(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, செப்டம்பர் 14, 1942, பக்கம் 76)

     டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்;

ambedkar in bombayமண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் பணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி ஆலோசனை வழங்க இந்திய அரசாங்கம் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் செயல்படுவதற்கு, மாண்புமிகு தலைவர் ஆணையிடும்முறையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை மேற்கொள்கிறது.”

      தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): முன்மொழிவு விவாதத்திற்கு முன்வைக்கப்படுகிறது:

‘இந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக் கிளையின் பணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி ஆலோசனை வழங்க இந்திய அரசாங்கம் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் செயல்படுவதற்கு மாண்புமிகு தலைவர் ஆணையிடும் முறையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை மேற்கொள்கிறது.”

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய என் நண்பருக்கு என்னுடைய கன்னி உரையைக் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்பது உண்மைதான். எனது வாழ்நாளில் பல உரைகள் ஆற்றியிருக்கிறேன். ஒரு கன்னி உரையை ஆற்றுவதற்கு அஞ்சுவேன் என நான் நினைக்கவில்லை. (2.மேற்படி, பக்கங்கள் 78-79)

     இந்தத் தீர்மானத்தை ஆதரித்து நான் பேசாததற்குக் காரணம் இந்த சபைக்கு இந்தத் துறை தெரியப்படுத்தத் தயாராக இல்லாத ஒரு மூடிமறைக்கப்பட்ட விஷயம் ஏதோ இருக்கிறது என்று எனது நண்பர் சுட்டிக் காட்டினார். இந்தத் தீர்மானம் குறித்து நானோ, அல்லது இந்திய அரசாங்கமோ வெட்கப்படக்கூடிய எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என மதிப்பிற்குரிய உறுப்பினருக்கு நான் உறுதியளிக்க முடியும்.

     இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தபோது இத்தகைய தீர்மானங்கள் பற்றி எவ்வாறு முடிவுசெய்யப்படுமோ அவ்வாறே இதுவும் முடிவு செய்யப்படும் என்று நான் நினைத்தேன். எனது நண்பர் இந்த விஷயங்களை எழுப்புவார் என்று கிஞ்சித்தேனும் தோன்றியிருந்தால் இந்தப் பிரச்சினைகள் பற்றி விவரங்களுடன் வந்திருப்பேன்.

     மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: இந்த அவையின் நடைமுறையை தாங்கள் அறிந்திருக்க வேண்டும்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் அவைக்கு புதியவன், இந்த அவை சற்று அதிகம் பெருந்தன்மை காட்டுமென எதிர்ப்பார்க்கிறேன். இந்தத் தீர்மானத்தை விவாதிக்க அனுமதிக்கும் முன் எனது நண்பரிடம் தகவல்கள் இருந்தால் இந்த விவாதம் பின்பு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என்பது என் யோசனை. அப்பொழுது எனது நண்பர் விரும்பும் தகவல்களை நான் அளிக்க முடியும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): கனம் உறுப்பினர் (திரு.நியோகி) ஒரு கேள்வியை எழுப்புவதன் மூலம் அவர் விரும்பும் தகவல்களைப் பெறமுடியும். இந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது அவையின் விருப்பம் என்று நான் ஊகிக்கிறேன்.

(குரல்கள் “ஆம்”)

விவாதம் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள நிலைமை

      தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானத்தின் மீது அவை விவாதத்தைத் துவக்கும்.

     ‘இந்தியாவில் தற்போது உள்ள நிலைமை பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்’.

*     *     *

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, செப்டம்பர் 18, 1942, பக்கம் 281-287)

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக பிரேரணையின் மீது நடந்து கொண்டிருக்கும் விவாதம் இந்த அவையின் உறுப்பினர்கள் இரண்டு திட்டவட்டமான கருத்தோட்டங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்களை கைது செய்ததும் திடீரென வெடித்த பலாத்கார இயக்கத்தை நசுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை நியாயமற்றது என்பது ஒரு கருத்தோட்டம். அரசாங்கம் எடுத்த நடவடிக்கை முற்றிலும் நியாயமானது என்று அவையின் ஒரு பகுதி கருதுகிறது. இம்மாதிரியான நிலைமையில் அவையின் ஒரு பகுதி எடுத்த நிலையை மற்ற பகுதி மறுதலிக்கிறது என்ற காரணத்திற்காக, இந்த விவாதத்தில் தாங்கள் தலையிடுவது அவசியமற்றது என அரசாங்கம் கூறமுடியும். ஆனால் உறுப்பினர் கூறியதிலிருந்து, அரசாங்க உறுப்பினர்கள், குறிப்பாக நிர்வாகக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் இந்திய உறுப்பினர்கள், இந்த விஷயத்தை அப்படியே விடுவதை அனுமதிப்பது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. அவையின் ஒரு பகுதி மீது பொறுப்பை சுமத்துவதை விட, உறுப்பினர்கள் தங்கள் மீது சுமையை எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று நான் கருதுகிறேன். எனவே, நடவடிக்கை நியாயமற்றது என்று கருதும் அவையின் ஒரு பகுதி எழுப்பிய சில விஷயங்களை எடுத்து கொள்ள விழைகிறேன். எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்கள் இரு வகையானவை. சில விஷயங்கள் அவற்றின் முக்கியத்துவத்திலும் தன்மையிலும் குறிப்பிடத்தக்கவை. சில விஷயங்கள் பொதுவான முக்கியத்துவத்திலும் தன்மையிலும் குறிப்பிடத்தக்கவை. சில விஷயங்கள் பொதுவான முக்கியத்துவம் மட்டுமன்றி பொதுவான விஷயங்கள் பற்றியும் பேசுவது விரும்பத்தக்கதாயினும், நேரம் மிகக் குறைவாக இருப்பதால், பதிலளிப்பதற்கு எழுப்பப்பட்ட சில குற்றச்சாட்டுகளைத்தான் ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே சர்க்காருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். சர்க்காரை விமர்சிப்பவர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களை சர்க்கார் கைது செய்தது நியாயமல்ல என்று கூறினர். அவர்களது வாதத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேன் என்றால், அவர்களது வாதம். காங்கிரஸ் அகிம்சையில் நம்பிக்கை வைத்துள்ள ஸ்தாபனம், காங்கிரஸை சுயமாக இயங்க அனுமதித்திருந்தால் பலாத்காரம் தோன்றுவதை தடுத்து நிலைமையை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதாகும். அகிம்சை என்ற கோட்பாட்டைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸூக்கும் காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை இந்த வாதத்தை முன்வைக்கும் உறுப்பினர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் காங்கிரஸின் கூட்ட நடவடிக்கைகளைப் படித்துப் பார்த்தபோது, காங்கிரஸ் பிரகடனப்படுத்தும் அகிம்சை என்ற கோட்பாட்டில் பயங்கரமான சரிவு ஏற்பட்டுள்ளது என்ற கருத்து எனது மனதில் பதிந்தது. அகிம்சை ஆழமாகக் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

