நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு (12-10-2014) என் சொந்த ஊருக்குச் (சேலம் மாவட்டம்; வீரபாண்டி ஒன்றியம்; முருங்கப்பட்டி) சென்றிருந்தேன். முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கூட்டமாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அதைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்த சில நண்பர்கள் என்னை நிறுத்தினார்கள். ஒரு பிரச்சனை என்று ஒரு சம்பவத்தை சொன்னார்கள்...

சொல்லப்பட்ட சம்பவம்:

peopleமுருங்கப்பட்டி மேல் நிலைப்பள்ளி அருகே இருவருக்குள் தகராறு நடந்திருக்கிறது. ஒருவர் பெயர் மணிகண்டன், அதே பகுதியைச் சார்ந்தவர்; மற்றொருவர் பக்கத்து ஊரைச் சார்ந்த ஓட்டுநர். அந்த ஓட்டுநர் ஓர் ஆம்னி காரில் அந்தப் பக்கம் வந்திருக்கிறார்; சாலையின் நடுவே வழி விடாமல் மணிகண்டன் நின்று கொண்டிருந்திருக்கிறார் (மணிகண்டன் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது). வழிவிட முடியாது என்று சட்டையைப் பிடித்து அடித்திருக்கிறார். ஓட்டுநர் காவல் துறைக்கு தகவல் கொடுத்து அடிவாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

இதற்கிடையில் மணிகண்டன் வீசிய கல் அந்த வழியாக சென்ற இரமேஷ் என்பவரின் டூ வீலரில் பட்டு, கண்ணாடி உடைந்து விட்டது. மணிகண்டனிடம் இரமேஷ் நியாயம் கேட்டுக்கொண்டிருக்க காவல் துறை வந்துள்ளது. அங்கிருந்தவர்கள் இரும்பாலை காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். தான் எதிர்காலத்தில் அரசுப் பணிக்கு செல்லவேண்டும்; எனவே என் மீது புகார் கொடுக்காதீர்கள் என்ற மணிகண்டன் இரமேஸிடமும், ஓட்டுநரிடமும் கெஞ்சிக் கேட்டுள்ளார். இரமேஸ் புகார் ஏதும் கொடுக்காமல் வீடு திரும்பிவிட்டார். ஓட்டுநர் புகார் கொடுக்க மணிகண்டன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த பிரச்சனை:

பஞ்சாயத்து கூட்டி, தீர்மானம் போட்டு, காலனியை காலி செய்யப் போகிறோம் என்றார் ஒருவர். பறையனுங்களுக்கு பயங்கர‌ திமிரு; அதனால தான் தருமபுரியில் வீடுகளை எரிச்சாங்க என்று மற்றொருவர். என்னப்பா பிரச்சனை என்று நான் கேட்க, அடுத்தப் பிரச்சனையை சொன்னார்கள்.

சிறையில் இருக்கும் மணிகண்டனின் பெரியப்பா மாரியப்பன் என்பவர், இரமேஸ், ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேர் மீது, மணிகண்டனைத் தாக்கியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய்ப் புகார் கொடுத்துவிட்டார். இவனுங்க அட்டூழியங்கள் தாங்க முடியல; இன்னைக்கு ஒரு நாளு வீடுகளையாவது காலி செய்தாகனும் என்பதற்குத்தான் பஞ்சாயத்து.

அனைத்தையும் கேட்டுவிட்டு வீட்டிற்குச் சென்ற நான், பஞ்சாயத்திற்குச் சென்ற இரமேஸ் உள்ளிட்ட எனது நண்பர்கள் நான்கு பேரை தனியாக வருமாறு அழைத்துப் பேசினேன்.

இரமேசிடம் நான் கேட்ட கேள்விகளும் பதில்களும்:

கேள்வி : ஒருவர் செய்த தவருக்காக அவர் குடியிருக்கும் பகுதியையே எதிர்க்கவேண்டிய அவசியம் என்ன?

பதில் : அங்கு இன்னும் சில இளைஞர்கள் சாலையில் போவோரை கிண்டல் செய்கிறார்கள் அதனால் தான்.

கேள்வி : (அருகில் இருக்கும் நன்பர் மாறனைக் காண்பித்து) இவர் ஒரு தவறு செய்தால் இவர் குடியிருக்கும் ஊரையே எதிர்ப்பீர்களா? அதற்காக பஞ்சாயத்து கூட்டப்படுமா?

பதில் : முடியாது.

கேள்வி : மாறன் தவறு செய்தால் மாறனின் ஜாதியைச் சார்ந்த அனைவரையும் எதிர்க்காத நீங்கள், காலனியில் இருக்கும் நான்கு பேர் தவறு செய்ததாக வைத்துக்கொண்டால் கூட, அந்தச் சாதியைச் சார்ந்த அனைவரையும் எதிர்ப்பது ஏன்?

பதில் : பொய்க் கேசு கொடுத்ததனாலே.

கேள்வி : பொய்க் கேசு என்றே வைத்துக்கொண்டாலும் ஒருவர் தானே புகார் கொடுத்தார்; நீ ஒரு அடி கூட அடிக்கவில்லையா?

