இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைகளையும் கற்பனை செய்து அவற்றை பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந்தனைகளை ஏற்பாடு செய்து, அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும், அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவமென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்பதாகவும், அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங்களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும் துதிபாடுவதுமே சைவ வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு, அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும், எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப் பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழியில் சொல்லவோ எழுதவோ இல்லை.

periyar mgr 358ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் பலமாக கட்டப்பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத்தறிவை உபயோகிக்காமலும், பொது ஜனங்களுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படாமலும், பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டுகளை நிலைநிறுத்த ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான “நாஸ்திகமாச்சுது” “மதம் போச்சுது” “கலிகாலத்தின் கொடுமை” என்கின்ற யோக்கியமற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயுதங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே ஒழிய ஒரு வழியிலாவது சரிப்பட்டு வருகின்றதில்லை.

சமீபகாலமாக சில சைவர்கள் என்போர்கள் நம்மைப் பற்றி காணாத இடங் களில் ‘சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார்’ என்பதும், ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர்கள் ஏமாறத்தக்கதுமான வார்த்தைகளை அடுக்கி துண்டு விளம்பரங்கள் போடுவதும், அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரிகைகளும், தனக்கென யாதொரு கொள்கையுமற்று சமயம் போல் நடந்து உயிர் வாழ்வதையே முக்கிய பிழைப்பாய்க் கொண்டிருக்கும் பத்திரிகைகளும், ஆசாமிகளும் “நாயக்கர் பிரசாரம்,” என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள்பேரால் எழுதுவதற்கு தைரியமற்று ஏதோ பல அனாமதேயங்களின் பேரால் “நாயக்கர் மதத்தை அழிக்கப் பார்க்கின்றார், நாஸ்திகத்தை பிரசாரம் செய்கின்றார்” என்கின்ற மாதிரி எழுதுவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.

நிற்க, சிவனைப் பற்றியும், சிவனைக் கடவுளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும், அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும், அதுபோலவே விஷ்ணுவைப் பற்றியும், விஷ்ணுவை கடவுளாகக் கொண்ட வைண சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும், நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி ‘மத தூஷணை’ ‘தெய்வ நிந்தனை’ என்று பேசிவிட்டு, எழுதிவிட்டு, தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும்போதும், அதைப் பெருமைப்படுத்தி நினைக்கும் போதும், சைவன் வைஷ்ணவத்தையும் விஷ்ணுவையும், வைணவன் சைவத்தையும் சிவனையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழிவாயும், ஆபாசமாயும், வேதத்தின் பேராலும், உபநிடதத்தின் பேராலும், புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போமானால், இதுவரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற்றில் பதினாயிரத்தில் ஒரு பங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம்.

உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகியவைகளை நடுநிலையில் இருந்து படித்துப் பார்ப்பவர்களுக்கு இதன் உண்மைகள் விளங்காமல் போகாது.

நாம் சொல்வதும், எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற்கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதாகவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்னதாகவும், ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷயங்களையே குறிப்பு காட்டி எழுதியும், சொல்லியும் வருகின்றோமேயல்லாமல், நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல்வது போல் ‘அதற்கு இதல்ல அருத்தம்’ ‘இது சையன்சுக்கு பொருத்தம்’ ‘இது படியாத முட்டாளின் கருத்து’ ‘இது குண்டர்களின் வேலை’ ‘ஆராய்ச்சி யில்லாதவர்களின் கூற்று’ என்பதான அயோக்கியத்தனமும், போக்கிரித் தனமும், பேடித்தனமும், இழிதகைமையும் பொருந் தியதான சமாதானங் களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.

அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களை சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் வைணவ, சைவ பக்தர்கள் சொல்லுவதையும் எடுத்து இரண்டொரு உதாரணங்கள் காட்டுவோம்.

தற்சமயம் நமது பிரசாரத்தைப் பற்றி வைணவர்களைவிட சைவர்களுக்குத்தான் அதிக ஆத்திரமாக இருக்கின்றது. அவர்களுக்குத்தான் எங்கு அவர்கள் சைவ சமயம் போய்விடுமோ என்கின்ற பயம் அதிகமாய் பிடித்து ஆட்டி, மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைணவர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்கள் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப்படையாய் ஒன்றையும் காணோம்.

