மனோஜ் (23) ஹரியானாவைச் சேர்ந்தவர். பப்ளி (19) என்ற பெண்ணை விரும்பினார். காதலில் திளைத்த இருவரும் திருமணம் புரிந்துகொள்ள முடிவு செய்தனர். ஏப்ரல் 7, 2007 அன்று பப்ளியின் குடும்பத்தினரின் மறுப்பை மீறி இருவரும் மணம் புரிந்தனர். பப்ளியின் ஊரின் காப் பஞ்சாயத்து இருவரும் ஒரே கோத்திரம் எனவே இருவரும் திருமணம் செய்தது தவறு என்று கூறியது. மேலும் இருவரும் மணமுறிவு செய்து கொண்டு இணைந்து குடும்பம் நடத்துவதிலிருந்து விலக வேண்டும் எனவும் கட்டபஞ்சாயத்து செய்தது. நம்ம ஊர்ப் பெண் அவள் விரும்பிய கணவனை அவளே தேர்வு செய்து மணம் முடிப்பதா என்பதே அவர்களைக் கலக்கமடையச் செய்ததது.

காதலர் இருவரும் இதற்கு ஒப்பவில்லை. இதன் தொடர்ச்சியாக சினந்து எழுந்த ‘காப்’ பஞ்சாயத்தார் தலிபான் பாணியில் இருவருக்கும் மரண தண்டனை என்று அறிவித்தனர்.. ஜூன் 15, 2007 அன்று இரண்டு இளம் ஜோடிகளும் கிராமத்தாரால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டனர்.

இதே ஹரியானா மாநிலத்தை சார்ந்த வேத் பால் மோகன் 2009இல் அடித்தே கொல்லப் பட்டார். பெற்றோரால் கடத்திச் சிறை வைக்கப் பட்ட தனது மனைவியை மீட்கச் சென்ற இவரை காப் பஞ்சாயத்தினர் கொலை செய்தனர். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன தெரியுமா? இவரும் இவரது மனைவியும் ஒரே கோத்திரமல்ல; ஆனால் அடுத்தடுத்துள்ள கிராமத்தினர். அடுத்துள்ள கிராமத்தினர் சகோதரர்கள் முறைதான் ஆவார்கள் என்று கூறி இருவரும் கணவன் மனைவியாக முடியாது என காப் பஞ்சாயத்து தடாலடி முடிவு எடுத்தது. உள்ளபடியே இவரின் மனைவியும் இவரும் காதலித்து மணம் முடித்தவர்கள்.

திருமணம் முடிந்த பின்னர் தன் மனைவியின் கண்முன்னே காதலன் மீது மின்சாரம் பாய்ச்சி அலற அலறக் கொலை செய்யப்பட, அதன் பின் பெண்ணை, அவளின் மாமா அடித்தே கொலை செய்த சம்பவம் டெல்லியில் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேறியது. சமீப காலமாக வட இந்தியாவில் வாரத்திற்கு ஒன்று வீதம் இளம் காதலர்கள் கொல்லப்படுகின்றனர். தமது கோத்திரத்திற்குள் அல்லது சகோதர கோத்திரம் எனப்படும் பிரிவினை சார்ந்தவரை மணம் புரிகின்றனர் என்ற பெயரில் “காப் பஞ்சாயத்து” எனப்படும் பாரம்பரியக் கட்டப்பஞ்சாயத்து தலிபான் பாணியில் தண்டனை விதிக்கிறது. தண்டனையை நிறைவேற்றி ஊர்/ குடும்ப மானத்தை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் ஒரு கூட்டம் கிளம்பி இளம் காதலர்களை கொடூர மாகக் கொலை செய்வது அதிகரித்துவருகிறது.

காப் பஞ்சாயத்து என்பது ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் முதலிய மாநிலங்களில் உள்ள பாரம்பரிய உயர் ஜாதிய கிராம அமைப்பு. உயர் சாதியினர் அதிலும் ஊர் பெரியவர்கள் என்ற பெயரில் ஆண்கள் மட்டுமே கொண்ட அமைப்பு இது. ஊர் பெருமை, குடும்ப மானம் என்ற பெயரில் இந்த பாரம்பரிய ஜாதிய அமைப்பு அட்டூழியம் செய்து வருகிறது. பசு மாட்டை கொன்று விட்டனர் என்ற பெயரில், டெல்லி அருகே ஒரு கிராமத்தில் உயிரோடு சில தலித்துக்களை கொளுத்தியதும் இந்த காப் அமைப்பு தான்.

