சு.ம.வீரைய்ய செட்டியார்:- என்ன ஓய்!சு.ஆ. சுப்பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக் கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர் வேஷ்டியும், கதர் குல்லாயும், தடபுடலாயிருக்கின்றதே?

periyar 600சு.ஆ:- சுப்பையர்:- ஒன்றும் விசேஷமில்லை. இன்று முதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன்.

சு.ம.வீ:- அதென்ன திடீரென்று சேர்ந்து விட்டாய் காங்கிரசைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே.

சு.ஆ.சு:- நான் பி.ஏ. பாஸ் செய்து எத்தனை நாள் ஆச்சுது?

சு.ம.வீ:- 3 வருஷ மாச்சுது.

சு.ஆ.சு:- உத்தியோகத்திற்கு எத்தனை விண்ணப்பம் போட்டேன் உனக்குத் தெரியாதா?

சு.ம.வீ:- ஆம், சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது?

சு.ஆ.சு:- ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா சொல் பார்ப்போம்?

சு.ம.வீ:- அது சரி அதற்கு யார் என்ன செய்வார்கள். உத்தியோகம் இருந்தால் தானே கிடைக்கும்.

சு.ஆ.சு:- உத்தியோகம் காலியாகவா இல்லை? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி பாசு பண்ணின அப்துல்ரகிமான், பறக்கருப்பன், ஜோசப்பு, இரங்கசாமி நாயக்கன், இராமசாமி நாடான் இவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துக் காயமாகி ஒன்று இரண்டு பிரமோஷன்கூட ஆகிவிட்டது. நான் பி.ஏ. பிரசிடென்சி 9தாவதாகப் பாசு பண்ணி இருக்கின்றேன். என் விண்ணப் பத்திற்குப் பதில் கூட இல்லை. இந்த கவர்ன்மெண்டை என்ன பண்ணுவது?

சு.ம.வீ:- அது ஏன் அப்படி? உன் விண்ணப்பங்கள் போய்ச் சேருகிறதில்லையா?

சு.ஆ.சு:- இல்லையப்பா உங்கள் எளவுதான்.

சு.ம.வீ:- என்ன சங்கதி?

சு.ஆ.சு:- சுயமரியாதை என்று ஒரு கலகத்தை உண்டாக்கி அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று கூச்சல் போட்டுக் கடைசியாக அது எங்கள் தலையில் வந்து விடிந்தது.

சு.ம.வீ:- அடபாவி அதற்கு நாங்களா ஜவாப்தாரி. ஜஸ்டிஸ் கட்சிக் காரரல்லவா? அந்தப்படி கேட்டது.

சு.ஆ.சு:- அது எனக்குத் தெரியும். ஜஸ்டிக்கட்சிக்காரர் முக்கிமுக்கிப் பார்த்தும் ஒன்றும் முடியாமல் போய் கடைசியாக அவர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றபோது உங்க எளவு சுயமரியாதைக் கலகம் வந்து அதற்கு உயிர் உண்டாக்கி எங்கள் தலையில் கையை வைத்து விட்டது.

சு.ம.வீ:- சரி அதற்கும் - கதருக்கும், காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்?

சு.ஆ.சு:- அதனால்தான் காங்கிரசில் சேர்ந்தேன்.

சு.ம.வீ:- ஏன்?

சு.ஆ.சு:- இந்தக் கவர்ன்மெண்டை ஒழித்துவிட்டு வேறு வேலை பார்ப்பது என்றுதான்.

சு.ம.வீ:- உங்களால் ஒழித்து விடமுடியுமா?

சு.ஆ.சு:- ஏன் முடியாது? மாளவியாவே சொல்லி விட்டாரே. ஒரு மாதத்தில் சுயராஜியம் வரப்போகின்றது என்று சொல்லிவிட்டாரே. ஒரு சமயம் காந்தி சொன்னாலும் சந்தேகப்படலாம். அவர் இப்படியே 5,6 தரம் சொல்லிச் சொல்லி ஏமாற்றி விட்டார். மாளவியா வாக்குத் தவராது.

சு.ம.வீ:- அப்படியே சுயாராஜியம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள். அப்போது மாத்திரம் உனக்கு உத்தியோகம் கிடைத்து விடுமா?

சு.ஆ.சு:- ஏன் கிடைக்காது? இந்த வகுப்புவாரி பிரதிநிதிக் குண மெல்லாம் தவுடு பொடியாகிவிடாதா? அதற்காகத்தானே சுயராஜியம் கேட்பது. இந்த வெள்ளைக்கார ஆட்சி கூட வகுப்புவாரிபிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்றுசொன்னால் அதனிடம் எங்களுக்கு என்ன சண்டை?

