இன்றைக்கு தமிழகத்தின் அரசியலில் ஒரு மாற்று சக்தியாக குறிப்பாக திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய சக்திகள் உருவெடுத்து வருகின்றன என்பதை மறுக்க இயலாது...கடந்த காலங்களில் எத்துணை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசியல், திமுக அதிமுக இவ்விர‌ண்டையும் சுற்றி சுற்றியே பின்னிவந்தது.. ஆனால் இன்றைக்கு நிலை மாறிவருகிறது...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரை மக்கள் நடத்தி வரும் ஜீவாதாரப் போராட்டம் தமிழகத்தின் இவ்விரண்டு பெரும்கட்சிகளின் ஆதரவில்லாமல் முழுக்க முழுக்க தமிழ்த் தேசிய சக்திகளின் போராட்டக் களமாக பரிணமித்துள்ளதை நாம் அறிவோம்... எதிர்கால பின்விளைவுகளை எண்ணி அச்சப்படும் இடிந்தகரை மக்களின் பரிதாப நிலையை மாறி மாறி ஆட்சி நடத்தி வரும் இவ்விரண்டு கட்சிகளுமே கவனத்தில் கொள்ளவில்லை என்பது மறுக்கமுடியாத மன்னிக்கமுடியாத உண்மை... ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அம்மையார் இன்று ஒன்றைப் பேசுகிறார்; ஒரு நிலை எடுக்கிறார் மறுநாள் வேறு ஒரு நிலைக்கு வருகிறார்... ஆக ஒரு  நிலைதன்மையற்றவர்களால்தான் தமிழகம் இன்றைக்கு ஆளப்படுகிறது...

இராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறைப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு உயர்நீதி மன்றம் தூக்குதண்டனையை உறுதிப்படுத்தி அதற்கான முன்னேற்பாடுகளை செய்தபோது தமிழகமே தங்கள் குடும்பத்தின் உறவுகள் தூக்கிலிடப்படப் போவதாக எண்ணி வெகுண்டு எழுந்தது. ஆனால் தமிழர்களின் ஓட்டுக்களை வாங்கி அரியணை சுகம் அனுபவிக்கும், அனுபவித்துவரும் இவ்விரண்டு கட்சிகளுமே தமிழர் மூவரின் உயிர்காக்க வீரியமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பது உண்மை... தமிழர் மூவரின் உயிர்காக்க வீரியமாக களமிறங்கியவர்கள் தமிழ்த்தேசிய சக்திகள். மக்களின் எழுச்சியை ஒருமுகப்படுத்தி அதன் தன்மையை அரசுக்கு உணர்த்தியதன் விளைவு தூக்குதண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளது.

இலங்கை சர்வாதிகார அரசுக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா தயங்கியபோது தமிழகமே ஓரணியில் திரண்டு ஐநாவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் தமிழர்கள் சம்மந்தப்பட்ட எந்த விவகாரத்திலும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகவே இருந்து வந்த திமுக, அதிமுகவும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வேண்டுமென்று மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்ததுதான்... ஆம் ஒருவேளை இந்த விவகாரத்திலும் இவ்விரண்டு கட்சிகளும் மவுனம் காத்திருந்தால் தமிழர்களின் எழுச்சியை எதிர்கொள்ள இயலாது என்கிற உண்மையை உணர்ந்துகொண்டார்கள்...

தனிமனிதனாக நின்று இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் திருமாவளவன் கவனிக்கப்பட வேண்டியவர்.

என்ன தோழர்களே.. தலைப்பை விட்டு விட்டு என் எழுத்துக்கள் எங்கெங்கோ போகிறது என எண்ணுகிறீர்களா... காரணம் இருக்கிறது... மேற்குறிப்பிட்ட அத்துணையுமே சாதியோ மதமோ சம்மந்தப்படாத தமிழினப் பிரச்சனைகள். இதில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன...? முஸ்லிம்களுக்கான பிரச்னைகள் என்றால் சளைக்காமல் களம்கானும் இஸ்லாமிய இயக்கங்கள் ஏன் மேற்குறிப்பிட்ட தமிழினப் பிரச்னைகளில் களம்காண‌வில்லை. முஸ்லிம்களின் பிரச்னைகள் என்றால் மற்றவர்கள் அதாவது தமிழ்த் தேசியவாதிகளும் மனித உரிமைப் போராளிகளும் களம்காணும்போது இவர்கள் ஏன் தமிழர்கள் சார்ந்த பிரச்னைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை?

நியாயமான கேள்விதான்... ஆனால் அதுவல்ல உண்மை...

