மறியலுக்கு முதல் நாள் : மந்திரிகளுக்குத் தெளிவுரை

1948 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. மறியலுக்கு முன்நாள் 9-10-48 அன்று பெரியார் ஆற்றியவுரை :

மாலை 6 மணிக்கு பெத்துநாய்க்கன் பேட்டைச் சிவஞானம் பார்க்கில் சென்னை மாவட்டத் திராவிடக் கழகத் தலைவர் தோழர் என். ஜீவரத்தினம் அவர்கள் தலைமையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. பார்க்கிலும், பார்க்கின் சுற்றுப்புறத்திலும் சுற்றுப்புற வீடுகளின் மாடியிலும் ஏராளமான மக்கள் குழுமியிருந்து இந்தி எதிர்ப்புப் போர் முரசொலி முழங்கக் கேட்டனர். பெரியார் அவர்களும், இந்திஎதிர்ப்பு முதல் சர்வாதிகாரியாக இருக்கும் வாய்ப்புப் பெற்ற தோழர் சி.என். அண்ணா துரை அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள். இடை யிடையே சிறுதூற்றல் இருந்துகொண்டிருந்ததென் றாலும் மக்கள் மிக அமைதியாக இருந்து மேற்படி சொற்பொழிவுகளைக் கேட்டனர்.

தோழர் கே. கோவிந்தசாமி அவர்கள் கூட்டத்தின் நோக்கத்தைச் சுருக்கமாக எடுத்துக்கூறி, தோழர் என். ஜீவரத்தினம் அவர்களைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளவும், தோழர் என். ஜீவரத்தினம் அவர்கள் தலைமையேற்று, கட்டாய இந்தி மூலம் தமிழ்நாட்டைக் கெடுக்கவரும் ஆரியக் கலாச்சாரப் படையெடுப்பை முறியடிக்க, போர் துவக்கப் படுகிறதென்றுகூறி தலைவர் பெரியார் அவர்களைப் பேசும்படி கேட்டுக் கொண்டார்.

பெரியார் அவர்கள் பேசியதாவது :-

“அன்புமிக்க தலைவர்  அவர்களே! தோழர்களே! தாய்மார்களே!

இந்தக் கூட்டம் நாளை இச்சென்னையில் நடை பெற இருக்கும் இந்தி எதிர்ப்பு மறியலைக் குறித்து  மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும், இந்நாட்டில் அதுவும் இச்சென்னை மாநகரில் இந்தி எதிர்ப்பைக் குறித்து யாருக்காவது விளங்க வைக்க வேண்டுமென்றால், சென்ற 10 ஆண்டு களுக்கு முன்பு பிறந்திராத குழந்தைகளுக்கும், அன்று விளக்கம் தெரியாது; விபரம் தெரியாது இருந்த குழந் தைகளுக்கும் தான் சற்று விளக்கம் கூறவேண்டியி ருக்குமே ஒழிய, மற்றையோருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் அவ்வளவு விளக்க மாக அன்று நாம் இந்தி எதிர்ப் பின் அவசியத்தைப் பற்றிப் பேசியிருக்கிறோம் என்பதால் தான், சென்ற 10 ஆண்டுகளுக்கு முந்தி இதே இந்தி மொழி மூலம் நமது திராவிட மொழிக்கும், திராவிடக் கலாச்சாரத்திற்கும், திராவிட மக்களுக்கும் வரநேர்ந்த ஆபத்தைத் தடுக்க வேண்டுமென்று நாம் ஒரு போராட்டத்தை இதே சென்னையில் நடத்தி வெற்றி பெற்றோருக்கிறோம் என்பதால்தான். அக்காலத்தில் ஏற்பட்ட ஆபத்துக்கும், இக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கும் பல வேற்றுமைகள் உண்டு. ஏதாவது கடினமான காய்ச்சலைப் பற்றிக் கூறவேண்டுமானால், இக்காய்ச்சல் மிக “விருலன்ட் பாரத்தில்” அதாவது மிகக் கொடூரமான, வேகமான, ஆபத்துக்கிடமான தன் மையில் வந்துள்ளது என்று கூறுவார்கள். அதேபோல் நமது கலாச்சாரத்திற்கு இன்று வந்துள்ள ஆபத்து முன்னைவிடச் சற்றுக் கடினமான, சற்று தொந்தர வான தன்மையில் வந்துள்ளது.

