தமிழ்ப்பொது வாழ்வில் அதிகம் பேசப்பட்ட-பேசப்படும் ஒரு வார்த்தை பண்பாடு.அதே சமயம் ஆழ்ந்த புரிதல் இல்லாமலே பயன்படுத்தப்படும் வார்த்தையாகவும் அது இருக்கிறது.ஒரு மக்கள் சமூகம் வாழும் முறையே பண்பாடாகிறது என்று எளிமையாகச்சொல்லப்பட்டாலும் அது சதாகாலமும் மாறிக்கொண்டே இருப்பதாகவும் இருக்கிறது.கட்டிமுடிக்கப்பட்ட தூண் போன்றதல்ல பண்பாடு.அது ஓடும் நதியைப் போன்றது.பல சிற்றோடைகள் அதில் சேரும் பல ஓடைகள் பிரியும் சில பெருநதிகள் கூடக்கலந்து ஒன்றாகும் .ஒருபோதும் கடல் சேராத ஓடும் ஜீவநதியாகப் பண்பாடு திகழ்கிறது.அரசியல்.பொருளாதார இயக்கங்கள் யாவும் நிகழ்ந்தேறும் மேடையாகவும் பண்பாடு திகழ்கிறது. இன்று உலகமயத்தின் போர்வாளாகவும் கேடயமாகவும் பண்பாடு திகழ்கிறது.இவ்விதமாகப் பலவும் பேசப்பட வேண்டியுள்ளது.பண்பாடு குறித்த ஒரு புரிதலை நோக்கி நகரும் விதமாக சில புள்ளிகளைத் தொட்டுச்செல்லும் உரையாடலை தமிழக அறிவுலகத்தின் சில முக்கியமான ஆளுமைகள் செம்மலருக்காக நிகழ்த்தியுள்ளார்கள்.இது முழுமையான உரையாடலாக நிறைவுபெறாவிடினும் ஒரு நல்ல துவக்கமாக அமையும் என நம்புகிறோம்.

கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள்:

1.எஸ்.ராமகிருஷ்ணன் –தமிழின் புகழ் பெற்ற எழுத்தாளர்.சமீபத்தில் கொரிய நாட்டின் தாகூர் விருது பெற்றவர்.
2.முனைவர்.லட்சுமணன் –ஆய்வாளர்,சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (ஆஐனுளு) ,டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் (திராவிட இயக்க அரசியலும் தனிநபர் துதியும் என்னும் தலைப்பில்) ஆய்வுப்பட்டம் பெற்றவர்
3.ப.கு.ராஜன் – மின்னணு பொறியாளர் ,உலகின் பல நாடுகளில் பணியாற்றியவர் மார்க்சிய வழி நின்று நூல்கள் எழுதுபவர்.வரலாற்றிஞர் கோசாம்பி பற்றி இவர் எழுதிய நூல் முக்கியமானது.புரட்சியில் பகுத்தறிவு என்னும்  இவரது விரிவான அறிவியல் -வரலாற்று நூல் வரவிருக்கிறது.
4.ச.தமிழ்ச்செல்வன் – பொறுப்பாசிரியர்,செம்மலர்-தமுஎகச மாநிலத்தலைவர்.
5.அ.குமரேசன் –மூத்த பத்திரிகையாளர்,துணை ஆசிரியர் தீக்கதிர்,எழுத்தாளர்,தமுஎகசவின் மாநிலத் துணைச்செயலாளர்

எழுத்தாக்கம்-அ.குமரேசன்

 தமிழ்ச்செல்வன்: பொதுவாக பண்பாடு. கலாச்சாரம் இரண்டு சொற்களுமே ஒரே பொருள் தருவதாகத்தான் இருக்கின்றன. ஆனால் பயன்படுத்தப்படும் விதத்தில் இரண்டும் மாறுபடுகின்றன. நாகரிகம், பண்பாடு இரண்டும் ஒன்றுதானா என்ற குழப்பமும் இருக்கிறது...

எஸ்.ராமகிருஷ்ணன்: ஒரு தனி மனிதர் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்கும், ஒரு சமூகம் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்கும் சில அறங்களைக் கைக்கொள்வதுதான் பண்பாடு என்று சொல்லலாம். பண்படுதல் என்பது அதுதான். ஆங்கிலத்தில் உள்ள கல்ச்சர் என்ற சொல்லுக்கு நிகராக பண்பாடு என்ற தமிழ்ச்சொல்லை அறிமுகப்படுத்தியவர் டி.கே.சி.தான். அதுவரையில் சால்பு, இயல்பு என்ற சொற்கள்தான் புழங்கிவந்தன. கலாச்சாரம், பண்பாடு இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு உண்டு. பண்பாடு என்பதில் எப்போதும் நன்மைதான் உண்டு, தீமை இல்லை. ஏற்கெனவே இருப்பது பண்படுத்தப்பட்டு மேலும் நன்மையானதாக்கப்படுமேயன்றி தீய பண்பாடு இருக்காது. ஆனால், கலாச்சாரம் என்பதில் தீமையும் இருக்கிறது, வன்முறைக் கலாச்சாரம், வெடிகுண்டுக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்கிறோம். தீவிரவாதப் பண்பாடு என்று சொல்வதில்லை.

பண்பாட்டில் மாறாத தன்மை, மாறிக்கொண்டே இருக்கிற தன்மை இரண்டுமே இருக்கின்றன. மாறுகிற தன்மை ஒரு பண்பாட்டை வளப்படுத்திக்கொண்டே இருக்கிறது. மாறாத தன்மை அந்தப் பண்பாட்டில் ஒரு சலிப்பை ஏற்படுத்துகிறது. பண்பாட்டை மேற்கொள்கிற தனிமனிதர் மேம்படுகிறார், சமூகமும் மேம்படுகிறது.

பி.கே. ராஜன்: எந்த மொழியிலும் எந்த ஒரு சொல்லாடலுமே எல்லாக் காலத்திலும் ஒரே பொருளில் வழங்குவதில்லை. கால மாறுதல்களுக்கும் சமூக மாறுதல்களுக்கும் சொற்களும் உள்ளாகின்றன. அந்த மாறுதல்களுக்கேற்ற புதிய பொருள் அந்தச் சொற்களின் மேல் ஏறுவது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். அந்த வகையில் கலாச்சாரம் என்பது கலை இலக்கியம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முன்னிறுத்துகிறது; பண்பாடு என்பது அதைத் தாண்டி அடிப்படையாக ஒரு சமூகத்தின் அமைப்பு, தொழில், உற்பத்தி முறை, வரலாற்றுப் பூர்வமாக அந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய உளப்பாங்கு... இவற்றையெல்லாம் முன்னிறுத்துகிறது. ஆக, இவை இரண்டுமே முற்றுப்பெற்றவையோ, வரம்புக்கு உட்பட்டவையோ அல்ல. மக்களின் வாழ்க்கை நிலைகளைப் பொறுத்து மாறி வந்திருப்பவைதான். தொழில், உற்பத்தி இவற்றோடு மக்களுக்கு உள்ள உறவைப் பொறுத்து பண்பாடும் கலாச்சாரமும் மாற்றமடைகின்றன. அந்த மாற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது எதுவென்றால், தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் மக்கள் எப்படி ஈடுபடுகிறார்கள் என்பதுதான். உலகம் முழுவதும் உற்பத்தி முறை ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட, அதை எதிர்கொள்வது என்பது ஒரே மாதிரியாக இல்லை. மாற்றங்களும் எல்லா இடங்களிலும் ஒன்று போல இல்லை. எதிர்கொள்வதில் உள்ள இந்த மாறுபாடுகளுக்குக் காரணம் வரலாற்று ரீதியான உளப்பாங்குதான்.