சமீபத்தில் ‘வைணவன்’ என்கின்ற ஒரு பத்திரிக்கை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமாயணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக்கு சற்று மனத்தாங்கல் இருப்பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய, அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ)வில்லை ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்னவென்றால் இராமாயணத்தைக் காட்டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராமனைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பலர் இருக்கிறார்கள். அவ்வாபாசங்களைக் குறித்து இவ்வாராய்ச்சிக்காரர் ஒரு வார்த்தையேனும் கூற முன்வரவில்லை. இராமாயண மட்டும் இவர்கள் கண்களில் உருத்திக் கொண்டிருக்கக் காரணம் என்ன’ என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒரு மறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்கு சொல்லும் பதில் மற்ற நூல்களுடையவும், கடவுள்களுடையவும் ஆபாசங்கள் அதனதன் முறையில் தானாக வெளிவரும்.

இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இராமாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரிசை கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற்பட்டது என்பதும் ‘இராமாயணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப்பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும் பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமாயிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது’ என்பதுந்தான்.

சைவர்களின் மதப் பிரசாரத்தைப் பற்றியும் சில வார்த்தை சொல்லுவோம்.

நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய் வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய சைவ சமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும், உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி, பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து ‘சிவநேசன்’ என்பதாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்கள். அப்பத்திரிகையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்டதாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலாவது மலர் அனுபந்தத்தில் “கோபிசந்தனம்” என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:-

“..................................................... தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற்றியை குறுக்காகவே படைத்திருப்பதை யாவரும் காணலாம்.

இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல்லியிருப்பதானது:- ‘ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசல லாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நர்த்துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர் வந்தித்ரி புண்டரகம்’.

அதாவது பிரம்மா சிருஷ்டி துடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றிகளையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத்திலர், அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழறுகிறார்கள் என்று விளங்குதலால் அறியலாம்” என்கிறார்.

இனி கோபிசந்தனத்தைப் பற்றி வாசுதேவ உபநிஷத்தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது.

கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்தபோது அப்பெண்கள் ஸ்தனங்களிலிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்தனமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.

எனவே சைவர்கள் பூசும் விபூதியாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைணவர்கள் பூசும் கோபிசந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளை புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்கவில்லை. ஏனென்றால் அவர் சொல்வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக் காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப் பற்றி அதிகமாய் சந்தேகிக்கவும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக்குத் தெரிய வேண்டும். அதாவது:-கிருஷ்ணனும் கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷணையும் அல்லவென்று தோன்றும் போதும் ஆண் குறியும், பெண்குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம்தான் லிங்கமும் ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைணவர்கள் சொல்லி இந்துமத ஆதாரங்களிலிருந்தே மேற்கோள்கள் எடுத்துக் காட்டுவது இந்துமத தூஷணையும் சைவ சமய தூஷணையும் அல்லவென்று வைணவர்களுக்குத் தோன்றும் போதும், நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும் போது மாத்திரம் நம்மையேன் இவர்கள் இந்து மத தூஷணை, சமய தூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின்றார்கள் என்பது தான் நமக்கு விளங்கவில்லை.

தவிர மதப் பித்து கொண்ட பேயர்களைப் பற்றியோ, வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரசாரம் செய்யக் கிளம்பும் மதாபிமானிகளைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை.

ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர்களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவதும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்துமத ஆதாரங்கள் என்பவைகளில் உள்ளவைகளா? உள்ளவைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்கிறோம்.

தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரசாரமும் பேடிப் பிரசாரமும் செய்யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப்படாதீர்கள். உங்களைப் போல் பல கற்றறி மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டை பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கி மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறிவற்ற மிருகங்களாக்கிவிட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும் சமய நிபுணத்துவம் என்பதையும் புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங்கள். முடியாவிட்டால் சப்தத்திற்கும் எழுத்துக்கும் வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை கடத்திக் கொள்ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 15.04.1928)

Pin It