மனதைக் கொண்டு
மனதைச் சபித்து
பிறகு சபித்த மனதிடமே
சரண் புகுவது தான் வாழ்க்கை
மொட்டு விட்டவை
பூவாகவில்லையென்றாலும்
சங்கிலிக் கண்ணிகளாக மாறாமல்
இருக்க வேண்டுமென நாம் நினைப்பது
எப்படி தெய்வங்களின் காதுகளுக்கு
மட்டும் கேட்டு விடுகிறதோ
தெரியவில்லை
சித்தத்தை வளர்த்துச்
சிவத்தை வளர்த்து
திடமான வடிவம் கொண்டது
இதுவென்று
நினைக்கும் போது
கற்பூரம் போலக் கரைந்து
கொண்டிருக்கும் வாழ்க்கை
நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது
இருளை இட்டு நிரப்பிக்
கொண்டிருக்கிறது இரவு
ஒளியை இட்டு நிரப்பிக்
கொண்டிருக்கிறது பகல்
இசையை இட்டு நிரப்பிக்
கொண்டிருக்கிறது புல்லாங்குழல்
என்றும் நிலையாமையை இட்டு
நிரப்பிக் கொண்டேயிருக்கிறது இவ்வுலகு
- தங்கேஸ்