     அவைக்கு சில உண்மைகளை எடுத்துக் கூறுகிறேன். ஐயா! 1939 டிசம்பர் 22ம் தேதி, சட்டமறுப்பு என்ற அச்சுறுத்தலை காங்கிரஸ் முதலில் வெளியிட்டது. 1940 மார்ச் 19ல், காங்கிரஸின் வருடாந்திர மகாசபை ராம்ஹாரில் நடைபெற்றது. அந்த வருடாந்திரப் பொதுசபைக் கூட்டத்தில் திரு.காந்தி சர்வாதிகாரியாக ஆக்கப்பட்டார். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் முழுப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, திரு.காந்தி தலைமை தளபதி ஆனார். ஆனால் 1940 ஜூன் 22ம் தேதி, அதாவது மூன்று மாதங்களுக்குள், பிரதான தளபதி பொறுப்பிலிருந்து திரு.காந்தி அகற்றப்பட்டார். அகிம்சைத்தான் தங்களது வழிகாட்டுநெறி என்ற கோட்பாட்டைக் காரியக் கமிட்டி ஏற்க மறுத்தது. திரு.காந்தி தமது ராஜிநாமாவைச் சமர்ப்பிக்க வேண்டியதாயிற்று.

      டாக்டர் பி.என்.பானர்ஜி (கல்கத்தா புறநகர் பகுதி; முகமதியரல்லாத நகரப் பகுதி): அது யுத்தம் சம்பந்தமாக.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தயவுசெய்து என்னை இடைமறிக்காதீர்கள்.

     1940 டிசம்பர் 15ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியது. திரு.காந்தியை மீண்டும் பிரதான தளபதியாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டத்தை நடத்தும் படியும் அவரைத் தீர்மானம் கேட்டுக் கொண்டது. 1941 டிசம்பர் வரை திரு.காந்தி தொடர்ந்து தளபதியாக இருந்தார். 1941 டிசம்பரில் ஒரு காரியக்கமிட்டிக் கூட்டம் பர்டோலியில் நடைபெற்றது. திரு.காந்தியை மீண்டும் அந்தப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேறியது. டிசம்பர் 1941 ல் ஏற்பட்ட நிகழ்வின் முக்கிய அம்சத்தை இந்த அவையின் உறுப்பினர்கள் நன்கு அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒருபுறம் திரு.காந்திக்கும் அகிம்சையில் முழு நம்பிக்கைகொண்ட அவரை பின்பற்றுபவர்களுக்கும், மற்றொருபுறம் அகிம்சையில் நம்பிக்கையில்லாத காரியக்கமிட்டியின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் பிளவு ஏற்பட்டது. வார்தாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின் முன் அதன் முடிவுக்காக இந்தப் பிரச்சினை வைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை மீது ஒரு முடிவு எடுக்கும்படி திரு.காந்தி செய்வார் என்று இந்தியாவில் ஒவ்வொருவரும், குறிப்பாக காரியக் கமிட்டி உறுப்பினர்கள் எதிர்பார்த்தனர். அதாவது பர்டோலியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற செய்வது அல்லது அவரால் அது முடியவில்லையெனில் அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்த்தனர். வார்தாவில் அந்தத் தீர்மானம் அங்கீகாரத்திற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்வந்த போது, மிகவும் ஆச்சரியப்படத்தக்க ஒரு காரியத்தை திரு.காந்தி செய்தார். அகிம்சையின் காவலரான அவர் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு வற்புறுத்த வேண்டாமென தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆணையிட்டார். அதுமட்டுமல்ல. காங்கிரஸ் காரியக் கமிட்டியுடன் தம்மை இணைத்துக் கொண்டு பிரதான தளபதியாகத் தொடர்ந்து இருந்து வந்தார். காங்கிரஸ் முன்னாலேயே – திரு.காந்தியின் முன்னாலேயே – பலாத்காரம் என்ற உணர்வு காங்கிரசை ஆட்கொண்டது. இந்த விஷயத்தில் இதைவிட வேறு நல்ல ருசு எவரால் அளிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது.

     மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிந்து கொண்டிராத மற்றொரு விஷயமும் இருக்கிறது என நினைக்கிறேன். அதுபற்றி கொஞ்சம் விவரங்களை அளிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் அநேகமாக எல்லோரும் – எப்படியும் அவர்களில் மிகப் பெரும்பான்மையோர் இந்தக்கோட்பாட்டின் மீது அக்கறையற்றவர்களாக ஆகிவிட்டனர் என்பது உண்மை மட்டுமல்ல. திட்டமிட்ட பலாத்கார இயக்கத்திற்காக காங்கிரசுக்கு உள்ளேயே ஒரு முயற்சி இருந்தது என்பதைக் காட்டுவதற்கு போதுமான ருசு உள்ளது.

     சர்தார் சாந்த் சிங்: யுத்தத்தைப் பொறுத்தவரை…..

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தயவுசெய்து எனக்கு தடங்கல் ஏற்படுத்தாதீர்கள்.

     மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: அது உண்மை அல்ல, அதற்கு ருசு இல்லை

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தவறான எந்த விஷயத்தையும் நான் கூறவில்லை. ஒரு சான்று பற்றி அவையில் இதுவரை குறிப்பிடவில்லை. அதைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

     திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் காவலில் வைக்கப்பட்டிருந்த தியோலி பாதுகாப்பு முகாமில் ஒரு நிகழ்ச்சி நிடந்தது. திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமது மனைவியாருக்கு சிறைக்கு வெளியே ரகசியமாக அனுப்ப முயன்ற சில ஆவணங்களைக் கைபற்றுவதில் அந்தப் பாதுகாப்பு முகாமின் கண்காணிப்பாளர் வெற்றிபெற்றார் என்பதை இந்த அவை அறிந்திருக்கலாம். இந்த சம்பவம் 1941 டிசம்பரில் நிகழ்ந்தது. காங்கிரஸூக்கு உள்ளே – காரியக் கமிட்டிக்கு உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் அந்த ஆவணம் பற்றி மிக அதிக கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். அந்த ஆவணம் நான்கு, ஐந்து விஷயங்களை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வார்த்தைகளையே இங்கு உபயோகிக்கிறேன். திரு.காந்தி நடத்தி வந்த சத்தியாக்கிரகம், பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொண்ட அந்த சத்தியாக்கிரகம் மதியீனமான ஒரு கேலிக்கூத்தாகும். அது விவேகமற்றது, பொருளற்றது. இரண்டாவதாக, தனது லட்சியத்தை அடைய காங்கிரஸ் விரும்பினால், தார்மிக வெற்றிகளை அடையும் முயற்சியை விட்டு விட்டு அரசியல் வெற்றிகளை அடைய முயல வேண்டும் என்று திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் கருதினார். திரு.காந்திக்கு எதிரான தாக்குதலாகும் அது. அந்த ஆவணம் வெளிப்படுத்தும் இரண்டாவது உண்மை என்னவெனில், அகிம்சையில் நம்பிக்கை இல்லாத, ஆனால் வன்முறையில் நம்பிக்கை கொண்ட சில கட்சிகள் இந்தியாவில் உள்ளன என்பதாகும். இவை எல்லாம் காங்கிரஸூக்குள் செயல்படுகின்றன. அவை: இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, வங்காளத்திலுள்ள புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி, இந்துஸ்தான் சோஷலிஸ்டுக் குடியரசுச் சங்கம். இந்த அமைப்புகளெல்லாம் ஒரே ஸ்தாபனமாக இணைக்கப்பட வேண்டுமென்பது திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனின் திட்டமாக இருந்தது. இந்த ஒன்றுபட்ட ஸ்தாபனம் காங்கிரஸூக்குள் செயல்படும் ரகசியக் கட்சியாக இருக்க வேண்டும். அது தலைமறைவாக பணியாற்ற வேண்டும். இந்த ரகசியக் கட்சி காங்கிரஸூக்கு உள்ளே இருக்க வேண்டுமென்பது மட்டுமல்லாமல், அதன் கொள்கையை செயல்படுத்துவதற்கான நிதியை பெறுவதற்காக அரசியல் கொள்கைகளை நடத்த வேண்டும் என்றும் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் யோசனை கூறினார். நான் குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள், அகிம்சைக் கோட்பாட்டை பெயரளவில் மட்டும், உதட்டளவில் மட்டும் கூறிவரும் காங்கிரஸை நம்ப முடியாது என்ற உண்மையை நியாய உணர்வு படைத்தவர்களை ஒத்துக்கொள்ள செய்ய முடியாதெனில், நியாயமான ஒரு மனிதரை நம்பவைக்க இதைவிட வேறு நல்ல அத்தாட்சி இருக்க முடியுமா என்பதை நான் அறியேன். ஐயா! அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளான சூழ்நிலைமைகளில் இதுவும் ஒன்றாகும்.

     என்னுடைய இந்தக் கன்னி உரையில் நான் குறிப்பிட்டுக் கூற விரும்பும் இரண்டாவது விஷயத்திற்கு வருகிறேன். அன்று நிலவிய சூழ்நிலைமைகளில் அடக்குமுறை நியாயப்படுத்தப்படலாம் என்றாலும், அடக்குமுறையோடு நிறுத்திக் கொள்வது சர்க்காரின் கடமையாக இருக்க முடியாது என்றும், சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சர்க்கார் அவசியம் எடுத்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர். ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பற்றி அவையின் பல்வேறு பகுதிகள் கூறியவற்றை ஒருவர் பரிசீலிக்க வேண்டுமெனில், அளிக்கப்பட்ட ஆலோசனைகள் விசித்திரமானதாகவும் குழப்பத்தை அளிக்கும் கதம்பமாகவும் உள்ளதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் ஒன்றே ஒன்றை தேர்ந்தெடுக்கிறேன். திட்டவட்டமானதாகவும் பரிசீலிக்கக் கூடியதாகவும் அது தோன்றுகிறது. இன்றைய சர்க்கார் மாற்றப்பட்டு, புனரமைக்கப்பட்டு ஒரு தேசிய சர்க்காராக செயல்பட வேண்டுமென்று ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனை பற்றி நான் வலியுறுத்திக் கூற விரும்பும் விஷயத்தை அவை முன் எடுத்துக் கூறுவதை சாத்தியமாக்க, இன்றைய சர்க்கார் எத்தகையது, அதன் தன்மை என்ன என்பதைக் கூறத் துவங்கினால் உசிதமாக இருக்கும். மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு தெரிந்திருப்பதுபோல், இந்திய அரசாங்க சட்டத்தின் 33வது பிரிவு கூறுவது என்னவெனில், இந்தியாவின், சிவில் மற்றும் ராணுவ சர்க்காரைக் கண்காணித்து வழிநடத்தி கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கவர்னர்-ஜெனரலின் நிர்வாக சபைக்கு அளிக்கிறது. நான் ஓரளவுக்கு அரசியல் சட்ட சம்பந்தமான வழக்கறிஞர் நான் என்னை ஒரு நிபுணன் என்று உரிமை கொண்டாடவில்லை. ஆனால் அரசியல் சட்ட விவகாரத்தில் என்னை ஒரு மாணவன் என்று கூறமுடியும். இந்த 33வது பிரிவைப் பரிசீலித்து, அமுலில் உள்ள பிற நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பிட்டு, எந்த தன்மையான சர்க்காரை இந்திய மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் ஓரளவு கணக்கில் கொண்டு பார்த்தால், அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்த இரு குணாம்சங்களை உடைய சர்க்காரை இந்தப் பிரிவு அளிக்கிறது எனக் கூறுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. இந்த சர்க்கார் பெற்றுள்ள ஒரு குணாம்சம் என்னவெனில் அது யதேச்சதிகாரத்தை முற்றிலுமாக விலக்குகிறது. இந்த அரசாங்கம் பெற்றுள்ள மற்றொரு குணாம்சம் அது கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களுக்கு மிகவும் உகந்ததாகும் இது…

     மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: இது நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த விஷயத்துக்கு வருகிறேன். சட்டத்தில் இதற்கு போதுமான வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பு கவர்னர்-ஜெனரலின் நிர்வாக சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

     திரு.ஜம்னாதாஸ் எம்.மேத்தா பம்பாய் மத்திய பிராந்தியம்: முகமதியரல்லாத கிராமப் பகுதி: இந்த அதிகாரம் இந்தியா மந்திரியின் உத்தரவுகளுக்கு உட்பட்டது.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதற்கு வருகிறேன். அதுபற்றிக் கூறப்போகிறேன். நிலைமை என்னவெனில் நிர்வாகக் கவுன்சிலின் ஒவ்வொரு உறுப்பினரும் கவர்னர்-ஜெனரலின் சகாவாகும். அந்த உண்மையை ஒருபோதும் மறக்கக்கூடாது. மறக்கக் கூடியதுமல்ல. எனவே, நான் கூறுவது என்னவெனில், யதேச்சதிகாரத்தை ஒதுக்குகிற ஜனநாயகத் தன்மை கொண்ட, சம்பிரதாயத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் சட்டப்படி நிர்வாகத்திற்கு கூட்டுப்பொறுப்பை அளிக்கும் ஒரு சர்க்காரை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றால், நான் இந்த அவைக்கு கூற விரும்புவது இதுதான். நாம் இப்பொழுது பெற்றிருப்பதைவிட மேலும் நல்ல சர்க்கார் அமைப்பை நீங்கள் அமைக்க முடியாது. இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் சொல்லப்படுவது என்னவென்பதை நான் அறிவேன். அது அப்படியே இருக்கலாம். அந்த சர்க்கார் வைஸ்ராயின், இந்தியா மந்திரியின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டது எனக் கூறுகிறார்கள்.

     திரு.ஜம்னாதாஸ் மேத்தா: ரத்து அதிகாரம் மட்டும் அல்ல – உத்தரவுகளும் இதில் அடங்கும்

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதை நான் ரத்து அதிகாரம் என்று கூறுகிறேன். நீங்கள் அதை உத்தரவுகள் என்று அழைக்கலாம். நான் ஓர் அரசியல் சட்ட நிபுணனாதலால், அரசியல் சட்டரீதியான பதத்தையே உபயோகிக்க விரும்புகிறேன்.

மதிப்பிற்குரிய ஓர் அங்கத்தினர்: வெள்ளை மாளிகையிலிருந்து வரும் எஜமானன் குரல்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் கூறியது என்னவெனில், இந்த அரசாங்கம் ஒரு சுதந்திர அரசாங்கம் அல்ல. இது, இந்தியா மந்திரியின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். வைஸ்ராயின் ரத்ததிகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் பாதுகாப்பு, அமைதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது பொதுவான ரத்ததிகாரம் அல்ல. நாட்டின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் ரத்ததிகாரம் அல்ல அது.

சர்தார் சாந்த் சிங்: நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இப்பொழுது நீங்கள் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது; எனக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது; வாதத்திற்காக, ரத்து அதிகாரம் இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டங்கள் பற்றி நான் நிறையப் படித்திருக்கிறேன். எனவே ரத்ததிகாரத்தைப் பற்றி நான் பயப்படவில்லை.

சர்தார் சாந்த் சிங்: நான் ஒரு சட்ட சம்பந்தமான கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிறகு என்னிடம் நீங்கள் கேட்கலாம். இப்பொழுது ஒரு சொற்பொழிவற்ற எனக்கு நேரமில்லை.

ரத்து அதிகாரம் இருக்கிறது என்பதை முற்றிலுமாக ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ரத்து அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. ரத்து அதிகாரம் பற்றி அதிகம் கவலைப்படும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு எனது கேள்வி இதுதான். ரத்து அதிகாரத்தின் முக்கியத்துவம் என்ன? ரத்து அதிகாரம் என்றால் என்ன பொருள்? நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். ஏனெனில் அரசியல் சட்டம் சம்பந்தமான பிரச்சினை பற்றி பேசும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் மனதிலே நிறைய குழப்பம் இருப்பதை காண்கிறேன். யதேச்சதிகார அரசுக்கும் ஒரு பொறுப்பான அரசுக்கும் என்ன வித்தியாசம். ஹிட்லரின் கீழ் ஜெர்மனியில் இருப்பதற்கும் பிரிட்டனில் நிலவும் சர்க்காருக்கும் என்ன வித்தியாசம்? இதற்கு தெளிவான பதில்… (குறுக்கீடு)

தலைவர் (மாண்புமிகு அப்துல் ரஹீம்): அமைதி, அமைதி. மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் இவ்வாறு குறுக்கீடு செய்து கொண்டிருக்கக் கூடாது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தெளிவான பதில் இதுதான். அதைத் திட்டவட்டமான முறையில் கூற விரும்புகிறேன் – சர்வாதிகார சர்க்காருக்கும் பொறுப்பான சர்க்காருக்கும் உள்ள வித்தியாசம் – அதை மீண்டும் கூறி வலியுறுத்த விரும்புகிறேன் – என்னவெனில் சர்வாதிகாரத்தில் ரத்து அதிகாரம் இல்லை; பொறுப்பான சர்க்காரில் ரத்து அதிகாரம் இருக்கிறது. இதுதான் உண்மை. அரசியல் சட்டத்தைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்களும் அரசியல் சட்டங்களை உருவாக்க விரும்புகிறவர்களும் இதை மனதில் கொள்ளட்டும். ஒரே ஒரு கேள்வி, சர்ச்சையைக் கிளர்த்தக் கூடிய ஒன்றே ஒன்று. இம்மாதிரியான வாக்குவாதத்தை நான் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியும் – ரத்து அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும்? இந்தியா அமைச்சரிடமிருக்க வேண்டுமா அல்லது வைஸ்ராயிடம் இருக்க வேண்டுமா அல்லது வேறு எந்த அமைப்பிடமாவது இருக்க வேண்டுமா? இதுதான் சர்ச்சைக்குரிய ஒரே விஷயமாக இருக்க முடியும். ரத்து அதிகாரத்தைப் பொறுத்த வரை, பொறுப்புத் தன்மையில் நம்பிக்கை கொண்டவர்களிடையே, ஜனநாயக சர்க்கார் பற்றி நம்பிக்கையுள்ளவர்களிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்று கூறுகிறேன். எனவே, எழும் கேள்வி இதுதான்; இந்தியா மந்திரியிடம் ரத்து அதிகாரத்தை நாம் வைத்து கொள்ளவில்லையெனில், நாம் வேறு எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும்? இந்தியா மந்திரிக்குள்ள ரத்து அதிகாரத்தை நீங்கள் மாற்றவிரும்பினால், அது சரியாக வைக்கப்பட வேண்டிய ஒரு இடம் சட்டமன்றமே என்று நான் படிக்கிறேன். ரத்து அதிகாரத்தை வைக்க வேறு எந்த இடமும் இல்லை.

