலுவாகக் காலூன்றி இரண்டா வது எட்டு எடுத்து வைக்க இந்தக் குரல் மிக அவசியம்.

Pin It