பழைய இந்தி நுழைப்பு!

10 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கவர்னர் ஜெனரலாக இருக்கும் தோழர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாய் இருந்த காலத்தில், இதே இந்தி கட்டாயப் பாடமாகக் கூட அல்ல, இஷ்ட பாடமாக வைக்கப்பட்டது. அதுவும் மாகாணம் பூராவுக்கும் 40 அல்லது 50 பள்ளிகளில் மட்டுமே பாடமாக வைக்கப் பட்டது.  அன்று அதைக்கூட நாம் எதிர்த்தோம். நமது எதிர்ப்பின் வலிவைக் கண்டதும், இந்தியை இஷ்டப் பட்டுப் படிப்பவர்கள் கூட, இடைப்பட்டாலொழிய பரீட் சைக்குப் போகவேண்டாம்; சென்றாலும் தேர்வு வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டது.

எதிர்ப்பு வளர, வளர ஏதோ 100 வார்த்தைகளாவது இந்தியில் ஒரு மாணவன் தெரிந்து கொண்டால் போதுமானது என்று கூறப்பட்டது. கடைசியாக “இவ் வளவு அதிருப்தி மக்களுக்கு இருக்குமென்று தெரிந் திருந்தால் நான் இந்த மொழியைப் புகுத்தியே இருக்க மாட்டேன்” என்று அவரே கூறும்படியான நிலைகூட ஏற்பட்டது. கடைசியில் இவ்வாறு கூறுமாறு செய்யப் பட்ட அவர், முதல்முதலாக இந்தி எதிர்ப்புப் போர் துவங் கப்பட்ட போது என்ன கூறினார் தெரியுமா?

ஆணவம் குறைச்சலில்லை

“நான் இம்மாகாணத்தின் முதன் மந்திரி. மக்க ளால் தெரிந்து எடுக்கப்பட்டு மந்திரியாக வந்துள்ள வன். நான் உத்திரவிடுகிறேன் என்றால் மக்களின் பிரதிநிதியாகிய நான் உத்திரவிடுகிறேன் என்று பொருள். அப்படி இருக்க மக்களின் பிரதிநிதிகள் அல்லாத, யாரோ வெளியில் உள்ள ஒரு இராமசாமி நாய்க்கரும் ஒரு சோமசுந்தர பாரதியாரும் எதிர்க்கிறார்கள் என்பதற் காகவா உத்திரவை மாற்றுவேன்? அவர்களுக்காகவா விட்டுக்கொடுப்பேன்? அது நடக்காது, முடியாது என்று ஆணவத்தோடு கூறினார். அதற்காக நாம் அன்று அஞ்சினோம் இல்லை. மக்களிடம் இந்தியால் விளையக் கூடிய கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக்கூறி னோம். அவர்களும் ஒப்புக்கொண்டு பேராதரவு அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.”

ராஜி பேசிய படலம்

அதைக் கண்டு அன்று ஆணவத்தோடு சவால் விட்ட ஆச்சாரியாரும் சமரசத்திற்கு வர, ராஜி பேச முன்னுக்கு வர நேரிட்டது. ராஜி பேச வந்தவர் ஜெயில் சூப்பரன்டெண்ட் முன்னிலையில் தான் என்னுடன் பேசினார். சமரசம் பேச வந்தவரும் கூட இன்றும் உயிருடன் தான் இருக்கிறார். அவர் யார் என்பதை யும் தான் தெரிவித்து விடுகிறேனே. வேறு யாரு மில்லை; இன்றைய மத்திய அரசாங்க நிதி மந்திரியா யுள்ள தோழர் சண்முகஞ் செட்டியார்தான் என்னுடன் ராஜி பேச அனுப்பப்பட்டார். அவர் கூறினார் : “இப்போது இந்தி புகுத்தப்பட்டுள்ள 40 பள்ளிகளோடு இந்தி நுழைப்பை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொள்வதா யிருந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளச் சம்மதந் தானா?” என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் : “இது வெறும் வீம்புதானே; இந்தி தேவையில்லை என்று அவர் உணர்வதாயிருந்தால் இந்த 40 பள்ளி களிலும் கூட எடுத்துவிடுவதுதானே. நான் ஜெயித்தேனா, அவர் ஜெயித்தாரா என்று காட்டிக் கொள்ளத்தானே இப்படிக் கூறுகிறார்? இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது” என்று கூறினேன்.