முனைவர் சி. லட்சுமணன்: நாகரிகம் என்பது ஒரு பெரிய, விரிவான, அங்கீகாரம் பெற்ற ஒரு சமூக அமைப்பு. பண்பாடு, கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் உள்ளடக்கியது. பண்பாட்டைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட சமூகத்தின் உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. உற்பத்தி முறை மாறுகிறபோது பண்பாடும் மாறும். சமூகத்தின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், ஆளுமைகள் இவற்றினுடைய சேமிப்புக் கிடங்காக இருப்பது பண்பாடு. அதைப் புரிந்துகொள்வதற்குத் திட்டவட்டமான வரையறை எதையும் நாம் கொடுத்துவிட முடியாது. பொதுவாகச் சொல்வதானால் ஆண்-பெண் உறவு முறை, தனி மனிதருக்கும் சமூகத்திற்குமான உறவு முறை, சமூகத்திற்கும் அரசுக்குமான உறவு முறை, அரசுக்கும் பல்வேறு இனங்களுக்குமான உறவு முறை இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் பண்பாடு. உணவு, உடை, திருமண முறை உள்ளிட்ட சடங்குகள் என தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிற ஒன்று பண்பாடாக வடிவமெடுக்கிறது. அப்படியாக வடிவமெடுக்கிற பண்பாடு எல்லாமே நல்ல பண்பாடாகக் கூறிவிட முடியுமா என்று தெரியவில்லை.

உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் ஒரு பகுதியில் நெடுங்காலமாக ஒரு பண்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விழாவையொட்டி பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தாழ்த்தப்பட்டவர்களும் மற்றவர்களும் சாப்பிடுவார்கள், அப்படிச் சாப்பிட்டால் மோட்சம் கிடைக்குமாம். இதை நல்ல பண்பாடாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

தமிழ்ச்செல்வன்: ஒரு நாகரிகத்திற்குள் பல பண்பாடுகள் இருக்கும்.  பண்பு என்ற சொல் தமிழில் நெடுங்காலமாக இருந்துவருவதுதான். கலித்தொகையில் கூட, “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்,” என்று வருகிறது. சமூகத்தின் பாடறிந்து அதற்கேற்ற முறைகளைக் கைக்கொள்வதுதான் பண்பாடாகப் புரிந்துகொள்ளலாம். “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்று வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். சமூக ஆளுமையைத்தான் அவர் அவ்வாறு சொல்வவதாக எடுத்துக்கொள்ளலாம். நாகரிகம் என்பது ஒரு காலகட்டம் சார்ந்த பெரிய மாற்றங்களோடு தொடர்புடையது. கற்காலம், தாமிரக்காலம், இரும்புக்காலம் என்பன போல.

அ. குமரேசன்:  பண்பாடு, கலாச்சாரம் என்ற இரு சொற்களையும் மொழி சார்ந்தவையாகவே நான் பார்க்கிறேன். கலாச்சார் என்ற வடசொல் தமிழ்ப்படுத்தப்பட்டபோது கலாச்சாரம் என்று உருவாகியிருக்கிறது. பண்பாடு என்ற சொல் தொன்மையாகவே இருந்துவந்தாலும் சரி, இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும் சரி, பண்படுத்துதல் என்பதிலிருந்தே உருவாகியிருக்கிறது. கல்ச்சர் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பண்படுத்தி வளர்த்தல் என்ற பொருள் இருக்கிறது. நிலத்தைப் பண்படுத்திப் பயிர்வளர்ப்பது அக்ரிகல்ச்சர், பட்டுப்புழுக்கள் வளரும் சூழலைப்பண்படுத்தி பட்டு நூல் எடுத்தல் ஹார்ட்டிகல்ச்சர்... இப்படியாக. சமூக வாழ்க்கையையும் பண்படுத்துவது சோசியல் கல்ச்சர். கலாச்சாரம் என்று சொல்கிறபோது அது வாழ்க்கை முறையோடு கலை-இலக்கியச் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக ஒலிக்கிறது. பண்பாடு என்பது சமூகக் கட்டமைப்பு, அரசியல், வாழுமிடம், தொழில் உள்ளிட்டவை சார்ந்த வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. பண்படுத்துவது என்பது தொடர்ந்து நிகழ்வது. ஏற்கெனவே பண்படுத்தப்பட்ட நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேற்றுவது. இதில் நல்ல பண்பாடு, கெட்ட பண்பாடு என்று நேரடியாக இருக்க முடியாதுதான்.  பண்பாடு, அதிலிருந்து முன்னேறிய அடுத்த பண்பாடு அல்லது புதிய பண்பாடு என்றுதான் இருக்க முடியும். அடுத்த கட்ட முன்னேற்றத்திற்குச் செல்லவிடாமல் பண்பாடு பின்னுக்கு இழுக்குமானால் அது பழைய பண்பாடாகிவிடுகிறது. ஒரு காலத்தின் முன்னேற்றகரமாக அமைந்த ஒரு வழிமுறை, இன்றைக்கு நவீன வாழ்க்கைக்கு ஒத்துவராததாக மாறிவிடக்கூடும். சமூகக் கட்டுப்பாடுகள், குடும்பச் சடங்குகள், பொருளாதாரம் என பல கோணங்களில் பழைய பண்பாட்டில் ஊறிப்போனவர்கள், அதையே பெருமையாகக் கருதி புதிய பண்பாட்டிற்கு மாறவிடாமல் முட்டுக்கட்டை போடுவது நடக்கும். சமூகக் கட்டளைகளாகவும் மத நியதிகளாகவும் குடும்பபோதனைகளாகவும் அந்த முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

எஸ்.ராமகிருஷ்ணன்: பண்பாடு என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறபோது அதன் வரலாறு சார்ந்ததாகவே அணுகுகிறோம். அதன் வேர்களையும், காரணிகளையும் புரிந்துகொள்ள முயல்கிறோம். பண்பாடு ஒன்றை ஏற்றுக்கொள்கிறபோது அது அந்தப் பண்பாட்டின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது. ஏற்றுக்கொள்ளப்படாதது புதிய பண்பாடாக எதிர்நிற்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பண்பாட்டை உருவாக்குவதற்கான காரணிகள் மாறுகின்றன. பண்பாடு பொதுவாக மாறிக்கொண்டே இருப்பதுதான். ஆனால் மாறாத அம்சமும் இருக்கிறது.  மாறாத அம்சம் மாறுகிற அம்சத்தை அனுமதிக்க மறுப்பதைப் பார்க்கிறோம். அப்படி அனுமதிக்கப்படாத ஒன்று அழிந்துவிடுவதில்லை, தானே ஒரு தனிப்பண்பாடாக உருவாகிறது. உணவு, உடை, பேச்சு என பல வடிவங்களில் இது நிகழும்.

உதாரணத்திற்கு ‘சார்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இந்தச் சொல் உருவான மேற்குலகில் இது ஒரு சாதாரணமான விளிப்புச் சொல்லாக மட்டுமே பயன்படுகிறது. பல நேரங்களில் அப்படிக் கூட அது பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்திய சமூகத்தில் ‘சார்’  என்ற சொல் உயர்வான, கூடுதல் மரியாதைக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. தன்னை விட மேலான இடத்தில் இருப்பவரை ‘சார்’ என்று அழைப்பதும், தன்னை விடக் கீழான இடத்தில் இருப்பவர் தன்னை ‘சார்’ என அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இங்கே வழக்கமாகியிருக்கிறது. அந்தச் சொல் இந்திய மொழிகளில் இருக்கக்கூடிய பழைய பண்பாட்டுச்சொற்களோடு இது போய்ச் சேராத நிலையில் அதுவே தனிப்பண்பாடாக மாறியிருக்கிறது. தமிழில் அதற்கு நிகரானதாகக் கருதப்படும் ‘ஐயா’ என்ற சொல் படிக்காதவர்கள் பயன்படுத்துவதாகவும், ‘சார்’ என்பது படித்தவர்களின் சொல்லாகவும் மாறியுள்ளன. இரண்டும் ஒரே பொருள்தான் என்றாலும், ‘சார்’ என்பதில் ஒரு அதிகாரம், கூடுதல் மரியாதை ஏற்றப்பட்டிருக்கிறது.

