கவனத்தை ஈர்க்கக்கூடிய தலைப்பு. சிரிக்கிற குழந்தைகளை அட்டையில் காண்பது மனநிறைவான விசயம். நூலின் கருப்பொருள் வித்தியாசமானது; மொழியை பேசுவது போலிருந்தது. அதிகாரத்தின் பாராட்டைப் பெறுவதற்குத்தான் கைகள் விரைகின்றன; கால்கள் அதை நோக்கியே நடக்கின்றன. மனம் ஏங்கிக் கிடப்பதும் அதைப் பற்றியேதான்! ஆனால் - அது எவ்வளவு சம்பிரதாயமான - உள்கனமற்ற பாராட்டு! இதைத் தீவிர வார்த்தைகளில் விவாதிக்காமல், நூலின் தொடக்கத்தில் ஓர் உதாரணத்தின் மூலம் நாசுக்காகக் காட்டியிருக்கிறீர்கள்.

நூல் முழுக்க இயல்பானதும், ஆத்மார்த்தமானதுமான பேச்சுதான் கேட்கிறது. வலிந்து சேர்க்கப்பட்ட வார்த்தை ஒன்று கூட இல்லை. அதிகாரப் பாராட்டுக்கு உண்மையான மாற்று எது என்பதை வெற்று உரைகளால் சொல்லி எத்தனை பேருக்கு விளங்கப் போகிறது? ஓரு நிகழ்வு மூலம் நிரூபித்து விட்டீர்கள். வெறும் கொண்டாட்ட நிகழ்வு அல்ல; சுவாராஸ்யத்துக்கான நிகழ்வு அல்ல. சிந்தனைப் போக்கையே மாற்றி, இதயத்தில் நம்பிக்கைகள் நிரப்பும் நிகழ்வு அது. மாணவர்களால் பாராட்டப்பட்ட ஆசிரியராகவும் கண்கலங்கி விம்மிய செய்திகளை, உணர்ச்சி வசப்படாமல் தாண்டிச் செல்ல முடியவில்லை.

நுட்பமாகவும் சில விசயங்களைக் கவனித்திருக்கிறீர்கள். பாராட்டுப்பெற்ற ஆசிரியர்கள் எவரும் கல்வி முயற்சிகள் குறித்த நூல்களை வாசிக்கவில்லை என்பது நீங்கள் கவனித்த உண்மைகளில் ஒன்று வாசிப்புக்கு முன்னால் நிற்கிறது அக்கறை; வாசிப்பை விட அனுபவம் சில சமயங்களில் மெருகூட்டுவதில் வல்லமையும் பெற்றிருக்கிறது. வாசிப்பில் கற்பதைப் போல, வாசிப்புக்கு வெளியே இதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பொன்னுச்சாமி ஆசிரியர், சிவகிரிப்பள்ளி ஆசிரியர் போன்றோரை நூலின் வழிச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு சாதாரணமானது அல்ல.

இந்நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் சர்வதேச உள்கரு நூலுக்குள் கிடக்கிறது.

(பேரா. ந. மணிக்கு ச. மாடசாமி எழுதி கடிதம்)

Pin It