இடதுசாரி முற்போக்காளர்கள் காப் பஞ்சாயத்துக்கு எதிராக குரல் கொடுக்க, படித்தவர், இளைஞர் என்றெல்லாம் மீடியாவில் நல்ல பெயர் எடுத்த நவீன் ஜிண்டால் எம்.பி போன்றோர் கூட வோட்டு வங்கியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு காப் பஞ்சாயத்துக்கு ஆதரவு தெரிவிக் கின்றனர். ராஜா ஹர்ஷவர்தனர் காலம் முதற் கொண்டே காப் பஞ்சாயத்து இருக்கிறது என்றும், இவை பற்பல சமூக சேவை செய்து ஊருக்கு நல்லது செய்கின்ற அமைப்பு எனவும் இவர் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். இந்துத்துவ அரசியல் வாதிகள் இவை நீதிமன்றங்களை விட விரைவாகவும் நேர்மையாகவும் தீர்ப்புத் தருகின்றன எனவே இவற்றின் அதிகாரம் முறையாக அங்கீகரிக்கப் படவேண்டும் எனவும் கேட்கத் துணிந்துவிட்டனர்.

மனோஜ் - பப்ளி கொலை வழக்கில் தலிபான் கொலை கட்டளை பிறப்பித்த காப் தலைவருக்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த பப்ளியின் மாமா மற்றும் சில உறவினர் களுக்கு தூக்கு தண்டனையும் விதித்து சமீபத்தில் ஹரியானா கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக ஹரியானா, ராஜஸ்தான் முதலிய மாநிலங்களைச் சார்ந்த காப் தலைவர்கள் மாநாடு கூடி தமக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது மட்டுமில்லாமல், இந்து திருமண சட்டம் திருத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், நெருங்கிய பந்தத்துக்குள் திருமணம் புரிவது அறிவியல் ரீதியாக சரியல்ல எனவும், அதன் காரணமாக கோத்திர திருமண முறையைத் தான் அமுல் படுத்தவேண்டும் எனவும் தமது கொடுமைக்கு அறிவியலைத் துணைக்கு அழைத்துள்ளனர்.

காப் பஞ்சாயத்தின் அடாவடி நடவடிக்கை களுக்கு தயக்கத்துடன் எதிர்ப்புத் தெரிவிக்கும் அடித்தட்டு மக்கள் பலர் கூட “அறிவியல் ரீதியில் பார்த்தால் நெருங்கிய உறவுக்குள் திருமணம் என்பது சரியில்லை தானே, குழந்தை குறையோடு பிறக்குமே, ஓரளவுக்கு காப் சொல்வதும் நியாயம் தானோ எனக் கருதும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.

மெய்யாகவே கோத்திரம் பாராது திருமணம் செய்வது அறிவியல் ரீதியில் தவறானதா? உள்ளபடியே கோத்திரம் தவறி திருமணம் புரிந்தால் குழந்தையின் நலம் பாதிக்கப்பட்டு, மரபணு நோய் அதிகரிக்கும் வாய்ப்புக் கூடுமா?

மரபணு

செங்கற்களால் எழுப்பப்பட்டுச் சுவர் அமைந்து வீடு உருவாவது போல, செல்கள் எனப்படும் நுண் அமைப்புக் கொண்டுதான் நமது உடல் உறுப்புக்கள் உருவாகின்றன. உடல் உறுப்புக் கள் இணைந்து நமது உடல் உருவாகிறது. இந்த செல்கள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டாகப் பிரிந்து வளர்வதாலேயே குழந்தை கருவிலிருந்து வளர்ந்து மகவாகப் பிறந்து, வாலிப வயது வரை வளர்கிறது. செல் பிரிந்து பிரிந்து செல் பெருக்கம் ஏற்ப்படும் அதே சமயம், பல செல்கள் மூப்படைந்து இறந்து கொண்டும் வரும். செல் பெருக்க விகிதம் இறப்பு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளபோது வளர்ச்சி, இளமை. செல் இறப்பு விகிதம் அதிகமாகும் போது முதுமை.பின் மரணம்.

