ஒரு நல்ல நாவலுக்கு மிக அடிப்படையான தேவை கதை தான். நாவலென்பது வெறும் சம்பவத் தொகுப்பு மட்டுமே அல்ல. வெறும் நிகழ்ச்சிகளாலும், காட்சி வர்ணனை மற்றும் கதாபாத்திரங்களின் உரையாடல் மட்டுமல்ல.

நாவலென்பது நிஜ நிகழ்வுகளின் மீது கட்டப்படுகிற புனைவு! அஃதோர் அனுபவத்தை நுணுகி ஆராய்வது, பாத்திரங்களின் மன உணர்வுநிலையின் உட்புகுந்து நுணுகிப் பார்ப்பது.

puliyoor murugesan novelநாவலாசிரியன் பணி மனிதர், நிலம், பொழுது, ஆகியவற்றின் நுட்பங்களை விவரிப்பதோடு நின்றுவிடாமல் மனித மனங்களில் உருவாகும் ஒரு பிரச்னை... முரண்... கருத்து... முடிச்சு ஆகியவற்றை விவாதிப்பது மட்டுமன்றி மானுட விசித்திரங்களை விந்தையாகச் சொல்வது. அஃது எதார்த்தத்தை பகுத்தறிவின் மூலம் கட்டுப்படுத்தி புதிய எதார்த்தத்தை படைப்பது கூடவே மானுட தரிசனங்களின் வெளிப்பாடு. மொத்தத்தில் நாவலென்பது மானுடரை ஆற்றுப்படுத்துகிற மருந்து.

‘ஒரு பிரதியின் தளத்திற்குள் மற்ற பிரதிகளில் இருந்து கொள்ளப்படும் பல்வேறு உரைகள், வசனங்கள், வெட்டிக்கொண்டு, தமக்குள் ஒன்றை ஒன்று சமன் செய்துகொள்ளுகின்றன. ஒரு பிரதியை வாசிக்கும் வாசகன் அது தரும் அர்த்தங்களை மட்டும் திரட்டிக் கொள்ளாமல் பலதரப்பட்ட பிரதிகளுக்கு ஊடாக குறுக்கும் நெடுக்கும் பயணித்து அர்த்த இடைவெளிகளை நிரப்பி, மாறுபட்ட புதிய பொருள் கோடல்களைப் பெருக்கிக் கொள்கிறான். மேலும் பல் பிரதிநிதித்துவம் என்பது வரன்முறையான செல்வாக்கு மரபு என்பது என்னும் கருத்துக்களை உடைக்கிறது. ஒரு பிரதி வேறு பல இலக்கிய, இலக்கியமல்லாத பிரதிகளின் பன்முக இடமாற்றங்களால் உருவாகிறது. ஆகையால் இங்கு இலக்கியம் என்பதற்கான தனி மதிப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு பன்மைத்துவ மதிப்பைப் பெறுகிறது’ என்கிறார் பேராசிரியர் க.பூர்ணச்சந்திரன்.

‘ஆலம்கிர் ஒளரங்கசீப் எனுமிந்த வரலாற்று நாவலை திறம்பட உணர மதிப்பாய்வு கீழ்வரும் அம்சங்களைக் கொண்டு அவதானிப்போம்: இந்தக் கூறுகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், கூடவே தோழர் புலியூர் முருகேசனின் கூடுதல் விளக்கங்களும் வரலாற்று நாவல்கள் பற்றிய விரிவான பார்வையைப் பெற வழிகோலும்.

வரலாற்று துல்லியம் :

வரலாற்று நாவல் அது பிரதிநிதித்துவப்படுத்தும் காலகட்டத்தை எவ்வளவு சிறப்பாகப் படம்பிடித்துள்ளது என்பதை மதிப்பிட கடந்த காலத்தின் உணர்வு, பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக நிலைமைகளை யதார்த்தமான விவரங்களுடனும் வரலாற்று உண்மைகளுக்கு நம்பகத்தன்மையுடனும் வெளிப்படுத்துகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

வழக்கமான, சமூகப் பின்னணியில் கதைகள் எழுதும் புலியூர் முருகேசன், வரலாற்றுப்பதிவுகளோடு சரித்திரப் பின்னணியில் நாவல் எழுதும் எண்ணம் தோன்றியதெங்ஙனம்?

