இந்தியாவுக்கும் தெற்கு ஆசிய நாடுகளுக்கும் - இந்தியா என்ற ஒற்றை ஆளுகை நாடு ஏற்படுவதற்கு முன்னர், சோழ மன்னர்கள் தான் கப்பல் வழியாகத் தொடர்பு வைத்திருந்தார்கள். இது நடந்தது கி.பி.1000இல்.

பழந்தமிழ்ச் சங்க காலத்தில், ரோமப் பேரரசு, கிரேக்கப் பேரரசுகளுடன் தமிழ்நாட்டு வணிகர்களுக் குத் தொடர்பு இருந்ததற்கான நாணய வடிவிலான சான்றுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

இந்தியா இயற்கை வளம் நிறைந்த பகுதி என் பதை அறிந்த அய்ரோப்பியர்கள், கி.பி.1600 முதல் இந்தியாவுக்குக் கடல் வழியாக வந்தார்கள். இந்தியா வில் இல்லாத பொருள்கள் எதையும் அவர்கள் கொண்டு வரவில்லை - இயந்திரத் துப்பாக்கி தவிர.

இங்கு அக்காலத்திலிருந்த தனித் தனி அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து கொண்டிருந்த தைப் பயன்படுத்திக் கொண்டு - கல்கத்தா, (சூரத்), சென்னை, புதுச்சேரி போன்ற கடற்கரையோர நகரங் களில் அவர்கள் கால்பதித்தார்கள்.

அப்படி நிலையாக இந்தியாவில் தங்கி, 1757க்கும் 1801க்கும் இடையே அவர்களால் உருவாக்கப்பட்ட “இந்தியா”வில் ஆட்சி அமைத்த அய்ரோப்பியர்கள் பிரிட்டனைச் சார்ந்த ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக் காரர்களும், போர்ச்சுகீசியர்களும் ஆவர்.

அவர்கள் மூன்று நாட்டுக்காரர்களுமே கிறித்துவர்கள்.

இந்திய மக்களிடையே உறவுகொள்ள அவர்கள் கைக்கொண்டவை இங்கு கிறித்துவின் கொள்கை களைப் பரப்பிட அவர்கள் முயற்சித்ததுதான்.

எழுத்தறிவு இல்லாத இந்துக்களும் இஸ்லாமி யர்களும் நிறைந்த இந்தியாவில் பார்ப்பனர்களும் பார்ப்பனியத்துக்கு ஆட்பட்ட மேல்சாதிக்காரர்களும் கொடிகட்டிப் பறந்தார்கள்; அவர்களே சமூக ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் சமஸ் கிருதம், பாரசிகம், தமிழ் போன்ற மொழிகளைக் கற்றி ருந்தார்கள். அவற்றை அப்படியே வைத்துக் கொண்டு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளைக் கற்றுக்கொண்டு, அந்நிய நாட்டினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாகச் செயல்பட்டார்கள். அந்த அந்நியர்கள் கீழ்ச்சாதி மக் களுக்குக் கல்விதர முயன்றார்கள்.

1800க்குள் கெட்டியான ஆங்கிலேயர் ஆட்சி இந்தியா முழுவதிலும் அமைந்துவிட்டது.

இங்கு மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த தங்கம், இரும்புத் தாதுக்கள் எங்கெங்கு இருக்கின்றன என்று அவர்கள்தான் பெரிய அளவில் கண்டுபிடித் தார்கள். வேளாண் நிலங்களில் விளைந்த பருத்தி, வேர்க்கடலை முதலியவற்றை வைத்து இங்கு நல்ல கைத்தறிகளைப் பயன்படுத்தி இந்துக்களும் இஸ்லாமி யர்களும் மக்களுக்கு வேண்டிய ஆடைகளை 2000 ஆண்டுகளாகச் செய்து வந்தனர்; மரச் செக்குகள் வழி யாக நிலக்கடலை, எள், ஆமணக்கு விதை, இலுப்பைக் கொட்டை இவற்றிலிருந்து எண்ணெய் எடுத்தார்கள்.

