*
பரந்த மனவெளியின் சமனற்ற
தனிமை மணலில் வேகம் குறையும்
நினைவோட்டம்
இரு மருங்கிலும் முளைத்திருக்கும்
பெருங் காடுகளென தலையசைக்கும்
கேள்விகளில் இடறி விழுகிறது

அதன் தேடலுக்குரிய பதிலை
உனது உதடுகள் இறுகப் பூட்டி வைத்திருப்பதிலிருந்து 
சிறிய தும்மல் வழியாகவேணும்
அதை நீ துப்பி விட முடியும்

ஆனால்
பதில்களுக்குரிய உனது சம்பிரதாயங்கள்
எப்போதும்
ஒரு மதச் சடங்குக்குரிய உத்திகளையே கையாளுகிறது

எளிமையான ஒற்றைப் பதிலை
விழுங்கிச் செரித்துக் கொள்வதற்கான
மௌன மாத்திரைகளை
சேகரித்து வைத்திருக்கிறாய்

மேலும் நீ தூவ முயலும் விதைகள்
இன்னுமொரு காடாகிப் பெருகும்
பெருமழையோடு
காத்திருக்கச் சொல்கிறாய்

*****

--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It