“உலக வரலாற்றை மார்க்சிய வழியில் ஆய்வு செய்து எழுதியவர்களே எனக்கு உவப்பானவர்கள். அதுதான் சிறந்த பார்வையென்று கருதுகிறேன். குறிப்பாக, மன்னராட்சிக் காலங்களைப் பொற்காலமென பொதுப்புத்தியிலிருந்து சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இங்கு எல்லா ஜாதியினரும் தம்மை ஆண்ட ஜாதி எனப் பெருமை பேசும்போது அந்த மன்னர்கள் யாருக்கு அடிமையாக இருந்தார்கள் என்பதை வரலாற்று ஆய்வின் வழி தேடிப்போய் எழுதப்பட்ட நாவல் ‘படுகைத் தழல்’. நம் தமிழ் மண்ணின் பெருமிதங்களில் முதன்மையாகப் பேசப்படும் மன்னர் ராஜராஜ சோழன், பிராமணர்களின் மீதான அதீத பிரமையில் சிக்கிக் கிடந்ததையும், அதன் பொருட்டு எளிய உழுகுடிகள் மேல் நானூற்றுக்கும் அதிகமான வரிகளை விதித்து அடித்துப் பிடுங்கியதையும் படுகைத் தழல் நாவலில் பதிவு செய்தேன். வரலாற்றை எழுதுவதில் இன்னுமொரு பெரும்பிழையை வரலாற்றாசிரியர்கள் செய்திருக்கிறார்கள். செய்யப் பணிக்கப் பட்டிருக்கிறார்கள். அதுதான் வரலாற்றைத் திரித்து எழுதுவது. அப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இந்துத்வ பெரும்பான்மையும் கைகோர்த்துக் கொண்டு திரித்து எழுதிய வரலாற்றில் முதலாவதாக மன்னர் ஔரங்கசீப் இருக்கிறார். அவரைப் பற்றி அவ்வளவு அவதூறுகள். ஒன்றிற்குக் கூட ஆதாரமில்லை. மேலும், அவர் மத நல்லிணக்கம் பேணுபவர் என்பதற்கு இருக்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களில் ஒன்றைக்கூட இவர்கள் வெளிக்காட்டவில்லை. இது வரலாற்றுத் துரோகம். இந்தப் பின்னணியில்தான் மன்னர் ஔரங்கசீப் பற்றி மிகத் துல்லியமான தரவுகளோடு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் உண்டானது"

கதாபாத்திர மேம்பாடு :

சரித்திரப் பின்னணி நாவலில் கற்பனை மற்றும் வரலாற்று கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், கதாபாத்திரங்களின் நடத்தைகள் மற்றும் ஆளுமைகள் அவற்றின் வரலாற்று அமைப்பால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும், அந்தச் சூழலில் அவை நம்பக்கூடியவையா என்பதையும் வாசகப் பார்வை உன்னிப்பாக நோக்குதல் சிறப்பு.

ABOUT AURANGAZEB நூலின் கபடத்தை அம்பலப்படுத்துவது தான் இந் நூலின் நோக்கமா..? ‘லாவேஜ்’ மற்றும் விக்ரம் ஜோஷியை எப்படிக் கண்டடைந்தீர்கள்..?