இப்படிப்பட்ட மூலப்பொருள்களை அப்படியே இங்கிலாந்துக்கு ஏற்றிச் சென்றனர், ஆங்கிலேயர்கள்.

இரும்புத்தாதுவை உருக்கி, இயந்திரங்கள் மூலம் இரும்பு விட்டங்கள், தண்டவாளங்கள், தூண்கள், கம்பிகள், ஆணிகள், குண்டூசிகள் இவற்றை பர்மிங்ஹாம் நகரத்தில் உற்பத்தி செய்து, ‘Made in Burmingham - பர்மிங்ஹாமில் உற்பத்தி செய்யப்பட்டது’ என்று கொட்டை எழுத்துகளில் பொறித்து, கப்பல் வழியாக அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தனர், வெள்ளை ஆங்கிலேயர். அதேபோல் தென்னாட்டில் விளைந்த பருத்தி நிலக்கடலை இவற்றை மலிவான விலைக்கு வாங்கி இங்கிலாந்துக்கு ஏற்றிச்சென்று, நூலாகவும் ஆடையாகவும் நெய்து, ‘Made in Glosgo’ - ‘Made in Liverpool- ‘கிளாஸ்கோவில் உற்பத்தி செய்யப்பட்டது’ - ‘லிவர்பூலில் உற்பத்தி செய்யப்பட்டது’ என்று துணியில் பதித்து ஆங்கிலேயர் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தனர். இப்படி வணிகம் மூலம் இந்தியரைச் சுரண்டினர். அங்கு இயந்திரச் செக்குகளில் நிலக்கட லையை அரைத்து, எண்ணெயாகப் பிழிந்து, இந்தியா வுக்குத் தகரப் பெட்டிகளில் அடைத்து ஏற்றுமதி செய் தார்கள்.

அதே ஆங்கிலேயர் பின்னாளில் இந்தியாவிலேயே முதலீடு செய்து - இந்தியாவிலேயே பருத்தி நூல், பருத்தி ஆடை, சணல் நூல், சணல் பைகள் உற்பத்தி செய்தனர். கரும்பைப் பிழிந்து சர்க்கரை செய்யும் ஆலை களைத் தாங்களே இங்கு அமைத்துக் கொண்டனர்.

1900க்குப் பிறகு டாட்டா, பிர்லா, பஜாஜ், டால்மியா போன்ற வடஇந்திய மாநிலத்தவரும், பார்சிகளும், தென்னிந்திய நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் - இரும்பு, எஃகு, சிமெண்ட், நூல்நூற்பு, துணிநெசவு ஆலைகள், சர்க்கரை ஆலைகளை இந்தியா முழுவதி லும் தொடங்கினர்.

வெள்ளையர் 1947இல் வெளியேறியபோது, வெள்ளையர்களால் ஏற்கெனவே இந்தியாவில் சொந்தமாக நிறுவப்பட்டிருந்த - சுரண்டல் கருவி களான எல்லாத் தொழில் நிறுவனங்களையும் இந்திய நாட்டுக்குச் சொந்தமாக ஆக்கிவிட வேண்டும் என்கிற - ஒரு சுதந்தர நாட்டுக்கு உரிய சரியான குறிக்கோள் காந்தியாரின் காங்கிரசுக் கும் இல்லை. ஜின்னாவின் முஸ்லிம் லீக்குக்கும் இல்லை.

வெள்ளையன் உருவாக்கித் தந்த நாடாளுமன்ற முறை - நிர்வாக இயந்திரம், நீதி வழங்கும் முறை, படைத்துறை, ஆங்கில மொழிவழிக் கல்வி, உரிமை இயல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், காவல் துறைச் சட்டங்கள் இவற்றை அப்படியே கைப்பற்றிக் கொண்டு, பார்ப்பனர் - பார்சி - சத்திரியர் - ஆங்கிலம் கற்ற மேல்சாதி நிலப்பிரபுக்கள் ஆகியவர்களே இந்தியா வை ஆளத் தொடங்கினர்.

ஏற்கெனவே இருந்த கட்டுக்கோப்புகளை அப்படியே வைத்துக் கொண்டு - ஆளும் உயர்வகுப்பினர் இந்தியா வைக் கொள்ளை அடிப்பதிலேயே நாட்டமாக இருந்தனர்.