அதற்கு  அவர் சொன்னார் : “இந்த 40 பள்ளிகளில் கூட இந்தி நிரந்தரமாக இராது. அதுவும் குறைக்கப்பட்டு விடும் என்று கூடக் கூறுகிறார். அப்படிச் செய்வதா யிருந்தால் போராட்டத்தை நிறுத்தச் சம்மதந்தானா?” என்று கேட்டார்.

“அப்படியானால் முடிவாக 40 பள்ளிகளிலும் இந்தி மொழி எடுக்கப்பட்டுவிடும் என்று முடிவான தேதியைக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்; எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அந்தத் தேதிக்குள் எடுபடாவிட்டால் மறுபடி போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாயிருந்தால் போராட்டத்தை நிறுத்துகிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர் தன்னால் பொறுப்பேற்க முடியாதென்றும், அந்தத் தேதியைக் கேட்டுத் தெரிவித்து விடுவதாகவும் கூறிச்சென்றார்.

வேகமும் வீம்பும்

இந்தப் பேச்சு நடந்தது சென்னை ஜெயிலில். இப்பேச்சு நடந்த சில நாட்களில் எனக்கு காய்ச்சல் வரவும் என்னைப் பெல்லாரி சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்கிருந்து கோவைக்கு மாற்றப்பட்டேன். நான் பெல்லாரியில் இருந்த போது இங்கு இந்தி எதிர்ப்பை நடத்தியவர்கள் சற்று வேக மாகப் போய்விட்டார்கள். அதன் பயனாய்ச் சர்க்காருக் கும் வீம்பு அதிகமாகிவிட்டது. அதன் பயனாய் சமரசப் பேச்சு கைவிடப்பட்டது. கோவையிலும் எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு வயிற்றுப் போக்கும் ஏற்படவே, கோவை ஜெயில் சூப்பரின்டெண்ட் கொஞ்சம் பயந்து விட்டார். அவர் ஒரு டாக்டர். அவர் உடனே இராச கோபாலச்சாரியாரைப் பார்த்து நிலைமையைச் சொன் னார். ராஜகோபாலாச்சாரியாரும் “தாளமுத்துவுக்கும் நடராஜனுக்கும் ஏற்பட்ட கதி இவனுக்கும் ஏற்பட்டு விட்டால் என்ன நேருமோ?” என்று அஞ்சி, “உடனே ஓடோடியும் போய் விடுதலை செய்துவிடு. வெளியில் போய் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்” என்று கூறிவிட்டார். ஞாயிறன்று சூப்பரின்டெண்ட் அவரைப் பார்த்தார். ஞாயிற்றுக்கிழமையன்றே விடுதலை உத்தரவும் செய்யப்பட்டது. பிறகு இந்தி எதிர்ப்புக் காகச் சிறை சென்றவர்களை, அவர் சிறைவாசம் முடியும் முன்பே கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டே வந்தார். அதையொட்டி இந்தி இன்று எடுபடும், நாளை எடுபடும் என்று பேச்சு உலாவ ஆரம்பித்தது. அப்படிப்பட்ட நிலையில் யுத்தமும் வந்தது. நாம் போட்ட உத்தரவை நாம் எடுப்பானேன்; வெள்ளையனே எடுத்துவிடட்டுமே என்ற நினைப்பில், காங்கிரஸ் மந்திரிகளும் பேசாமலிருந்து கடைசியாக ராஜினாமா கொடுத்துவிட்டுச் சென்றார்கள். வெள்ளையர் சர்க்கார் ஆலோசகர்களாக வந்ததும் அந்த உத்தரவை ரத்துச்செய்துவிட்டார்கள். இதுதான் பழைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுருக்கமாகும்.”