‘ஆலம்கிர் ஔரங்கசீப்’ நாவலில், முரண்பட்ட மனிதர்களாக வரலாற்றின் வழி நெடுக மோதிக்கொள்ளும் லாவேஜும், விக்ரம் ஜோஷியும் கைக்கொண்டிருப்பது அவரவர் வர்க்கச் சார்பான தீவிர அரசியலை அப்படியான வர்க்கச் சார்பு அரசியல் மோதலை உரையாடலில் கடத்தவும், கதையில் நிகழ்த்தவும் மாய யதார்த்தவாதம் உதவுகிறது. ஔரங்கசீப்பின் பேரன் உறவுமுறையான ‘மிர்ஜா தபக்கூர்’ எனும் பெண்பித்தனின் முகச்சாயலிலும் விக்ரம் ஜோஷியே தென்படுவதாக லாவேஜ் கண்டறிவது மாய யதார்த்தவாத சொல்முறைக்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். ‘About Aurangazeb’ என்ற நூலே இந்நாவலில் ஒரு புனைவுதான். ஆனால், பல வரலாற்றாசிரியர்கள் ஔரங்கசீப்பைப் பற்றி’ பலப்பல தவறான புனைவுகளைப் புனைந்துள்ளார்கள். அதன் ஒட்டுமொத்த சாராம்சமாக இருக்கட்டுமே என இந்தத் தலைப்பை அந்நூலுக்குச் சூட்டினேன். ஆனால், அந்நூலுக்குள் இருக்கும் ஔரங்கசீப் பற்றிய அத்தனை அவதூறுகள் பல வரலாற்றாய்வாளர்கள் வெவ்வேறு இடங்களில் எழுதியிருப்பவைதான். அவைகளைத் தொகுத்து ‘About Aurangazeb’ நூலாக்கி, பின் அவைகளை ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறேன்.

சூழல் :

நாவலில் சூழலின் முக்கியத்துவத்தை மதிப்பிட, அந்த அமைப்பு கதையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளதா, அது வரலாற்று காலகட்டத்தைப் பற்றிய வாசகரின் புரிதலை மேம்படுத்துகிறதா என்பதைத் தீர்மானிக்கவும், அந்த அமைப்பு உண்மையான இடமா அல்லது கதையை திறம்பட ஆதரிக்கும் ஒரு கற்பனைப் படைப்பா என்பதையும் வாசகன் கவனிக்க வேண்டியிருக்கிறது.

“ஒரே பிரதி பல பிரதிகளின் ஊடாட்டங்களைப் பெற்று கலைந்தும் பிறழ்ந்தும் (Non Linear) அமைய இம்முறை தளம் அமைக்கிறது. இதைப் பின் நவீனத்துவம் வரவேற்கிறது.” (திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும். ந.இரத்தினக்குமார்). ‘ஆலம்கிர் ஔரங்கசீப்’ புதினத்தை நான் லீனியர் வடிவில் படைக்கும் யோசனை உதித்தது எப்படி..?

‘ஆலம்கிர் ஔரங்கசீப்’ நாவலின் கட்டமைப்பு உருவாக்குவதற்கு முன்னமே, இது நான் லீனியர் வடிவத்தில் இருந்தால்தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தேன்... 400 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னும் பின்னும் போய்ச் சில கதைகளைப் பேசவேண்டியிருந்தது. மேலும், அயர்லாந்துப் போராளியான ‘லாவேஜ்’ எனும் புனைவு வரலாற்றாய்வாளன் வழி நாவல் நகரும்போது அலுப்பில்லாத இருவேறு காலகட்டங்களை வாசிக்க வாய்ப்பிருக்கும் எனக் கருதினேன். கதைகளுக்குள் இசங்களை பயன்படுத்தி எழுதிப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். மேஜிகல் ரியலிசத்தைத் தன் கதைகளில் அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பார் ஃபோர்ஹே. அதற்காகவே, அவருடைய பல கதைகளைத் திரும்பத் திரும்ப வாசிப்பேன்.

கதை மற்றும் கருப்பொருள்கள்:

புனைவு வரலாற்றாய்வாளன் அல்லது வாசகன் வரலாற்றுப் புதினத்தின் கதை அமைப்பு மற்றும் கருப்பொருள்களை ஆழ்ந்து ஆராய முற்படுதல் நன்று. நாவல் பரந்த கருப்பொருள்களை ஆராய வரலாற்று நிகழ்வுகளைப் பயன்படுத்துகிறதா என்பதையும், சித்தரிக்கப்பட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் மனித அனுபவத்தைப் பற்றிய நுண் பார்வையை நாவல் வழங்குகிறதா என்பதையும் கருத்தில் கொள்ளுதல் மிக முக்கியம்.

ஔரங்கசீப்பின் ஆட்சி தென்னாடு வரை பரவியிருந்ததே வரலாறு. எனினும் இப்புதினம் தக்காணத்துக்குத் தெற்கே திரும்பவில்லை, அதேநேரம் திருப்பத்தூர் கோட்டை, மற்றும் அந்தமான் அத்தியாயம் புதினத்தோடு ஒட்டாமல் இருப்பதை உணரமுடிகிறதா?