அவரவர் தாய்மொழி வழியில் எல்லாக் கல்வி யையும் - பொதுக்கல்வி, ‘கலைக்கல்வி, பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வானவியல் துறை, சட்டத்துறை’ முதலான கல்விகளை அளித்திட - நேரு, இந்திராகாந்தி, இராஜீவ்காந்தி, வாஜ்பேயி, மன்மோகன் சிங் ஆகிய எந்தப் பிரதமரின் ஆட்சிக் காலத்திலும் கவலை செலுத்தப்படவில்லை.

உலக அளவில், 1990இல் சோவியத்து சமதர்ம ஆட்சிக் கலைக்கப்பட்ட உடன்காலில், தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்கிற பொருளாதார - வணிக மற்றும் தொழிற்கொள்கை இந்தியாவில் பல புதிய செல்வந்தர்களை உருவாக்கியது.

ரிலையன்ஸ், அம்பானி, மித்தல், கௌதம் அதானி, பழைய டாட்டா, பஜாஜ் போன்ற தனி ஆள்கள் இன்று இந்தியப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கிறார்கள்.

இடையில் 1997-2003இல் வாஜ்பேயி ஆட்சியி லிருந்த போது, இந்திய ஆட்சிப்போக்கு, இந்துத்துவக் கொள்கை - இராமராஜ்ய அமைப்புக் கொள்கை இரண் டும் இந்திய அரசின் கொள்கையாக மாறிடக் கடைகால் போடப்பட்டது.

எப்போதும், இந்திய சமுதாய அமைப்பைக் கணக் கில் எடுத்துக் கொள்ளாமலேயே 90 ஆண்டுகளாக இங்கு இயங்கிவரும் பொதுவுடைமைக் கட்சிகள், இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

99 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமையைக் கொண்ட திராவிடக் கட்சிகள் எந்தத் துறையிலும் தொலைநோக் குப் பார்வை இல்லாத-அனைத்திந்தியாவிலும் பரவாத மாநிலக் கட்சிகளாக இயங்கிப் பதவி, பவிசு, கொள்ளை அடித்தல் ஆசைகளை மட்டும் கொண்ட பிழைப்பு வாதக் கட்சிகளாக அமைந்துவிட்டன.

இந்தியாவில் வெகுமக்களாக உள்ள சூத்திர - ஆதி சூத்திர மக்கள் மேலே கண்ட “மக்கள் எதிரிகள் கட்சி களின்” பின்னால்தான் செல்கிறார்கள். இது பேரவலம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 26.5.2014இல் இந்தியத் தலைமை அமைச்சராக வந்த நரேந்திர மோடி, கடந்த ஓராண்டுக் காலத்தில், 18 தொலைதூர அயல்நாடுகளுக்குப் பறந்து பறந்து சென்று, ஒரே ஒரு சொற்கோவையை (Phrase)) - ‘மேக் இன் இந்தியா’ - ‘Make in India’ என்பதை எல்லா நாடுகளின் தலைவர் களிடமும், எல்லா நாடுகளின் தொழில் அதிபர்களிடமும் வேண்டுகோளாக வைத்துள்ளார்.

நரேந்திர மோடி, யார்?

2002இல், குசராத்தில், ஈவு இரக்கமின்றி ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட வும், பல ஆயிரம் இஸ்லாமியப் பெண்கள் கற்பழிக்கப் படவும் காரணமானவர். அவருடைய கட்சியின் சார்பாக அன்று பிரதமராக விளங்கிய வாஜ்பேயி அவர்களால், ‘குசராத்தில் ராஜதர்மம் இல்லை’ என்று, மோடிக்கு, நேரில் சான்றிதழ் தரப்பட்டவர்; சில மாதங்களில் அதே வாஜ்பேயி அதை மாற்றிக் கொண்டார்; இனி அவர் பதவிக்கு வரமாட்டார்.

