wrapper final copy

பா.ச.க. மேலவை உறுப்பினர் தருண் விஜய், தமிழ்மொழி, திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பெருமையாக அவ்வப்போது பேசி வருபவர். அவரது தமிழ்ப் பற்றில் புல்லரித்துப் போன வைரமுத்து போன்றவர்கள் அவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து பாராட்டுவிழா நடத்தி புளகாங்கிதம் அடைந்தனர்.

தருண் விஜய் பா.ச.க.வின் ஊது குழலாக செயல்படுபவர்; காவி அலை (Saffron surge) என்ற ஆங்கில பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். ஏட்டின் ஆசிரியராக பல்லாண்டு காலம் பணியாற்றினார். பா.ச.க.வின் மதவாத கருத்துகளை தீவிரமாக ஆதரித்தும் அபாயகரமான இந்துத்துவ கருத்துகளை ஏற்றும் பரப்பியும் வருபவர்.

இந்த பின்புலத்தில் இருந்து வரும் தருண் விஜயின் தமிழ் மீதான பற்று ஒரு போலி நாடகம் என்றும், தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பா.ச.க.வின் அரசியல் சித்து விளையாட்டுகளில் ஒன்று என்றும் திறனாய்வு செய்ததை, அப்போது யாரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தருண் விஜய் மீதான திறனாய்வுகளை “இனவாதம்” என்று இடித்துரைத்தவர் களும் உண்டு!

நொய்டாவில் நைஜீரியர்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. “இந்தியர்களின் இனவெறித் தாக்குதல்” என ஊடகங்கள் இந்த நிகழ்வை தலைப்பாக்கி வெளியிட சிக்கல் பூதாகரமானது. இதற்குப் பதில் அளித்த பா.ச.க.வின் நடுவண் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “இந்தியர்கள் இனவெறியர்கள் அல்ல” என்று சப்பைக்கட்டு கட்டினார்.

அதற்கு மறுநாள் நைஜீரியர்கள் தாக்குதல் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தருண் விஜய், ”இந்தியர்களை இனவெறியர்கள் என்று கூறுவதில் நியாயமில்லை.  நாங்கள் இனவெறியர் களாக இருந்தால், கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் எப்படி இணைந்து வாழ்வோம்? தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கறுப்பர்கள் நிறைந்துள்ளனர்’’ என்று கூறிய தருண் விஜய், “எங்களை சுற்றி கறுப்பர்கள் இருந்தாலும் அவர்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம்’’ என்று கருத்து தெரிவித்தார். இனவெறிக்கு எதிராக பேசுவதாக பா.ச.க. வின் இனவெறியை தோலுரித்துக் காட்டி விட்டார்!

இதற்கு முன்பே மலையாள நடிகர் செயராம், தன் வீட்டில் வேலை பார்த்த தமிழச்சியை “கருப்பு நிற தடித்தத் தோலுடையவர்’’ என்று பேசியது நினைவிருக் கலாம். இப்பொழுது, தருண் விஜய் அதே போல பேசியிருப்பது, தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழர்கள் குறித்து இப்படித்தான் சித்திரம் தீட்டப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது! 

இவர்தான் இத்தனை ஆண்டுகளாக திருவள்ளுவர், தமிழ் என்று ஏமாற்றி வந்துள்ளார். நிறவெறி கருத்தின் மூலம், தருண் விஜயின் முகத்திரை கிழிந்து தொங்கி விட்டது.

தருண் விஜயின் கருத்துக்கு தென்னிந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த பா.ச.க. தலைவர்கள் யாரும் தருண் விஜயின் கருத்தைக் கண்டிக்கவில்லை.

தருண் விஜயின் கருத்தை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? நம்முடைய நிறம் பற்றிய தாழ்வுமனப் பான்மை நமக்கில்லை. கருப்பு நிறத்தை இழிவாக சித்தரிக்கும் அழகு சாதன பொருட்களின் விளம் பரங்களை கடுமையாக எதிர்ப்பவர்கள் நாம்.

அதே நேரத்தில தமிழர்கள் உள்ளிட்ட தென் மாநில மக்களை பா.ச.க. தலைவர்கள் மற்றும் வட நாட்டு அரசியல்வாதிகள் எந்த நோக்கில் பார்க் கிறார்கள் என்று இந்தச் சிக்கல் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அவர்களது மனத்தில் தமிழர்கள் உள் ளிட்ட “தென்னிந்தியர்கள்” பற்றிய தாழ்வான எண்ணம் இருப்பதைத்தான் இது காட்டுகிறது.

கருப்பு நிறத் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர் களோடு வாழ்வது ஏதோ அவர்களின் பெருந்தன்மை போல நிறவெறியோடு தருண் விஜய் பேசியிருக்கிறார்.

தமிழர்கள் உள்ளிட்ட பிற தென்னிந்திய மாநிலத் தவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தருண் விஜய் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து விட்டார்.

பா.ச.க.வின் சுப்பிரமணிய சாமி தமிழர்கள் “பொறுக்கீஸ்” என்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பா.ச.க. வின் எச். இராசா, தமிழர்களை “தேச விரோதிகள்’’ என்கிறார். பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான பொன். இராதாகிருட்டி ணன் தமிழர்கள் தங்கள் முகத்தில் தாரைப் பூசிக் கொள்ளுங்கள் என்றார். இப்போது தருண் விஜய் கருப்பர்கள் என்கிறார்.

தருண் விஜயின் கருத்துக்கு தமிழ்நாட்டின் பா.ச.க. தலைவர்கள் தமிழிசையும் பொன் இராதாகிருட்டி ணனும் கண்டனம் தெரிவிக்காத நிலையில், அவர்கள் “சோற்றில் உப்பிட்டுத்தான் சாப்பிடுகிறார்களா?” என்று சமூக வலைத்தளங்களில் பலரும் ஐயம் எழுப்பி னார்கள்.

“பொறுக்கீஸ்’’ என்றார்கள், “முகத்தில் தார் பூசிக் கொள்ளுங்கள்’’ என்றார்கள், “தேசவிரோதிகள்” என்றார்கள். “கருப்பர்கள் தாழ்ந்தவர்கள்” என்றார்கள். இன்னும் என்னென்ன சொல்லப் போகிறார்களோ? அதையெல்லாம் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோமா?

“வெள்ளையர்கள் ஆளப் பிறந்தவர்கள்; கருப்பர்கள் அடிமைகளாக வாழப் பிறந்தவர்கள்” என்ற கொள்கையை பூடகமாகக் கொண்டே, பா.ச.க. இந்துத்துவா மற்றும் இந்தியத்தேசிய வெறி ஆகிய இரண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நமது நிறம் கருப்பு. நமது இனம் தமிழ் இனம். நம்மை அடிமையாக்க நினைக்கும் “காவி இந்தியா”வை புறக்கணிக்க போகிறோமா இல்லையா?