சர் சையது ராஸா அலி: (ஐக்கிய மாகாணங்களின் நகரங்கள், முகமதியர் நகர் பகுதி) சட்டமன்றம் பற்றி மாண்புமிகு எனது நண்பர் கடைசியில் நினைத்தது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்!

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: கேள்வி இதுதான்: அது ஒரு எளிமையான கேள்வி என்றும் கருதுகிறேன். இன்று நிலவும் சட்டமன்றத்திற்கு ரத்து அதிகாரத்தை நாம் மாற்ற முடியுமா? (பண்டிட் லட்சுமி காந்த மைத்ராவின் குறுக்கீடு). தங்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தைப் போதிக்க முடியாது. இதற்காக ஒரு வகுப்பைத் தொடங்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன். சட்டக் கல்லூரியில் அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிப் போதிப்பதில் ஐந்து ஆண்டுகள் செலவழித்தேன். என் மனதில் எழும் கேள்வி இதுதான்: சட்டமன்றத்திற்கு ரத்து அதிகாரத்தை மாற்ற முடியுமா? இன்றைய சட்டமன்றக் கண்ணோட்டத்திலிருந்து இந்தக் கேள்வியை நான் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் பிரிட்டிஷ் சர்க்கார் அதிகாரத்தை உடனே துறக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கை. கேள்வியென்னவெனில் இந்த ரத்து அதிகாரத்தை நாம் இதனிடம் ஒப்படைக்கக் கூடிய தகுதி இந்த சட்டமன்றத்திற்கு இருக்கிறதா?

இந்த சட்டமன்றத்தின் இயைபு என்ன? அதன் குணாம்சம் என்ன? இந்த அவையை அவமதிக்கும் எதையும் நான் சொல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். காலப்போக்கின் வேகத்தைக் கணக்கில் கொண்டால் இந்த அவை உயிர் பிரியும் நிலையில் உள்ளது என்பதுதான் உண்மை.

சர்தார் சாந்த் சிங்: அது அப்படித்தான் எப்பொழுதும் உள்ளது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இது மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இது அநேகமாக ஒன்பது ஆண்டுக்காலம் நீடித்து இருந்து வருகிறது. இந்த அவையின் உறுப்பினர்களுக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிகள் அளித்த அதிகாரம் எந்த அளவு நேரடியாகவும் புதிதாகவும் இருப்பதாகக் கருத முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. கால ஓட்டத்தில் இந்த அவை சாரமற்றதாக ஆகாமலிருக்குமா என்பது பற்றி எதுவும் கூற நான் விரும்பவில்லை. ஆனால், மேலே சென்று சபையின் இயைபு பற்றிப் பரிசீலிக்கத் துவங்கலாம்.

தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினர் அவருக்கான நேரத்தை ஏற்கெனவே தாண்டிவிட்டார்.

பண்டிட் லட்சுமி காந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு – முகமதியரல்லாத கிராமப் பகுதி): மாண்புமிகு உறுப்பினர் கூறுவது சபையின் முன் உள்ள பிரேரணைக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! எனக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டது என்று தாங்கள் கருதினால்…

தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): எல்லா கட்சிகளின் ஒப்புதல் பேரில்தான் நேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. அதை நான் அமுல் நடத்தியாக வேண்டும்.

திரு.ஜம்னாதாஸ் மேத்தா: சபையை ஏன் கூட்டினீர்கள்? (மேலும் சில குறுக்கீடுகள் இருந்தன).

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: விஷயம் என்ன வெனில், ஒன்று ரத்து அதிகாரத்தை அதனிடம் ஒப்புவிப்பதற்கு தகுந்த போதுமான பிரதிநிதித்துவம் பெற்றதல்ல இந்த அவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது நாட்டின் தேசிய வாழ்வில் இடம்பெற்ற எல்லோரும், போதுமான எண்ணிக்கையில் இந்துக்கள், போதுமான எண்ணிக்கையில் முகமதியர்கள், போதுமான எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற பகுதியினர் ஆகியவர்களை தன்னகத்தே கொண்ட வகையில் யுத்த காலத்தில் இந்த சட்டமன்றத்தைப் புனரமைக்கும் பணியில் நாம் ஈடுபட முடியுமா என்பதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். எனவே தேசிய சர்க்கார் வேண்டுமென்ற கோரிக்கை குழப்பமான சிந்தனையின் விளைவுதான் என்று கூற விரும்புகிறேன். மிகவும் ஜீவாதாரப் பிரச்சினை என்று நான் கருதும் வகுப்பு உடன்பாடு என்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரும்பாலானவர்களின் விருப்பத்தின் விளைவுதான் என்று கூற விரும்புகிறேன். புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நிர்வாகத்தின் மீது ரத்து அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தகுதி வாய்ந்தது எனக் கருதும் வரையில் இந்த அவையை புனரமைப்பது இந்த வகுப்பு உடன்பாட்டை நாம் எய்தும் வரை சாத்தியமில்லை ஐயா! எனக்கு அளித்த நேரம் முடிந்து விட்டதால் இந்த விஷயத்தை மேலும் வளர்த்த முடியாது. நான் என் இருக்கையில் அமர்கிறேன்.

