காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

மேற்கூறியபடி வலியென்று சொல்லப்படும் வாதக் குற்றம் மிகுதலே வாத நோயாகும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் நரம்பு செல்களில் கெட்ட நீர் தங்கித் தசைகளில் ஊறி வாயு அதிகரித்து வரும் நோயே வாத நோயாகும்.

வாதநோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டுவாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்குவாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்குவாதம்.

நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பாரிசவாதம்.

இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும்.

நவீன மருத்துவத்தில் எல்லாவித வாத நோய்களுக்கும் அவர்களிடம் இருக்கும் மருந்துகள் வலி கொல்லி மாத்திரைகள், உணர்விழக்கச் செய்யும் கிரீம்கள் மட்டுமே. அவை தற்காலிக மான நிவாரணம்தான். அதைத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு எலும்புகளைத் தேய வைத்து நோயாளியை மேலும் முடமாக்கும் அபாயம் உண்டு. அதோடு ஜீரண மண்டலும் தோலும் பாதிக்கப்படுகின்றன.

முடக்குவாத நோயும் நிவாரணமும்

முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியா லோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர் உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம். 

முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டு களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி, மயக்கம், உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

முடக்குவாதம் நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது.

சீன நாட்டில் முடக்குவாதம் போன்ற நோய்களுக்குப் புறச் சிகிச்சையையே மேற்கொள்ளுகிறார்கள். உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆதார சக்தி மெரிடின் என்று அழைக்கப்படும் 12 சக்தி நாளங்களின் வழியாக உடலில் ஒட்டிக் கொண்டிருப்பதாகச் சீன மருத்துவம் கூறுகிறது. இந்த சக்தியில் ஏதேனும் குறைபாடோ அல்லது, சக்தி நாளங்களின் ஓட்டத்திற்குத் தடையோ வருமாயின் அது பல நோய்களை உருவாக்குகிறது. அதற்குச் சக்திப் புள்ளிகளில் நுண்ணிய ஊசிகளைத் கொண்டு தூண்டிச் சக்தியை சீர் செய்வதே அக்குபஞ்சர் மருத்துவமாகும். இதன் மூலம் முடக்குவாதத்தை சரி செய்கிறார்கள். சிகிச்சை மேற்கொள்ளுமுன் ஓகிசிமாக்ஸô என்னும் மூலிகையால் ஒத்தடம் கொடுக்கிறார்கள்.

மின்காந்த உயிரியல் ஒரு புதிய அறிவியல். இதன் மூலம் மிகவும குறைந்த அளவு மின் அலைகளைக் கொண்டு மின்காந்த அலைகளாக மாற்றித் தீராத முடக்குவாதம் மற்றுமுள்ள வாத நோய்களுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முடக்குவாத நோயாளிகளின் வசதிக்காக உட்கார்ந்த நிலையிலும், படுக்கை கொண்ட நிலையிலும் மின்காந்தக் கூண்டுகள் அமைக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. முதலில் வாதத்திற்கான சிகிச்சை முறை பற்றிப் பார்ப்போம்.

முடக்குவாதக் குடிநீர் :

முதிர்ந்த பூவரசன் பட்டை டீ கிலோ எடுத்து ணீ லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக்காய்ச்சி அதில் 20 கிராம் தேன் விட்டுக் கலந்து 3 நாள் வெறும் வயிற்றில் குடித்து உப்பில்லாப் பத்தியம் இருக்கவும். குடிநீரைத் தினமும் தயாரித்துக் கொள்ளவும்.

அதைப் போலவே மாவிலிங்கம் இலை 2 பிடி எடுத்து டீ லிட்டர் தண்ணீர் ஊற்றி 50 மில்லியாகக் காய்ச்சி வற்ற வைத்து 50 மில்லி தேங்காய்ப்பால், 50 மில்லி ஆவின் பால் கலந்து வேளைக்கு 50 மில்லி வீதம் மூன்று வேளையும் கொடுத்துவர முடக்குவாதம் சாந்தப்படும்.

சூரணம்

கொடி வேலி, மிளகரணை, நொச்சி இவைகளின் வேர்ப்பட்டையைக் சமமாக எடுத்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு திரிகடி அளவு காலை மாலை குளிர்ந்த நீரில் சாப்பிட்டுவர முடக்குவாதம் விலகும்.

லேகியம்

100 கிராம் ஆமணக்குப் பருப்பை வெண்ணெய் போலரைத்துச் சிறிதுசிறிதாக 100 கிராம் நெய் விட்டுச் சிவக்க வதக்கி அதில் 600 மில்லி பால்விட்டுக் காய்ச்சி குழம்பு பதமானதும் 100 கிராம் சுக்குத் தூளைப் பொடித்துத் தூவிக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர முடக்கு வாதம், அதனால் ஏற்பட்ட இடுப்பு, பிடிப்பு, இடுப்பு வலியும் குணமாகும்.

பரங்கிப்பட்டை, கொடி வேலி வேர்ப்பட்டை சங்கன் வேர்ப்பட்டை, அமுக்கிலான் கிழங்கு ஆகிய நான்கிலும் வகைக்கு 100 கிராம் எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகள் வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும். ஆவின் நெய் ணீ லிட்டர், தேன் டீ லிட்டர், சர்க்கரை டீ கிலோ விட்டுக் காய்ச்சி சூரணத்தைப் போட்டுக் கிண்டி வேளைக்கு 5 கிராம் உட்கொள்ள முடக்கு வாதத்திற்கு தீர்வு உண்டு. கடுமையான முடக்கு வாதமாக இருந்தால் மகாவில் வாதி லேகியத்தை முறைப்படி உண்ண நோய் விலகும்.