பண்பாட்டின் ஒரு கூறுதான் சடங்கு. கர்நாடக மாநிலத்தில் பிராமணர்கள் சாப்பிட்ட இலையில் மற்றவர்கள் சாப்பிடுகிறார்கள் என்பது அப்படிப்பட்ட ஒரு சடங்குதான். தனி நபர் மேற்கொள்ளக்கூடிய சடங்கு, சமூகம் மேற்கொள்ளக்கூடிய சடங்கு இரண்டுமே அதிகாரம், மதம் போன்றவற்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாக பண்பாட்டின் ஒரு கூறாகிய சடங்கே ஒரு தனிப் பண்பாடாகவும் அடையாளம் பெறுகிறது.

கல்ச்சர் என்ற சொல்லை சமஸ்கிருதத்தில் அப்படியே உள்வாங்கிக்கொண்டு கலாச்சார் என்ற சொல்லாக மாற்றினார்கள். தமிழிலும் அப்படித்தான் சமஸ்கிருதத்திலிருந்து எடுத்துக்கொண்டு கலாச்சாரம் என்று உருவாக்கினார்கள். பிற்காலத்தில்தான், தமிழிலேயே பண்படுத்துதல் என்பது இருந்து வருகிறது என்ற அடிப்படையில் பண்பாடு என்ற சொல்லை டி.கே.சி. கண்டெடுத்துத் தருகிறார்...

தமிழ்ச்செல்வன்: ‘ஐயா,’ ‘சார்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதில் ஒரு சுவாரசியமான விசயம் இருக்கிறது. சாதாரணமாகத் தங்களை விட மேல் நிலையில் இருப்பவரை ‘சார்’ என்று அழைக்கிறார்கள். ஆனால் கலெக்டர் ஆஃபீசுக்குள், அந்த கலெக்டரை அப்படி அழைப்பதில்லை, அவரை ‘ஐயா’ என்றுதான் அழைக்கிறார்கள். அங்கே அதுதான் மரியாதை.

பி.கே. ராஜன்: இந்தச் சொற்களில் இவ்வாறு கூடுதல் மரியாதை ஏற்றப்பட்டிருப்பதன் பின்னணியில் அதிகாரம் இருக்கிறது. அதே நேரத்தில் இதை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அ. குமரேசன்: இதில் இன்னொரு வளர்ச்சிப்போக்கையும் நாம் பார்க்க வேண்டும். அதிகாரத்தை எதிர்ப்பவர்கள், மாற்றுப் பண்பாட்டிற்காக வாதாடுகிறவர்கள் ‘சார்’ என்று சொல்லாமல் ‘ஐயா’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். 

எஸ்.ராமகிருஷ்ணன்: கிராமங்களில் ஐயா என்று கூட அழைக்கப்படுவதில்லை. ‘ஆண்டே’ என்றும், அதற்கடுத்த நிலைகளில் இருப்பவரை ‘அப்பச்சி’ என்றும்தான் அழைக்கிறார்கள். ஊருக்குப் பெரிய ஆளாக இருக்கக்கூடியவரை ‘ஐயன்’ என்று அழைப்பார்கள்.

தமிழ்ச்செல்வன்: கிராமங்களிலேயே தலித் மக்களின் குடியிருப்புகளில் ஐயாவும் இல்லை, சாரும் இல்லை. அவர்கள் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை ‘அப்பச்சி’ என்றுதான் அழைக்கிறார்கள். ஒன்றாகப் படித்தாலும் கூட அப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

முனைவர் சி. லட்சுமணன்: இதிலேயும் வட்டாரம் சார்ந்த மாறுபாடுகள் இருக்கின்றன. மேற்குத் தமிழகத்தில் ‘சாமி’ என்றுதான் மேல்நிலையில் இருப்பவர்களை அழைப்பார்கள். கும்புடுறேன் சாமி என்று பெயர் சூட்டுகிற பழக்கமே கூட இருக்கிறது.

குமரேசன்: ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து, பல வேலைகளுக்கு வருகிறபோது தங்களை மற்றவர்கள் ‘சார்’ என்று அழைக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய உடையிலேயே கூட இந்த எதிர்பார்ப்பைக் காண முடியும். ஒரு பகுதி மக்களிடையே ஆண்கள் சஃபாரி கோட் அணிவது ஏன் பரவலாக இருக்கிறது? அதிலே ஒரு நுட்பமான பண்பாட்டு மாற்றத்திற்கான அடையாளத்தோடு கூடிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. 

எஸ்.ராமகிருஷ்ணன்: வெள்ளையுடை உடுத்துவதிலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்திய சமூகத்தில் வெண்மை என்பதன் மேல் இப்படியொரு ஈர்ப்பு ஏற்பட்டது என்பதே ஒரு ஆய்வுக்குரிய ஒன்றுதான். தூய்மை என்பதையும் தாண்டி வெள்ளை ஆடை என்பது ஒரு பெரிய மரியாதைக்குரிய ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. நிறத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் ஒரு கருத்துருவாக்கம் இருக்கிறது. 

பி.கே. ராஜன்: பண்பாட்டில் மட்டுமல்லாமல் எல்லாக் களங்களிலுமே மாற்றம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பண்பாட்டைப் பொறுத்தவரையில் சில மாற்றங்கள் உடனடியாக நிகழ்கிறது. சில மாற்றங்களுக்கு அதிகக் காலம் பிடிக்கிறது. இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மாற்றம் என்பது நிகழ்ந்தேயாக வேண்டும். ஒரு அவரை விதை மண்ணில் விழுகிறது என்றால், தனக்கான கூறுகளை உள்வாங்கிக்கொண்டு, தனது மேலோடு, தன்னை மூடியிருக்கிற மண் இவற்றை மீறி மாற்றங்களை அடைந்தாக வேண்டும். அப்போதுதான் அந்த விதை தளிராக, கொடியாக வளர்ச்சியடைய முடியும். இப்படி மீறுகிற மாற்றம் நிகழவில்லை என்றால் அங்கே அழிவு என்கிற மாற்றம் நிகழும். பண்பாட்டிலும் எல்லாக்காலத்திலும் அப்படியே மாறாமல் இருக்கிற ஒன்று என எதுவும் இருக்க முடியாது. 

எஸ்.ராமகிருஷ்ணன்: சில பண்பாடுகள் எல்லாக் காலத்திற்குமாகத் தொடரவே செய்கின்றன. உதாரணமாக பசித்தவருக்குச் சோறிடும் பண்பாடு. இது எல்லாக் காலகட்டங்களிலும், எல்லாச் சமூகங்களிலும் ஒரு உயர்வானதாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யார் யாருக்கு எப்படி உணவிடுவது, எவ்வகை உணவிடுவது, எங்கே வைத்து உணவிடுவது என்பதில் மாறுபாடு இருக்கிறது. பசியோடு வருகிறவர்க்கு வீட்டிற்குள் வரவழைத்துப் புதிதாகத் தயாரித்த உணவு தருவதா, வாசலிலேயே நிறுத்திப் பழைய உணவைத் தருவதா என்று வேறுபடுத்தப்படுகிறது.

ஆதிவாசி சமூகங்களில், உணவு கேட்டு ஒருவர் வருகிறார் என்றால், தங்களிடம் உணவு இல்லை என்றால் இல்லை என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடுவார்கள். சில சமூகங்களில், அவருக்காக வெளியே சென்று உணவு சேகரித்து வருவார்கள். இன்னும் சில சமூகங்களில் இருப்பதைப் பகிர்ந்து உண்போம் என்றும் சொல்வார்கள். வெவ்வேறு சமூகங்களில் இப்படி மாறுபட்ட தன்மைகள் இருக்கின்றன. அதிலிருந்தே தர்ம சத்திரம் அமைத்தல், அன்னதானம் செய்தல் என்று நிறுவனமயமாக்குவதும் நடக்கிறது. ஆனால், பசித்தவர்க்கு உணவிடுதல் என்ற அடிப்படைத்தன்மை உலகம் முழுவதும் மாறாமல் தெடர்கிறது.