இந்திய மண்ணியல் நிறுவனப் பயன்பாட்டுக்கிளையின் ஆலோசனைக் குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1942 செப்டம்பர் 21, பக்கங்கள் 339-42)

      திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): செப்டம்பர் 14ம் தேதி திங்களன்று மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம் பற்றி மேலும் பரிசீலிப்பதற்கு சில தகவல்களைத் தம்மால் கொடுக்க முடியுமாதலால் இந்தக் கோரிக்கை ஒத்திவைக்கப் படலாமென்று டாக்டர் அம்பேத்கர் அப்பொழுது கூறினார்.

     மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! திருத்தங்களை எவ்வாறு கையாள தாங்கள் உத்தேசித்திருக்கிறீர்கள்? திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். அப்பொழுது விவாதிக்கவிருக்கும் தீர்மானத்துடன் திருத்தங்களை பற்றியும் நான் பேசமுடியும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): திருத்தங்களைப் பிரேரேபிக்க விரும்பும் உறுப்பினர்கள் திருத்தங்களை இப்பொழுது முறையாக முன்வைக்கட்டும். அப்போது தீர்மானத்தையும் திருத்தங்களையும் விவாதத்திற்கு அவையின் முன் வைக்க முடியும்.

     திரு.ஹெச்.ஏ.சத்தார்.எச்.ஈஸாக் சேட்: ‘தீர்மானத்திலுள்ள ‘ஒரு பிரதிநிதி’’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘நான்குபிரதிநிதிகள்’’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் முன் வைக்கப்படுகிறது.

           ‘தீர்மானத்தில் உள்ள, ‘ஒரு பிரதிநிதி’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘நான்கு பிரதிநிதிகள்’’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’‘

     பண்டிட் லட்சுமிகாந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு: முகமதியரல்லாத கிராமப்புறம்): ஐயா! நான் பின்கண்ட திருத்தத்தைப் பிரேரேபிக்கிறேன்:

           ‘‘தீர்மானத்தில், ‘ஒரு பிரதிநிதி’ என்ற வார்த்தைகளுக்கு பதிலாக, ‘மூன்று பிரதிநிதிகள்’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’’

     தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது:

           “தீர்மானத்தில் ‘ஒரு பிரதிநிதி என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘மூன்று பிரதிநிதிகள்’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’’

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தீர்மானமும் திருத்தங்களும் இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன. சென்ற தடவை நான் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, மதிப்பிற்குரிய எனது நண்பர், திரு.நியோகி, இந்தியாவின் மண்ணியல் மதிப்பு ஆய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கிளை பற்றி கொடுக்க வேண்டிய சில தகவல்களைப் பற்றி கேட்டார். மதிப்பிற்குரிய திரு.நியோகி இது சம்பந்தமான ஒரு கேள்வியை எழுப்பியதும் அவையின் ஞாபகத்தில் இருக்கும். பயன்பாட்டுக்கிளை சம்பந்தப்பட்ட தகவல்களை என் பதிலில் அளித்தேன்; இந்தக் கிளை பற்றி மேலும் அதிக விவரங்களை மதிப்பிற்குரிய எனது நண்பரும் இந்த சபையின் பிற உறுப்பினர்களும் விரும்புகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. இந்த சபைக்கு என்னால் கொடுக்க முடியாத சில தகவல்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்பொழுது கொடுக்க முடியாததற்குக் காரணம் பிரதான கேள்விக்குப் பதிலாகக் கொடுக்க முடியாமல் போயிற்று. அல்லது அன்று கேட்கப்பட்ட துணைக் கேள்விகளின் பிரத்தியேக தன்மையின் காரணமாகவும் இது இருக்கலாம். அன்று அவைக்கு நான் தெரிவிக்க முடியாமல் போன சில தகவலை இப்பொழுது அளிக்க விழைகிறேன்.

     தகவல் பற்றி முதலில் நான் குறிப்பிட விரும்புவது பயன்பாட்டுக் கிளையின் கடமைப் பற்றியது. இதை அன்று நான் குறிப்பிடவில்லை. பயன்பாட்டுக் கிளையின் விதிமுறைகளின்படி அதற்கு மூன்று கடமைகள் உள்ளன என்பதை அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, தாதுப்பொருட்களின் படிமங்கள் இருப்பதாகக் கண்டறிய தேவையான களப்பணிகளைச் செய்வது; இரண்டாவதாக, தேவையான இடத்தில் சுரங்கம் தோண்டும் பூர்வாங்கப் பணிகளைத் துவக்குவது, மூன்றாவதாக, கனிமங்களை சுத்திகரிப்பது, உருக்கிப் பிரித்து எடுப்பது, மற்றும் உற்பத்தி சம்பந்தப்பட்ட இதர பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பரிசோதனை பணிகளை மேற்கொள்வது. இந்தியாவின் கனிம வளங்களை நன்கு பயன்படுத்திக்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். இவைதான் பயன்பாட்டுக் கிளையின் பணிகள். அடுத்து, பயன்பாட்டுக் கிளையின் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது ஆறு தலைப்புகளில் வருகிறது என்பதை சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 1.மேவாரில் உதயப்பூர் சமஸ்தானத்திலுள்ள ஸாவர் ஈயம் மற்றும் துத்தநாக சுரங்கங்களை மீண்டும் திறப்பது; 2.ராஜபுதனத்தின் மைக்கா சுரங்கங்களை அபிவிருத்தி செய்வது; 3.பலுச்சிஸ்தானின் கந்தகப் படிமங்களைப் பயன்படுத்திக் கொள்வது; 4.வங்காளத்திலும் மத்திய மாகாணங்களிலும் உலோக வகை தரும் தாதுப் பொருட்கள் பற்றிப் பரிசீலிப்பது; 5.பீஹாரிலுள்ள படிவுகள் பற்றிப் பரிசீலிப்பது; 6.தாதுக்கள் (ரத்தினக்) கற்கள், உப்புகள் மற்றும் இவை போன்ற ஏனைய பொருள்களைக் கண்டறிவது.

