“புண்ணிய ஸ்தலம்” என்னும் தலைப்பின் கீழ் புண்ணிய ஸ்தலங்கள் என்பவைகளைப் பற்றி ஏன் எழுதிக் கொண்டு வரப்படுகின்றது என்பது பற்றி முந்தின வியாசத்தின் முதல் பகுதியிலேயே தெளிவாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தவிர முந்தின வியாசத்தில் பண்டரிபுரம் என்னும் 'புண்ணிய ஸ்தலத்தின்' யோக்கியதையையும் விளக்கி இருக்கிறது.

periyar and veeramani 644பண்டரிபுரம் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஸ்தலம். அந்த ஸ்தல புராணத்தில் ஒரு சமயம் அந்த முக்கியத்துவத்திற்கு ஏற்ற காரணம் ஏதாவது குறிப்பிட்டிருக்கக் கூடுமோ என்பதாக சந்தேகப்படக் கூடுமானாலும் வைணவ பக்தர்களின் சரித்திரத்தைப் பற்றிச் சொல்லும் பக்த விஜயம் என்னும் புஸ்தகத்தின் சுருக்கமாகிய பக்தலீலாமிர்தம் என்னும் புத்தகமானது, சைவர்களுக்கு எப்படி சைவ பக்தர்களின் சரித்திரத்தைச் சொல்லக் கூடிய தான சைவ புராணமாகிய பெரிய புராணமோ, அதுபோல் - ஏன்? ஒரு விதத்தில் அதைவிட முக்கியமானதென்று கூட சொல்லலாம். எப்படி எனில், பெரிய புராணம் என்பது சுந்தரமூர்த்திசுவாமி என்கிற ஒருவர் பாடிய ஒரு பாட்டிலிருந்த பக்தர்களின் பெயரைத் தெரிந்து அதற்கு ஆதாரமாக நம்பியாண்டார் நம்பி என்பவர் பாடிய ஒரு சில - அதாவது ஒரு நூறு பாட்டைக் கொண்டு நாலாயிரத்துச் சில்லரைப் பாட்டுகளாக்கி அவற்றிற்கு வேண்டிய சங்கதிகளை தமது சொந்த அபிப்பிராயமாக நுழைத்துப் பாடிய புஸ்தகமாகும். அதுவும் சமணர்களுக்கு விரோதமாய் அவர்கள் மீதும் அவர்களது குற்றமற்ற நூல்களின்மீதும் உள்ள துவேஷத்தாலும் தமது சமய வெறியாலும் கற்பிக்கப்பட்டது என்று கூடச் சொல்ல இடமுள்ளதாகிய நூல். பக்தவிஜயமோ அப்படிக்கில்லாமல் ஏதோ ஒரு முனிவர் ஏதோ ஒரு ஆசாமிக்கு எல்லா சங்கதிகளும் சொன்னதாகவும், சிவன் பார்வதிக்குச் சொன்னதாகவும் எழுதிய புஸ்தகம் ஆனதால் சேக்கிழார் என்கின்ற ஒரு மனிதன் சொன்னதை விட சிவன் முனிவர் என்கின்றவர்கள் சொன்னது என்பது உயர்ந்தது என்பதில் இவற்றை நம்பும் பக்தர்களுக்கு சிறிதும் சந்தேகமிருக்க நியாயமில்லை.

எனவே இப்பேர்ப்பட்ட புஸ்தகத்தில் உள்ளதையேதான் எடுத்து எழுதி இருக்கிறதே ஒழிய மற்றபடி நமதபிப்பிராயம் என்பதல்ல. அதாவது:-