இன்றைய இந்தி நுழைப்பு முறை

இந்தச் சங்கதியை நன்றாக அறிந்துள்ளவர்கள், இன்று தாம் பதவிக்கு வந்ததும் அதே காரியத்தை மறுபடியும் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். சுதந்தர அரசாங்கத்தில், சொந்த அரசாங்கத்தில் தான் அந்நிய வடநாட்டு மொழி நம் நாட்டில் புகுத்தப்படுகிறது. அதுவும் முன்னையை விடச் சற்று கடினமான முறை யிலேயே புகுத்தப்பட்டுள்ளது. எனவே நமது போராட் டத்தின் அளவும் முன்னையதைவிடச் சற்று விரிவான தாகவே அமையும். உத்திரவு பிறப்பித்தவர்களும், திடீரென்று இந்தியை இந்நாட்டில் கட்டாயப் பாடமாக்கி விடவில்லை. இதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். இந்தியை இன்னும் சில பாஷைகளோடு சேர்த்து அவற்றில் ஏதாவதொன்றை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தவர்கள் மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரி உத்திரவைப் பிறப்பிக்கவில்லை. இரண்டாம் மொழி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கட்டாயம் ஆக்கப்பட்டது; தமிழ்நாட்டில் இஷ்ட பாடமாக வைக்கப்பட்டது. அந்த உத்தரவிலேயே அதற்குக் காரணமும் கூறியுள்ளார்கள். தமிழ்ப்பகுதியில் இந்தி புகுத்தப்படுவதைச் சிலர் ஆnக்ஷபிப்பதால் இரண்டாம் மொழியை இப்பகுதியில் மட்டும் கட்டாயமாக்கவில்லை என்று திட்டமாகக் கூறியுள்ளார்கள்.

சண்டைக்குப் போவானேன் என்றே கருதினோம்

“இந்தி இந்நாட்டில் இஷ்டபாடமாக வைக்கப்பட்டது கூடத் தவறு; மறுபடியும் ஆட்சியாளர்கள் நம்மை வலுவில் சண்டைக்கு இழுக்கத் துணிந்துவிட்டார்கள் போல் இருக்கிறது” என்று இவ்வுத்திரவைக் கண்டித்து ‘விடுதலை’யில் எழுதியிருந்தோம். என்றாலும் அப்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் செய்யவில்லை. சண்டைக்குப் போவானேன்; இஷ்டப்பட்டவர்கள் வேண்டு மானால் படித்துக் கொள்ளட்டுமே என்று எங்கள் கருத் தைத் தெரிவித்துக் கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டோம்.

பார்ப்பனர் வயிறெறிந்தால்...

தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டமாக்கப்பட்டது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கியது. கோவைக்கு மந்திரியார் சென்றிருந்த போது “ஏன் தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இஷ்டபாட மாக்கப்பட்டது” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளக்கமாகப் பதில் கூறியிருக்கிறார். அப்பதில் என்ன தெரியுமா? “வேண்டுமென்று தான் நாங்கள் இந் நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை. இந்த நாட்டு மக்கள் இந்தி மொழியை விரும்பமாட்டார்கள் என்பதை உணர்ந்து தான் அப்படிச் செய்தாம். அந்த உத்தரவிற்கு ஆnக்ஷபணை வராததிலிருந்து நாங்கள் நினைத்தது சரியென்றே தெரிகிறது” என்று பதில் கூறியிருக்கிறார். இச்செய்தி 24.6.1948ஆம் தேதி சுதேசமித்திரனில் 22.6.1948இல் மந்திரியார் பேசியதாக “இந்தியும் கட்டாயப் பாடமும்” என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது. படிக்கிறேன் கேளுங்கள். “வேண்டுமென்றுதான் இந்தி இந்நாட்டில் (தமிழ்நாட்டில்) கட்டாயமாக்கப்படவில்லை.

