உலக மகளிர் தினத்தை ஒட்டி, பெண்ணின் சக்தியையும், சூழலுடன் பெண் கொண்டுள்ள உறவையும் கொண்டாடுவது பொருத்தமாக இருக்கும் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கருதுகிறது. தாங்கள் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்த ஒரு ஆபத்துக்கு எதிராகவும், உத்வேகம் கொண்ட பெண்கள் ஒன்றுதிரண்ட சக்தியாக எழுச்சி பெற்று போராடுவது தொடர்பாக உலக வரலாற்றில் பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும்.
சிறந்த பெண் சூழலியலாளரான வந்தனா சிவா, இதை சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்: “நமக்கு இரண்டு வகையான எதிர்காலமே சாத்தியம். ஒன்று, பூமியுடன் சமரசம் செய்துகொள்ள பெண்கள் வழிகாட்டுவார்கள். அல்லது, மனித குலத்துக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும்.”
பெண்களிடம் இயல்பாக உள்ள சக்தியை கொண்டாடவும் வளர்த்தெடுக்கவும் எங்களுக்கு உள்ள பொறுப்புடைமையை வெளிப்படுத்தும் வகையில், நீதிபதி பஷீர் அகமது சையது பெண்கள் கல்லூரியின் (எஸ்.ஐ.இ.டி) என்விரோ கிளப் உடன் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் இணைந்து, பெண்களும் சுற்றுச்சூழலும் குறித்து மார்ச் 9ந் தேதி (சனிக்கிழமை 10.00A.M.-1.00 P.M) கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறது. கேரள பழங்குடி போராளி சி.கே.ஜானு, ஷூலு ஃபிரான்சிஸ், உணவு உரிமை போராளி கவிதா குருகந்தி, தேசிய விருது பெற்ற விவசாயி அமலாராணி உள்ளிட்ட முன்னணி பெண் செயல்பாட்டாளர்கள் இந்த கருத்தரங்கில் பேசுகின்றனர். நடிகையும் இயக்குநருமான ரோகிணி, நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தாய் பற்றிய தமிழ் புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார்.
அத்துடன் பெண்களின் உத்வேகத்தையும், சுற்றுச்சூழல் உடன் அவர்களுக்கு இருக்கும் உறவையும் முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் பூவுலகின் நண்பர்கள் இயக்கம், பூவுலகு சிறப்பிதழ் ஒன்றையும் தயாரித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க தங்களால் இயன்றதை செய்துள்ள எளிய பெண்களையும் பூவுலகு இதழ் அடையாளம் காட்டி இருக்கிறது.