Pin It

வறட்சியால் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் குறித்த பொதுநல வழக்கில், 28.04.2017 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு, வறட்சியால் சாகுபடி அழிந்ததைப் பார்த்து உழவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் குடும்பச் சிக்கலால் ஒருசாரார் தற்கொலை செய்து கொண்டார்கள், மற்றவர்கள் பலவகை நோய்களால் உயிரிழந்தார்கள் என்றும் கூறியுள்ளது. இது முற்றிலும் மனித நேயமற்ற, உண்மைக்குப் புறம்பான, பொறுப்பற்ற பதில் மனுவாகும்!

காய்ந்து கருகிய பயிரைப் பார்த்து, மாரடைப்பு ஏற்பட்டு வயலில் இறந்தவர்கள் பலர்; பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டோர் பலர். இந்த உண்மையை தமிழ்நாடு அரசு மறைக்க வேண்டிய தேவை என்ன?

மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அல்லது மாரடைப்பால் இறந்து போன உழவர்களின் பட்டியலை அப்படியே பதிவு செய்து, நடுவண் அரசிடமிருந்து பெருமளவில் இழப்பீட்டுத் தொகை வாங்கியுள்ளார்கள். பொறுப்புள்ள அரசாக இருந்தால், தமிழ்நாடு அரசு அம்மாநிலங்கள் செய்ததைப் போல் நடுவண் அரசுக்குப் பட்டியல் அனுப்பி, சிறப்பு நிதி உதவி கோரியிருக்க வேண்டும்.

இறந்த உழவர்களின் எண்ணிக்கை சற்றொப்ப 300 இருக்கும்போது, வெறும் 82 பேர் என்று குறைத்துக் கணக்குக் காட்டியது ஏன்? 

கர்நாடகம் காவிரித் தண்ணீர் தரவில்லை என்று கூறிய தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துத் தமிழ்நாட்டைப் பழிவாங்கிய நடுவண் அரசை பதில் மனுவில் சுட்டிக் காட்டாதது ஏன்?

மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்ற மோடி அரசின் வாதத்தை உரியவாறு மறுத்து, உச்ச நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டு என்று 9.12.2016 தீர்ப்பில் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க புதிய ஆணை பிறப்பிக்காததும் தமிழ்நாட்டு வறட்சிக்கான காரணம் என்று பதில் மனுவில் தமிழ்நாடு அரசு கூறியிருக்க வேண்டும்.

வறட்சித் துயர் நீக்க நிதியாக 39,565 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்டதில், வெறும் 1748 கோடி ரூபாய் தான் இந்திய அரசு தந்தது. எனவே, தமிழ்நாட்டில் வறட்சித் துயர் துடைப்புப் பணிகளை உரியவாறு செய்ய முடியவில்லை எனத் தமிழ்நாடு அரசு பதில் மனுவில் சுட்டிக் காட்டியிருந்தால், தமிழ்நாடு அரசுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை வெளிப்பட்டிருக்கும்.

ஆனால், எல்லாம் சிறப்பாக நடப்பதுபோல் வறட்சி நிவாரணப் பணிச் சாதனைகளை அதில் கூறியிருப்பது, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும்.

எனவே தமிழ்நாட்டு மக்களும், உழவர்களும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும், வாழ்வுரிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் சேர்த்தே எதிர்த்துப் போராட வேண்டிய தேவையுள்ளது.

Pin It

சுற்றுச்சூழலின் அழிவைப் பேசி உலகெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு நூல் ரேச்சல் கார்சன் எழுதிய ‘ஒலிக்காத இளவேனில்’ (Silent Spring). உயிர்கொல்லிகளால் பல உயிரினங்கள் அழிந்துப் போனதைச் சான்றுகளுடன் விளக்கிய நூல் இது. ஓர் உயிரினத்தின் அழிவென்பது ஒரு மொழியில் அதற்குரிய பெயர்ச் சொல்லின் அழிவும் கூட.

மேலும் அவ்வுயிருடன் தொடர்புடைய பிற சொற்களும் அதனுடன் இணைந்து அழியும். இதனால்தான் இந்நூலைப் படித்து முடித்ததும் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆல்டஸ் ஹக்ஸ்லே இவ்வாறு சொன்னாராம்: “ஆங்கிலக் கவிதையின் பொருள் வளத்தில் பாதியை இழந்துக்கொண்டு வருகிறோம்.’’ நம் தமிழ் மொழிக்கும் இதே நிலைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல் அழிகையில் அதனுடன் சேர்ந்து தமிழ் சொற்களும் அழிகின்றன. கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. அந்தளவுக்கு ஒரு மொழியின் சொற்களும் சுற்றுச் சூழலும் பின்னிப் பிணைந்தவை. ஓர் அகராதியின் துணைக்கொண்டு எவ்வளவு இழந்திருக்கிறோம் என ஆய்வு செய்ய வேண்டிய அபாயக் கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

காவிரி என்கிற சொல்லை முன்வைத்து இதனைக் காண்போம். ‘வான் பொய்யினும் தான் பொய்யா காவிரி’ என்கிற சொற்றொடரே இன்று பொய்த்த நிலை. நீர்வரத்துக் குறைந்து காவிரிச்சூழல் அழிந்து வரும் நிலையில் காவிரிப் படுகை மாவட்ட மக்களின் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்ட, மறைந்து கொண்டிருக்கும் சொற்களைக் காண்போம்.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்று பேசிய காவிரிப்படுகை இன்று ஆற்றோடு சேர்த்து சொற்களையும் தொலைத்து நிற்கிறது. ஆற்றின் நீர்வளத்தைப் போற்றும் வகையில் காவிரி முழுக்கக் கொண்டாடப்படும் திருநாள் பதினெட்டாம் பெருக்கு எனப்படும் ஆடிப்பெருக்கு. ஆற்றில் கொண்டா டப்பட்ட இத்திருநாள் இன்று குழாயடியில் கொண்டாடப்படும் அவலம். இத்திருநாள் காணாமல் போனதால் இதன் வழிபாடு தொடர் புடைய பொருட்களின் சொற்கள் சிவப்பு காதோலை, கருப்பு வளையல்  சிறுவர்கள் உருட்டும் சப்பரத்தட்டி. ஆகியவையும் அருகி வருகின்றன.

‘ஆனி பிறந்துவிட்டால் ஆறு கரை புரளும்; ஆறெல்லாம் மீன் புரளும்’ என்கிற பழமொழியே இன்று இறந்துவிட்டது. படுகை மாவட்ட நன்செய் வேளாண்மை குறுவை, சம்பா, தாளடி என மூவகைப்படும். மேட்டூரில் இருந்து ஆனி மாதத்தில் நீர் திறந்ததும் மேற்கொள்ளப்படும் சாகுபடியே குறுவை. குறுகிய காலச் சாகுபடி யான இது அறுவடையானதும் அடுத்து தாளடி தொடங்கும். இவை இரண்டுக்கும் இடையில் ஏறக்குறைய ஐப்பசி மாதம் தொடங்கும் சாகுபடி சம்பா. இன்று ஆனியில் தொடங்கும் குறுவை சாகுபடியே பெரும்பாலும் ஒழிந்துவிட்டது. குறுவையே இல்லையெனில் தாளடி ஏது? விரைவில் சம்பா என்கிற சொல் மட்டுமே எஞ்சும். நடப்பு ஆண்டில் இதற்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது.