தேவர்களுக்கு அரசனான தேவேந்திரன் பெண்ஜாதியான இந்திராணி திருமால் என்கின்ற சாமியின் பேரில் காதல் கொண்டதாகவும், சாமியும் அதற்கு சம்மதித்து பூலோகத்திற்கு போய் அங்கு 60000 வருடம் தவம் செய்யச் சொன்னதாகவும், அதற்குப் பிறகு சாமி கிருஷ்ணனாக அவதரித்ததாகவும், இந்திராணியும் ராதையாகப் பிறந்ததாகவும், பிறகு இருவரும் கூடினதாகவும், இதைக் கண்ட கிருஷ்ணனின் சொந்தப் பெண் ஜாதியாகிய ருக்குமணி கோபங்கொண்டதாகவும், அதன் நிமித்தம் ராதை கிருஷ்ணனை தனக்கே புருஷனாக்கிக் கொள்ள காட்டிற்கு தவத்திற்குப் போனதாகவும், இந்த சமயத்தில் கிருஷ்ணன் ராதையைப் பிரிய நேர்ந்ததால் துறவி வேஷம் பூண்டு காடு காடாய் திரிந்து ஏதோ ஒரு காட்டில் ராதையைத் தவக் கோலத்தில் கண்டு பிடித்ததாகவும், ராதை கிருஷ்ணனைப் பார்த்து, “நீ ஒரு வஞ்சகன், என் முன் நில்லாதே” என்று கோபித்ததாகவும், கிருஷ்ணன் மதிமயங்கி மூக்கில் கை வைத்துக் கொண்டு 28 துவாபரயுக காலமாய் நின்று கொண்டிருக்கின்றதாகவும், அந்தக் காக்ஷியே பண்டரிநாதன் என்றும், மற்றும் இதுபோல சில ஆபாசக் கதைகளும் எழுதப்பட்டு பண்டரிபுரத்திற்கு ஆதாரமாக சொல்லப்படுகிறது. எனவே, இம் மாதிரி ஆபாசமும் புளுகும் கொண்டதான பண்டரிபுரத்தை ஒரு பெரிய புண்ணிய ஸ்தலமாகக் கருதி மக்கள் ஏராளமாக பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு யாத்திரை போவதுடன் பட்டை பட்டையாய் நாமமும் போட்டுக் கொண்டு, “பண்டரிநாதா விட்டல்லே! பாண்டுரங்கா விட்டல்லே” என்று கூப்பாடு போட்டுக் கொண்டு குதித்துக் கொண்டு போவதையும் கருதினால் எவ்வளவு பைத்தியக்காரத்தனமாகவும் கஷ்டமாகவும் இருக்கும் என்பது சுலபத்தில் வெளிப்படுத்தக் கூடியதாயில்லை என்பது பற்றியும் முன்னமேயே எழுதப்பட்டிருக்கின்றது.

ஜகநாதம் என்பதைப் பற்றி சிறிது ஆராயலாம்.

ஜகநாதம்

ஜகநாதம் என்பது இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிக முக்கியமானது என்று சொல்லப்படுவது,. இந்துக்கள் என்போர்களில் தென்னாட்டில் உள்ள சைவர்களில் யாரோ ஒரு சிலரால் மதத்துவேஷம் காரணமாக ஜகநாதம் ஒரு சமயம் அலட்சியமாகக் கருதப் பட்டாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலோரான இந்துக்கள் என்பவர்கள் எல்லோராலுமே முக்கியஸ்தலமாகக் கருதப்படுவது. அந்த ஸ்தலத்தின் முக்கியத்துவத்திற்கு உதாரணம் என்னவென்றால், அந்த ஜகநாதம் என்கின்ற ஊரின் எல்லைக்குள் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்கு உதாரணமாக அந்த கோவில் பூசை பண்ணுகின்றவர்கள் அந்தப் பக்கத்திய நாவிதர்கள். அவர்கள் குளத்தருகில் அடைப்பத்துடன் நின்று கொண்டு க்ஷவரம் செய்வார்கள். பிறகு கோவிலில் பூசாரிகளாகவும் இருப்பார்கள். அந்த கோவிலில் பூசை செய்யும் உரிமையே அந்த ஊரிலுள்ள நாவித வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்டு என்கின்றார்கள். அங்கு சுவாமிக்கு முன்னால் சாப்பாட்டை மலைபோல் குவித்து ஆராதனை செய்வார்கள். அந்தச் சாதத்தைப் பூசாரிகள் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டு வெளியில் வந்து விற்பார்கள். யாத்திரிரைக்காரர்கள் யாராயிருந்தாலும் அதை வாங்கிச் சாப்பிட வேண்டும். மற்றபடி கடையிலும் சாதத்தை சட்டியில் வைத்து விற்பார்கள். ஜாதி வித்தியாசம் என்பதில்லாமல் யாரும் வாங்கிச் சாப்பிடுவார்கள். தவிர அந்த ஸ்தல எல்லைக்குள் எச்சில் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பார்கள். இலையில் உள்ள சாப்பிட்ட மீதியை எடுத்து திரும்பவும் சட்டிக்குள்ளேயே போட்டுக் கொள்ளுவார்கள். கடைகளில் விற்பனைக்காக வைத்திருக்கும் சாதச் சட்டியில் யாரும் கைவிட்டு சாதத்தை எடுத்து வாயில் போட்டுப் பார்த்து மீதியை சட்டியிலேயே போட்டுவிடலாம். அதை யாரும் ஆட்சேபிக் கமாட்டார்கள்.