இந்த செல்களில் உள்ள மரபணுதான் உடல் எப்படி இயங்கவேண்டும் என்ற செய்தித் தரவுகளைக் கொண்டுள்ளது. விரலின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்; தலை முடி கரு கரு வென இருக்க வேண்டுமா அல்லது செம்பட்டை யாக இருக்க வேண்டுமா என்பது போன்ற நமது உடலியல் பண்புகளை தீர்மானிக்கிறது. ஒரே சூழலில் இருந்தாலும் சிலர் சட்டென்று நோய்வாய்ப்பட மற்றொருவர் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார். மரபணுக்களில் உள்ள வித்தியாசம் இதற்குக் காரணமாக அமையலாம். மரபணு பாங்கின் காரணமாக சிலர் காச நோய் தாக்கிட வாய்ப்பு உள்ளவர்களாக அமைவர்; இவர்களுக்கு காச நோய் கட்டாயம் ஏற்படும் என்பதில்லை; காச நோய் ஏற்பட வாய்ப்புள்ள சூழலில் இவர்களுக்கு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அவர்களின் மரபணு வில் உள்ள பழுது தான் இத்தகைய நோய் வாய்ப்பு நிலைக்கு எடுத்துச் செல்கிறது.

பிறந்த குழந்தை சிறுவயதிலேயே இறந்து விடுவது நெருங்கிய உறவினர்களிடையே நடக்கும் திருமணத்தில் உள்ள ஒரு பிரச்சனை. மேலும் இரத்தப் புற்று நோய், கண் பார்வைக் கோளாறு எனப் பற்பல உடல் குறைகள் ஏற்படும் வாய்ப்பும் நெருங்கிய உறவினர்களிடையே செய்யப்படும் திருமணத்தின் வழி பிறக்கும் குழந்தைக்கு அதிகம். இவை யாவும் மரபணு பிழைகள் காரணமாக ஏற்படுகின்றது. சுமார் 5000 மரபணு நோய்களை அறிவியலாளர் இதுவரை இனம் கண்டுள்ளனர்.

மரபணு பழுது எப்படி ஏற்படுகிறது?

நமது உடல் வளர்ச்சியில் செல் பிரிந்து இரண்டு செல் ஆகும்போது- செல்களில் உள்ள மரபணுவும் பிரதி எடுக்கப்பட்டு தாய் செல்களிட மிருந்து சேய் செல்களுக்கு வரும். இந்த பிரதி எடுத்தலின்போது பிழை ஏற்படலாம். இயற்கை யில் பிரபஞ்ச வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் தூண்டியும் மரபணுப் பிழை ஏற்படலாம். ஆண் விந்து செல்லில் அல்லது பெண் கரு முட்டையில் இந்த பிழையான பிரதி சென்று விட்டால் பிறக்கும் குழந்தைக்குப் பிழையான மரபணு வந்து சேரும்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது இயற்கை அறிந்த பாடம்தான். எனவே தான் வாகனங்களில் உள்ள ஸ்டெப்னி போல, செல்களில் இரண்டு ஜோடி மரபணுக்கள் உண்டு. ஒன்று பழுதனாலும் மற்றது இயங்கி உடல் சரிவர வேலை செய்யும். இரண்டுமே பழுது பட்டால் தான் ஆபத்து. இரண்டு என்கிற அந்த ஜோடியில் ஒன்று தாய் தந்த கொடை; மற்றொன்று தந்தை தந்த சொத்து.