பட்டக்கால் என்பது மண்வளம் கருதி கோடையில் தரிசாக விடப் பட்ட வயல். இன்று வீட்டுமனை விற்பனைக்காகத் தரிசு எனும் பெயர் பெற்றுவிட்டது. ஆற்றில் நீர் வந்ததும் வயலுக்குப் பாய்ச்சும் முதல் தண்ணீர் வெங்கார். அதுபோல் வெங்கார் பாய்ச்சிய வயலில் மண் மென்மையாய் மாறுதலைக் குறிப்பது பூங்கார். (ஒரு நெல்லுக்கும் இப்பெயருண்டு).

டிராக்டர் வந்தபோதே பொன்னேர் காணாமல் போய்விட்டது. கலப்பை உழுத தடமான உழுதசால் டிராக்டருக்கு பின்னே கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. படுகை மாவட்டங்களில் சேற்று உழவுக் கென்று பெயர் பெற்ற உம்பளாச்சேரி மாடுகளுக்கு மொட்டைமாடு என்று பெயர். மாடுகளின் கொம்பைத் தீய்த்து பயன்படுத்துவதால் இப்பெயர்.

 வெள்ளைநிற முடிகளைக் கொண்ட இதன் வாலுக்கு வெடுவால் என்று பெயர். முன்பு யாராவது சுறுசுறுப்பாய் வேலை செய்தால் சுள்ளாப்பா வேலை செய்யறான் என்பார்கள். சுள்ளாப்பு என்ற இச்சொல் அதட்டி விரட்ட தேவையில்லாமல் தானாகவே சுறுசுறுப் பாக வேலைச் செய்யும் மாட்டிலிருந்து பிறந்தவையாகும்.

இன்று தனித்தனியாய் நாற்றங்கால் விடப் பாசனநீர் வசதி போதவில்லை. எனவே அவ்விடத்தை நாற்று நடும் இயந்திரங்கள் பிடித்து வருகின்றன. இதனால் இழக்கப்படும் சொற்கள் இவை. நாற்றங்கால் நாற்று விடும் இடம். பறியங்கால் -நாற்று பறித்த இடம். நாற்றங்காலை சுற்றி தண்ணீர் வழிந்து ஓடுவதற்கு ஒரு கருங்கல்லில் துளையிட்டு இழுப்பர். இதற்குத் தோண்டிக்கால் என்று பெயர்.

நாற்று பறித்தலிலும் நிறையச் சொற்கள் இருந்தன. கை நிறையும் வரை நாற்று பறித்தால் அது ஒரு பிடி. இரண்டு பிடி நாற்று சேர்ந்தால் ஒரு முடி. ஐந்து முடி நாற்று ஒரு கை. இரண்டு கை சேர்ந்தால் ஒரு குப்பை. பத்துக் குப்பை சேர்ந்தால் ஒரு கட்டு. நாற்றை நடும் இடைவெளிக்கும் ஒரு பெயருண்டு. கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் முடிந்தவரை விலக்கி பிடித்தால் ஏற்படும் இடைவெளிக்கு ஓட்டை என்று பெயர். அதுபோல் ஒரு நாற்று முடியிலிருந்து மூன்று நான்கு நாற்றுகளைக் கிள்ளி வயலில் நடுவர். இப்படி நட்ட நாற்றின் பெயர் முதல். இத்தனை சொற்களும் இனி இழப்புதான்.

இங்கு வாழ்ந்த பல உயிரினங்களே அழிந்துவிட்ட நிலையில் அதன் பெயர்ச் சொற்களும் அழிந்துவிட்டன. உடனடி எடுத்துக்காட்டு, பச்சைத்தவளை. இது இன்று படுகை மாவட்டங்களில் இல்லை. இதுபோல் உளுவை மீன்கள். இதன் தடமே காணோம். சாணிக்கெண்டை இன்று நினைவில் மட்டும். கார்த்திகை மாத ஆற்றில் கரையோரமாக நாங்கள் வெறும் கைகளாலேயே பிடித்துக் குவித்த சார்முட்டி என்கிற பொடி மீன்வகைகள் இன்று எங்கே போனது? இச்சிறிய மீன்களை மூக்கையும் வாலையும் கிள்ளிவிட்டுச் சட்டி யில் கொட்டி கண்ணுக்குப் புலப்படாத செல்களைக் கஞ்சி போல் திரண்டு வருமாறு அளஞ்சி எடுப்பர். சார்முட்டியோடு இந்தச் சொல்லும் போய்விட்டது.

இதுபோல் வாய்க்கால்களிலும் குளத்திலும் மீன் பிடிக்க மூங்கில் சிம்புகளால் ஆன ஊத்தா எனும் பொறிப் பயன்பட்டது. இதற்குள் சாணி உருண்டையை வைத்துவிட்டு சென்று திரும்பி மாட்டியிருக்கும் மீன்களைப் பிடிப்பர். சில இடங்களில் கூந்தாளி என்ற பெயரும் இருந்தது. ஐப்பசி கடைசியிலிருந்து கார்த்திகை கடைசி வரைக்கும் ‘கார்த்திகை வாளை’ என்கிற மீன் கிடைக்கும். இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் காவிரியில் ஐப்பசி மாதத்தில் தண்ணீரே ஓடாத ஆண்டாகப் பதிவாகியிருக்கிறது. இதில் கார்த்திகை வாளையை இனி எங்கே தேடுவது?

இனி அறுவடைக் காலம். வைக்கோல் முதன்மை யான உபரிப் பொருளாக இருந்த காலம் போய் விட்டதால் அறுவடை இயந்திரம் அறுத்துப் போட்ட வைக்கோலை காவிரிப்படுகை மாவட்ட மாடுகள் பல இன்றும் தின்னுவதில்லை. அவற்றைப் பொறுத்தவரை அவை வைக்கோலே அல்ல கூளம்.

வைக்கோல் கையால் அறுவடை செய்யப்பட்ட போது சில சொற்கள் வழக்கிலிருந்தன. மூன்று பிடி அறுத்து போட்டால் ஒரு அரி. இரண்டு மூன்று அரி களைச் சேர்த்தால் ஒரு கோட்டு. சுமக்கும் அளவுக்குக் கோட்டுகளைத் தலைப்பு மாற்றி அடுக்கினால் அது ஒரு கட்டு. இன்று கட்டு மட்டுமே எஞ்சுகிறது. இதையே விதை நெல்லைக் கட்டிய கோட்டை என்கிற சொல்லும் வழக்கொழிந்து விட்டது. அறுவடை திருநாளான பொங்கல் திருநாளின் வடிவம் குலைந்துவிட்டதால் கூடவே நெட்டிமாலை, பதனிப்பொங்கல் உள்ளிட்ட பல சொற்களும் உதிர்ந்துவிட்டன.