தமிழ்த் தேசியத்தையும் இஸ்லாமிய அமைப்புகளையும் வேறுபடுத்திப் பார்த்திடும் நிலைக்கு சில காரணங்கள் உண்டு... இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் சமூகத் தேவைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வுக்காக, தங்களைச் சார்ந்த இளைஞர்களை தயார்படுத்தியதில் காட்டிய முனைப்பை மற்ற பிரச்சனைகளுக்கு தயார்படுத்தவில்லை என்பதை மறுக்க முடியாது... அதேவேளையில் இன்றைக்கு தமிழக முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிவரும் மனிதநேய மக்கள் கட்சியும், எஸ்.டி.பி.ஐ என்கிற சமூக சனநாயக இந்திய கட்சியும் பொதுத்தளங்களில் தங்களின் பங்களிப்பை நிறைவாக செய்துவருகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது... கூடங்குளம், ஈழத்தமிழர் நலன் ஆகியவற்றில் இன்றைக்கு முஸ்லிம்களும் களம்கண்டு வருவது ஆரோக்கியமான ஆரம்பம்.

ஒரு சில பிரிவுகள் முஸ்லிம்களை மற்ற வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாண்டு வருவதையும் கவனிக்கத் தவறக்கூடாது. குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழர்கள் அவர்களின் தாய்மண்ணில் படுகொலை செய்யப்பட்டதை, அகதிகளாக சொந்தமண்ணை விட்டு வெளியேற்றப்ப்பட்டு பரிதவிப்பதை கண்டு மகிழ்வது போன்ற ஒரு இழிவான தோற்றத்தை முஸ்லிம்களிலேயே ஒரு சிலர் செய்துவருகிறார்கள். வெகுஜனமக்களிடம் இருந்துவரும் முஸ்லிம்களுக்கான நன்மதிப்பை குலைக்கக்கூடிய அபாயம் அதில் இருப்பதை அத்த‌கைய இயக்கங்களைச் சார்ந்துள்ள இளைஞர்களுக்கு விளங்கச் செய்யவேண்டியது கட்டாயக் கடமை.

சிங்கள வெறியர்களின் கொடுமைகளுடன் இலங்கை முஸ்லிம்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான பிரச்னைகளை முடிச்சிடுவது அறிவார்ந்த செயல் அல்ல... புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; அதிலே நமக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் புலிகள் என்கிற இயக்கம் செய்த தவறுக்கு ஒரு இனமே அழிக்கப்படுவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்...? இன்னும் சொல்லப்போனால் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சனைகளுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை இதுவரை எவரும் விளக்கம் தரவில்லை...

தமிழர் மூவரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தமிழினமே களமாடிவந்த உணர்வுப்பூர்வமான காலகட்டத்தில் இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் வாழும் சிந்தனையாளர்களையும் சமூகப் பார்வையாளர்களையும் ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய சமூக வலைத்தளமான முகநூல் தளத்திலும் இந்த தூக்கு தண்டனை விவகாரம் பெரியளவில் விவாதிக்கப்பட்டது. இதில் வீரியமான கருத்துக்கள், தமிழர்களின் உணர்வுகள் பகிரப்பட்டது. இப்பகுதிகளில் விவாதிக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயமாக அரசின் கவனத்திற்கு செல்கிறது என்பதை மறுக்கமுடியாது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த காலகட்டத்தில் மூவரின் உயிருக்காக போராடிய ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் வெளிநாட்டின் முக்கிய பொறுப்பாளர் ஒருவரே நான் பதிவு செய்திருந்த மூவரின் ஆதரவு கருத்துக்கு மறுப்பளித்து பதிவு செய்திருந்தார்.