நெருங்கிய உயிரியல் உறவினர்களுடைய (தாய் -குழந்தை-உடன் பிறந்தோர்-மாமா மருமகள் முதலிய) மரபணு பெருமளவு ஒற்றுமை யுடைய தாக இருக்கும். எடுத்துக்காட்டாக மாமா- மருமகள் உறவில் மரபணு ஒற்றுமை விகிதம் 0.125 என இருக்கும். அதேசமயம் ஒன்றுவிட்ட உறவில் மரபணு ஒற்றுமை விகிதம் 0.0625 என்று இருக்கும். இரண்டு தலைமுறை இடைவெளி கொண்ட உறவில் 0.0125 தான் மரபணு ஒற்றுமை விகிதம். எனவே நெருங்கிய உறவினரிடையே மரபணு பாங்கு ஒற்றுமை அதிகமாக இருப்பதால் ஒரே விதமான பழுது கொண்ட மரபணு திருமணம் புரியும் இருவரிடமும் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். எனவே இவர்கள் திருமணம் புரிந்து கொண்டால் பிறக்கும் மகவிடம் இரண்டு ஜோடி மரபணுவிலும் பழுது பட்ட மரபணு அமைந்து குழந்தை நோய்வாய்ப்படும். இதன் காரண மாகவே மருத்துவர்கள் நெருங்கிய உறவினர் களிடையே திருமணம் வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்றனர்.

சாதிக்குள் திருமணமும் மரபணு நோயும்.

உலகில் இன்று நடைபெறும் திருமணங் களில் சுமார் 10.4 சதவிகிதம் உறவுக்குள் திருமணம் ஆக இருக்கின்றன. இந்தியாவில் இது சுமார் 11.9ரூ தமிழகம், ஆந்திரா, கர்நாடகப் பகுதியில் சுமார் 30-35ரூ திருமணங்கள் சொந்தத்திற்ககுள் நடக்கும் திருமணங்கள் ஆகும். மேலோட்டமாகப் பார்த்தால் மூன்றில் ஒரு திருமணம் நெருங்கிய உறவுக்குள் நடக்கிறது. எனவே இப்பகுதிகளில் மரபணு நோய்ப் பாதிப்பு மிகுதியாக இருக்கும் என்று கருதத் தோன்றும்.

இந்தியாவில் இந்துக்களிடையே வெகு வாகவும், ஏனைய மதப் பிரிவினரிடையே ஓரளவும் சாதிப் பிரிவுகள் உள்ளன. நெருங்கிய உறவுக்குள் திருமணம் இல்லை என்றாலும் சாதிக்குள் மட்டுமே திருமணம் என அமைவது உறுதி. காலம் காலமாக சிறு மக்கட் பிரிவுக்குள் அகமணம் புரிந்து வந்ததின் விளைவாக நமக்குத் தெரிந்து உறவு இல்லை என்றாலும், அறிவியல் ரீதியில் பார்த்தால் ஒரு சாதியினர் என்பவர்கள் நெருங்கிய மரபணுப் பாங்கு கொண்டவர்கள்தாம். சில ஆயிரம் ஆண்டு கள் இவ்வாறு குறிப்பிட்ட சாதியினர் தமக்குள் மட்டுமே அகமணம் புரிந்து வந்ததின் விளைவாக ஒவ்வொரு சாதியிலும் உள்ளவர் களிடையே மரபணுப் பாங்கு ஒற்றுமை ஏற்பட்டு விட்டது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடுத்துக் காட்டாக இந்தியாவில் இந்துக்களிடையே உள் இனச்சேர்க்கை விகிதம் 0.0068 எனும் போது ஐரோப்பாவில் வெறும் 0.0018 தான். அதாவது உள் இனச்சேர்க்கை இந்தியாவில் சாதிக்குள் திருமணங் கள் செய்வதால் மிகவும் கூடியுள்ளது என்பதாகும்.

எனவே உறவுடன் திருமணம் புரியா விட்டா லும் சாதிக்குள் திருமணம் புரிவது என்பது அறிவி யல் பார்வையில் நெருங்கிய உறவுடனான திரு மணத்திற்கு சமமே. இன்று இந்தியாவில் சாதிக் குள் மரபணு ஒற்றுமை விகிதம் சுமார் 0.0100 என அமைந்துள்ளது என ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு எனச் சாதிக்குள் மட்டுமே அகமணம் செய்ததன் விளைவாக இந்த நிலை ஏற்பபட்டு உள்ளது. ஒப்பீட்டளவில் ஐரோப்பாவில் மரபணு ஒற்றுமை விகிதம் வெறும் 0.0033 தான். இரண்டு தலைமுறை இடைவெளி கொண்ட உறவில் 0.0125 மரபணு ஒற்றுமை விகிதம் என்பதோடு இந்திய விகிதம் 0.0100 ஐ ஒப்பிட்டுப் பார்த்தால் சாதிக்குள் எல்லோரும் உயிரியல் படி நெருங்கிய உறவினர் தாம். இதன் பொருள் என்ன? சாதிக்குள் திருமணம் என்பது உள்ளபடியே உறவுக்குள் திருமணம் தான். எனவே சாதிக்குள் திருமணம் நெருங்கிய உறவு களிடையே திருமணம் இரண்டின் வழியாக சற்றேறக்குறைய ஒரே விகிதத்தில் தான் மரபணு நோய் ஏற்படும். எனவே கோத்திரம் எனக்கூறிக் காதலர்களைத் துன்புறுத்துவதற்கு எந்த வித அறிவியல் முகாந்திரமும் இல்லை.