அக்காலக் காவிரி கோடையில் முற்றிலும் வறண்டு போகாது. ஓரத்தில் சிறுவர்கள் குளிக்கும் அளவுக்கு நீர் ஓடும். அப்போது ஆற்றின் நடுவில் சில இடங்களில் மண் மேடுகள் இருக்கும் அதற்கு எக்கல் எனப் பெயர். நீரோட்டம் நின்ற பகுதியில் ஆற்று மணலில் அலை களின் சிறு சுவடுகள் படிந்திருக்கும். இதற்கு மணல் கொழி எனப் பெயர். இதே வடிவத்தில் வானில் மழை ஓய்ந்ததற்கு அறிகுறியாகச் சிறு சிறு அலைகளாக முகில்கள் உறைந்திருக்கும் அதை வானம் மணல் கொழித்திருக்கிறது என்பர். என்னவொரு இயற்கை ஒப்பீடு!

தூவாளி எனப்படும் தவிடு போல மெத்தென்று படிந்திருக்கும் ஆற்றுமணலை சிறுவர்களாக இருக்கும் போது நீரோடு கலந்தள்ளி துளித்துளிகளாகச் சொட்டி கடல்மல்லை கோவில் வடிவத்தில் உருவாக்குவோம். கருமணல் கலந்து அவ்வளவு அழகாக இருக்கும் அவை.

தண்ணீர்த் தாகம் எடுத்தால் ஆற்றிலோடும் நீரைப் பருகமாட்டோம். பரபரவென்று மணலில் ஓரடி குழித் தோண்டினாலே ஊற்றுநீர் பொங்கும் தெளியவிட்டு குடிப்போம். இப்படி ஊற்று நீரையள்ளிச் சேந்தி செல்ல ஊற்றுவட்டா என்ற பாத்திரமே அப்போதிருந்தது. அதுபோல் ஊருக்கு பொதுவாக ஆற்றில் ஒரு ஊற்றுக் கிணறு இருந்தது. செங்கல் கட்டுமானத்தில் கோடையில் மணல் மூடியிருக்கும் இதை நான்கடி அளவுக்கே தோண்டுவர். குடம் குடமாய் நீர் ஊறிவிடும்.

ஆற்றோரத்தில் கிணறு தோண்டி ஊற்று நீரெடுத்துக் கரையோரத்திலிருந்த காய்கறி தோட்டத் துக்கு ஏற்றம் கொண்டு நீர் பாய்ச்சும் முறையும் சிலவிடங்களில் இருந்தது. இவ்வகைக் கிணற்றுக்குத் துலவாக்குழி என்று பெயர். இத்துடன் சால் உள்ளிட்ட ஏற்றம் தொடர்புடைய அத்தனை சொற்களையும் மணற் கொள்ளையர்கள் கொள்ள யடித்து விட்டனர்.

காவிரிக் கிளையாற்றின் கடைமடைப் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்ற காலம் ஒன்றுண்டு. குளம் போன்ற அப்பகுதியில் உயரவகை நெல் சாகுபடி நடந்தது. இதற்குக் கோட்டகம் என்பர் அப்பகுதி மக்கள். இதுபோல் தலைஞாயிறு பகுதியில் உள்ள அளம் என்கிற உவர்நீர் ஏரியில் நட்ட நெல்லைப் படகில் சென்று அறுவடை செய்வர். காவிரிக்கரை இதனால்தான் புனல்நாடு என்று பெயர் பெற்றிருந்தது.

இத்தனை சூழலையும் கெடவைத்து இதை அனல்நாடாக மாற்ற மீத்தேன் திட்டம் வருகிறது. அக்கெடுநிலை நேர்ந்தால் நம் மொழியின் சொற்கள் மட்டுமல்ல நாமும் சேர்ந்தே தொலைவோம்.

Pin It

அ.இ.அ.தி.மு.க. தலைமையகத்தில் சசிகலா, தினகரன் படங்கள் அகற்றப்பட்டன!

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் தளைப்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக்காக அவரை வெளியில் எடுத்து, வேண்டு மென்றே இழிவுபடுத்தி, எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது தில்லி காவல்துறை!

அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் இவற்றைக் கண்டிக்கவில்லை! அ.இஅ.தி.மு.க.வினரே கண்டிக்காத நிலையில் வெளியில் வேறு யார் கண்டிப்பார்கள்?  ஒரு மாதத்திற்கு முன் “மாண்புமிகு சின்னம்மா”வின் காலில் விழுந்து, எழுந்து, மூச்சுக்கு மூச்சு “மாண்புமிகு சின்னம்மா”வின் புகழ் பாடிய அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள், இப்போது ஏன் அவரை இப்படி இழிவுபடுத்து கிறார்கள்?

துணைப் பொதுச்செயலாளர் தினகரன் காலடியைக் காவல் தெய்வத்தின் கருவறையாகக் கருதிய அ.இ. அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்ட அல்லது  இரண்டுங்கெட்டான் தலைவர்கள், இப்போது தினகரனை அனாதையாக விட்டது ஏன்?

சொந்த ஆதாயத்திற்காக செயலலிதாவின் அடிமைகளாக, அடியாட்களாகச் செயல்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அத்தனை பிரமுகர்களும், தங்களது அடியாள் அதிகாரத்தைத் தொடர, தாங்கள் கொள்ளையிட்டதைக் காத்துக் கொள்ள, மேலும் கொள்ளையைத் தொடர, செயலலிதா “தரத்தில்” ஒரு “தாதா”த் தலைவரை சின்னம்மாவிடம்  அடையாளம் கண்டார்கள். அவர்  ஊழல்  வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைபடப் போன போது, தமது வாரிசாக, தம் அக்காள் மகன் தினகரனைத் துணைப் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டுப் போனார்.

உடனே அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆதாயக் கும்பல் தினகரனைத் தாள் பணிந்து தோள் சுமந்தது. ஊழல் கும்பலின் உற்பத்திதான் தினகரன்; எனவே எளிதில் மாட்டிக் கொண்டார்.

எங்காவது மாடு செத்தால், எலி செத்தால், கழுகுக்கு மூக்கு வேர்த்து விடுமாம்! பா.ச.க. என்ற தில்லிக் கழுகுக்கு செமையாக மூக்கு வேர்த்து விட்டது. அ.இ. அ.தி.மு.க.வைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப்படுத்துகிறது!  இதில் அ.தி.மு.க.வை ஆதரிப்பதா? பா.ச.க. நடவடிக்கைகளை ஆதரிப்பதா என்ற குழப்பம் தமிழ்நாட்டில்!