குமரேசன்: இது ஒரு உயர்ந்த ஈகைக் குணமாகவும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் நான் கொடுக்கிற நிலையில் இருக்க, நீ என்னிடம் யாசித்துப் பெற வேண்டிய நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற மனநிலையும் இதற்குள் இருக்கிறது. ஏற்றத்தாழ்வான சமூகப் பொருளதார அமைப்பை அப்படியே மாற்றாமல் வைத்திருக்கிற போக்கு இருக்கிறது.
உண்மையிலேயே மனம் கசிந்து அவருக்கு உணவிடுகிறவர்களும் இருக்கிறார்கள், அதை ஒரு புண்ணிக்கணக்காகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒருவர் உணவை யாசித்து வருகிறபோதுதான் இந்த ஈகைக் குணம் மேலோங்குகிறது. அதுவே, ஒரு மனிதக் கூட்டமே பட்டினியால் வாடுகிறது, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாம் தவிக்கிறது, அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடிகிறதே! அது அவர்களது தலைவிதி என்றும், அவர்கள் முயற்சி செய்யாமல் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என்றும் ஒதுங்கிவிட முடிகிறதே! 

எஸ்.ராமகிருஷ்ணன்: பசியில் இருப்பவர் அதை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர் கூறுவது உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள்... எப்படியானாலும் பசியாற்றுவது என்பதை தனிப்பட்டவர் ஒரு அறமாகவும், சமூகம் அதை ஒரு கடமையாகவும் செய்ய வேண்டும் என்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதை வலியுறுத்துவதற்காகத்தான் பண்டிகைகள், கூட்டு நிகழ்வுகள். சமூகம் ஒன்றிணைவதில் இருக்கிற முக்கியமான அம்சமே பசியாற்றுதல்தான்.

லட்சுமணன்: பசியாற்றுவது என்பதும் எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுவதாகச் சொல்லிவிட முடியாது. ஒரு தொழிலாளி தனக்குப் பசிக்கிறது என்று சொல்லிக்கொண்டு போனால், முதலில் வேலையை முடித்துவிட்டு வா என்று சொல்வதுதான் பொதுவான முதலாளிக் குணமாக இருக்கிறது.  

பி.கே. ராஜன்: பசித்திருக்கிற ஒருவருக்குச் சோறிடுவது என்பது ஒரு இயற்கையான, தன்னுணர்வான மானுட வெளிப்பாடுதான். அதை ஒரு சமூகமே தன் கடமையாகச் செய்யத் தொடங்குகிறபோது அது பண்பாடாகிறது.

லட்சுமணன்: குடும்பங்களில் பெண் தன் பசியை ஆற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. முதலில் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் மற்ற பெரியவர்களுக்கும் உணவு பரிமாறிவிட்டுதான் அவள் சாப்பிட வேண்டும் என்ற ஒழுக்க விதியும் போதிக்கப்படுகிறது. 

எஸ்.ராமகிருஷ்ணன்: இது நிலவுடைமை சார்ந்த, மேல்தட்டுக் குடும்பங்களில் காணக்கூடிய பழக்கம். அதே சமூகத்தில் அடித்தட்டில் இருக்கக்கூடிய குடும்பங்களிலும், எளிய உழைக்கும் மக்களின் குடும்பங்களிலும் பெண்கள் தங்களுக்குப் பசித்தால் சாப்பிடுவது என்பது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இயல்பாக நடக்கிறது. சில குடும்பங்களில் பரிமாறுகிற ஏற்பாடு கூட இல்லை, அவரவர் தாங்களே எடுத்துப்போட்டு சாப்பிட்டுக்கொள்கிறார்கள்.
தமிழ்ச்செல்வன்: பசியாற்றுவது என்ற கடமையை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதைச் செயல்படுத்துவதில்தான் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஒரு தனிமனிதர் செயல்படுத்துவதில் பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரு சமூகமே செய்கிறபோது அந்தப் பிரச்சனை மேலும் தீவிரமாகிறது.

குமரேசன்:பசியென்று வருகிறவருக்கு எப்படியாவது உணவு தருகிற பண்பாடு, பல வடிவங்களில் தொடர்கிறது என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ஒரு பெரும் கூட்டமே, அல்லது சமுதாயத்தின் ஒரு பெரும்பகுதியே பட்டினி கிடக்கிறது. அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆனால், பட்டினியற்ற சமுதாயமாக மாற்றுவதற்கான போராட்டமாக அது ஏன் பரிணமிப்பதில்லை? அப்படியொரு அரசியல் போராட்டமாக, சமுதாயப் போராட்டமாக மாறிவிடாமல் தடுப்பதில், தலைவிதிக் கோட்பாடும், இறைவனின் கட்டளைப்படி நடக்கிறது என்ற போதனை ஏற்பாடும் வலுவாகப் பங்களிக்கின்றன. 

எஸ்.ராமகிருஷ்ணன்: பசியோடு இருந்தால்தான் நீ வேலை செய்வாய் என்ற தத்துவமும் போதிக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அதிகாரமும் மதமும் இருக்கிறது. பசியாற்றுவதற்கான போராட்டம் அதிகாரத்தையும் மதத்தையும் எதிர்க்கிற போராட்டமாகவும் எழவேண்டியிருக்கிறது. இந்த நிலைமைக்கான அடிப்படையாகப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. அந்தக் காரணிகளை மாற்றுவதற்கான போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், பண்பாடு சார்ந்த அடிப்படைக் கூறுகள் தொடர்கின்றன. அந்த அடிப்படைகளை நாம் வரையறுத்துவிட இயலாது. ஆனால், இவையெல்லாம் பண்பாட்டுக்கூறுகள் என்று சுட்டிக்காட்ட முடியும். எல்லாவற்றிற்கும் மூலமாக பசியாற்றுதல் என்ற அறம் இருப்பதையும் சுட்டிக்காட்ட முடியும். ஒருவர் ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டு, அது மறுக்கப்படுமானால் தன்னுடைய சுயமும் இருப்பும் மறுக்கப்படுவதாகக் கருதுகிறார். அதை மிகப்பெரிய அவமானமாக எடுத்துக்கொள்கிறார்.

லட்சுமணன்: எல்லா வீடுகளிலும் உணவு கேட்பது அனுமதிக்கப்படுவதில்லை. எல்லா வீடுகளுக்கும் போய் உணவு கேட்க முயல்வதுமில்லை. வெட்டிப்போட்டாலும் சில வீடுகளுக்குச் சென்று எதையும் கேட்பதில்லை என்ற வைராக்கிய மன நிலையும் உண்டு. அதுவே கூட ஒரு பண்பாட்டுக்கூறாகவும் இருக்கிறது.

குமரேசன்: ஆதியில் மனிதர்கள் பூமியில் பரவியதே உணவுத் தேடலுக்காகவும்தான். அது ஒரு புறமிருக்க, மரக்கறி உணவு, மாமிசக்கறி உணவு என்ற இருவகை உணவுப் பண்பாடுகள் பரவியிருக்கின்றன. இதை சைவம் அசைவம் என்று வகைப்படுத்துவதிலேயே கூட ஒரு பண்பாட்டு அரசியல் இருக்கிறது என்ற குரல்கள் இன்று ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒருவர் தனக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடுவது என்பது வேறு. சிறுவயதிலிருந்து குறிப்பிட்ட வகை உணவுகளைச் சாப்பிட்டு வந்திருக்கிற பழக்கம் அதற்கொரு காரணம். ஆனால், சைவ உணவுதான் நல்லது என்று விஞ்ஞானிகளே சொல்லியிருப்பதாக, எந்த விஞ்ஞானியையும் மேற்கோள் காட்டாமலே, ஒரு கருத்துப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் ஒரு படி மேலானவர்கள் என்பதாகவும், அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் அடுத்த தட்டில் இருப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறது. இதிலேயும் ஒரு பண்பாட்டுத் திணிப்பு இருக்கிறதல்லவா? 

