மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தமசோதாவுக்கு, நாட்டின் புகழ்பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேதியியல் துறைக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இந்திய வம்சாவளி தமிழரும், இலண்டன் ‘ராயல் சொசைட்டி’ தலைவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளார். இந்தச் சட்டம் மூலம், ஜெர்மனியில் தேசிய இனவாதத்தைத் தூக்கிப் பிடித்த பாசிஸ்ட் ஹிட்லரின் பாதையில் இந்தியா பயணிப்பதாகவும், இது இந்தியாவுக்கு ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நான் இந்தியாவை மிகவும் விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த சகிப்புத் தன்மையுள்ள இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நான் எப்போதும் நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நாடு விடுதலையடையும்போது, எந்தவொரு மதத்திற்கும் சார்பில்லாத மதச்சார்பற்ற ஜனநாயகமாக இந்தியா தன்னை வடித்துக் கொண்டது. அதுதான் இந்தியாவின் இன்றைய பெருமைகள் அனைத்திற்கும் அடிப்படை. அதனால்தான், இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதே சமயம் பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவர்கள் அதிகம் இல்லை. ஒரு சதவிகிதம் மட்டுமே முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கிறார்கள். நாம் பாகிஸ்தானியர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் மதச்சார்பற்றவர் களாக இருப்பதால், வேறுபட்டவர்களாக இருக்கிறோம்.

இந்தியர்களின் சிறந்த அம்சம் இதுதான். அவ்வாறிருக்கையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒரு தவறான நடவடிக்கை. தேவையற்ற ஒன்று. ‘நீங்கள் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர். அதனால் உங்கள் மதமும் எங்கள் மதமும் ஒரே தரமுடையது அல்ல’ என்று 20 கோடி மக்களிடம் ஓர் அரசாங்கமே கூறுவதைப் போன்ற பிரிவினை எதுவுமில்லை.

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, இந்திய அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் கையெழுத்து இடச் சொல்லி எனக்கும் அறிக்கை வந்தது. ஆனால், 1971ஆம் ஆண்டே நான் இந்தியாவை விட்டு வெளியேறிய நபர் என்பதால், என்னால் அதில் கையெழுத்து இடமுடியாது. 

எனினும் ஒன்று மட்டும் சொல்ல நினைக்கிறேன். நான் வழக்கறிஞர் இல்லை. ஆனால், சுயசிந்தனையுள்ள எந்த நீதிமன்றமும் இந்தக் குடியுரிமை திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாது என்று நம்புகிறேன். இன்று உலகமே தேசியவாதத்தாலும் இனவெறியாலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவையும் இந்த நோய் தாக்கியுள்ளது. இந்தியாவின் மீது எனக்கு பெரிய மதிப்பு உண்டு. நான் படிப்பதற்குப் பலவகையில் அந்த நாடு எனக்கு உதவியிருக்கிறது.

ஆனால், அதே தேசத்தில், அரசே இன்று மதத்தால் மக்களைப் பிரிக்கிறது. இனச் சிறுபான்மையினர்களிலும் பெண் களிலும் அறிவார்ந்த நபர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நூற்றாண்டில் பல இயக்கங்களும் தனி நபர்களும் போராடி வருகின்றனர். இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு அறிவார்ந்து முன்னேறி வருகிறார்கள். புதிதாகப் பலவற்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் இந்தச் சட்டத் திருத்தம் பெரிய இடர்ப்பாடாக இருக்கும். 

நினைவில் இருக்கட்டும், அறிவியல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய துறையாகும். குறிப்பிட்ட எந்த மதமும், வெறியும் அதில் திணிக்கப்படும்போது, அதனால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. ஜெர்மனியின் அறிவியல் செயல்பாடுகள் நாஜிக்களின் தாக்கத்தி லிருந்தும் ஹிட்லரின் பாதிப்பிலிருந்தும் விடுபடு வதற்கு 50 ஆண்டுகள் ஆகின. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மேற்கொண்டால் அந்த நிலைமைதான் இந்தியாவுக்கும் ஏற்படும்.” 

இவ்வாறு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Pin It