மேலும் நெருங்கிய உறவினர் இடையே திருமணம் என்பதன் வாயிலாக ஏற்படும் சிசு இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 4 என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் மறுபுறம் இன்று இந்தியாவில் சிசு இறப்பு விகிதம் சுமார் 109/1000 என உள்ளது. எனவே குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்றால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து, பிறந்த குழந்தைக்கு உணவு மற்றும் மருத்துவ கவனிப்பு முதலியவற்றில் கவனம் செலுத்துவது தான் அறிவுடைமை. பொது சுகாதார முயற்சிகளை கிடப்பில் போட்டு விட்டு ; மருத்துவத்தை தனியார் மயமாக்கி சிசு இறப்பு விகிதத்தை குறைக்க முடியாது.

உள்ளபடியே, இன்று மாமா-மருமகள் திருமணங்கள் குறைந்து வருகின்றன. அளவான குடும்பம்; குறைவான குழந்தைகள் என்பதன் தொடர்ச்சியாக மாமா- மருமகள் இடையேயான வயது வித்தியாசம் பெருகியுள்ளது. திருமணம் சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக் கிறது. மேலும் ஒன்று- இரண்டு குழந்தைகள் மட்டுமே என்ற நிலை வளர வளர அத்தை மகன்/ மாமன் மகள் திருமணங்களும் அவ்வளவாக சாத்தியப்படாது போகும். நெருங்கிய உறவினர் எண்ணிக்கை குறையக்குறைய வயதுக்குப் பொருத்தமான ஜோடிகள் அமைவது குறையும். எனவே காலப்போக்கில் தானாகவே சமூகப் பொருளாதார மாற்றங்களின் விளைவாக நெருங் கிய உறவுக்குள் திருமணம் என்பது சாத்திய மில்லாது போகும்.

ஆனால் விடாமல் தொடர்வது சாதிக்குள் திருமணம் என்பதுதான். உள்ளபடியே சாதிக்குள் நடைபெறும் அகமண திருமணங்களின் விளை வாக இந்தியாவில் மரபணு நோய் கூடும் - பரவலாகும் - என ஹைதராபாத்தில் உள்ள மரபணு ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பே மார்க்சிய அறிஞர் உயிரியல் விஞ்ஞானி ஹல்டேன் “இந்தியாவில் மரபணு நோய்ப் பரவலைத் தடுக்க வேண்டு மெனில் சாதி விட்டு சாதி செய்யும் திருமணங்கள் பரவலாக வேண்டும்” எனக் கூறினார்.

சாதிக்குள் திருமணம் புரிந்து வரும் நமது மடமையின் தொடர்ச்சியாக, எடுத்துகாட்டாக, தமிழகத்தில் சில சாதிப் பிரிவினரிடையே பல் வேறு மரபணு நோய்கள் குவிந்துள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டடிக்காட்டுகின்றன. எடுத்துக் காட்டாக தென் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சாதிப்பிரிவினரிடையே காசநோய் வாய்ப்பு சுமார் 68 சதவிகிதம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். எனவே இன்று வெறுத்து ஒதுக்க வேண்டியது காதல் திருமணங்களை அல்ல, சாதிக்குள் நடைபெறும் அகமணத்தைத் தான். அகமணத்தின் விளைவாகவே பல சாதிகளிடையே மரபணு நோய் வாய்ப்பு பெருகி வருகிறது என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அறிவியல் ரீதியில் பார்த்தால் உள்ளபடியே கோத்திரம் அல்ல பிரச்சினை; சாதிக்குள் திருமணமே பிரச்சனை. பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்கள் எல்லாம் சாதிக்குள் அமையும். ஆனால், காதல் திருமணங்களே சாதி மீறியதாக அமைய வாய்ப்பு அதிகம். சாதி மீறிய திருமணங்களே இந்தியாவில் ஆயிரம் ஆண்டு களாக குறிப்பிட சாதிக்குள் குவிந்துள்ள நோய் மரபணுவை நீர்த்துப்போகச் செய்யமுடியும்.

