பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள், அண்டை வீட்டாரை தொல்லை செய்யாதீர்கள், அந்நியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்காதீர்கள், அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள், நோயாளிகளை நலம் விசாரியுங்கள், ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள் என்பதைப் போன்ற நற்போதனைகளை மட்டுமே மக்களுக்கு வழங்கிய முகம்மது நபியைப் பின் தொடர்பவர்களா இவர்கள்?

சொந்த நாட்டிலேயே அகதிகளாகத் திரியும் அவலமான நிலைக்குக் காரணம் அந்நாட்டு அரசே என்பது தான் சிரியாவின் பெரும் சோகம். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளம் எனும் கருத்து வணிகச் சந்தையில் அதிகம் விவாதப் பொருளாக இருந்து வருவது சிரிய உள்நாட்டுப் போர் குறித்து தான். ஆனால், இந்தப் போர் இன்றோ, நேற்றோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல ! கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெறும் இந்த உள்நாட்டுப் போர் தற்போது தீவிரமடைந்து, வயது முதிர்ந்த வயோதிகர்கள் தொடங்கி, கருவில் உள்ள சிசு வரை கொடூர மரணத்தை தழுவி வருகிறார்கள். போரினால் பாதிப்பிற்குள்ளாகி காயமுற்று, இறந்த குழந்தைகளின் புகைப்படங்களை முழுமையாகக் காண, கொடிய இரு இதயங்கள் வேண்டும்.

syria war

இப்போருக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அடிநாதம் என்னவோ சன்னி - ஷியா எனும் இசுலாத்தில் இருக்கும் உட்பிரிவு பிரச்னைதான். சன்னி - ஷியா உட்பிரிவுகள் என்றால் என்ன என்பது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்...

இசுலாத்தில் சன்னி, ஷியா, அகுமதிய்யா, இபாதி, குரானிசம், யசானிசம், ரோஹிங்கியா இன்னும் பல உட்பிரிவுகள் இருந்தாலும், உலகம் முழுக்க உள்ள பெரும்பான்மையான இசுலாமியர்கள் அதிகளவில் (அரேபியர்கள் உட்பட) சன்னி பிரிவில் தான் உள்ளனர். இந்தியாவின் 90 சதவிகித சன்னி பிரிவினரும், 10 சதவிகித ஷியா பிரிவினரும் உள்ளனர். உலகம் முழுக்க 20-30 சதவிகித மக்கள் ஷியா பிரிவில் உள்ளனர்.

சரி, சன்னி முஸ்லிம் - ஷியா முஸ்லிம் என்ன வேறுபாடு ? அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் இவைகளை ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளுக்கும் ஷியாக்களுக்கும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.

ஆனால், தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். 'அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். 'முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித்தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.

தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், 'காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட 'சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை. தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும். (இதுவும் நல்ல விசயம் தான்)

இசுலாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி, இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராகக் கொண்டு ஒரு இஸ்லாமியப் பேரரசை நிறுவினார். அந்தப் பேரரசை மிகத் திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு காலமானார். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் என்பவர், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான நண்பரும், முகமது நபிக்கு பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்குப் பிறகு உமர் என்பவர் இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஷிதீன் கலீபாக்கள் பேரரசு, உமய்யா கலீபாக்கள் பேரரசு போன்றவைகள் ஆட்சி செய்தது.

இதற்கிடையில், அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்குப் பிறகு முகம்மது நபியின் மருமகன்களில் ஒருவரான அலி என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல் -அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான முகம்மது நபியின் மற்றொரு மருமகன் உதுமான் என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்குப் பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது. இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உதுமான், முகம்மது நபி அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத் தொடங்கினர். இதனால் அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத் தொடங்கினர். மேலும் முகம்மது நபியினை திட்டவும் தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரை வெறுக்கத் தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள் படும்படி சன்னி முஸ்லிம் என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சன்னி இசுலாம் பிரிவு தொடங்கியது.

நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்

உலகின் மிகப் பழமையானதாக கருதப்படும் திருமறை - உதுமான் காலத்தது. சன்னி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். திருமறையில் அல்லா கூறிய வாழ்க்கை, வழிபாடு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின் நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது என்பது அவர்களின் கூற்றாகும்.

முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபுபக்கரைத்தான் முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஆனால், ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு தோழரும் மருமகனுமான அலியே பெருமானாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. முகலாய மன்னர் பாபர் டெல்லியில் நடைபெற்ற ஒரு போரில் தோல்வி அடைந்து மற்றொரு இசுலாமிய மன்னரிடம் உதவி கேட்டபோது, சன்னி பிரிவைச் சேர்ந்த பாபரை ஷியா பிரிவிற்கு மாறினால் தான் உதவுவேன் என்ற கூறிய வரலாறும் உள்ளது.

சன்னி - ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொஹரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம். இந்த ஊர்வலத்தை நடத்துவோர் ஷியா முஸ்லிம்கள் தான்.

ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உட்பிரிவு, இன்று சிரியாவில் உள் நாட்டுப்போராக வெடித்துள்ளது. சரி, தற்போது சிரியாவில் சன்னி - ஷியா முஸ்லிம்களுக்கிடையே நடக்கும் பிரச்னை என்ன ?

இந்தியாவைப் போலவே சிரியாவும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1946ல் இரண்டாம் உலகப் போர் காரணமாக அந்த நாடு சுதந்திரம் பெற்றது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தன. அதன்பின் 1960 தொடக்கத்தில் அங்கு ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக அமர்ந்தார். மற்ற எதிர்க்கட்சிகள் கலைக்கப்பட்டன. ராணுவ ஆட்சி போல அவர் நடத்தி வந்தார்.

ஆட்சிக்கு எதிராக கலக குரல்கள் வந்து கொண்டு இருந்தது. ஹபீஸ் அல் அசாத் ஓரளவு நல்லாட்சியைத்தான் அளித்து வந்தார். அவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். ஆனால் சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். அரசின் முக்கிய பொறுப்புகளிலும், நடவடிக்கை எடுக்கும் அந்தஸ்துகளில் ஷியா மக்கள் தான் இருந்தார்கள். ஆனால் அதற்கு அடுத்தகட்ட பொறுப்புகளில் தான் சன்னி மக்கள் இருந்தார்கள்.

1998 தொடக்கத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது தம்பி ரிபாத்தை ஆட்சியில் அமர வைக்க முயற்சி செய்தார். ஆனால் ரிபாத் 1983ல் அரசுக்கு எதிராக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். பின் ஹபீஸின் முதல் மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விதியின் வேட்கை பதவி ஏற்க இருக்கும் சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். மீதம் இருந்தது மற்றொரு மகன் பஷர் அல் ஆசாத் மட்டுமே. பஷர் அல் ஆசாத்திற்கு அரசியல் குறித்து ஒன்றும் தெரியாது. நன்றாக படித்தவர் என்றாலும் அரசியலில் எந்த அறிவும் இல்லை. ஹபீஸ் 2000ல் மரணம் அடைந்தார். அப்போதுதான் பஷர் அல் ஆசாத் அதிபராக பதவி ஏற்றார். பதவியேற்ற கொஞ்ச நாட்களுக்கு பாலைவனத்தில் போட்ட மீனாகத் துடித்தார். காரணம் அவரது கனவு அரசியல் அல்ல. கண் மருத்துவத்தில் உச்சம் தான்.

படித்த இளம் நபர் ஆட்சிக்கு வருகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எதிர்காலம் அவர்களுக்கு வேறு விதமான திட்டங்களோடு காத்து இருந்தது. ஆட்சிக்கு வந்ததும் சன்னி - ஷியா பிரச்னையை உருவாக்கினார். இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி மக்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, அரசின் அனைத்து பிரிவிலும் ஷியா மக்கள் அமர்த்தப்பட்டார்கள். இன்று பல உலக நாடுகளின் கண்டனத்துக்கும், ஐ.எஸ்.ஸின் நேரடித் தாக்குதலுக்கும் அவர் மையப் புள்ளி. கல்வியாளர் என்பதாலோ என்னவோ ராணுவத்திலும் ஒரு நவீனப் பிரிவை ஏற்படுத்தினார். இதன் பெயர் ‘சிரியன் எலக்ட்ரானிக் ஆர்மி’. இவர்களின் ஆயுதம் துப்பாக்கி அல்ல, கணினி. அரபு உலகத்தில் இப்படியொரு படை செயல்படுவது இதுவே முதல் முறை. எதிரிகளின் மீது வலைத்தளப் பக்கங்களின் மூலம் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது சிரியா அரசு என்கிறார்கள்.

