பொதுவாகக் கட்சிகளைப் பார்த்துத்தான் சொல்வார்கள் ‘இஃது அவர்களுக்கு வாழ்வா – சாவா தேர்தல்’ என்று. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மக்களுக்கு வாழ்வா சாவா எனத் தீர்மானிப்பதாக அமைந்திருக்கிறது வரவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்!

ஆம்! இந்தத் தேர்தலில் பா.ஜ.க., தோற்றால்தான் மக்கள் பிழைக்க முடியும்.

Modi and EPSஅப்படி என்ன இதுவரை இல்லாத அளவுக்குக் கேடுகெட்ட ஆட்சியைத் தந்து விட்டார் மோடி எனச் சிலர் கேட்கலாம். (அப்படியெல்லாம் கேட்கக் கூட தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்களா என நினைக்காதீர்கள்! நிறையவே இருக்கிறார்கள்). இந்த ஆட்சியால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு எப்பேர்ப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள, பெரிய பொருளாதார மேதைகளின் ஆய்வறிக்கைகளோ, அரசியல் அறிஞர்களின் அலசல்களோ தேவையில்லை! ஒன்றே ஒன்றைச் சிந்தித்துப் பார்த்தாலே போதும்!

எண்ணிப் பாருங்கள், மோடி அரசு அறிவித்த பணமதிப்பகற்றம் (demonetization), சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் போன்றவர்களில் யாரேனும் ஒருவராவது வேலைவாய்ப்பையோ தொழிலையோ இழந்திருக்கிறார்களா இல்லையா?

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான் இது நடந்திருக்கிறது என்று. இல்லை! யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்கிறார்கள். நாம் அடிக்கடி பார்ப்பவர்கள், எப்பொழுதாவது ஒருமுறை சந்திப்பவர்கள் என அனைவரிடமும் இந்த ஆட்சியால் தங்களுக்கு ஏற்பட்ட அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பைப் பற்றி ஒரு கதை இருக்கிறது நம்மிடம் சொல்ல. இந்தளவுக்கு நாட்டின் ஒவ்வொரு தனி மனிதர் மீதுமான பொருளாதாரத் தாக்குதலை இதுவரை இச்சமூகம் கண்டதில்லை.

முன்பு ஆட்சி செய்தவர்கள் மட்டும் என்ன பெரிய ஒழுக்க சிகாமணிகளா என்றால், கண்டிப்பாக இல்லை. இதற்கு முன் இந்நாட்டை எத்தனையோ முறை காங்கிரசு ஆண்டிருக்கிறது; வாச்பாய் அவர்கள் தலைமையில் பா.ஜ.க-வே கூட ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சிகளின் மீதும் நமக்கு எத்தனையோ பெரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கும் இன்றைய மத்திய ஆட்சி மீதான குற்றச்சாட்டுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன!

அன்றைய ஆட்சிகளிலும் மொழித் திணிப்பு இருந்தது. ஆனால் மத்திய அரசுப் பாடத் திட்டப் பள்ளிகள் அனைத்திலும் சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு சுற்றறிக்கை அனுப்பும் அளவுக்கு இல்லை.

பழைய தலைமையமைச்சர்களும் (பிரதமர்கள்) வேளாண் பெருமக்களின் போராட்டங்களைப் பாராமுகமாகத்தான் கடந்தார்கள். ஆனால் போராடிப் போராடி வெறுத்துப் போய், கடைசியில் உழவர்கள் அவிழ்த்துப் போட்டு விட்டு ஆடையில்லாமல் போகும் வரை விட்டதில்லை.

முந்தைய ஆட்சிகளும் பெருமுதலாளிகளுக்குச் சாமரம் வீசுவதைத்தான் முழுநேரப் பணியாக வைத்திருந்தன. ஆனால் பெற்றோல், தீசல் (Diesel) என எரிபொருட்களின் விலையைத் தனியார் நிறுவனங்களே முடிவு செய்யச் சொல்லி நாட்டின் மொத்த விலைவாசியையும் தீர்மானிக்கும் பொறுப்பை ஓரிரு தனி மனிதர்களிடம் தந்து விட்டு வேடிக்கை பார்த்ததில்லை.