பதில் : ஒரு அடி மட்டும் அடித்தேன்.

கேள்வி : ஆக பொய்க் கேசு இல்லைதானே?

பதில் : வன்கொடுமை தடுப்புச் சட்டத்துல கேசு கொடுத்துவிட்டார்களே.

கேள்வி : (பக்கத்து ஊரின் பெயரைச் சொல்லி) அங்கு இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அந்த வழியாகச் செல்லும் உன் மீது கல் வீசப்பட்டால் அவர்களிடம் உன்னால் கேள்வியாவது கேட்க முடியுமா?

பதில் : முடியாது.

கேள்வி : அங்கு கேட்கவே முடியாத நீ, இங்கு ஒரு அடி அடிக்க முடிகிறது என்றால் அது ஆதிக்க ஜாதி மனப்பான்மை இல்லையா?

(பதில் ஏதும் பேசவில்லை.)

கேள்வி : தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மணிகண்டனை சிறையில் அடைத்த காவல் துறை உன்னை வெளியே விட்டுருக்கிறதே. இங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வில்லையே; சரி காவல் துறை உன்னை விசாரிக்க அழைத்ததா?

பதில் : இல்லை

கேள்வி : புகார் கொடுத்த தகவல் உனக்கு எப்படித் தெரியும்?

பதில் : பா.ம.க.வைச் சார்ந்த பிரமுகர்கள் சொன்னார்கள்.

பெரும்பாலான பிரச்சனைகளில் இரு தரப்பினருமே காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். (பாதிக்கப்பட்டோருக்கு எதிராக, குற்றவாளிகளை புகார் செய்ய காவல் துறையே அறிவுரை வழங்குவது கூட உண்டு) யார் புகார் கொடுத்தாலும் அதை வாங்க வேண்டியது காவல் துறையின் விதிமுறை. பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவரே சிறை செல்லும் நிலை கூட ஏற்படுகிறது. அப்படி இருக்கும் போது, உன்னை காவல் துறை தண்டிக்கவில்லை; புகார் கொடுத்தார் என்பதும் உறுதியான தகவல் அல்ல; பொய்ப் புகாரும் அல்ல; இதற்கு இவ்வளவு பிரச்சனையா?

மேலே சொன்ன எந்த பிரச்சனைக்காகவும் கூட்டப்படாத பஞ்சாயத்து, இப்போது கூட்டப்படுவது நீதி வேண்டும் என்பதற்காகவா? நம் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவைகள் எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கின்றதா? என்று ஒரு நிகழ்வை நினைவூட்டினேன்.

நான் நினைவூட்டிய நிகழ்வு:

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து ஊரைச் சார்ந்தவர்களும் பெத்தாம்பட்டி என்ற ஊரின் பெயரைக் கேட்டாலே அச்சப்படுவார்கள். (இந்த முருங்கப்பட்டி ஊராட்சியில் ஒரு எட்டு குக்கிராமங்கள் உள்ளன. பெரும்பான்மையாக வன்னியர்களும், அடுத்தப்படியாக நாடார்கள், கவுண்டர்கள், பறையர்கள், சக்கிலியர்கள், மிகக் குறைவான எண்ணிக்கையில் வண்ணார் மற்றும் நாவிதர்கள்). இது வரை ஜாதிச் சண்டையெல்லாம் வந்ததில்லை. ஆனால் தவறு செய்தவராக இருந்தால் கூட பெத்தாம்பட்டியைச் சார்ந்த ஒருவரைத் திட்டினாலோ, அடித்துவிட்டாலோ, சில நிமிடங்களில் பெத்தாம்பட்டியைச் சார்ந்த ஒரு முப்பது நாற்பது இளைஞர்கள் விரைந்து வருவார்கள்; எங்க ஊருக்காரன் மேலயே கை வைக்கிறீங்களா ? என்று கேட்டு அடித்து நொறுக்கிவிடுவார்கள்.

பெத்தாம்பட்டியைச் சார்ந்தவர்கள் அனைத்து ஊருக்கும் வருவார்கள்; ஆனால் மற்ற ஏழு ஊர்க் காரர்களும் பெத்தாம்பட்டி செல்ல பயப்படுவார்கள். எங்க ஊரில் இருந்து 1 கி.மீ தூரம் வந்து தான் பேருந்து ஏற முடியும். பெத்தாம்பட்டி, நாய்க்கன்பட்டி, முருங்கப்பட்டி ஆகிய மூன்று பேருந்து நிறுத்தங்கள் இருந்தும், எங்க ஊரைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் நமக்கேன் வம்பு என்று பொத்தாம்பட்டிக்கு பேருந்து ஏறக் கூட செல்லமாட்டார்கள்.

2004 ஆம் ஆண்டில் நான் பெத்தாம்பட்டிக்கு வேலைக்கு செல்கிறேன். பெரியார் கொள்கையில் பற்றுள்ள நான், அப்போது தான் பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து சில மாதங்கள் ஆகியிருக்கும். சுமார் 8 கி.மீ தொலைவில் இருக்கும் இளம்பிள்ளையில், கழகத்தின் சார்பாக விநாயகர் சதுர்த்தி தொடர்பாக, பெரியார் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கை அச்சிட்டு பரப்பிக்கொண்டிருந்தோம்.