அ.தி.மு.க. பெருச்சாளிகள் வேட்டையாடப்பட வேண்டியவையே என்று மனச்சான்று கூறுகிறது. மறுபக்கம் வேட்டையாடுபவை பா.ச.க. ஓநாய்கள் அல்லவா என்று அறிவு எச்சரிக்கின்றது!  இப்படிப்பட்ட இக்கட்டுக்கும், சீரழிவுக்கும் தமிழ்நாட்டைக் கொண்டு வந்து - முச்சந்தியில் நிறுத்தியவர் செயலலிதா!

அறமற்ற, சனநாயகமற்ற, ஒற்றை எதேச்சாதிகாரத் தலைமை கொண்ட கட்சியாக அ.இ.அ.தி.மு.க.வை மாற்றினார் செயலலிதா! கையூட்டு வாங்குவதை நிரந்தர நிர்வாக ஏற்பாடாக்கினார். இப்படியாக அண்டிப் பிழைப்போரின் ஆராதனைத் தெய்வமாக செயலலிதா விளங்கினார்.

இனியாவது தமிழர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் மீண்டும் கேவலப்படாமல் இருக்க வேண்டுமானால் செயலலிதா பாணி அரசியலை மறுக்கும் நேர்மையும் விழிப்புணர்ச்சியும் பெறவேண்டும்.

அப்படியென்றால் கருணாநிதி பாணி அரசியலை ஏற்க வேண்டுமா? கூடாது! செயலலிதாவின் மறைமுகக் குருநாதர் கருணாநிதிதான்!  தமிழ்நாட்டின் எல்லாச் சீரழிவுகளின் தொடக்கமும் கருணாநிதியாகத்தான் இருப்பார்! கருணாநிதியின் விசுவரூபம்தான் செயலலிதா!

செயலலிதா - புடவை கட்டிய கருணாநிதி! கருணாநிதி - வேட்டி கட்டிய செயலலிதா! ஸ்டாலினோ வேட்டி - புடவை இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டிக் கொள்பவர்!

அ.இ.அ.தி.மு.க. - மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு வெளியேதான், அவற்றின் துணை ஆற்றல்களாகச் செயல்படும் பல்வேறு கட்சிகளுக்கும் வெளியேதான் தமிழ் மக்கள் இன்று உரிமைப் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே அன்றாடம் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெறுவது தமிழ்நாட்டில்தான்!

அந்த மக்களைப் பாருங்கள்! அதோ முன்னணிப் படைபோல் மாணவர்களும் இளைஞர்களும் மக்களுக்கு முன் செல்கிறார்களே, அவர்களைப் பாருங்கள்! நல்லோரே நாட்டோரே அவர்களைப் பார்த்து நம்பிக்கை கொள்ளுங்கள்! அந்தப் புதிய எழுச்சியிலிருந்து புதிய இலட்சிய அரசியலை வார்த்தெடுக்க முன் வாருங்கள்!  செயலலிதா, கருணாநிதி காட்டிய பாதையை மட்டுமல்ல, அவர்கள் வெளிப்படுத்திய “பண்பாட் டையும்” மறுக்கப் பழகுங்கள்!

அவர்களை மறுப்பது, கடினமல்ல! இதோ சசிகலாவின் காலில் விழுந்தவர்கள், தினகரனைத் தோள் சுமந்தவர்கள் அவர்களை மறுக்கவில்லையா? அதன் அடுத்தகட்ட மன வளர்ச்சிதான், செயலலிதா - கருணாநிதி  “அரசியலை” மறுப்பது!

செயலலிதா - கருணாநிதி அரசியலை மறுப்பதும், ஆரிய ஏகாதிபத்திய பா.ச.க. ஆக்கிரமிப்பை முறியடிப்பதும் ஒரே வேலைத் திட்டத்தின் இரு கூறுகள்! ஒரே அணிவகுப்பின் இரு முழக்கங்கள்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்வைக்கும், தமிழ்த் தேசியம் இதுதான்!

கும்பகோணம் டிகிரி காப்பிக் கடைபோல் தமிழ்த்தேசிய கடைகள் பல இருக்கின்றன! இவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து சரியான தமிழ்த்தேசிய அமைப்பைத் தேர்வு செய்வதே தமிழர்களின் புதிய வரலாற்றைப் படைக்கும்!

Pin It

prince 450தமிழ்நாட்டின் கல்விச் சூழலை உயர்த்து வதற்கான போராட்டக்களங்கள் அனைத்திலும் முன்னணியில் நின்று வாதிட்டுக் கொண்டிருப்பவர், பிரின்சு கசேந்திரபாபு அவர்கள்! அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தல், கொள்ளை இலாபத்திற்கென தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகளின் அடாவடிகளை எதிர்த்தல் தொடங்கி புதிய கல்விக் கொள்கை _- நீட் தேர்வு என கல்வித் தளத்தில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு எதிராக, மக்களைத் திரட்டிப் போராடி வருபவர். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர். நீட் எதிர்ப்புக்காக பல்வேறு அரசியல் கட்சிகளையும், அறிவுத் துறையின ரையும் தேடிப்பிடித்து சந்தித்துக் கொண்டிருந்தவரை, தமிழர் கண்ணோட்டம் இதழ் செவ்விக்காக நாம் தேடிப் பிடித்தோம். இனி அவருடன்...

த.க. : எப்படி பொதுவாழ்விற்கு வந்தீர்கள் ?

பிரின்சு : 1980களில் மேனிலைப் பள்ளிக் கல்விக்காக, வடசென்னை கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ள தியாகராயர் கல்லூரி மேனிலைப் பள்ளியில் சேர்ந்ததுதான் என் வாழ்க்கையின் திருப்பு முனை! அப்பகுதி உழைக்கும் மக்களுடன் நேரடியான கள அனுபவம் கிடைத்தது. நிர்வாகம் ஆசிரியர்களை பழி வாங்குவதை எதிர்த்தும், விளையாட்டுத் திடலை விற்க முற்படுவதைத் தடுக்கவும் நடந்த மூன்று மாத போராட் டம் என்னை இடதுசாரி இயக்கத்திற்குள் கொண்டு வந்தது.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம் என இரண்டு அமைப் புடனும்இணைந்து போராடினோம். இறுதி யாக இந்திய மாணவர் சங்கத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். அதன் தொடர்ச்சி 1996 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறேன்.

த.க. : எப்பொழுது கல்வித்துறைச் செயல்பாடு களில் தீவிரமானீர்கள்?

பிரின்சு : கடந்த 2002ஆம் ஆண்டு, டி.எம்.ஏ. பாய் வழக்குத் தீர்ப்பிற்கு பிறகு, கல்வி பரவலாக்கப்படுவதற்கு பதிலாக பணம் படைத்தவருக்கு மட்டுமே கல்வி என்ற புதிய நிலை உருவானது. தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளி மோகம், அரசுப்பள்ளியில் பயில்பவர்களை ஏளனமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியது. இச்சூழலில் கல்வித் தளத்தில் தொடந்து இயங்க கல்விக்கான ஒரு அமைப்பு தேவை என உணர்ந்தேன்.

