நினைவின் வெளியில் குதித்தவன்
மீண்டும் திரும்பவேயில்லை
மீன்களுக்கு புழு போல
சொற்களுக்கு இவன்
ஆட்காட்டி விரலையும பெருவிரலையும் குவித்து
தெருவில் பட்டாம்பூச்சி பிடித்துப் போகின்றவனை
புன்னகையில் கடந்து போகும் உதடுகள்
பிறகு குற்றவுணர்வு கொள்கின்றன
சுழன்று வரும் பிரபஞ்சமென
உதிரும் அரச மரத்திலை ஒன்று
முகத்தை வருடிச் செல்கிறது
பால் பேதமற்ற வெளியில்
ரூபத்திற்கும் அரூபத்திற்குமான
மங்கிய ஒளியில்
நிற்கும் அவன் மீது
இலைகளென உதிரும் பொழுதுகள்
தங்களை புதைத்துக் கொள்கின்றன
பிரக்ஞைக்கும் வெளியே
அறிமையால் பிதற்றும் இவனை
இரவும் மன்னித்துக் கொண்டேயிருக்கிறது
தன் பங்கிற்கு
- தங்கேஸ்