பெத்தாம்பட்டியில் என்னுடைய நண்பர்கள் சிலருக்கு அந்த துண்டறிக்கையை வழங்கினேன். எங்க ஊரில் நீ துண்டறிக்கை வழங்கக் கூடாது என்று சிலர் என்னை மிரட்டினார்கள். நானும் இதே ஊர் தான்; கொஞ்சம் தூரம் தள்ளியிருக்கிறேன்; பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட சில இடங்கள் எல்லோருக்கும் பொதுவானது; இதை நீங்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது; உங்க வீட்டிற்கு வேண்டுமானால் வரக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நான் முறையிட்ட காரண‌த்தால் என்னை லேசாக அடித்து விட்டார்கள்.

எனக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இவர்களுக்கு இருக்கும் ஊர் வெறி (ஜாதிவெறி, மதவெறி போல) தவறு என்று உணர்த்தவேண்டும் என்பதால் காவல் நிலையம் சென்று முறையிட்டு, அவர்களிடம் “இனி நாங்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தடுக்க மாட்டோம்” என்று எழுதி வாங்கி, ஒரு வாரம் கழித்து அதே ஊரில் ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டோம். (கூட்டம் நடக்கும் முன் தினம் வரை மற்ற ஊரைச் சார்ந்த பலரும் ‘உனக்கேன் வம்பு, அவங்களாம் மோசமானவங்க, கூட்டம் போட்டா மேலும் பிரச்சனை செய்வாங்க’ என்று என்னை தடுக்க முயற்சித்தார்கள்) சில எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக கூட்டம் நடந்தது. இது மற்ற ஏழு ஊர்க்காரர்களாலும் பெருமையாகப் பேசப்பட்டது. இதனால் சில இளைஞர்களின் நட்பு கிடைத்து, அதே ஊரில் கழக கொடி ஏற்றப்பட்டு இன்று வரை பராமரிக்கப்படுகிறது.

அதன் பின்னர் நடந்த ஊராட்சிமன்றத் தேர்தலில் வழக்கம் போல் பெத்தாம்பட்டியைச் சார்ந்த வேட்பாளர் தோற்றுப் போனார். (ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும், ஒரு மூன்று நாட்களுக்கு இந்த ஊரில் பக்கத்து ஊர்காரர்கள் மாட்டினால் கதை கந்தல் தான்) வழக்கம் போல் இந்த ஆண்டும் ஊரில் உள்ள அனைத்து தண்ணீர்க் குழாய்கள், பள்ளி சுற்றுச் சுவர், வீதி விளக்குகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்படுகிறது; பிளாஸ்டிக் மினி டேங்குகள் தீயிட்டு எரிக்கப்படுகிறது, யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை.

அந்த ஆண்டும் சிலருக்கு உதை விழுந்தது. அன்று இரவு நான் திருச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தில் இருந்தேன். அதே ஊரான பெத்தாம்பட்டியைச் சார்ந்த எனது நண்பர் தொலைபேசியில் “பக்கத்து ஊரைச் சார்ந்த எனது நண்பர் ஒருவரை எங்க ஊர்க்காரனுங்க அடிச்சிட்டானுங்க; ஓவரா அட்டூழியம் பண்றானுங்க; காவல் துறைக்கு சிலர் போன் செய்தும் கூட நடவடிக்கை இல்லை” என்று சொன்னார்.

அடுத்த நாள் ஊருக்குப் போன பிறகு பாதிக்கப்பட்ட அந்த நண்பரை காவல் துறையில் புகார் கொடுக்கச் சொன்னேன். சில தினங்கள் காவல் நிலையம் நடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அப்போது நக்கீரன் வார இதழின் செய்தியாளரை வரவழைத்து இங்குள்ள பிரச்சனைகள் குறித்து ஒரு செய்தியாக்கி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்த பிறகு, பலரை காவல் துறை அழைத்து எச்சரித்தது. அதன் பின்னர் அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தினார்கள்.

ஆக கடந்த காலங்களில் அநியாயத்திற்கு எதிராக ஒன்றுதிரளாத மக்கள் – அநியாயத்திற்கு எதிராக நின்ற என்னைப் போன்ற சிலரையும் வேண்டாம், வேண்டாம் என்று தடுத்த மக்கள் இன்று ஒன்று கூடுவது எதனால்? இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் உணர்ச்சி, நீதி உணர்ச்சியா? ஜாதி உணர்ச்சியா?

தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் தான் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் சிலரின் அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டப்படும் ஜாதிவெறி என்ற சதிவலையில் இளைஞர்கள் அகப்பட்டுவிடக் கூடாது.

இறுதியாக, என் கருத்தைக் கேட்ட நண்பர்கள் பஞ்சாயத்திற்கு செல்லவில்லை; நேரடியாக மோத முடியாமல், துடிப்பான இளைஞர்களிடம் ஜாதி வெறித் தீயை மூட்டி குளிர் காய நினைத்த சுயநல சக்திகள் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டன‌.

- கோகுலகண்ணன்

Pin It