தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பாதாள சாக்கடை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கி கங்கைகொண்டான் - ஆலடிப்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுடலைமணி (வயது 40) என்ற தூய்மை பணியாளர் கடந்த 08.06.2025ல் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: பாதுகாப்பற்ற முறையில் ஒப்பந்த தூய்மை பணியாளரை எவ்வித பாதுகாப்பு கருவியுமின்றி பாதாள சாக்கடைக்குள் இறக்கி தூய்மைப் பணி செய்ய வைத்துள்ளனர். மனிதக்கழிவை மனிதன் அகற்றத் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 இருந்தும் அச்சட்டம் மிகத் தெளிவாக மனிதனைப் பாதாள சாக்கடை மற்றும் மனிதக் கழிவு குழிக்குள் இறங்கத் தடை விதித்து இருந்தும் அந்த சட்டத்தை உள்ளாட்சி அமைப்புகள் சற்றும் சட்டை செய்யாமல், மனிதர்களை பாதாள சாக்கடைக்குள் எவ்வித பாதுகாப்பு கருவிகள் கூட இல்லாமல் இறக்குவதும் அதனால் மனித உயர்கள் பலியாவதும் வாடிக்கையாகி விட்டது.
நீதிமன்றங்கள் இச்செயல்பாடுகளைக் கண்டித்து பல தீர்ப்புகளை தந்து இருந்தும் அதனைப் பொருட்படுத்தாது செயல்படுவது சட்ட விதிமீறலாகும்.மனித நேயமே இல்லாமல் இன்று வேலை நடந்தால் போதும் என்கின்ற நிலையில் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்கள் பட்டியல் வகுப்பினராக இருப்பதால் அதிகாரிகளும், தூய்மை பணியினை செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிறுவன ஊழியர்களும் ஜாதியப் பார்வையோடு கையாள்வது தெரிகிறது.
டிஜிட்டல் உலகமாக மாறிவரும் நிலையில் / கம்யூட்டர் யுகமாக மாறிய நிலையில் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பதற்கு ஒரு கருவியை வாங்க முடியவில்லை தூய்மைத் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் நிறுவனங்கள் இந்த மனித அவலத்தை பற்றி கண்டு கொள்வதில்லை.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணியத்த கூலியை விட மிக குறைந்த கூலியை கொடுப்பதும், தூய்மைத் தொழிலாளர்களுக்கு பிராவிடன்ட் பண்ட் செலுத்தாமல் தொகையை நிலுவை வைத்தும் தூய்மைத் தொழிலாளர் உழைப்பை சுரண்டும் இந்த நிறுவனங்களை கண்டுகொள்ளாத உள்ளாட்சி அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இது போன்ற பாதாள சாக்கடை விசவாயு சாவுகள் தொடருகின்றன.
இந்தியாவில் முன்னேறிய மாநிலமாக திகழும் தமிழ்நாடு மலக்குழி மரணம் விசயத்தில் இந்தியாவில் 2-வது இடம் வகிப்பது. தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமானமாகும்.
திருச்செந்தூர் தூய்மைப் பணியாளர் சாவுக்கு காரணமான நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த சுடலை மணியின் சாவிற்கு நீதி வேண்டும், சுடலை மணி குடும்பதிற்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்துகிறோம்.
- பால்.பிரபாகரன்