இதனால், ஆசை ஆசையாக காத்து இருந்த மக்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. மூன்றாம் தர நாடாக சிரியா மாறி வருகிறது. யாருக்கும் வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவும் இல்லை, பெரும்பான்மை மக்களுக்கு மரியாதையும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை என்று நொந்தனர். இதை எதிர்த்துதான் போர் தொடங்கியது. அப்பா 30 வருடம் ஆசை தீர ஆண்டு மரணம் அடைந்தார். மகன் 18 வருடமாக ஆட்சி செய்து வருகிறார். இந்த 48 வருடங்களில் பெரிதாக எவ்வித முன்னேற்றமும் இல்லை என்கின்றனர்.

உள்நாட்டு போருக்குப் பின்னர் ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், பெல்ஜியம், கனடா, ஸ்பெயின் இப்படிப் பல நாடுகள் சிரியாவுடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டன. இரான், ரஷ்யா, சீனா சிரிய அரசின் நண்பர்களாக உள்ளனர். பஷார் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா சிரியாவின் உள் நாட்டுப் போரில் தலையிடுகிறது என்றால், அமெரிக்கா இதுதான் சாக்கு என்று வழக்கம் போல ஐ.எஸ். இயக்கத்தை அழிக்கிறோம் பேர்வழி என்று சிரிய கிளர்ச்சிப் படைக்கு ஆதரவு அளித்து வருகிறது. துபாய் மற்றும் வளைகுடா நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாக இருந்து வருகின்றது.

இந்தப் போரில் இதுவரை 4 லட்சத்து 91 ஆயிரத்து 369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலரின் மரணம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இது 5 லட்சத்தை தாண்டும் என்று ஐ.நாஅமைப்பு கூறியுள்ளது.சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு ஐ.நா தனது தூதுவர்களை அனுப்பி முடிந்தளவு சமரசம் செய்ய முயற்சித்தது. இதற்கு சிரிய அரசு சற்றும் செவி சாய்க்கவில்லை.

மனிதாபிமானமற்ற தாக்குதலால் தெருக்களில் அங்காங்கே கேட்பாரற்ற நிலையில் பிணங்கள் கிடக்கின்றன. போரில் தன் தந்தையையும், தாயையும் இழந்து அநாதைகளாக நடுத்தெருவில் நிற்கின்றனர். குடும்பத்தையும், நண்பர்களையும் இழந்த மக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தரைவழித் தாக்குதலை சமாளித்து உயிரைக் காத்து ஓடுவதற்குள், வான்வழித் தாக்குதல் நடத்துகிறார்கள். உயிர்பிச்சை கேட்கக் கூட அவகாசம் கொடுக்காமல் கொடூரமாக கொல்லப்படும் ஒரு கொலை வரலாறு சமகாலத்தில் இதுவாகத்தான் இருக்கும். அதிகார போதை ஒரு நாட்டையே சவக்குழியாக்கிக் கொண்டிருக்கின்றனது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது சமீபத்தில் படித்த பதிவு ஒன்று நினைவுக்கு வருகின்றது. கேரளாவில் பசிக்குத் திருடிய மதுவை காப்பாற்ற சிவன் வரவில்லை, ஆதரவற்ற முதியவர்களின் எலும்பை விற்றவனை இயேசுவும் கேட்கவில்லை, சிரியாவில் பிஞ்சுகளைக் கொன்றவனை அல்லாவும் தண்டிக்கவில்லை என்பதுதான்.

மனிதமற்ற உலகில் மதங்கள் இருந்து என்ன பயன் ?

- கணியூர் சேனாதிபதி

Pin It