     மதிப்பிற்குரிய நண்பர் திரு.நியோகி தகவல் தெரிந்து கொள்ள விரும்பிய மூன்றாவது விஷயம், இந்த பயன்பாட்டுக் கிளைக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழில்துறை ஆய்வு வாரியத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றியது. விஞ்ஞான – தொழில்துறை ஆய்வு வாரியம் மூன்று விஷயங்களைக் கவனிக்கிறது. அதாவது, கண்டுபிடிப்புகள், கனரக ரசாயனப்பொருள்கள், இயற்கையாக தோன்றுகிற உப்புகள், பயன்பாட்டுக்கிளை தாதுப்பொருட்களைக் கண்டுபிடிப்பது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. இவற்றின் செயல்பாடுகள் வித்தியாசமானவை என்பது இதிலிருந்து தெளிவு. அதே சமயத்தில், விஞ்ஞான, தொழில்துறை ஆய்வு வாரியத்துக்கும் பயன்பாட்டுக்கிளைக்கும் இடையே இடையுறவு உள்ளது; இந்த இடையுறவு பின்கண்டவாறு அமைந்துள்ளது. இந்திய மண்ணியல் மதிப்பீட்டாய்வு நிறுவனத்தின் பொறுப்பாளராக உள்ள டாக்டர் பாக்ஸ், விஞ்ஞான தொழில்துறை ஆய்வு வாரியத்தின்கீழ் இயங்கும் கனரக ரசாயனங்கள் குழுவின் தலைவராக இருக்கிறார். மறுபுறத்தில் விஞ்ஞான, தொழில்துறை ஆய்வு வாரியத்தின் இயக்குநர், மண்ணியல் மதிப்பீட்டாய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கிளைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இரண்டாவதாக, இந்த ஏற்பாட்டால் இரு இலாக்காக்களுக்கும் இடையே பரஸ்பர பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவை தெரிந்து கொள்ள முடியும்.

     மதிப்பிற்குரிய நண்பர் எழுப்பிய வேறு இரு பிரச்சினைகள் உள்ளன. சர்க்காரின் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனம் சம்பந்தப்பட்டவை அவை. இந்தியாவின் தாதுப் பொருள் வளங்களைப் பற்றி கவனக்குறைவு இருப்பதாக அவர் குறை கூறினார். இரண்டாவதாக, பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் அளிப்பதற்காகவே பயன்பாட்டுக்கிளை துவக்கப்பட்டது என்ற கருத்தையும் அவர் வெளியிட்டார். இப்பொழுது, ஐயா! முதல் கேள்வியைப் பொறுத்தவரை, இந்தியாவின் தாதுப்பொருள்களின் வளங்களை அபிவிருத்தி செய்யும் பிரச்சினை முன்பே எடுத்துக் கொள்ளப்படாததற்காக மதிப்பிற்குரிய எனது நண்பர் வருந்துவதைப் போலவே, நானும் வருந்துகிறேன். ஆனால், இப்பொழுது போல், ஒருதிட்டத்தை மேற்கொள்வதற்கு, பயன்பாட்டுக்கிளை அமைக்கும் திட்டத்தை இந்தியா எடுத்துக்கொண்டிருப்பது போல் ஒரு திட்டத்தை மேற்கொள்வதற்கு மூன்று பிரதான கஷ்டங்கள் இருந்தன என்பதை எனது நண்பர் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இந்தக் காலகட்டம் வரை இந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனம் சுரங்கங்கள் துறையில் கல்வித் தகுதி பெற்ற அதிகாரபூர்வ ஊழியர்களைப் பெற்றிருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துரதிருஷ்டவசமாக இங்கிலாந்தின் மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்திய மண்ணியல் மதிப்பாய்வுக் கழகம் பின்பற்றியது. அதாவது சுரங்கங்களை மேற்பார்வையிடும் கண்காணிப்பாளர்களாக மட்டுமே அது செயல்பட்டது. இந்தியாவின் தாதுவளங்களை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடும் திறமையாளர்களைக் கொண்ட தொழில்நுட்ப அமைப்பாக அது செயல்படவில்லை. இரண்டாவதாக, தாதுப்பொருட்களின் படிவங்களை வெளிக் கொண்டு வருவதில் உள்ள இடர்ப்பாடுகள் காரணமாக, தாது வளங்களை பயன்படுத்துவதில் ஓரளவு தயக்கம் இருந்து வருகிறது. நாட்டில் சுரங்கங்களைத் தோண்டும்பணி நீண்டகாலமாக வழக்கொழிந்து போனதால் ஏற்றுமதி செய்வதற்கான மேங்கனீஸ், மைக்கா போன்றவை தவிர, பிற தாதுப் பொருட்களை நாடு அவ்வளவாகப் பெற்றிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான எண்ணம் இந்தியாவில் பரவியிருந்தது. அவைக்கும் எனது மதிப்பிற்குரிய என் நண்பருக்கும் நான் கூறக் கூடியது இதுதான். இந்தப் பிரச்சினையை இப்பொழுது நான் எடுத்துக் கொண்டிருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கையாண்டிருக்க வேண்டுமென்று நாம் வருந்தும் அதேசமயம் எதுவும் செய்யாமல் இருப்பதை விட காலதாமதமாகவேனும் செய்வது உகந்ததல்லவா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

     பர்மிய அகதிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் உண்மையிலேயே நமக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை என்பதை மதிப்பிற்குரிய நண்பருக்கும் அவைக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என் நண்பருக்கு ஏற்கெனவே நான் தெரிவித்ததுபோல அதிகாரபூர்வ சுரங்கப் பணியாளர்கள் இல்லாததால் நாம் கஷ்டத்தில் இருந்தோம். உதாரணமாக ஈயம், துத்தநாகம் போன்றவற்றின் சுரங்கங்களை விரிவான அளவில் வைத்திருக்கும் நாடு பர்மா மட்டுமே. சுரங்கப் பொறியாளர்கள் பெருமளவில் பயிற்சிபெற்ற நாடும் பர்மாதான். இதனால், பர்மா அகதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்தத் திட்டத்தை நாம் துவக்கினோம் என்று சொல்வதைவிட, இந்த பர்மா அகதிகளின் சேவையை நாம் உபயோகப்படுத்த முடிந்ததே என்று கூறுவதுதான், சரியான விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். இதனால்தான் இந்தத் திட்டத்தை நாம் மேற்கொள்ள முடிந்தது. இந்தியாவின் யுத்த முயற்சியில் இது ஒன்று என்று மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்திற்கு பயன்படும் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் இதுவிளங்கும் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது.