நீண்ட விவாதத்திற்கும் முயற்சிக்குப் பின், ஒத்த கருத் துடைய கல்வியாளர்கள், கல்வியியல் செயல்பட்டாளர் கள் இணைந்து “பொதுப்பள்ளிக்கான மாநில மேடை” என்ற அமைப்பை 2007ஆம் ஆண்டு உருவாக்கினோம். அதற்கென www.samacheerkalvi.in என்ற வலை தளத்தை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றோம்.

த.க. : தமிழ்நாட்டில் சமச்சீர்க்கல்வி கொண்டு வரப்பட நீங்கள் கடுமையாக உழைத்தீர்களே.. அதன் நிலை இப்போது, எப்படி இருக்கிறது?

பிரின்சு : தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வியை இரத்து செய்ய வைத்த போது வீதியிலும் நீதிமன்றத்திலும் போராட் டத்தைத் தொடர்ந்தோம். தன்னெழுச்சியாகத் தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து, நீதிமன்றத்தில் வலுவாக வழக்கை முன் வைத்தோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் போது பலர் வழக்கு தொடுத்திருந்தாலும் இணைந்து செயல்பட்டோம். ஒன்றுபட்ட செயல்பாடு தான் வெற்றியைத் தந்தது. அப்படிப் போராடிப் பெற்ற “சமச்சீர் கல்வி” வெறும் பொதுப் பாடத்திட்டம் அறிமுகத்தோடு நின்று போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் அதை ஒரு படி முன்னேற்ற மாகத்தான் பார்க்கிறோம்.

த.க. : மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை யால் என்னென்ன பாதிப்புகள் நிகழக்கூடும் ?

பிரின்சு : பா.ச.க. நரேந்திர மோடி அரசால் முன் வைக்கப்பட்டுள்ள ‘புதிய கல்விக் கொள்கை’ என்பது, மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான கல்விக் கொள்கை அல்ல! கல்வி பயில்வதிலிருந்து ஒவ்வொரு வரையும் வடிகட்டி வெளியேற்றும் நோக்கத்துடனேயே இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை மதிப்பெண் உள்ளிட்ட வெவ்வெறு அளவுகோல்களின் வழியே தனித்தனியாய்ப் பிரித்து, அவர்களை குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்குக் கல்வி வராது என சான்றளித்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் தேடப் பயன்படும் தொழில் செய்ய தேவையான தொழில் பயிற்சி நோக்கித் தள்ளிவிடுவதையே இது முதன்மையாகக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, கிராமப்புற மாணவர்களையும், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களையும், “உனக்குக் கல்வி வராது” என அவர்களது வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றி சான்றளித்து விடுவர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்க்கல்வியில் கணிதம் - அறிவியலுக்கு பதிலாக, சட்டம் மற்றும் கலை படிப்பு மேற்கொள்வதே வாய்ப்பு என்ற சூழல் உருவாகியிருந்த காலகட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள், 1920களிலேயே ஆங்கிலேய அரசிடம் உயர்க்கல்வியில் கணிதமும், அறிவியலும் பயிலாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு முன்னேறும் என்ற வினாவை எழுப்பி, உயர்க்கல்வியில் கணிதம் - அறிவியல் படிக்க அரசே வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இன்றைய மோடி அரசு, மாணவர்களை பள்ளிக் கல்வி முறையிலிருந்தே அப்புறப்படுத்தி, பெரும் பகுதி மக்கள் உயர்க்கல்வியில் கணிதம் _- அறிவியல் படிக்க வாய்ப்பற்றவர்களாக மாற்றுகிறது. 

இன்றைக்கு இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பல இலட்சம் பேர் கல்வி உதவித் தொகைப் பெற்று கல்வி கற்று வருகின்றனர். அதிலும், இந்தியா விடுதலை பெற்ற ஐம்பதாண்டுகளுக்குப் பிறகுதான், நீதிபதி இராசேந்திர சச்சார் குழுவின் அறிக்கையின் வெளிச்சத்தில் சிறுபான்மை மதப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர் களுக்கான கல்வி உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியுள்ளது.

இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்., நேரடியாக மக்கள் அனுபவித்து வரும் இந்த உரிமைகளை ஒழிக்க துணிவு கொள்ளவில்லை. ஆனால், இந்தப் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மறைமுகமாக இதை ஒழிக்க திட்டம் தீட்டியுள்ளது. 

பதினைந்து அகவையிலிருந்து இருபத்துநான்கு அகவைக்குள் சற்றொப்ப 50 கோடி மாணவர்கள் இருக்கும் நாட்டில், “பொருளியல்” சூழலில் பின் தங்கியுள்ள 10 இலட்சம் மாணவர்களுக்கு மட்டுமே, அவர்களது மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கைக்கான ஆவணத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. “தகுதி” _- “திறமை” என்று கூறிக் கொண்டு, இட ஒதுக்கீட்டையும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளையும் ஒழிக்கும் சதித்திட்டத்தையே ஆர்.எஸ்.எஸ். மோடி குழுவினர், புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக நிறைவேற்றத் துடிக்கின்றனர்.

அண்மையில், உத்திரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பா.ச.க.வின் யோகி அதித்தியநாத், ஒருபடி மேலே போய் அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக் கீட்டை நேரடியாகவே பறித்து ஆணையிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். கும்பலால், இந்தியாவின் அடுத்த தலைமையமைச்சராக அவர் முன்னிறுத்தப்பட்டாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை!

இந்த புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் நீட்சியாகத்தான், மருத்துவ சேர்க்கைக்கான அனைத்திந்திய அளவிலான “தேசிய தகுதி மற்றும் பொதுநுழைவுத் தேர்வு” (National Eligibility cum Entrance Test - NEET) என்று சொல்லப்படும் “நீட்” தேர்வு முறை திணிக்கப்பட்டுள்ளது.

த.க. : “நீட்” தேர்வு முறையை தமிழ்நாடு மட்டும் ஏன் எதிர்க்கிறது என்று, அனைத்திந்திய அளவில் பலரும் கேள்வி எழுப்புகின்றனரே..

பிரின்சு : ஆம். அது உண்மைதான்! “நீட்” தேர்வை தமிழ்நாடு எதிர்ப்பதற்கு பல வரலாற்றுச் சிறப்புமிக்கக் காரணிகள் உள்ளன. நம் மரபும் அப்படிப்பட்டது!

1951ஆம் ஆண்டு, மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பம் கூட போடாத செண்பகம் துரைராசு என்பவரின் மனுவை வைத்துக் கொண்டு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை இரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரியார் போன்ற தலைவர்கள் வலுவாகக் குரல் கொடுத்தனர்.

அதன் விளைவாக, 1950 சனவரி 26இல் செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம், வெறும் பதினைந்தே மாதங்களில் திருத்தம் செய்யப்பட்டு, கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கு வழிவகுத்தது. 