ஔரங்கசீப்பின் ஆட்சி தமிழ்நாட்டில் செஞ்சி, மதுரை, தஞ்சைவரை பரவியிருந்தது. உண்மைதான். ஔரங்கசீப் மத நல்லிணக்கம் பேணுபவர், பெண்களை மதித்தவர், குடி, கஞ்சா, சூது ஆகியவற்றைத் தடை செய்தவர், உடன்கட்டை ஏறுவதைத் தடுத்துச் சட்டமியற்றியவர், இந்துக் கோயில்களுக்கு மான்யம் அளித்தவர் போன்ற வரலாற்று உண்மைகளைப் பேசுவதற்கு தக்காணத்தோடு நின்று விடுகிறது கதையாடல்.

பெரிய மருது, சின்ன மருது ஆகிய இருவரும் பிரிட்டிஷாரால் கொல்லப்படுதல்: சின்ன மருதுவின் மகன் துரைச்சாமி பினாங்கில் கொடுஞ் சிறைத்தண்டனை அனுபவிக்கச் செய்தல் ஆகிய நிகழ்வுகளை இந்நாவலில் இணைக்க இரண்டு காரணங்கள் உள்ளன. ‘ஆலம்கிர் ஔரங்கசீப்’ தன்னிடம் பிணையக் கைதியாக வைத்திருந்த, சிவாஜியின் பேரன் சாஹூவை சர்வ சுதந்திரமாக நடத்தியதோடு மட்டுமல்லாமல், சிறுவனாக இருந்த சாஹூ வளர்ந்து ஆளாகும்வரை பிரியத்தோடும், கண்ணியத்தோடும் வளர்க்க ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், தங்களை எதிர்த்த சின்ன மருதுவின் மகனை, தனிமைச் சிறையில் கொடுஞ் சித்திரவதைகளை அனுபவிக்கச் செய்து கொன்றார்கள். இந்த வேறுபாட்டை சுட்டிக் காட்டவே இணைத்தேன்.

மேலும், சின்ன மருதுவின் மகன் துரைச்சாமிக்கு மெய்க்காப்பாளராக இருந்த ‘ஷேக் உசேன்’ எனும் இஸ்லாமியரும் துரைச்சாமியுடன் சேர்ந்து சிறைக்கு அனுப்பப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார். ‘ஷேக் உசேன்’ சின்ன மருதுவின் மகன் மீது பிரியமும் மரியாதையும் கொண்டவர். இன்றைய காலகட்டத்தில், பெரிய மருது சின்ன மருதுவின் வழி வந்தோர் இந்துத்வ அடையாளங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொண்டு, இஸ்லாமியர்களை வெறுக்கப் பார்க்கிறார்கள். ‘’ஷேக் உசேன்’ பற்றி வாசிக்கும் யாரேனும் ஒரு நல்உள்ள மருது சகோதரர் வழி வந்தோர், இந்துத்வ அடையாளத்திலிருந்து தம்மை விடுவித்து, இஸ்லாமியருடன் இணக்கம் பேணினால் அது போதும்.

இலக்கியத் தரம்:

நாவலின் கலைத் தரத்தை மதிப்பிட, அதன் உரைநடை, வேகம் மற்றும் அதன் சமகால வரலாற்று புனைகதை வகைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஔரங்கசீப் குறித்து தமிழில் வெளிவந்துள்ள பிற நூல்களை ஒப்பிட வாசித்தீர்களா?

