கோரி எடுத்த அன்பு
கொடுத்ததை மறந்து
ததும்பி வழிகிறது.
மறுகால் வழியாக
மற்றவர்களும் பயனுற.

பந்தலிட்டு பரிமாறாத காதல்
பொங்காத நீரூற்றாக
ஊற்றுக்கண் காய்ந்து
வறண்டு கிடக்கிறது
மன வெளியில் புழங்கப்படாத
சிம்மாசனத்தின் கேவலாக.

பாமாயில் பகிரப் படும்
நியாய விலைக் கடைகளில்
சிக்குப் பிடித்துக் கிடக்கிறது
தவறவிட்ட தருணங்களின்
காலாவதியில்
மீளுருவாக்க முடியாத
வாழ்க்கையாக சிக்கிய
மூன்றாவது முடிச்சில்.

கொடைத் திருவிழாக்களின்
கொண்டாட்டங்களில்
எட்டிப் பார்க்கும்
நினைவுகள்
இத்தனைப் பேரிடர்களிலும்
வழித்துச் சுருட்டிப் போகாமல்
கசிந்தபடியேதான் இருக்கிறது.
முதல் காதலுக்கு
மூப்பில்லையென
அடியாழத்தில் அனர்த்தமாக.

- ரவி அல்லது