‘இராமர் கோயிலைக் கட்ட வசதியாக பாபர் மசூதியை இடித்தே தீருவோம்’ எனக் கங்கணம் கட்டிக் கொண்ட - லால்கிஷன் அத்வானி என்கிற கத்திரி, பார்ப்பனரான பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி, உ.பி. முதலமைச்சராக இருந்த கல்யாண்சிங் லோதி மற்றும் வினய் கட்டியார் ஆகியோர் இன்று மோடியின் தயவில் உள்ளனர்.

மோடி அரசில் உள்துறை அமைச்சராக விளங்கும் ராஜ்நாத் சிங் உ.பி. முன்னாள் முதலமைச்சர்; சத்திரிய சாதிப் பெருநில உடைமையாளர்.

அவர், அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டியே தீருவோம்; ஜம்மு-காஷ்மீருக்குத் தனி உரிமையை அளிக்கும் அரசமைப்பு விதி 370 என்பதை நீக்கியே தீருவோம் எனக் கொக்கரிக்கிறார்.

மோடியின் இணைபிரியாத தோழர்களாக அமித் ஷா என்கிற பாரதிய சனதாக் கட்சியின் தலைவரும், மோடியின் அரசியல் காப்பாளராக (Guardian) உள்ள பெருந்தொழிலதிபர் கௌதம் அதானியும், கல்வித் துறையைப் பாழாக்கக் கிடைத்த அமைச்சர் ஸ்மிருதி இராணியும் உள்ளனர்.

கடந்த ஓராண்டில் 18 அயல்நாடுகளுக்குச் சென்ற மோடி, 16ஆவது நாடாக சீனாவுக்குச் சென்றார்.

சீனாவுக்கு நேரில் சென்று, 1954 அக்டோபரில் சீன அதிபர் மாசேதுங்குடன் உரையாடியவர் முதலாவது பிரதமர், நேரு.

அதே நேருவை, 1962இல் நேரில், இந்தியாவில் சந்தித்துப் பேசியவர் சீனப் பிரதமர் சூ என் லாய். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இயற்கையான எல்லையாக 3488 கிலோ மீட்டர் தொலைவு இருக்கிறது. அந்த எல்லை அன்று முதல் இதுவரையில் வரை யறுக்கப்படவில்லை. அதுவே மாபெருங்குறைபாடு, அந்த நிலையில், “இந்தியா சீனா பாய் பாய் - இந்தியா வும் சீனாவும் சகோதரர்கள்! சகோதரர்கள்” என நேருவும், சூ என் லாயும் அன்று முழங்கினர். அது அன்றே காற்றோடு போய்விட்டது. அடுத்த ஆண்டே சீனா, இந்தியா மீது படையெடுத்தது; பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இந்தியப் பகுதியை சீனா கைப்பற்றியது.

இப்போது சீனத் தலைவர் லியுடன் இரண்டு நாள்கள் பேச்சு நடத்திய பிரதமர் மோடி - சீனா ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

அத்துடன் 21 சீனத் தொழிலதிபர்களையும் மோடி சந்தித்ததுடன், தன்னோடு சீனாவுக்கு வந்திருந்த இந்தியத் தொழிலதிபர்களும் சீனத் தொழிலதிபர்களுடன் உடன் பாடு செய்து கொள்ளவும் வழிவகுத்துவிட்டார்.

இவற்றின் விளைவு என்ன?

சீனத் தொழிலதிபர்களே, இந்தியாவுக்கு வாருங்கள்!

சீனத் தொழிலதிபர்களுக்கு, நான் மலிவான விலைக்குப் பல ஆயிரம் ஏக்கர் நிலம் தருகிறேன்; தடையில்லாத மின்சாரம் தருகிறேன்; காடுகளை யும் மரங்களையும் அழித்துவிட்டு, 24 மணி நேரமும் தண்ணீர் தருகிறேன். தொடக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை தருகிறேன்.

நீங்கள் எந்தப் பொருள்களை வேண்டுமா னாலும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்று அறைகூவி அழைப்பதுதான்.