எஸ்.ராமகிருஷ்ணன்: உழைப்புத் தன்மையைப் பொறுத்தது உணவு. உடல் உழைப்பு சார்ந்தவர்கள் இறைச்சி உணவை எடுத்துகொண்டார்கள். மரக்கறி உணவை முன்னெடுத்துச்சென்றவர்கள் பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லாமல் மூளை உழைப்போடு நின்றவர்கள். சொல்லப்போனால், மாமிச உணவு சாப்பிடுவதிலேயே கூட பாகுபாடு உண்டு. பன்றி மாமிசம் சாப்பிடுகிறவர்களை இதர அசைவு உணவுக்காரர்கள் தாழ்வாகப் பார்க்கிறார்கள். உணவுப் பழக்கத்தை அந்தந்த மனிதர் சார்ந்த ஒன்றாகப் பார்க்காமல் பண்பாடு சார்ந்ததாகப் பார்க்கிறபோது அது அதிகாரப் பிரச்சனையாகிறது.

தமிழ்ச்செல்வன்: எந்தப் பகுதியில் எந்த உணவு எளிதில் கிடைத்தது என்பதைப் பொறுத்ததுதான் உணவுப் பழக்கம். சைவ உணவு இந்தியாவில்தான் இந்த அளவுக்குப் பரவியிருக்கிறது. ஆய்வாளர் கோசாம்பி தனது ‘பண்டைய இந்தியா’ நூலில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் குறிப்பிட்ட நிலப்பில் மனிதர்களுக்கு விலங்குகளும் இறைச்சிகளும்தான் பெருமளவுக்குக் கிடைத்தன. தானியங்களோ நான்கைந்து வகைகள்தான் கிடைத்தன. இந்தியத் துணைக்கண்டத்தில் ஏராளமான தானியங்களும் காய்கறிகளும் கிடைத்தன. இறைச்சி உணவு இல்லாமலே வாழமுடியும் என்ற சாத்தியக்கூறு இங்கே இருந்ததால்தான் இங்கே சைவ உணவுப் பழக்கம் வளர்ந்தது என்கிறார் கோசாம்பி. இந்த புவியியல் பின்னணியையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். 

எஸ்.ராமகிருஷ்ணன்: வெஜிடேரியனிசம் எனப்படுகிற மரக்கறி உணவுவாதம் பரப்பப்படுவது இருநூறு ஆண்டுகளுக்கு முன்தான் தொடங்கியது. அது வரையில் அது ஒரு சிறிய சமூகப் பிரிவின் உணவுப்பழக்கமாகவே இருந்து வந்தது. காந்தி லண்டன் சென்றபோது, சைவ உணவு குறித்து பாடம் நடத்துகிறார். இந்திய சமுதாயத்தில் சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் மேல்தட்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான். கீழ்த்தட்டில் சைவ உணவுப் பழக்கம் யாரிடமாவது இருக்கிறது என்றால் அது நாடோடிகளாக வாழ்ந்த சமூகங்களில்தான்.

லட்சுமணன்: சைவ உணவுதான் உயர்வானது, வெள்ளை உடைதான் மேலானது, குறிப்பிட்ட மொழிதான் சிறந்தது என்ற வலியுறுத்தல்கள், ஒரு அரசியல் ஆதிக்கத்துக்கான பண்பாட்டுக் கிடங்குகளாக இருந்து வந்திருக்கின்றன. அந்த அரசியல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பண்பாட்டின் மூலமாகத்தான் எடுத்துவரப்பட்டிருக்கிறது.

சைவ உணவுக்காரர்கள் அதிகாரத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்தபோது அது உயர்வான உணவாகவும், அசைவ உணவுக்காரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது அதுவே மேலான உணவாகவும் கருத்தாக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.

தமிழ்ச்செல்வன்: மனித குலம் இனக்குழு சமூகங்களாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட பண்பாட்டுப் பாகுபாடுகளுக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது. ஒன்றை உயர்த்திக்காட்ட இன்னொன்றை ஒடுக்கிவைக்க வேண்டும் என்ற தேவையும் இருந்திருக்காது. நிலவுடைமை சார்ந்த வர்க்க பேதம் உள்ள சமுதாயம் தோன்றியதற்கு முன், பின் என்று பண்பாட்டுக் கூறுகளைப் பிரித்துப்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் முன்பு நடந்த மேசையுடைப்புப் போராட்டம் பற்றி ஆ. சிவசுப்பிரமணியன் ஆய்வு செய்திருக்கிறார். கிறிஸ்துவத்துக்கு மாறிய பரதவர் சமூக மக்கள், அங்கேயும் ஒரு ஏற்றத்தாழ்வைப் பார்க்கிறார்கள். பாதிரியார்களும் மேல்தட்டினரும் மேற்கத்திய பாணியில் ‘டைனிங் டேபிள்’ மேல் உணவுகளை வைத்துச் சாப்பிடுவதை கண்டு ஆத்திரப்படுகிறார்கள். மற்ற சமூகங்களால் ஏற்கெனவே பாகுபாடாக நடத்தப்பட்டு வந்த அவர்கள், தங்களது கோபத்தை உணவு மேசைகள் மேல் காட்டுகிறார்கள். அவற்றை உடைத்தெறிகிற போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது உணவு சார்ந்ததாகத் தெரிந்தாலும் உண்மையில் பிரச்சனை உணவு சார்ந்ததல்ல, ஏற்றத்தாழ்வுதான் பிரச்சனை.

குமரேசன்: பண்பாட்டுக்காக வாதாடுகிறவர்களில் பலர், பழைய கட்டுப்பாடுகளை நியாயப்படுத்துகிறார்கள். வாழ்க்கை முறைகள் எவ்வளவு மாறினாலும் ‘என்னதான் இருந்தாலும் நம்ம பண்பாட்டை விட்டுவிட முடியுமா’ என்று கேட்கிறார்கள். அதன் மூலம் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கிற பண்பாடு, பாகுபாடு இவற்றைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

பெண்ணுக்கான அறிவுரைகளிலும் பாலினப் பாகுபாட்டிலும் இதை நன்றாகப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, பாலின வேறுபாடற்ற நட்பு என்பதை இன்னும் சமுதாயம் முழுமையாக அங்கீகரிக்க மறுக்கிறது. இன்றைக்கும் கூட, நட்பாகப் பழகுகிறவர்கள் மீது பாலியல் வக்கிரப்பார்வை வீசப்படுகிறது. ‘அதெல்லாம் இல்லாமல் போகாது...’  என்று தள்ளுபடி செய்கிறது. எங்காவது, எப்போதாவது, பாலினப் பாகுபாடு இல்லாமல் நண்பர்களாகப் பழகுவோரில் சிலர் அதை பாலியல் உறவாகவும் ஏற்படுத்திக்கொள்கிறபோது, அதை கேலிக்கு உள்ளாக்குவதோடு, ‘பார்த்தீர்களா, ஆண்-பெண் நட்பு என்பதெல்லாம் போலியானதுதான்’ என்று கூறுகிறார்கள். நம் பண்பாட்டின் படி இருவரும் பிரிந்துதான் இருக்க வேண்டும், பெண் ஒதுங்கிதான் பழக வேண்டும் என்கிறார்கள். இதில் எல்லா மதங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.