சு.ம.வீ:- வகுப்புகள் இருக்கும்வரை வகுப்புவாரிஉரிமை வேண் டாமா?

சு.ஆ.சு:- வகுப்புவாதம் கூடாது என்றுதானே காங்கிரஸ் சொல்லுது.

சு.ம.வீ:- வகுப்புவாதம் கூடாது என்பது சரிதான். வகுப்பு போக வேண்டும் என்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டாமா?

சு.ஆ.சு:- அதுவும் போகத்தான் வேண்டும்.

சு.ம.வீ:- அப்படியானால் உங்கள் சுயராஜியத்தில் இந்து, மகமதியன், கிறிஸ்தவன் முதலாகிய வகுப்பெல்லாம் போய்விடுமா?

சு.ஆ.சு:- இவைகளை எப்படிப் போக்க முடியும்?

சு.ம.வீ:- அப்படியானால் அவரவர்களுக்குள்ள உரிமை கொடுக்கத்தானே வேண்டும்.

சு.ஆ.சு:- ஒவ்வொருவருக்கும் தனித்தனி உரிமை கேட்டால் அது வகுப்புவாதமில்லையா?

சு.ம.வீ:- வகுப்பு போகாத சுயராஜியத்தில் வகுப்பு உரிமை வேண் டாமா?

சு.ஆ.சு:- அது எப்படியோ போகட்டும். இந்துக்களுக்குள் கூட வகுப்புவாதம் எதற்கு?

சு.ம.வீ:- உங்கள் சுயராஜியத்தில் இந்துக்களுக்குள் சூத்திரன், பஞ்சமன் என்கின்றதாகிய வகுப்புகளாவது இல்லாமல் போய்விடுமா?

சு.ஆ.சு:- இப்படிப் பேசுவதுதான் வகுப்பு வாதம் என்பது?

சு.ம.வீ:- எப்படி?

சு.ஆ.சு:- வெகுகாலமாய் பெரியவாள் காலம்தொட்டு இருக்கின்ற வழக்கத்தை கேவலம் இந்த சுயராஜியத்திற்காக ஒழிக்க வேண்டும் என்று சொல்வது நியாயமாகுமா? இதனால் தான் உங்களை தேசீய பத்திரிகைகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூப்பிடுகின்றார்கள். சுயராஜியம் இல்லாவிட் டாலும் பரவாயில்லை. சூத்திரன், பஞ்சமன் ஆகிய வகுப்புகள் இல்லாமல் செய்ய நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

சு.ம.வீ:- ஏனப்பா அது என்ன அவ்வளவு கஷ்டம்?

சு.ஆ.சு:- இன்றைக்கு சூத்திரன் என்கின்ற வகுப்பு வேண்டாம், நாளைக்கு பஞ்சமன் என்கின்ற வகுப்பு வேண்டாம், நாளானண்ணைக்கு பிராமணன் என்கின்ற வகுப்பு வேண்டாம் என்பதாக வரிசையாய் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

சு.ம.வீ:- சொன்னால் என்னப்பா முழுகிப்போகும்.

சு.ஆ.சு:- குதிரையும், கழுதையும் ஒன்று என்றால் நீ ஒப்புக்கொள் வாயா?

சு.ம.வீ:- அப்படியானால் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என் கின்றவர்களில் யார் குதிரை யார் கழுதை? அதற்கு என்ன அடையாளம்? சொல் பார்ப்போம் (என்று சட்டையை முழங்கைக்குமேல் ஏற்றிச் சுருட்டி னார் வீரைய்யன்.)

சு.ஆ.சு:- அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா. சங்கராச்சாரி சுவாமிகளிடமிருந்து “பிராமணாள் எல்லாரும் காங்கிரசில் சேருங்கள்” என்று ஒரு ரகசிய ஸ்ரீமுகம் வந்ததாக எங்கப்பா சொன்னார் அதனால் சேர்ந்தேன். எங்கப்பாவும் எங்க மாமாவும் பேசிக்கொண்டிருந்ததை நான் சொன்னேன். என் மேல் கோபித்துக் கொள்ள வேண்டாம். என்னமோ என் வேலையை நான் பார்க்கின்றேன் உன் வேலையை நீ பார். நமக்குள் சண்டையெதற்கு. என் அபிப்பிராயமெல்லாம் உனக்குத் தெரிந்ததுதானே? நான் போகிறேன் நேரமாச்சுது ( என்று சொல்லிக்கொண்டே நழுவிவிட்டார். )

('சித்திரபுத்திரன்', குடி அரசு - உரையாடல் - 26.07.1931)

Pin It