1954 முதல் 1963 வரை ஒன்பதாண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த கர்மவீரர் காமராசர், தமிழ்நாட்டில் பல கல்வி நிலையங்களை ஏற்படுத்தினார். 3 கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்பதோடு நிற்காமல், மதுரை மருத்துவக் கல்லூரி (1954), தஞ்சை மருத்துவக் கல்லூரி (1959), கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (1960), நெல்லை மருத்துவக் கல்லூரி (1965) என மாவட்டம் தோறும் குறிப்பிடத்தக்கக் கல்லூரிகளை அவர் உருவாக்கினார்.

தமிழ்நாட்டில்தான், கிராமப்புற மாணவர்களுக்கு, கல்லூரி சேர்க்கைகளில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி பட்ட மேற் படிப்பில் 50 இட ஒதுக்கீடும் தமிழ்நாட்டில்தான் இருந்தது. இப்படி, சமூக நீதி போர்க்களமாக உள்ள தமிழ்நாடுதான், நீட் தேர்வையும் எதிர்த்து நின்று போராடுகிறது.

த.க. : தனியார் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை யில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளால் மருத்துவக் கல்வி வணிகமயமாகும் சூழலைத் தடுக்கவே, “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டுள்ள தாகவும், எனவே அதை வரவேற்பதாகவும் சிலர் கூறுகிறார்களே.. அது பற்றி தங்கள் கருத்து ?

பிரின்சு : கடந்த ஆண்டு (2016- _ 2017) அனுபவம், நீட் தேர்வு தனியார் வணிகக் கொள்ளையை தடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. வணிகக் கொள்ளையைத் தடுக்கிறோம் என்ற காரணத்தை முன் வைத்து, கூட்டாட்சி _- கல்வி -_ பொதுச் சுகாதாரத்துறை ஆகிவற்றின் மீதான மிகப் பெரிய தாக்குதலையே “நீட்’’ தேர்வின் மூலம் நடத்து கிறார்கள்.

“நீட்” தேர்வை எதிர்க்கும் போராட்டம், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் போராட்டம் என்று சுருக்கிவிடக் கூடியதல்ல!

“நீட்” தேர்வின் மூலமாக, ஒரு மாநில அரசுக்கு தன்னுடைய மாநிலத்தில் உள்ள கல்லூரியில் மாணவர் களைச் சேர்க்கும் குறைந்தபட்ச நிர்வாக உரிமைகூட கிடையாது என்று மறுக்கிறது இந்திய அரசு! அதேபோல், வெவ்வேறு வரலாற்று வழிக் காரணங் களால் ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவுகின்ற இட ஒதுக்கீடுகளை, ஒரேடியாகப் பறிக்கிறது இந்திய அரசு! வெறும் மாணவர் சேர்க்கை என்பதோடு மட்டுமின்றி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும் “நீட்” தேர்வு பார்க்கப்பட வேண்டும்.

இருபதாண்டுகளாக மருத்துவம் மற்றும் பொறி யியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்திய தமிழ்நாடு அரசு, அதனால் பெற்ற அனு பவத்தின் அடிப்படையில்தான், 2007ஆம் ஆண்டு இந்நுழைவுத் தேர்வை இரத்து செய்து சட்டம் இயற்றி யது. அந்த சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தாலும், உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது. இப்பொழுது, அதை மீறும் வகையில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், கிராமப்புற மற்றும் தமிழ்வழிப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இப்பொழுதே மிகக் குறைவாக உள்ள சூழலில், நீட் தேர்வு இதை மேலும் மோசமாக்கப் போகிறது. தமிழ்நாடு அரசின் பாடத் திட்டமும், பள்ளிச் சூழலும் தரம் உயர்த்தப்பட வேண்டியது தேவைதான். எனினும், அதைக் காரணமாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசின் கல்வி உரிமையையே பறிப்பது எவ்வகையில் ஞாயம்?

தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஆட்சியர்களின் பணி என்ன தெரியுமா? பத்தாம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர் களில் 20 பேரை மாவட்டந்தோறும் தேர்ந்தெடுத்து, அரசு செலவில் அவர்களை தனியார் பள்ளிகளில் மேனிலைக் கல்விப் படிக்க வைக்கிறார்கள். இராம நாதபுரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில விதிவிலக்கான மாவட்டங்களில்தான், அரசுப் பள்ளிகளில் மேனிலைக் கல்வி படிக்க வைக்கிறார்கள். கோயில் வரை தேரை நாம் கஷடப்பட்டு இழுத்துச் செல்வோமாம், அதன்பிறகு அதை வேறு யாரோ இழுத்துச் செல்வார் களாம்.

அரசு நிர்வாகமே இப்படி நடந்து கொண்டால், எளிய மக்கள் அவர்களது பிள்ளைகளை எங்கே படிக்க வைப்பார்கள்? இப்படி, கெடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பள்ளிச் சூழலை எதிர்த்து நாம் போராடித்தான் ஆக வேண்டும். ஆனால், இவற்றை சரி செய்ய ஒரு முயற்சியும் எடுக்காமல், “ஒற்றை நுழைவுத் தேர்வு” என்ற பெயரில், மாநில அரசுகளிடமிருந்து மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாக உரிமையைக்கூட நடுவண் அரசு பறிப்பது எந்த வகையில் ஞாயம்?

வணிகச்சூழலை ஒழிக்கிறோம் என்று கூறி இவர்கள் கொண்டு வந்த “நீட்” நுழைவுத் தேர்வின் பெயரால், இப்பொழுது புதிது புதிதாக பயிற்சி நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. நன்றாக மதிப்பெண் எடுப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அதிகளவில் கட்டணம் பெற்று நடத்தப்படும் இந்த “சிறப்புப் பயிற்சி” நிறுவனங்களில் படிப்பவர்கள் மட்டுமே “நீட்” தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடிக்க முடியும் என்ற நிலை வரப்போகிறது.

ஒரு முறை சுட்ட தோசையை மீண்டும் சுட்டால், அது தீய்ந்துதான் போகும்! அப்படித்தான் தேர்வுக்கு மேல் தேர்வு என்றால் நம் மாணவர்கள் மருத்துவக் கல்வியை விட்டே விலகிப் போவார்கள். உயர் வகுப்பு மற்றும் பணக்கார சமூகத்தினர் பெரும் எண்ணிக் கையில் மருத்துவக்கல்வியில் நுழைய, சட்ட வழி யிலேயே வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே “நீட்” தேர்வு முறையாகும்!

த.க. : பல்வேறு கல்விமுறைகள் இருப்பதை சமன்படுத்தவே இந்தியாவில் இது போன்ற ஒற்றைக் கல்வி முயற்சிகள் கொண்டு வரப்படுகின்றன என்கிறார்களே?