எனவே, மரபணு நோய் பரவலாகக் கூடாது என ஆதங்கப்படுபவர்கள் சாதி மீறிய காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும்; ஊக்குவிக்க வேண்டும். ஆகவே எல்லா காதல் திருமணங்களும் ஊக்குவிக்கப்பட வேண்டியவையே.

பெண் தன் துணையைத் தேர்வுசெய்வதும் ஜாதிய ஒழிப்பும் உள்ளபடியே காப் பஞ்சாயத்தின் கொடும் தீர்ப்புகள் காதல் திருமணங்களை எதிர்ப்பதாகத்தான் உள்ளன. அதுவும் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானே தேர்வு செய்வது தான் காப் பஞ்சாயத்துதிற்கு உறுத்துகிறது. காதல் திருமணம், அதிலும் பெண் தன் துணையைத் தேடி விட்டாள் என்றால் காப் கட்டப்பஞ்சாயத்து உடனே பாய்கிறது. காதல் புரியும் இருவருக்கும் எப்படி அண்ணன்- தங்கை உறவு புனையலாம்” என காப் பஞ்சாயத்து ஆராய்ச்சி செய்து அவர்கள் மண வாழ்வைப் பொசுக்குகிறது.

வட இந்தியாவில் காப் ராஜ்யம் நடை பெறும் பகுதியில் பெண்களின் நிலை வெகு மோசம். ஹரியானாவில் 0-6 வயது குழந்தைகளில் 1000 ஆண்குழந்தைக்கு 821 பெண் குழந்தை தான் உள்ளது. அதாவது பெண் சிசுக் கொலை கொடூர மாகத் தலைவிரித்தாடும் பகுதி. ஆணாதிக்கம் கோலொச்சும் பகுதி. வீட்டுப் பெரியவர்கள் கூறும்படி திருமணம் புரிவதுதான் குடும்ப மானம் காக்கும் செயல் எனக் கூறிப் பெண்ணின் சுய விருப்பம் புறக்கணிக்கப்படுகிறது. தனது துணையை தானே தேடுவது என்பதைச் சகியாத பிற்போக்கு ஆணாதிக்க மனப்பாங்கின் வெளிப் பாட்டு வடிவமே காப் பஞ்சாயத்து.

தென் இந்தியாவில் சமீப காலமாக முறை மாப்பிள்ளையின் உரிமையை போற்றும் படியான திரைப்படங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமது முறை மாப்பிள்ளையை திருமணம் செய்வது தான் குடும்ப மானத்தை காப்பாற்றுவது என பெண்ணுக்கும்; முறைப் பெண்ணை கட்டுவது தான் ஆண்மைக்கு அழகு என ஆணுக்கும் அழுத்தமாகக் கலாபூர்வமாகக் கூறும் திரைப்படங்கள்; தொலைக்காட்சி தொடர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவே நமது பாரம்பரியம், நமது கலாச்சாரம் என போற்றப் படுகிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியதுபோல மறைமுகமாக பெண் தனது துணையை தானே தேடுவது எனும் உரிமையை மறுத்து ஆதிக்க சக்திகளுக்கும், ஆணாதிக்கத்திற்கும் தலைவணங்கத் தூண்டுகிறது. .

தனது உரிமையை நிலை நாட்டப் பெண் துடிக்கும் நிலையில், பெண்ணை அடக்கும் போக்கு தான் காப் கட்டபஞ்சாயத்து. காதலர்களை கொலை செய்வதற்கு எதிராக சட்டம் கொண்டுவர முற்போக்காளர்கள் நிர்பந்திக்கிறபோது கிராமப் புற ஆதிக்க சக்திகளைச் சந்திக்க ஆளும் வர்க்கம் தயக்கம் காட்டுகிறது.

Pin It