     ஐயா! திருத்தங்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதைப் பற்றி நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். பயன்பாட்டுக்கிளை பற்றி நான் கொடுத்த விவரங்கள் எல்லாம் மிகத் திருத்தமாக இருப்பதால், தூற்ற வந்தவர்கள் துதிபாடும் நிலையில், வழிபாடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் ஆலயம் மிகச் சிறிய ஒன்று; வழிபாடு செய்பவர்களின் உற்சாகத்தை நான் வரவேற்றபோதிலும், சுவாசிப்பதற்கு இடமில்லாமல் இந்தச் சிறிய ஆலயத்தில் அதிகக் கூட்டம் சேர்வதை நான் அனுமதிக்க முடியாது. இந்தத் திருத்தங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாமைக்காக வருந்துகிறேன்.

     சர்.சையது ராஸா அலி (ஐக்கிய மாகாணங்களின் நகரங்கள்): ஆலயத்திற்கு நுழையக்கூட நீங்கள் அனுமதி மறுப்பீர்களா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன். இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதற்கான காரணங்களை கறாராக சபைக்கு எடுத்துச் சொல்வேன். இந்தத் திருத்தங்களை பிரேரேபித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவர நான் விரும்புவது, இந்த குழு ஒரு நிர்வாகக்குழு அல்ல என்பதை மனத்தில் கொள்ளவேண்டும் என்பதே, முடிவுகளை எடுக்கும் குழுவல்ல இது. எனவே இந்த குழுவில் செய்யப்படும் எதுவும் இந்த அவையை கட்டுப்படுத்தாது. இது ஒரு ஆலோசனைக் குழு தான். இந்தக் குழுவின் நோக்கம் தொழில் மற்றும் வணிக நிபுணர்களை ஒன்றாகக் கொண்டுவருவதுதான். இந்தக் குழுவின் பிரதான நோக்கம் இதுதான். இந்தக்குழுவின் இயைபு இந்தப் பிரதான குறிக்கோளை அடைவதை கணக்கில் கொண்டு திட்டமிடப்பட்டது. இப்பொழுது திட்டமிட்டபடி இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் இருப்பர். 5 நிபுணர்களும் அவர்களோடு வாணிக, தொழில்துறைப் பிரதிநிதிகள் ஐவரும் குழுவில் இடம் பெற்றிருப்பர். மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இதில் இடம் பெறுகிறார். விஞ்ஞான, தொழில் ஆய்வு வாரியத்தின் இயக்குநர் இந்திய சுரங்க-உலோகத் தொழில் கழகத்தின் பிரதிநிதி ஒருவர், இந்திய சுரங்க அமைப்பு, இந்திய சுரங்க சம்மேளனப் பிரதிநிதிகள் இருவர் குழுவில் இருப்பர். அடுத்து, வாணிக, தொழில் துறைப் பிரதிநிதிகளாக, இந்திய வாணிகக் கழகங்கள் சம்மேளனத்திற்கு 2 இடங்கள் கொடுத்திருக்கிறோம். எஃகு தொழில் துறைக்கு இரண்டு இடங்கள் தந்துள்ளோம். வாணிகத் துறையின் செயலாளர் குழுவில் வாணிகத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். எந்த தாதுப்பொருள்களைத் தாங்கள் அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்பதை வர்த்தக, தொழிற்சாலை பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்க கூடிய நிபுணர்களையும் அதேபோன்று இவற்றை வியாபார ரீதியில் தாங்கள் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை நிபுணர்களிடம் விளக்கிக்கூறக்கூடிய தொழில் துறை, வாணிகத்துறைப் பிரதிநிதிகளையும் ஒருசேரக் கொண்டு வருவதே இந்தக் குழுவின் நோக்கம் என்பதை இதிலிருந்து அவை தெரிந்து கொள்ள முடியயும்

     இப்பொழுது ஐயா, பிரதான நோக்கம் இது என்பதை அவை மனத்தில் கொண்டால் நாட்டின் பொதுக் கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் எனப்படுவோர் யாரையும் குழுவில் கொள்வதற்கு இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

     டாக்டர் பி.என்.பானர்ஜி: (கல்கத்தா புறநகர்: முகமதியரல்லாத நகர்ப்புறம்): பொதுமக்களின் பிரதிநிதிகளைக் குறிப்பிடுகிறீர்களா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம். பொதுமக்களின் பிரதிநிதிகளையே குறிப்பிடுகிறேன். அடுத்து நான் வாதிக்க விரும்புவது, இந்தக் குழு ஏற்கெனவே பெரியதாக இருக்கிறது. திட்டமிட்டபடி ஏற்கனவே 14 உறுப்பினர்கள் அதில் இருக்கிறார்கள். மேலும் 4 பேர்களைச் சேர்க்க வேண்டும் என்ற திருத்தத்தை நான் ஏற்றுக்கொண்டால், குழுவில் 18 பேர்கள் இருப்பார்கள். இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த அவையிலிருந்து நான்கு உறுப்பினர்களை நான் அனுமதித்தால், மேல்சபை குறைந்தது மூன்று பேரையாவது கோரும். அப்படியாயின் குழு 21 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். அப்போது எந்தப் பணியை ஆற்ற வேண்டுமென்று கோரப்படுகிறதோ அந்தப் பணியைச் செய்ய இயலாத அளவுக்கு முடியாததாகிவிடும். இந்தக் குழு எளிதில் நிர்வகிக்க முடியாததாகி விடும்.

     அவையின் கவனத்தை ஈர்க்க நான்விரும்பும் அடுத்த விஷயத்துக்கு வருகிறேன். தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் 4 உறுப்பினர்களை நியமிக்க இந்தக்குழுவின் அமைப்பு வகை செய்துள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்துவது பற்றி எந்தக் குறிப்பிட்ட நிலைக்கும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், சபையின் ஓர் உறுப்பினர் நியமனம்மூலம். அதில் இடம்பெறுவது முற்றிலும் சாத்தியம் என்று நினைக்கிறேன். அவைமுன் நான் வைத்த வாதங்களைக் கணக்கில் கொண்டு, இந்தத்திருத்தங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூற வருந்துகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It