ஜெகநாதத்திலுள்ள அந்த ஜெகநாதர் கோவிலுக்குள் யாரும் போகலாம். சாமியைத் தொடலாம், சாமியைச் சுற்றலாம், காலைத் தொட்டுக் கும்பிடலாம். இது மாத்திரமில்லாமல் அந்த எல்லைக்குள் யாரும் திதி, விரதம் தர்ப்பணம் முதலிய அனுஷ்டானங்கள் ஒன்றும் செய்யக் கூடாதாம். செய்தால் பாவமாம். அன்றியும் அங்குள்ள சாமிகள் கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகிய மூவர்கள். அதாவது மற்ற இடங்களைப்போல் சாமி புருஷன் பெண் ஜாதியுடன் இல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை ஆகிய மூன்று பேர்களும் தங்கையாகிய சுபத்திரையை நடுவில் வைத்து அண்ணன்மார் இருவர்களும் இரு பக்கத்தில் நிற்கின்றார்கள். இதுவும் மரக்கட்டையில் அரைகுறையாய் செய்த உருவங்கள்தான் விக்கிரகங்கள்.

இந்த ஊரைப் பற்றிச் சொல்லும்போது ‘சர்வம் ஜகநாதம்’ என்று சொல்லுவது ஒரு வழக்கம். அதாவது எந்த விதமான வித்தியாசமும், அதாவது ஜாதி, மதம், எச்சில், விரதம்முறை முதலிய வித்தியாசம் அந்த எல்லைக்குள் இல்லை என்பதை காட்டுவதற்காகச் சொல்லுவது. இதற்கு ஆதாரமாக இரண்டு விதமான கதைகள் சொல்லப் படுவதுண்டு. ஒன்று, இப்படி விஷ்ணு என்னும் முழுமுதற் கடவுளின் அவதாரமாகிய கிருஷ்ணன் என்னும் கடவுள் இறந்த பிறகு அந்தக் கடவுளின் பிணத்தை துவாரகைச் சுடுகாட்டில் வைத்து தகனம் செய்து அது எரிந்து கொண்டிருக்கையில் திடீரென்று சமுத்திரம் பொங்கியதால் துவாரகை முழுவதும் தண்ணீருக்குள் ஆழ்ந்து விட்டபோது இந்த கடவுளின் பிணமும் எரிந்து கொண்டிருந்த சுடுகாடும் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டதால் அரைகுறையாய் வெந்த பிணக்கட்டையானது தண்ணீரில் மிதந்து கரை ஓரமாய் ஒதுங்கியதாகவும், அந்த ஊருக்கு ஜகநாதம் என்று சொல்லப் பட்டதாகவும், அந்த ஊரார் அந்தக் குறைபிணத்தை எடுத்து அதன் சக்தியை ஒரு மரக்கட்டையில் ஏற்றி அம்மரக்கட்டையில் இருந்து குறை பிணம் போலவே ஒரு உருவம் செய்து அதை வைத்து பூசித்து வருவதாகவும் அந்த ஸ்தலத்தின் சரித்திரம் சொல்லுகின்றது.

மற்றொன்று, கிருஷ்ண பகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய கோபிகளுடன் கூடி குலாவி வருவதை கிருஷ்ண பகவானின் தங்கையாகிய சுபத்திரை பார்த்து பொறாமைப்பட்டு ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் சென்று “ஓ அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும் பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும் பெருமை கோபிமார்கள் எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள். ஆனால் நானோ உனக்கு தங்கையாகப் பிறந்து விட்ட காரணத்தினால் அந்த சுகபோகத்தை அடைய யோக்கியதை இல்லாதவளாய்ப் போய் விட்டேனே” என்று துக்கப்பட்டதாகவும், கிருஷ்ண பகவான் பார்த்து, “உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது; அங்கு எந்த விதமான வித்தியாசமும் கிடையாது; எந்த விதமான செய்கைக்கும் பாவம் கிடையாது. ஆதலால் அந்த ஜெகநாதத்திற்குப் போய் எல்லா விதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்” என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து கிருஷ்ணன் சுபத்திரை பலராமர் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்திருப்பதாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு.