பிரின்சு : இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்டுள்ள மக்கள் வாழும் நாடு! இங்கு, ஒற்றைக் கல்விமுறையும் நுழைவுத் தேர்வுகளும் கல்வித்தரத்தை உயர்த்தும் சரியான நடவடிக்கைகள் அல்ல! அது சாத்தியமானதும் அல்ல!

ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து போன்ற பல்வேறு மொழி இன மக்கள் கூடி வாழும் “ஐக்கிய பிரிட்டன்” அரசில், ஒரே பாடத்திட்டம் கிடையாது. ஐரோப்பாவில் ஒரே பாடத் திட்டம் கிடையாது. அவரவரும் அவரவர் சூழலில், அவர்களுடைய தாய்மொழியில் கல்வி கற்கின்றனர்.

ஆனால், அவர்களைவிட வளர்ச்சி குறைவாக உள்ள இந்தியாவில் மட்டும் ஒற்றை பாடத் திட்டம், நுழைவுத் தேர்வு என்றெல்லாம் ஏன் திணிக்க வேண்டும்? குறைந்தபட்சம், கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்களைக் கூட, இந்தியா போன்ற பன்மைத்துவ சூழல் நிலவும் நாட்டில் ஒரே பாடத்திட்டமாக கொண்டு வர முடியாது. 

த.க. : அனைந்திந்திய அளவிலான இந்த நுழைவுத் தேர்வுகள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் வாயிலாகவே நடத்தப்படுவது ஏன்? 

பிரின்சு : நடுவண் கல்வி வாரியப் பாடத் திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியே, இந்த அனைந்திந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இதன் மூலம், பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில பாடத் திட்டங்களை இரண்டாம் பட்சமாக ஒதுக்கிவிட்டு, அனைவரையும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நோக்கி இழுத்து வர முயற்சி நடக்கிறது. தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வி வந்த பிறகு- தனிப் பாடத்திட்டத்தைக் காட்டி செல்வாக்கு செலுத்த முடியாத மெட்ரிக் பள்ளிகள், தற்போது அதிகளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப் பள்ளிகளாக மாறி வருவதைக் கவனிக்கலாம்.

மேலும், இந்த சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்தான் இந்தி - சமற்கிருத மொழிப் பாடங்களைப் புகுத்த இந்திய அரசு பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டிலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மூலம் இந்தி மொழியைக் கொண்டு வந்து விடலாம். இது தமிழ் மொழிப் பாடத்தை நீக்கிவிட்டு, இந்தியை தமிழ்நாட்டிலேய கட்டாயப் பாடமாக்கும் முயற்சியாகும்.

த.க. : இந்த அபாயங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்? 

பிரின்சு : தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் இருக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் இருக்கை களுக்கும் “நீட்” தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, கடந்த சனவரியில் தமிழ்நாடு அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இப்பொழுது வரை, அச்சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்பிசைவு அளிக்கவில்லை.

எனவே, உடனடியாக அச்சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப் பெற, இந்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு அரசியல் அழுத்தங்கள் அளிக்க வேண்டும். இதை முன் வைத்து, அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, “தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு இதுதான் மதிப்பா?” என்று வினா எழுப்ப வேண்டும்.

த.க. : தமிழ்நாட்டில் சூழலியல் கல்வியின் தேவை எந்தளவிற்கு உள்ளது?

பிரின்சு : தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இன்றைக்கு நுகர்வியம் மேலோங்கி வருகின்ற காலகட்டத்தில், நாம் வாழுகின்ற இந்தப் புவி வெப்பமயமாகி வரும் சூழலில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு “சூழலியல் கல்வி”க்கான தேவை வளர்ந்துள்ளது.

பருவமடைந்து வளரும் இளையோர்கள், தான் காண்பதையெல்லாம் தனக்குச் சொந்தம் என்கிற நுகர்விய மனப்போக்குடன் வளர்த்தெடுக்கப்படு கிறார்கள். இயற்கைக் கொடையாக அளிக்கும் ஆறுகள், மலைகள் தொடங்கி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி, கணினி முதற்கொண்டு அனைத்தையும் நுகரும் பொருளாகக் கருதுகிறார்கள். இந்த மனப் போக்கை சிறு பருவத்திலிருந்தே மாற்ற, “சூழலியல் கல்வி” அவசியத் தேவையாகும்.

குழந்தைகளை பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ளவற்றைப் பார்வையிட வைக்க வேண்டும். அங்கு வெறும் மலர்ச்செடிகளும் மரங்களும் மட்டும் இருக்கப் போவதில்லை, பூச்சிகளும், புழுக்களும்கூட இருக்கும். நம் சமூகமும் அப்படித்தான் என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

புல் வெளியில் நடக்கக் கூடாது, ஒரு செடியின் முழுமையே பூவாக மலர்கிறது, எனவே அதைப் பறிக்கக் கூடாது - எல்லாம் நுகர்வதற்கானப் பொருட்கள் அல்ல என்பது போன்ற செய்திகளையெல்லாம் பதிய வைக்க வேண்டும். நடைமுறை அனுபவத்துடன் இணைந்த இதுபோன்ற சூழலியல் கல்வியை சிறு பருவத்திலிருந்து பதிய வைத்தால்தான், நம் சமூகம் பற்றிய புரிதல்கள் அவர்கள் மனத்தில் பதியும்.

புலி பசித்தால்தான் வேட்டையாடும். தனது தேவைக்கானதை மட்டுமே வேட்டையாடும். அது போல், மனிதர்கள் தனது தேவைகளுக்காக மட்டுமே பொருளீட்ட வேண்டும் என்பது போன்ற உளவி யலைப் பதிய வைக்க வேண்டும்.

த.க. : சூழலியல் கல்வியை மாநில அளவிலான பாடத்திட்டத்தில் வைத்தால் போதுமா?

பிரின்சு : தற்பொழுது தமிழ்நாடு அரசு, மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதில், சூழலியல் கல்வியையும் சேர்க்க வேண்டும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் இது குறித்து அறிவுறுத்தி இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொண்டு சூழலியல் கல்வியை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டு சனநாயக ஆற்றல்களும், கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இதற்காக வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும். 

எனினும், மாநில அளவிலான பாடத்திட்டமாக மட்டுமல்ல, மாவட்ட அளவில்கூட சூழலியல் கல்வி மாறுபட வாய்ப்புண்டு. அவரவர் மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், தட்பவெப்ப சூழல் அனைத்தையும் அவர்கள் மனத்தில் பதிய வைத்தால், சூழலியல் சுரண்டலும், நுகர்விய மோகமும் சமூகத்தில் குறைவதற்கான வாய்ப்புண்டு! இந்தப் புரிதலுடன் உருவாகும் இளைய தலைமுறை யினரே, நாம் விரும்புகின்ற மாற்று சமுகத்தை -_ சமத்துவமான சமூகத்தைப் படைக்க முடியும்! அதற்குக் கல்வியிலிருந்து அடிப்படை மாற்றங்கள் வேண்டும்!

நேர்கண்டவர் : க. அருணபாரதி.

Pin It