6000 மைலுக்கு அப்பாலிருந்து வந்த ஆங்கிலே யக் கொள்ளைக்காரனை வெளியேற்றிய இந்தியாவில், மிக அண்டையிலுள்ள சீனாக்காரனையும், மிகத் தொலைவிலுள்ள அமெரிக்கனையும், அய்ரோப்பிய யூனியன்காரனையும் வாருங்கள்! வாருங்கள்! என அழைத்து, “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்! இந்தி யாவில் உங்கள் நாட்டு அறிவியல் தொழில்நுட்பத் தினரை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள்! இந்தியா வில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், ஒடியா, தமிழ்நாடு முதலான மாநிலங்களில் புதைந்து கிடக்கும் கனிமத் தாதுக்களை நீங்களே தோண்டியெடுங்கள். நீங்களே பண்டங்களை உற்பத்தி செய்யுங்கள்! இந்தியாவில் உற்பத்தி செய்த பண்டங்களை இந்தியருக்கு விற்றி டுங்கள்! அதிகமான உற்பத்தியை அயல்நாடுகளுக்கு அனுப்பிச் சம்பாதியுங்கள்” என்று, அறைகூவி அழைப் பது தானே இது!

இது சரியா? இது நடக்குமா?

இரு சரியற்றது! இது நடக்கக் கூடாதது! ஏன்? ஏன்?

இந்தியாவில் ஆட்சிபுரிந்த எந்தக் கட்சி ஆட்சியும் :

1. அவரவர் தாய்மொழி வழியில் எல்லாக் கல்வி யையும் மக்களுக்குத் தரவில்லை.

2.  தொழிற்கல்வியைத் தாய்மொழியில் தராத துடன், படிக்கும் போதே செயல்முறைகளைக் கற்பிக்கும் கல்வியை இன்றளவும் கற்பிக்க வில்லை.

3. எல்லாத் தொழில்களையும் இயந்திரமயமாக ஆக் கப் போதிய மின் உற்பத்திக்கு ஏற்ற எந்தத் திட் டத்தையும் இந்திய அரசு வகுக்கவில்லை.

4.வெகுமக்களான 65 விழுக்காட்டுப் பேர் ஈடு பட்டுள்ள வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு வேண்டப்படும் நீர்ப்பாசன வசதி யைப் பெருக்கவில்லை.

5. இன்னமும் நல்ல குடிநீர் இலவசமாக எல்லோருக் கும் கிடைக்க வழி செய்யவில்லை.

6. மக்களிடம் மதம், சாதி, சாதிப் பழக்கவழக்கம் காரணமாகப் படிந்துவிட்ட உயர்வு, தாழ்வு உணர்வு மற்றும் சடங்கு மனப்பான்மை இவற்றை அகற்றக் கூடிய கல்வியை எந்த அரசும் அளிக்கவில்லை.

7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழை இவற்றுக்கு அடிப் படைத் தேவையான காடுகளை வளர்த்தெடுக்க வில்லை.

8. பல மொழிகளின், பல்வேறு பண்பாடுகளின் தனித்தன்மையும் தன்னுரிமையும் காப்பாற்றப் பட வழிகாணப்படவில்லை.

பிரதமர் மோடி செய்ய வேண்டியது என்ன?

இந்திய மாநிலங்கள் ஒவ்வொருன்றிலிருந்தும் அறி வியல் தொழில்நுட்பக் கல்வி கற்ற நூறு நூறு இளை ஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் வளர்ந்த நாடு களில் தொழில்நுட்பப் பயிற்சி பெறச் செய்வதும், அவர்களைக் கொண்டு பொதுத் துறைத் தொழிற் சாலைகளாக இங்கே நாமே அமைப்பதும் தான்.

இவற்றுள் எவற்றைப் பற்றியும் கவலைப்படாமல், அந்நிய நாட்டு முதலாளிகளுக்கும், அவர்களின் தரகர் களாகவும், பங்குதாரர்களாகவும் இருக்கும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் இந்திய மண்ணை - தமிழக மண்ணை விற்கவே நேற்று மன்மோகன் சிங் பிரதம ராகச் செயல்பட்டார். இன்று நரேந்திரமோடி பிரதம ராகச் செயல்படுகிறார்.

இவர்கள் மக்களின் மிகப் பெரிய எதிரிகள். இது உண்மை. இதை நாம் உணர வேண்டும்.

Pin It