எனவே இந்தக் கதையும் பொறுத்தமானதாயிருக்கலாம் என்கின்ற மாதிரியில்தான் அங்கு மற்ற விஷயங்களும் இருக்கின்றன. அதாவது தீட்டு இல்லை; ஜாதி வித்தியாசமில்லை; விரதாதி அனுஷ்டானம் இல்லை; எச்சில் வித்தியாசமில்லை என்பது போன்ற பல விஷயங்கள் இருப்பதுடன் அண்ணன் மாரும் தங்கையும் ஒன்றாய் இருந்தாலும் இருக்கலாமாம். அன்றியும் அந்த ஸ்தலத்திற்கு அதிகமான யோக்கியதை கொடுக்க வேண்டும். என்கின்ற எண்ணத்தின் பேரில் இப்படி ஒரு கற்பனை செய்து இருந்தாலும் இருக்கலாம். சாதாரணமாக சைவ சமயத்திலும் ஒரு ஸ்தலத்தையோ தீர்த்தத்தையோ ஒரு சாமியையோ பெருமைப் படுத்துவதில் இது போன்ற அல்லது இந்த தத்துவம் கொண்ட கதைகள் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். அதாவது திருவிளையாடல் புராணத்தில் ஒருவன் தன் தாயைப் புணர்ந்ததுடன் தகப்பன் கண்டு கோபித்ததற்கு தகப்பனையும் கொன்றுவிட்ட பாவத்தை சிவன் போக்கியிருப்பதாகவும் அந்த ஸ்தலத்திற்கும் தீர்த்தத்திற்கும் அந்த கடவுளுக்கும் இன்னமும் அந்த சக்திகள் இருப்பதாகவும் கருதும்படி சொல்லப்படுகிறது. ஆதலால் இப்படிப்பட்ட கதைகள் கட்டுவது ஒரு அதிசயமல்ல. எனவே இந்தக் கதை எப்படி இருந்தாலும் முதல் கதையைப் பற்றி யோசிப்போம்.

கடவுள் அவதாரமாகிய கிருஷ்ண பகவான் எவ்வளவோ அற்புதங்களைச் செய்தவர். கடவுளான அவர் செத்துப் போனார் என்பதும், அவர் பிணம் கொளுத்தப்பட்டது என்பதும், நெருப்பில் வெந்து கொண்டிருக்கும் போது ஜலப்பிரளய மேற்பட்டு அந்தப் பிணம் சரியாய் வேகாமல் தண்ணீரில் மிதந்து கொண்டு வந்து ஜெகநாதத்தைச் சேர்ந்த கடற்கரையில் ஒதுங்கியது என்பதும் ஆகிய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் கிருஷ்ணனிடத்தில் கடவுள் தன்மை இருந்திருக்கும் என்று நம்ப இடமுண்டா? நம்புவதானாலும் செத்த பிறகு அந்தப் பிணத்திற்கு அதுவும் நெருப்பில் கருக்கப்பட்ட அரைகுறைப் பிணத்திற்கு ஏதாவது சக்தி இருந்திருக்குமா? அந்த சக்தியை மரக்கட்டையில் ஏற்ற முடியுமா? அந்த மரக்கட்டையும் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்ற போதெல்லாம் அந்த சக்தி மாறி மாறி அதில் வருமா?

தவிர மற்றும் ஒரு அதிசயம் சொல்லுகிறார்கள். அதாவது கோவிலில் இருக்கும் மரக்கட்டைக்கு சக்தி குறைந்து போனால் அந்த சமயம் அதாவது 10 அல்லது 20 வருஷத்திற்கு ஒரு முறை மறுபடியும் சமுத்திரத்தில் ஒரு கட்டை முன்பு பிணம் மிதந்து வந்தது போல் மிதந்து வருமாம். அதை எடுத்து மறுபடியும் விக்கிரகம் செய்து வைத்து விடுவதாம். இதன் யோக்கியதைகளை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

 முன்பு வந்த குறைப்பிணம் ஜலப்பிரளயத்தால் வந்தது என்று சொல்லப்படுகின்றது. அதுபோல் இப்போது வந்து கொண்டிருக்கும் மரக்கட்டைக்கும் ஏதாவது ஜலப்பிரளயம் கற்பிக்கப்படுகிறதா? எனவே புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் சிறந்த புண்ணியஸ்தலமான ஜகநாதத்தின் நிலையை அந்த ஸ்தல சரித்திரப்படியே யோசித்துப் பாருங்கள்.

இந்த லக்ஷணத்தில் அங்கு ஒரு தீர்த்த மகிமையும் சொல்லப்படுகிறது. அதைப் பற்றி பின்னால் ஆராய்வோம்.

இவ்வளவையும் ஒப்புக் கொண்டு அந்த ஸ்தலத்திற்கு யாத்திரை போகின்றவர்களுக்கு ஏதாவது விசேஷ ஞானம் ஏற்படுகிறதா? அல்லது அந்த ஸ்தல சரித்திரத்தின் யோக்கியமான கற்பனையையாவது மதித்து ஏதாவது ஒழுக்கத்தைப் பெறுகின்றார்களா? ஒன்றுமேயில்லாமல் ரயில் சார்ஜு செலவும், பூசாரி, பார்ப்பான் முதலியவர்களுக்கு செலவும் செய்ததல்லாமல் வேறு பலன் என்ன என்பதுதான் இது எழுதியதின் கருத்து.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 30.09.1928)

Pin It