அவர் பதிவு செய்திருந்தார், இந்த மூவரும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் ஒரு உயிரை கொலை செய்திருக்கிறார்கள்...இதுதான் அவரது வாதம். மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்... இஸ்லாத்தின் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என வாதிட்டார்... நான் அவருக்கு விளக்கமளித்தேன். ஆம் உண்மைதான் இஸ்லாத்தின் பார்வையில் கொலைக்கு கொலைதான் தீர்வு... மாற்றமில்லை. அதேபோல உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் அவர்கள் விட்டுச் சென்றுள்ள அழகிய முன்மாதிரிகளையும் முழுமையாக அறிந்து கருத்திடுங்கள். பழிக்கு பழி எடுப்பது முக்கிய கடமை. ஆனால் அதனை வரம்பு மீறாமல் கடைபிடிக்க வேண்டுமென்பதுதானே இஸ்லாம் சொல்வது... மூவரின் விவகாரத்தில் ஒரு வாதத்திற்கு அமரர் இராஜீவ்காந்தி கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருந்தால் இவர்களின் தொடர்பை வகைப்படுத்த வேண்டும். நேரடியாக கொலைக்குற்றதில் பங்கெடுத்தவர்கள் என போலீஸாரால் அடையாளம் காணபட்ட ஒற்றைக்கண் சிவராசனும் சுபாவும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்கள். தற்கொலை தாக்குதல் நடத்திய தாணுவும் அதே இடத்தில் மாண்டுவிட்டார். அப்படி இருக்கையில் இம்மூவரும் கொல்லப்பட  வேண்டுமென்பது எப்படி நியாயமாகும்... ? இராஜீவ்காந்தியைக் கொலை செய்த முக்கிய குற்றவாளிகள் கொல்ல‌ப்பட்டுவிட்ட பிறகும் இவர்களும் கொல்லப்பட வேண்டுமென்பது இஸ்லாத்தின் பார்வையில் வரம்பு மீறிய செயல் அல்லவா...?

அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை. அவர் மட்டுமல்ல எவராலும் இதற்கு பதில் அளிக்க இயலாது... முழுமையான புரிந்துணர்வு இல்லாமல் இப்படியாக கருத்துக்களை பதிவு செய்வதால் ஒரு சமுதாயமே இங்கு வேறுமாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதை தவிர்க்க  முடியாது... இதுதான் இன்றைக்கு தமிழகத்தில் நடத்து வருகிறது... கூடங்குளம், ஐநா தீர்மானம் மட்டுமல்ல... பரமக்குடி படுகொலைகளையும் கண்டித்து களமாடிய இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஊடகங்கள் வழக்கம்போலவே இவற்றை மறைக்கிறது என்பதுதான் உண்மை... இவற்றை எல்லாம் வென்றெடுக்க வேண்டுமானால் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் தங்களைச் சுற்றியுள்ள கட்டுபாட்டு வளையங்களைத் தகர்த்து பொதுவான வெகுஜன மக்கள் தளத்திற்கு நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்...

குறிப்பாக தமிழ்த் தேசிய சக்திகளுடன் கரம்கோர்த்து களமாட வேண்டும்... அப்சல் குருவிற்காக ஒலிக்கும் முஸ்லிம்களின் குரல் அப்பாவியான பேரறிவாளனுக்கும் ஒலிக்க வேண்டும்... அப்போதுதான் நீதிக்குப் புறம்பாக சிறைபட்டுள்ள அப்துல் நாசர் மதானி போன்றவர்களின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் குரலும் வீரியமாக ஒலிக்கும். இது நல்ல தருணம். தமிழகத்தின் பல்வேறு மத்திய சிறைச்சாலைகளில் பல்லாண்டு காலமாக நீதிப் போராட்டம் நடத்திவரும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அப்பாவிகள் நூற்றுக்கணக்கில் வாடிவருகிறார்கள்... கேட்பாரற்ற நிலையில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் சிறையில் இருக்கிறார்கள்... அவர்களை மீட்க வேண்டியது தமிழினத்தின் கடமை. முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை இதுவரை முஸ்லிம்கள் மட்டுமே பேசினார்கள். அது ஒரு சமுதாயப் பிரச்னையாக பார்க்கப்பட்டது. அந்த நிலையை தோழர் வழக்கறிஞர் திருப்பூர் உமர்கயான் மாற்றியுள்ளார். முதன் முறையாக சிறைவாசிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியவாதிகளும் இஸ்லாமிய இயக்கத்தின் பொறுப்பாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஒரே மேடையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தார்கள்... ஒரு சமுதாயப் பிரச்சினை மனித உரிமை பிரச்சினையாக பரிமாணம் பெற்றுள்ளது... இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்... இந்த ஒருங்கிணைத்த உரிமைக்குரல் தொடர்கிறது...

இது நீதிக்கான போர்க்களம் மட்டுமல்ல... அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம்... இன்றைக்கு தமிழக முஸ்லிம்களின் அரசியலும் தோழர் அன்சாரி, தோழர் தெஹ்லான் போன்ற இளைஞர்களின் ஆளுமையின் கீழ் வந்துள்ளது நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம். இந்த வீரியம் தமிழ்த் தேசிய சக்திகளுடன் கலக்கும்போது நிச்சயமாக இழந்த உரிமைகள் மீட்கப்படுவது எளிதாகும்...

Pin It