தமிழில் ‘மன்னர் ஔரங்கசீப்’ பற்றி இந்திரா பார்த்தசாரதியின் நாடகம், சாருவின் ‘நான்தான் ஔரங்கசீப்’ நாவல், எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இடக்கை’ நாவல், மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ போன்ற நூல்கள் ஔரங்கசீப்பை ஒரு கொடுங்கோலனாகவே சித்தரிக்கின்றன. மதவெறியராகவும், பதவி ஆசை பிடித்தவராகவும்தான் இவர்கள் அவரவர் மொழியில் எழுதியிருக்கிறார்கள். என்னுடைய அரசியல் புரிதலில் நான் இவர்களிடம் முரண்படுகிறேன். ஏனெனில் இவர்களின் நோக்கம் மீண்டும் ஔரங்கசீப்பை பொதுப்புத்தியில் உள்ளதை அப்படியே மீளுருவாக்கம் செய்வதுதான் அனால், பேராசிரியர் ஹெச்.அமீர் அலி அவர்கள் எழுதிய ‘ஔரங்கசீப்’ ஆய்வு நூலும், செ.திவான் அவர்கள் எழுதிய ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்’ ஆய்வு நூலும் இதை அப்படியே புரட்டிப் போட்டு விட்டன. வரலாற்றின் இண்டு இடுக்கிலிருந்தெல்லாம் ஆதாரங்களைத் திரட்டி, ஔரங்கசீப் உண்மையில் யார்? என்பதைத் தெளிவுபட எழுதப்பட்டிருக்கின்றன இந்த இரண்டு நூலிலும்.

“ஒப்பீட்டு நிலையில் இந்துத்துவா கட்டமைத்திட விரும்பும் அகண்ட பாரதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் வைதிக சனாதனத்தின் குரலை அடையாளம் காண வேண்டியது அவசியம். இல்லாவிடில் பெரும்பான்மையினர் சம்மதத்துடன் நாட்டில் பாசிஸம் பற்றிப் படர்ந்திடும் அபாயமுள்ளது. ஜனநாயகத்தின்மீது அக்கறையுள்ளவர்கள் இன்று எல்லாத் தளங்களிலும் தீவிரமாக வேலை செய்திட வேண்டிய நெருக்கடியுள்ளது.

அந்த வகையில் புலியூர் முருகேசன் வரலாற்றின் பக்கங்களுக்குள் பயணித்து எழுதியுள்ள 'ஆலம்கிர் ஒளரங்சீப்' வெறுமனே நாவல் மட்டுமல்ல. கடந்த காலத்தின் வழியாகப் பயணித்துச் சமகால அரசியல் வாழ்க்கை குறித்து விசாரணையைத் தொடங்கிட உதவிடும் அரசியல் பிரதி என்றும் 'ஆலம்கிர் ஓளரங்கசீப்' நாவலை வாசிக்க முடியும்.”என முன்னுரையில் குறிப்பிடும் ந.முருகேசபாண்டியன் கருத்தோடு உடன்பாடுண்டா.?

அரசியலற்ற கலைப்பிரதியால் ஒரு துளியும் பயனில்லை என்பது என் நிலைப்பாடு.அரசியலற்ற எழுத்து வகைமையே கலை எனச் சொல்வதின் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறதல்லவா? ‘ஆலம்கிர் ஔரங்கசீப்’ நாவல் பற்றி ஓரிரு விமர்சனங்கள் வந்துள்ளன. இன்னும் நாவல் பரவலாகப் போய்ச்சேரவில்லை.

இதுவரை பேச இயலாத ஒரு பிரிவினர் தங்கள் வாழ்வைக் குறித்துப் பேச வைத்திருப்பது இந்த நாவலின் வெற்றி, கூடவே ஔரங்கசீப் என்னும் மதப்போர்வை போர்த்திக்கொண்டு முகம் மறைத்த வரலாற்றால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு ஆட்சியாளன் குறித்த விரிவான வரைபடமாக வாசகர் கரங்களில் தவழ்கிறது.

எதார்த்த எழுத்தின் பின்னணியிலான உரையாடல்களோடு நான் லீனியர் வகையிலான கதை சொல்ல இந்த நாவலை சமகாலத் தன்மை கொண்டதாக ஆக்குகிறது மேலும், புதுமைத்தன்மை கொண்டதாக ஆக்குகிறது என்பதையும் மறுக்க இயலாது.

புலியூர் முருகேசனின் ஆலம்கிர் ஔரங்கசீப் நாவல் இவ்வாண்டின் மிகச் சிறந்த கலை இலக்கிய வெளிப்பாட்டின் ஒரு வகையாக அமைந்திருப்பதை உறுதியாகச் சொல்லலாம்.

- அன்பாதவன்