தமிழ்ச்செல்வன்: ஆண்-பெண் உறவு சார்ந்த போதனைகளாக ஒலித்தாலும் கூட, அடிப்படையில் பெண்ணைக் கட்டுப்படுத்திவைக்கிற விதிகளே பண்பாட்டுப் பெருமையாகப் பேசப்படுகின்றன. 

எஸ்.ராமகிருஷ்ணன்: பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.

குமரேசன்: ஒரு ஆண் பாலியல் சிந்தனைகளைக் கவிதையாகவோ, அறிவியல் கருத்தாகவோ சொல்கிறான் என்றால் அது கவிதையாகவும் கருத்தாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதையே ஒரு பெண் செய்கிறாள் என்றால், அவள் ஏதோ ஒரு வகையில் பாலியல் சமரசம் செய்துகொண்டவளாகப் பார்க்கப்படுகிறாள்.

அண்மையில் ஆந்திர மாநில காவல்துறை தலைமை இயக்குநர், மாநிலத்தில் வன்புணர்ச்சிக் குற்றங்கள் அதிகரித்திருப்பது பற்றி பேட்டியளித்தபோது, பெண்களின் நவீன உடைகள் ஆண்களைத் தவறு செய்யத் தூண்டுகின்றன என்று கூறியிருக்கிறார். கிராமப்புற பெண்களின் உடைகள் கூட மாறிவிட்டன என்றும் சொல்லியிருக்கிறார். மாதர் அமைப்புகள் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு, தாம் சொன்னதை ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துவிட்டன என்று கூறி சமாளித்திருக்கிறார்.

தமிழ்ச்செல்வன்: வரலாற்றில் பார்த்தால், பெண்ணின் கற்பு பற்றிய கோட்பாட்டிலிருந்துதான் இப்படிப்பட்ட சிந்தனைகள் வருகின்றன. சொத்து உருவானபோது பெண் அடிமையானதிரிருந்தேஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதியிலிருந்து பெண்ணின் கற்பு பற்றிய விதி உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் தனது ‘இந்தியாவில் சாதிகள்’ புத்தகத்தில் இது பற்றிக் கூறுகிறபோது, சாதிகளின் எண்ணிக்கை கூடாமல் குறையாமல் இருப்பதற்காகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதியும், அதற்காக அகமண முறையும் கொண்டுவரப்பட்டன என்கிறார். இதே அடிப்படையில்தான் பெண்ணின் உடை எப்படி இருக்க வேண்டும், அவளது உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும், யாரோடு அவள் பழக வேண்டும், எது வரையில் அவள் செல்ல வேண்டும் என்றெல்லாம் விதிகள் உருவாக்கப்பட்டு, அவையெல்லாம் பெண்ணின் பண்பாட்டுப் பெருமைகள் என்று நிறுவப்பட்டுவிட்டன. 

பி.கே. ராஜன்: இதற்கு மாற்றான சிந்தனைகளை ஏற்றுக்கொள்கிற மனமாற்றம் மிக மிக மெதுவாகவே நடைபெறுகிறது. பொருளாதாரம், வாழ்க்கை, அரசியல் போன்றவற்றில் வேகமான மாற்றங்கள் நடந்தாலும் கூட, மன மாற்றம் அதே வேகத்திற்கு ஈடுகொடுப்பதாக நடைபெறுவதில்லை. பண்பாட்டில் இந்த உளவியல் ஒரு முக்கியமான அம்சம்.

இன்று இதை, மிக நவீனமான தொழிலாகிய ஐ.டி. செக்டாரில் (தகவல் தொழில்நுட்பத் துறை) காண முடிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் காண முடிகிறது. அங்கே வேலைக்கு வருகிறவர்கள் கூச்சமே இல்லாமல் சாதி அடையாளத்தோடு, குறிப்பாக உயர்சாதி என்ற அடையாளத்தோடு வருகிறார்கள்.

லட்சுமணன்: தமிழகத்தில் சாதி ஒழிப்பு இயக்கம் இனிமேல்தான் தொடங்க வேண்டும். ஏற்கெனவே இங்கே நடந்தது பிராமணர் எதிர்ப்புதான். இந்திய சமூகம் ‘ஹிப்போகிரேட்’ (போலித்தனமானது) என்று அம்பேத்கர் சொன்னார். சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக வாழ்வது இந்திய சமூகம்.

பெண்கள் மீது ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றால் அவர்கள்தான் பண்பாட்டு விதிகளின் சுமைதாங்கிகளாக இருக்கிறார்கள். அதனால் அத்தனை விதமான பண்பாட்டுச் சுமைகளும் பெண்களின் மீது ஏற்றப்படுகின்றன. அம்பேத்கர் தமது ஆய்வில் இதற்கு மூன்று காரணிகளைக் குறிப்பிடுகிறார். குழந்தைத்திருமணம், ஸதி, கைம்பெண் நிலை ஆகியவைதான் அந்தக் காரணிகள். சாதியக் கட்டமைப்புக்கு அடிப்படையான சொத்துடைமை, புனிதத்தன்மை இரண்டையும் பாதுகாக்க இந்தக் காரணிகள் உருவாக்கப்பட்டன என்கிறார் அவர். இதை அவர் ஒரு ஊக அடிப்படையிலேயே முன்வைக்கிறார். இதை யாராவது நிராகரித்தால் அதைத் தாம் வரவேற்பதாகக் கூறியே தனது அந்த ஆய்வுக் கட்டுரையைத் தொடங்குடிகிறார்.

 இதனுடன் இணைந்ததுதான் ஆண்-பெண் உறவு உள்ளிட்ட விதிகள். இவை எல்லாமே எழுத்துப்பூர்வமாகச் சொல்லப்பட்ட பண்பாடுகள்தான். எழுதப்படாத பண்பாடுகளும் குவிந்து கிடக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு முழுமையான பண்பாட்டு விதியாக உருவானது. அதைப் போற்றிச் சொல்கிற எல்லோருமே அதற்கு உண்மையானவர்களாக இருக்கிறார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. 

எஸ்.ராமகிருஷ்ணன்: இதை உயர்வாகக் கூறுகிற தமிழ்ச்சமூகமே இதை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஐங்குறுநூறு படித்தால், மனைவியிருக்க பரத்தையர் வீடுகளுக்குச் சென்ற ஆண்கள், கணவன் திரும்பி வரமாட்டானா என்று ஏங்கிடும் மனைவி, அவளோடு வாழச்சொல்கிற பரத்தைப் பெண்... இப்படியான பாடல்கள்தான் இருக்கின்றன.

லட்சுமணன்: தமிழ்ச்சமூகத்தில் கணவன் - மனைவி உட்பட ஆண்களும் பெண்களும் பாலியல் குறித்து விவாதிக்கிற பழக்கமே கிடையாது. ஆனால் இது குறித்த உணர்வுகளும், அடக்கப்பட்ட ஆதங்கங்களும் நிறைய இருக்கின்றன. திராவிட இயக்கத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஈர்ப்பிற்கு, அவர்கள் இதைப் பற்றியெல்லாம் பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசியது ஒரு முக்கியக் காரணம் என்ற கருத்து உண்டு.

தமிழ்ச்செல்வன்: தமிழ்ச்சமூகம் முழுவதுமே பாலியல் பற்றிப் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தது என்று சொல்லிவிட முடியாது. பல நாட்டுப்புறக் கதைகளில் பாலியல் உறவுகள்தான் மையமாக இருக்கின்றன. பெண்கள் பாடிய பல நாட்டுப்புறப் பாடல்கள் தொகுப்படவே இல்லை. அறிவொளி இயக்கத்தில் அவற்றைத் தொகுக்க நாங்கள் தொகுக்க முயன்றபோது, கிராமப்புறப் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிந்தது. ‘என் கள்ள ஆம்படையான் நன்றாக இருக்க வேண்டும்’ என்று வேண்டி பெண்கள் பாடிய பாடல்களே கூட இருக்கின்றன.

நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்யப் புறப்பட்ட பல ஆய்வாளர்கள் இதுபோன்ற பாடல்கள் தேவையில்லை என்று பதிவு செய்யாமலே விட்டிருக்கிறார்கள். அதே போல் கிராமத்து மக்களும், ஆய்வாளர்களாக வருகிறவர்களிடம் பெருமையான விசயங்களை மட்டும்தான் சொல்லவேண்டும் என்று இதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். கிராமங்களில் வயது முதிர்ந்த ஆண்கள்தான் இந்த மாதிரியான பாடல்களைப் பாடிக்காட்டினார்கள். பெண்களிடம் நாங்கள் ‘சொல்லுங்க சொல்லுங்க’ என்று கெஞ்சியும் ஊக்கம் கொடுத்தும்தான் அந்தப் பாடல்களைத் தொகுத்தோம். ஆக, நம் பண்பாட்டில் இதைப் பற்றிய வெளிப்பாடுகள் இல்லை என்பது தவறு. இருந்துகொண்டேதான் வந்திருக்கிறது. 

பி.கே. ராஜன்: திராவிட இயக்க வளர்ச்சிக்கு பாலியல் பேச்சுகள்தான் காரணம் என்று சொல்வது, அந்த இயக்கத்தின் பங்களிப்பை எளிமைப்படுத்துவதாக இருக்கிறது. பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பெருமளவுக்கு வந்திருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் அல்ல, பொது ஒதுக்கீட்டிற்கான இடங்களிலேயே இவர்கள் வந்திருக்கிறார்கள். தகுதி, திறமை பற்றியெல்லாம் யாரும் இப்போது பேச முடியாது. அப்படிப் பேசினால் இந்தக் கல்வி நிறுவனங்களின் புள்ளிவிவரஙஙகள் முகத்தில் அறைகின்றன. ஒரு பெரும் பரப்பு இப்படி ஒரு சமதளத்திற்கு வந்திருப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு மிகப்பெரியது. திராவிட இயக்கம் வலுவாகச் செயல்பட்ட இந்த இடத்தில்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. வேறு எங்கேயும் இல்லை.

குமரேசன்: திராவிட இயக்கத்தின் போராட்டங்கள், இட ஒதுக்கீடு உரிமைகள் போன்றவை இந்த நிலையை உருவாக்கியுள்ளன என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், இன்று அந்த இட ஒதுக்கீடு கொள்கைக்கே எதிரான தனியார்மயம், உலகமயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் வேகமாகப் புகுத்தப்படுகிறபோது, அதற்கு எதிரான போராட்டத்தை திராவிட இயக்கத்தில் காண முடியவில்லையே... 

பி.கே. ராஜன்: ஆம், திராவிட இயக்கத்தின் தேவையும் பங்கும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது போலத்தான் தெரிகிறது. அதற்காக அவர்களின் முந்தைய பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
நாம் சாதியத்திற்குப் பண்பாட்டுக் காரணியை மட்டும் சொல்ல முடியாது. ஆழமான பொருளாதாரக் காரணம் இருக்கிறது. பட்டியல் சாதி மக்களில் தொண்ணூறு சதவீதத்தினர் கூலித்தொழிலாளர்கள்தான். இவர்களில் ஒரு ஐந்தாறு சதவீதத்தினர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் வருகிறார்கள் என்றால், மீதியுள்ளவர்களின் சமூக நிலைதான் இவர்களுடைய நிலையையும் தீர்மானிப்பதாக இருக்கும்.

லட்சுமணன்: திராவிட இயக்கத்தின் இந்த சமூகப் பொருளாதாரப் பங்களிப்பை மறுக்கவில்லை. அவர்களது அரசியலில், ஆண்-பெண் உறவு பற்றிய பேச்சையும் அணுகுமுறையையுதான் நான் குறிப்பிட்டேன். அதை மையமாக வைத்து அவர்களுடைய கதைகள், திரைப்படங்கள், அரசியல் மேடைகள் எல்லாம் அமைந்தன. சட்டமன்றத்திலேயே கூட அதை மையமாக வைத்துக் கொச்சையான வாதங்கள் நடந்திருக்கின்றன. ஆண்-பெண் உறவு என்றால் இப்படித்தான் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள், மக்களிடையே அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்ச்செல்வன்: தமிழகத்தில் அரசியலிலோ, சமுதாயத்திலோ எதையும் கேள்வி கேட்கிற ஒரு துணிவு வளர்ந்திருக்கிறது என்றால் அது திராவிட இயக்கத்தால் நிகழ்ந்த முக்கியமான, பெரிய மாற்றம்தான் என்பதை மறுக்க முடியாது. அதே வேளையில், தமிழ்ப்பண்பாடு பற்றி வலியுறுத்திப் பேசிய திராவிடக் கட்சிகளின் தலைவர்களில் பலர் அதற்கு விசுவாசமாக இல்லை. பல தார மணம், பல பெண்களுடன் தொடர்பு என்று சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. அது பெருமைக்குரிய விசயமாகவும் பார்க்கப்படுகிறது.

லட்சுமணன்: அதற்கு முக்கியக் காரணம், திராவிட இயக்கம் வளர்ந்த இதே தமிழகத்தில் மக்கள் அரசியலாக்கப்படவில்லை என்பதுதான். மேற்கு வங்கத்தைப் பற்றிச் சொன்னீர்கள், அங்கே பெருமளவுக்கு மக்கள் அரசியலாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு ரிக்ஷா தொழிலாளிக்குக் கூட, தான் யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்காக வாக்களிக்கிறோம் என்ற ஒரு குறைந்தபட்ச புரிதல் இருக்கிறது. இங்கே அப்படி நிகழவில்லை. 

எஸ்.ராமகிருஷ்ணன்: மேற்கு வங்கத்தில் நான் விரிவாகப் பயணம் செய்திருக்கிறேன். நீங்கள் சொல்கிற அரசியலாக்கப்படுதல் என்பதை நகரங்களில்தான் காண முடிந்தது. கிராமப்பபகுதிகளுக்குப் போகப்போக, அவர்களுடைய அடிப்படைப் பிரச்சனைகள் பற்றிய அக்கறை மட்டுமே இருப்பதைக் கண்டேன். இடதுசாரிகளின் அரசியல் முக்கியத்துவம் பற்றிய புரிதல் இருந்ததாகக் கூற முடியாது. அதனால்தான், சில அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காதபோது, தங்களுடைய பழைய மரபைப் பின்பற்றி, ஒரு மாற்றம் தேவை என்று முடிவு செய்து, தேர்தலில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மனப்போக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எனது வங்கப் பயணத்தில் உணர முடிந்தது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசியல் பேசப்படுகிறது. ஆனால், ஊடகங்களின் மூலம் அவர்களைச் சென்றடைகிற செய்திகள் என்ன என்ற அடிப்படையில்தான் அந்த அரசியல் வாதங்கள் இருக்கின்றன. செய்திகள் அவர்களிடம் போய்ச்சேரவில்லை என்பதுதான் இங்கே பிரச்சனை.

குமரேசன்: இங்கே டீக்கடை அரசியல் என்று கிண்டலாகச் சொல்லப்பபடுவதுண்டு. ஆனால் டீக்கடை அரசியல் இங்கே ஆரோக்கியமாகத்தான் நடந்திருக்கிறது. எந்தக் கட்சிக்கு ஆதரவாக மக்கள் முடிவு செய்கிறார்கள் என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம், ஆனால் அது குறித்த ஒரு விவாதத்தைத் தமிழக மக்கள் நடத்தத்தான் செய்கிறார்கள். இதிலே பெண்ணின் இடம் என்ன என்பதைப் பற்றி நாம் பேசலாம். தனிப்பட்ட சில பெண்கள் தங்களைத் தலைவர்களாக நிலைநாட்டிக்கொண்டிருந்தாலும், பொது வெளியில் பெண்ணின் அரசியல் இடம் என்னவாக இருக்கிறது? 

