பாகிஸ்தான் உளவு நிறுவனமான அய்.எஸ்.அய். அமைப்பிலிருந்து பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு, அமெரிக்காவில் செயல்பட்ட குலாம் நபி ஃபாய் என்பவரை அமெரிக்க உளவுத் துறையான எஃப்.பி.அய். கைது செய்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை அமெரிக்காவில் உருவாக்குவதற்காக அவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டுள்ளார். இதற்காக அவர் 4 மில்லியன் டாலர் பணம் பெற்றுள்ளதாக ‘எப்.பி.அய்.’ அமெரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் நடத்துவதே இவர் வேலை. இதில் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஆதரித்துப் பேசுவோருக்கு விமான டிக்கட், தங்கும் வசதி செய்து பெரும் தொகையும் வழங்குவார். இவர் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அமெரிக்காவில் பேசியவர்களில் ஒருவர் பார்ப்பனர் சுப்பிரமணியசாமி.

அண்மையில் ஃபாய் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுப்ரமணியசாமி அலறியடித்துக் கொண்டு ஃபாய் பாகிஸ்தான் உளவாளி என்பது தமக்குத் தெரியாது என்று தன்னிலை விளக்கம் தர, அந்த விளக்கத்தை சுப்ரமணியசாமி பேட்டிகளை வெளியிடும் ஒரே ஏடான ‘இந்து’வும் வெளியிட்டிருக்கிறது. (ஜூலை 22) வாஷிங்டனில் ஃபாய் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் தாம் பேசியது உண்மை தான் என்றும், அப்போது ஃபாய் - இந்தியாவுக்கு எதிரானவர் என்று தன்னிடம் சொல்லப்பட்டதே தவிர, பாகிஸ்தான் உளவாளி என்று கூறப்படவில்லை என்று சு.சாமி, இப்போது தன்னிலை விளக்கம் தருகிறார்.

‘இந்தியாவுக்கு எதிரானவர்; சதிகாரர்’ என்றெல்லாம் மற்றவர்களுக்கு எதிராக சீறிப் பாயும் சு.சாமி, இந்தியாவுக்கு எதிரான அமைப்பினர் நடத்திய கூட்டம் என்று தெரிந்த பிறகும் அதிலே போய் எப்படிப் பேசினார்?

பாகிஸ்தான் ‘உளவாளி’யிடம் அதற்கு சுப்ரமணியசாமி வாங்கிய பணம் எவ்வளவு? அய்.எஸ்.எஸ்.க்கும் சு.சாமிக்கும் உள்ள தொடர்பு என்ன?

இந்திய அமெரிக்க உளவு நிறுவனங்கள் இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்! இந்திய அரசு சுப்பிரணியசாமியின் கடவுட் சீட்டை பறிமுதல் செய்ய வேண்டும். செய்வார்களா?

Pin It