முன்பு இருந்த மத்திய ஆட்சியாளர்களும் தங்களுக்கு வாக்களிக்காத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடத்தினார்கள். ஆனால் தலைமைச் செயலாளர்களையும் ஆளுநர்களையும் வைத்து, கொல்லைப்புற வழியாக ஆட்சி நடத்தும் அளவுக்கு மக்களாட்சி அமைப்பைக் காலின் கீழே போட்டு மிதித்ததில்லை.

கடந்த அரசுகளும் சட்டம், நீதி போன்றவற்றை மதிக்காமல்தான் நடந்தன. ஆனால் நீதித்துறை, மத்திய புலனாய்வுச் செயலகம் (CBI), சேம வங்கி (reserve bank) போன்றவற்றிலெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றை மறைமுகமாகத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததில்லை. பல்வேறு தன்னாட்சி அமைப்புகளிடமும் பரவலாக இருக்கும் அரசியல் அதிகாரம் மொத்தத்தையும் தலைமையமைச்சர் எனும் ஒற்றை மனிதரின் கையில் ஒப்படைத்து, இதை ஓராதிக்க (autocratic) நாடாக மாற்றியதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இதுவரை இங்கே எந்த ஆட்சியாளனும் போராடும் மக்களை ஒடுக்குவதற்குத் துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியதில்லை!

உடனே, தூத்துக்குடியில் தமிழ்நாடு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு மத்திய அரசை எப்படி குற்றம் சொல்லலாம் எனக் கொதிக்காதீர்கள்! நடந்த அந்த அரசுத் தீவிரவாதத்துக்கு உத்தரவிட்டவர் யார் என்பது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய தமிழ்நாடு அரசில் எப்படி, யார் மூலமாக ஆட்சி நடைபெறுகிறது என்பதை அறிந்த, உள்விவகாரம் புரிந்த அனைவருக்கும் அது தெரியும்.

ஆம் நண்பர்களே, இதுவரை இருந்த மத்திய ஆட்சிகள் மீது மக்களுக்கு இருந்த குற்றச்சாட்டெல்லாம் அவை மக்களுக்கு எதிரான அரசுகள் என்பது மட்டும்தான். ஆனால் இது, மக்களின் குருதி குடித்த அரசு! சொந்த நாட்டு மக்களின் உதிரச் சுவை பார்த்த அரசு! சுவை கண்ட நாக்கு சும்மா இருக்காது! அதே சுவையை மீண்டும் மீண்டும் கேட்கும்! அப்படிக் கேட்காமலிருக்க வேண்டுமானால் அந்த நாக்கில் ஒருமுறை சூடு போட்டுத்தான் ஆக வேண்டும்! அதற்கான வாய்ப்புதான் இந்தத் தேர்தல்!

இப்படியெல்லாம் கூறுவதால் நான் காங்கிரசுக்கு வாக்களிக்கச் சொல்வதாக நினைத்து விடாதீர்கள்! பா.ஜ.க-வின் தாமரையில் சிவந்திருப்பது தூத்துக்குடித் தமிழர்களின் குருதி என்றால், காங்கிரசின் கையில் காயாமலிருப்பது ஈழத் தமிழர்களின் குருதி! அவ்வளவுதான் வேறுபாடு!

தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்தபொழுதே வந்த 2009 மக்களவைத் தேர்தலில் நாம் தி.மு.க - காங்கிரசுக் கூட்டணியை மண்ணைக் கவ்வ‌ச் செய்திருந்தால் ஈழத்தில் தாங்கள் செய்த கொடுமை தமிழ்நாட்டு மக்களை எந்தளவுக்குக் கடும் சீற்றத்துக்கு ஆளாக்கியிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும்; இனப்படுகொலையும் பாதியிலேயே நின்றிருக்கவும் கூடும். அதை நாம் செய்யத் தவறியதால்தான் தாங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட அட்டூழியம் என்பதையே இன்று வரை அவர்கள் உணராமல் திரிகிறார்கள்.