பொதுமக்கள் இவ்வுத்திரவை எப்படி ஏற்கிறார்கள் என்று கவனிக்கவே இப்படி உத்திரவு பிறப்பித்தோம். இரண் டொரு இடத்தைத் தவிர இவ்வுத்திரவிற்கு ஆnக்ஷபணையே வரவில்லையே. அப்படியிருக்க எப்படி பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு விரோதமாக எப்படி இந்தியைக் கட்டாயப்படுத்துவது” என்று பதில் கூறி யிருக்கிறார். இதை நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஆnக்ஷபணையே வரவில்லையே என்று இரண்டு ஏகாரம் போட்டுப் பேசியிருக்கிறார்.

அதே 24.6.1948ஆம் தேதியில் இந்தச் சேதியையும் வெளி யிட்டுவிட்டு, “இந்தி கட்டாயமாகத் தேவை” என்று “சுதேசமித்திரன்” ஒரு தலையங்கமும் தீட்டிவிட்டது. அதுவும் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது தான் பொதுஜன அபிப்பிராயம் என்று கூடக் கூறி விட்டது. அதற்கு ஆதரமாகத் தம் உத்திரவில், “சிலர் ஆnக்ஷபிப்பதால் கட்டாயமாக்கவில்லை” என்று கூறியிருப் பதைக் காட்டி “கட்டாய இந்தியை ஆnக்ஷபிப்பவர்கள் ஒரு சிலர்தான் என்பதை மந்திரியார் உணர்ந்திருக்கும் போது, அந்த ஒரு சிலருக்காக இஷ்டபாடமாக்குவதா என்று கேட்டிருப்பதோடு, சர்க்காரை எப்போதும் எதிர்ப் பவர்கள் எந்த நல்ல காரியத்தையும் எதிர்க்கத் தான் செய்வார்கள். அதற்காக நல்ல காரியத்தைக் கைவிட்டு விடுவதா? நல்ல காரியத்திற்குக்கூட ஒரு சிலர் ஆnக்ஷ பணை செய்து கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறி, மதுவிலக்குக்கூட சிலர் ஆட்சேபிக்கவில்லையா? என்று உதாரணம் காட்டியிருக்கிறது.”

கட்டாய உத்திரவு

ஆnக்ஷபணையே வரவில்லையே என்று கூறிய மந்திரியார், சுதேசமித்திரனுடைய ஆnக்ஷபணையைக் கண்டதும், உடனே தம் உத்திரவை மாற்றிவிட்டார். மாற்றும்போதும் தெளிவாகவே கூறியிருக்கிறார். தமிழ் நாட்டிலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். முந்திய உத்தரவில் தமிழ்நாடு மட்டும் கட்டாயத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; இப்போது மற்ற பகுதிகளோடு தமிழ்நாடும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக் கிறதென்று.

ஏதோ ஒன்றென்றால் ஏனோ வாத்தியாரும் சலுகையும் கட்டாயம்?

இவ்வளவுக்கும் பிறகு இப்போது சர்க்கார் கூறும் முக்கிய வாதம் “நாங்கள் இந்தி கட்டாயம் என்று சொல்லவில்லையே” என்பதுதான். சர்க்கார் உத்தர விலும், மந்திரிகள் பேச்சுக்களிலும் கட்டாயம் என்கிற வார்த்தை பல முறை காணப்படுகிற போதிலும், தாங்கள் கட்டாயப் பாடமாக்கவில்லை என்று கூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள்-எப்படிக் கட்டாயமில்லை என்று கூறுகிறார்கள் என்றால், “இந்தியை எங்கு கட்டாயம் என்றோம்? இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது அல்லது மற்ற ஏதாவதொரு இந்திய மொழி ஒன்றைத்தானே கட்டாயமாக்கியிருக்கிறோம்.

இரண்டாம் மொழி தான் கட்டாயமே ஒழிய இந்தியல்லவே என்கிறார்கள். இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது அரபி அல்லது உருது அல்லது தெலுங்கு என்று ஒரு 5 மொழிகளில், ஏதாவதொன்றை எடுத்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு, இந்தி படிப்பவர்களுக்குத்தான் சர்க்கார் உத்தியோகம் அளிக்கப்படும்; சர்க்கார் சலுகை அளிக்கப் படும் என்றால், இந்தி தவிர வேறு எதைக் கற்பார்கள் மாணவர்கள்? ஏதாவதொன்றைப் படிக்கலாம் என்று கூறுபவர்கள் இந்திக்கு மட்டும் எல்லாப் பள்ளிகளிலும் வாத்தியார்களை நியமிப்பானேன்? இந்தி வாத்தியார் களை உற்பத்தி செய்ய மட்டும் பணம் ஒதுக்கி வைப் பானேன்? இந்தி தவிர மற்ற மொழிகளுக்கு இவ்வித ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதிலிருந்தே, சர்க் காரின் பித்தலாட்டம் வெளிப்படுகிறதா, இல்லையா? இதுதான் போகட்டும்.”