முடக்குவாத எண்ணெய்

சுத்தி செய்த வீரம் 20 கிராம் எடுத்து 20 கோழி முட்டையின் வெண்கருவில் சுருக்குக் கொடுக்கவேண்டும். சுத்தி செய்த வெடியுப்பு 20 கிராம், சுத்தி செய்த நேர்வாளம் 20 கிராம், முற்றிய தேங்காய்ப்பால் விட்டு மெழுகு போல் அரைத்து முற்றிய ஏழு தேங்காயைத் துருவிப் பாலெடுத்து, அரைத்து வைத்துள்ள மெழுகைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். நீர் சுண்டிய தருணத்தில் எண்ணையை வடித்துக் கொள்ளவும்.

இவ்வெண்ணையில் 5 முதல் 10 சொட்டு வரை சர்க்கரையில் கலந்து கொடுக்கவும். 2 முறை பேதியாகும். அளவு சொட்டுக்களைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கவேண்டும். 10 நாட்கள் கொடுத்து மருந்து நிறுத்திவிட வேண்டும். தேவையானால் 1 வாரம் கழித்து மீண்டும் கொடுக்கலாம். இது முடக்கு வாதத்திற்கு மிக நல்ல அநுபவ மருந்து.

பக்கவாத நோயும் பரிகாரமும்

இதைப் பக்ஷவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்று ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம். பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன.

உடலின் வலது அல்லது இடது பக்கத்தை யோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்கமுடியாமல் போய்விடுகிறது இது ஒரு வகை.

ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்கமுடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும்.

இரண்டு கால்களுமே அசைக்க முடியாமல் போவது மூன்றாவது வகையாகும்.

பக்கவாத நோய் வரக்காரணம் காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாகக் குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சியச் சிற்றின்பம், தொடர்ந்து போதைப் பொருள்களை உபயோகிப்பது, குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம்.

மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்பிகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள் ஏற்பட்டு நரம்புகளை அழுத்துவதால் மூளையில் ரத்தக் குழாய்கள் உடைந்து போதல், அல்லது ரத்தம் உறைந்து கெட்டிப்படுதல், ஆகிய காரணங்களால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால் அதை நிர்வகிக்கக்கூடிய பகுதிகள் உணர்ச்சி குறைந்து திடீரென இந்நோய் தாக்கலாம். பிரதானமாக வர்மம் புள்ளிகளில் அடிபட்டுவிட்டால், அதை உடனே கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் பக்கவாத நோய் பற்றிக்கொள்ள அதுவே காரணமாகலாம்.

த்ராம்பஸஸ் என்று சொல்லப்படுகின்ற ரத்தத்தில் ஏற்படும் சிறுசிறு கட்டிகள் அல்லது பெரியகட்டி கள் ரத்த நாளங்களை அடைத்துவிடுவதால் மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் சில பாகங்கள் செயலிழந்து பக்கவாதத் தால் பாதிக்கப்படலாம். இது தவிர, நுண்ணுயிர்க் கிருமிகளாலும், இதய வால்வுகள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாலும் இரத்தம் அழுத்தம், நீரிழிவு, ரகசிய நோய்களாலும் வரலாம்.

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படு வதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.

பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.

பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 தேக்கரண்டி வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கல் தீர்ந்த பின்பு, கேடடைந்து பயனற்றுப் போன உறுப்புகளுக்கு வலிமை தந்து, வாதக் குற்றத்தைப் போக்கக்கூடிய உள் மருந்துகளைத் தரவேண்டும். அதற்கான எளிய சிகிச்சை முறைகளை அறிவோம்.

முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுகு, சுக்கு, மிளகு, பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.

இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.

அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர நூல் வேலை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்தால் போதும்.

இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய் களுக்குப் பயன்படுத்தலாம்.

பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.

மேற்பூச்சித் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டை களாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளி களுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.

பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம்.

பொதுவாக வாத நோய்க்குச் சிகிச்சை மேற்கொள்ளும்போது பத்தியம் மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.

வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவை களைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டை யும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற் கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக் கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.

முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.

வாதத்திற்குச் சிகிச்சை அளிப்பதில் மிகுந்த கவனம் தேவை. தழைபார், வேர்பார், மெல்ல மெல்ல பஸ்பம், செந்தூரம் பார் என்ற சித்தர் களின் மறைமொழிக்கேற்ப ஆரம்பத்தில் பாஷான மருந்துகளைப் பிரயோகிக்கக்கூடாது. தேவை யானால் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

அதோடு நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்.

அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ      

கரும்பு கோணிடில் கட்டி பாகாகலாம்

நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்யலாம்

என்ற சித்தர் பாடலைப் படிக்கும்போது வாத நோய்கள் என்பது தெளிவாகிறது. எனவே இவைகளுக்குச் சுயமருத்துவம் செய்து காலத்தை வீணாக்காமல் ஆரம்ப நிலையிலேயே திறமையான சித்த மருத்துவரை நாடிச் சிகிச்சை மேற் கொண்டால் கண்டிப்பாக எல்லாவித வாத நோய் களையும் வெல்லலாம்.

Pin It