அதே தவற்றை மறுபடியும் நாம் செய்து விடக்கூடாது தமிழர்களே! அன்றைக்குக் காங்கிரசு-தி.மு.க கூட்டணி நம் கடல் தாண்டிய சொந்தங்களை அழித்துக் கொண்டே வாக்கு கேட்டு வந்தது போல், தூத்துக்குடியில் நம் கடலோர உறவுகளைச் சுட்டுக் கொன்று விட்டு, இதோ நம்மிடம் வாக்குக் கேட்டு வருகிறது பா.ச.க - அ.தி.மு.க கூட்டணி! அப்பொழுது காங்கிரசுக்கு மறுவாய்ப்பு அளித்து நாம் செய்த மாபெரும் வரலாற்றுப் பிழையை இந்த முறையும் நாம் தொடர்ந்தால் தூத்துக்குடியில் தாங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட குற்றம் என்பதை இன்றைய அரசும் உணராமல் போகும்!

எனவே அதை உணர்த்துவதற்காகவாவது இந்தத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை நாம் தோற்கடித்தே ஆக வேண்டும்! வேளாண்மை, மேலாண்மை, அரசு, ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு என அத்தனை வகையிலும் அத்தனை துறையிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் தவறுகளை இழைத்திருக்கும் இந்த அரசுக்கு இது குறித்த நம் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகவாவது இந்தத் தேர்தலில் நரேந்திர மோதியை நாம் வீட்டுக்கு அனுப்பியே தீர வேண்டும்! அப்படி நாம் செய்யாமல் விட்டால் இந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க. செய்த அத்தனை குற்றங்களுக்கும் கிடைக்கும் மாபெரும் ஏற்பிசைவு (recognition) அதுவாகத்தான் இருக்கும்! எதிர்காலத்தில் அமையும் அரசுகளும் இதே போன்ற ‘நல்லாட்சி’யைத் தொடர அதுவே சிறந்த ஊக்குவிப்பாகவும் இருக்கும்!

புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, இது பெருமுதலாளிகளுக்கான காலம் (Corporate Era)! குடிமக்களின் கையிலிருக்கும் கடைசிக் காசையும் பிடுங்கி, பெருமுதலாளிகள் வீட்டு நாய்க்கு எலும்புத்துண்டு வாங்கத் தாரை வார்க்கும் பெருந்தலைவர்கள்தாம் உலகின் பல நாடுகளையும் இன்று ஆண்டு வருகிறார்கள். எனவே அவருக்கு வாக்களித்தால் நாடு அப்படியே பூத்துக் குலுங்கி விடும் எனவோ, இவருக்கு வாக்களித்தால் அப்படியே காய்த்துக் கனிந்து விடும் எனவோ சொல்லும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை. அதுவும் இந்தத் தேர்தலில் கண்டிப்பாக இல்லை!

இப்படிப்பட்ட உலக அரசியல் சூழலில் மக்களான நாம் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இடையிடையே வரும் இத்தகைய தேர்தல்கள் மூலம் ஆளுங்கட்சியின் மீதான நம் எதிர்ப்பையோ, ஆதரவையோ பதிவு செய்வதுதான். மிகவும் கேடுகெட்ட ஆட்சியாக இருந்தால் எதிர்ப்பைப் பதிவு செய்து, அடுத்த ஆட்சி இதை விட அதிகமாக ஆடாதபடி தட்டி வைக்கலாம். கொஞ்சம் தேவலையான ஆட்சியாக இருந்தால் மீண்டும் வாய்ப்பளித்து இதை விடச் சீர்கெட்டுப் போகாமல் தடுக்கலாம்.

மக்களாட்சியின் ஈடு இணையற்ற ஆற்றலான வாக்களிப்புக்கு இன்றைய காலகட்டத்தில் வலிமையே இவ்வளவுதான். இதைக் கூட நாம் செய்யாமல் விட்டுவிட்டால்... வேண்டாம் நண்பர்களே! நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விளைவை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே எச்சரிக்கையாக வாக்களியுங்கள்!
உங்கள் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்!
கண்டிப்பாக வாக்களியுங்கள்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It