சர்க்கார் பத்திரிகை இது!

சாகஸப் பித்தலாட்டம் இது!

சர்க்காரின் கருத்தைத் தெரிவிக்கச் சர்க்காரால் நடத்தப்பட்டுவரும் “சென்னைச் செய்தி” என்ற மாத வெளியீட்டில், கனம் கல்வி மந்திரியார் என்ன கூறி யிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். இது சர்க்கார் பத்திரிகை. இதில் கனம் கல்வி மந்திரி அவினாசி லிங்கம் செட்டியார் எழுதியது என்று போடப்பட்டு, அவரது போட்டோவுடனும் கையெழுத்துடனும் வெளி வந்துள்ளது. என்னவென்று கவனியுங்கள். 1.8.1948 இல் வெளியாகி 2.8.1948இல் எங்களுக்குக் கிடைத்திருக்கும் இப்பத்திரிகையில் (பத்திரிகையையும் போட்டோ வையும் காட்டி) இந்தியைப் பற்றி ஏதேதோ எழுதி விட்டு “இந்நாட்டு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறு அளவுக்கேனும் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பதை வற்புறுத்த வேண்டியது அனாவசியம்.

எனவேதான் எல்லா ஹைஸ்கூல்களிலும் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் போதிக்கப்பட வேண்டு மென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்” என்று எழுதியிருக்கிறார். இப்படி எழுதிவிட்டு நான் எங்கே இந்தியைக் கட்டாயமாக்கி இருக்கிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமா அல்லவா? நேற்று முந்தா நாள் நடைபெற்ற சம்பாஷணையின்போது இதை யெல்லாம் எடுத்துக்காட்டினேன் என்றாலும், அவர்கள் சொன்னதையே தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

முடியாததை முடியாதென்பதா வெட்கம்?

இப்போதோ கட்டாயப்பாடம் மட்டும் இல்லை; கட்டாயப் பரீட்சையும் உண்டு. அதில் நல்ல மார்க்கு வாங்கினால்தான் தேர்ச்சியும் உண்டு. நமது பிள்ளை கள் எப்படி இந்தியைக் கற்றுத் தேற முடியும்? மிகக் கஷ்டமாயிருக்குமே என்று கூறினால், ‘அப்படிச் சொல்லிக் கொள்வது வெட்கமாயில்லையா’ என்று மந்திரியார் கேட்கிறார். நம்மால் செய்ய முடியாத ஒன்றை நம்மால் செய்ய முடியாதே என்று கூறுவதற்கு நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? முடியாத ஒன்றை முடியாது என்று கூறுவதில் அவமானம் என்ன இருக்கிறது? நான் கேட்கிறேன் மந்திரியாரை “உங்களுக்கு நீக்ரோ பாஷை தெரியுமா? அப்பாஷை உங்கள் நாக்கின் நுழையுமா” என்று. நுழையாது என்றுதானே மந்திரி பதில் கூறுவார்.

நீக்ரோ பாஷை என் நாக்கில் நுழை யாது என்கிறாயே, அதைக் கூறிக்கொள்வது அவமான மாயில்லையா என்று கேட்டால் அதற்கென்ன பதில் கூறுவார் மந்திரியார்? தமிழ்நாட்டில் பிறந்த ஒரு வருக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை, தமிழ் பேசத் தெரியவில்லை என்றால், அதற்காக வெட்கப்படுவதில் வேண்டுமானால் நியாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்தவன் தனக்கு இந்தி வராது என்று கூறுவதில் என்ன வெட்கப்பட வேண்டியிருக்கிறது?

(தொடரும்)

“குடிஅரசு” 14.8.1948

Pin It