எஸ்.ராமகிருஷ்ணன்: பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.

குமரேசன்: அதனால்தான், ஒரு குடும்பத்தில் மகன் யாரோ ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்றால், ஒரு கட்டத்தில் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே, மகள் யாரையோ காதலிக்கிறாள் என்றால் அதை அவ்வளவு எளிதில் வீட்டார் ஏற்றுக்கொள்வதில்லை. மகன் மூலமாக ஒரு சொத்து வருகிறது, மகள் காதலிக்கிறாள் என்றால் ஒரு சொத்து கையைவிட்டுப் போகிறது என்ற அடிப்படையான மனநிலையிலிருந்து பிரச்சனையாக்கப்படுகிறது. 

எஸ்.ராமகிருஷ்ணன்: பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.

அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான்,  அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.

பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!

அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.

தமிழ்ச்செல்வன்: பெண்ணுக்கு எந்த விதமான கல்வி கிடைத்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பெண் விடுதலையையும் பெண்ணின் உரிமையையும் சொல்கிற கல்வி பெண்களுக்குக் கிடைக்கவில்லை. ஆணின் மனதில் பெண் பற்றியதாக இருக்கிற சித்திரத்தை அழிக்கிற கல்வியாகவும் அது இல்லை. இந்தக் கல்வியால் பெண்ணின் விடுதலையை நிலைநாட்டிவிட முடியாது. ஏற்கெனவே இருக்கிற நிலவுடைமைச் சமூக அடிமைத்தனங்களை அறிவியல்பூர்வமாக நியாயப்படுத்துகிற கல்வியாகத்தான் இது இருக்கிறது. அம்பேத்கர் ‘கற்பி’ என்று சொன்னார் என்றால், இந்தக் கல்வியை அல்ல. மாற்றத்திற்கான, விடுதலைக்கான கல்வியைத்தான் சொன்னார். 

பி.கே. ராஜன்: அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கல்விக்கூடங்களிலும் பணித்தலங்களிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது இப்படியே நிற்கும் என்று சொல்ல முடியாது. இந்த அளவு மாற்றம், எதிர்காலத்தில் படிப்படியாக மன நிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்லும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ராமகிருஷ்ணன்: நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் - ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.

தமிழ்ச்செல்வன்: மதம், அரசியல் இரண்டிலுமே தன்வயப்படுத்துவது, திணிப்பது என்ற இரண்டு ஏற்பாடுகளும் உண்டு. அரசியலில் எடுத்துக்கொண்டால், ஏகாதிபத்தியம் ஒரு நாட்டில் நுழைகிறபோது, அங்கே உள்ள கூறுகளைத் தன்வயப்படுத்திக்கொள்கிறது. உதாரணமாக, வெள்ளைக்காரர்கள் காலில் ஷூ அணிந்து எங்கே வேண்டுமானாலும் போவார்கள். இங்கே காலில் செருப்பணிய அனுமதிக்கப்பட்டவர்கள், பெரிய மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டுதான் போக வேண்டும் என்றிருந்தது. இங்கே வந்த வெள்ளைக்காரர்கள், மேலதிகாரிகளைக் காண வருகிற இந்திய அதிகாரிகள் காலில் ஷூ இல்லாமல்தான் உள்ளே வரவேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்தார்கள்.

மதத்தில் எப்படி இந்தத் தன்வயமாக்குதலும் திணிப்பும் நடந்தன என்றால், கிராமப்புற தெய்வங்களை இந்துப் புராணங்களோடு இணைத்தது போன்ற செயல்கள் மூலமாக நடந்தன. கிராமங்களில் மனுசியாக வாழ்ந்து, போராடி, தலைவியாகப் போற்றப்பட்டு, பின்னர் தெய்வமாக வணங்கப்பட்டு உருவானவைதான் பெண் தெய்வங்கள். மாரியம்மா போன்ற பெண் தெய்வங்கள் பார்வதியின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டன. சுடலைமாடன்கள் சிவனின் வடிவங்களாக்கப்பட்டார்கள். கிராமக்கோயில்களின் எளிய சடங்குகள் சமஸ்கிருதமயமாக்கப்பட்டன. இவற்றோடு இணைந்து பெண்ணடிமைத்தனம் கெட்டிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

லட்சுமணன்: பெண்ணைக் கட்டுப்படுத்திவைப்பது, சாதியை இறுக்கமாக்குவது இரண்டும் இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாக இருப்பதைப் பார்க்கிறோம். இவற்றையும், பல மூடநம்பிக்கைகளையும் பராமரித்து வந்திருப்பதில் ஜாதகம், சோதிடம் ஆகியவை முக்கியமான பங்காற்றி வந்திருக்கின்றன.

குமரேசன்: இதற்கெல்லாம் எதிரான முற்போக்குச் சிந்தனைகள் வளர்வதற்கு இன்றைய பொருளாதாரக் கட்டமைப்புகள் தடைகளாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அதிநவீன தொழிலாக இருக்கிற தகவல் தொழில்நுட்பத் துறையின் பல தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் யாரும் நிரந்தரமானவர்கள் அல்ல. அவர்களுக்காக மாதந்தோறும் மது, ஆட்டபாட்டம் என்று கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் வேறு எதையும் சிந்திக்க முடியாதவர்களாக வார்க்கப்படுகிறார்கள். சென்னையின் சில பகுதிகளில் இருக்கும் விடுதிகளில், பாலியல் தொழிலாளர்களை நாடி வருகிறவர்களில் பெரும்பாலோர் இந்தத்துறையின் ஊழியர்களும் அதிகாரிகளும்தான்.

என்னுடைய தினசரி ரயில் பயணத்தில், இரவில் வீடு திரும்பும்போது பல பெரிய நிறுவனங்களின் இளம் ஊழியர்கள் வருகிறார்கள். மடிக்கணினிகளை விரித்துவைத்துப் பேசிக்கொண்டே பயணிக்கிறார்கள். அவர்களுடைய பேச்சில் கணினிக்கான ரேம், ஜி.பி., ஸ்பீட் போன்ற சொற்கள்தான் அடிபடுகின்றனவே தவிர, சமூகப் பிரச்சனைகளையோ அரசியலையோ அவர்கள் பேசுவதே இல்லை. தாங்கள் சுரண்டப்படுவது பற்றிக்கூட பேசுவதில்லை. சுதந்திர மென்பொருள் இயக்கம் போன்றவற்றில் தங்களை இணைத்துக்கொள்வதில்லை. விமர்சிக்காதவர்களாக, கேள்வி கேட்காதவர்களாக அவர்கள் வார்க்கப்படுவதன் இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.

தமிழ்ச்செல்வன்: இந்த இளம் வல்லுநர்கள் வேலைக்குச் சேரும்போதே அவர்களுடைய சான்றிதழ்களை நிறுவனம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு வாங்கிவைத்துக்கொள்கிறது. சங்கம் வைக்கிற உரிமை மறுக்கப்படுகிறது. வேலைப்பளு திணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் நல்ல ஊதியம் கவர்ச்சிகரமாக இருந்தாலும், நாளாக நாளாக, தப்பித்துச்செல்லும் மனநிலையும், தப்பிக்க முடியாத சூழலுமாக மாட்டிக்கொள்கிறார்கள்.

மற்ற தொழில்கள் போல, குறிப்பிட்ட பயிற்சியோடு போய் வேலையில் நிரந்தரமானோம் என்று ஐ.டி. துறையில் இருக்க முடியாது. இவர்கள் தங்களது கணினி அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் வெளியே தள்ளப்பட்டுவிடுவார்கள். அந்த அச்சத்தோடும் இருப்பதால், வேறு சிந்தனைகள் வருவதில்லை. 

எஸ்.ராமகிருஷ்ணன்: கண்ணுக்குத் தெரியாத முதலாளி, கண்ணுக்குத் தெரியாத அலுவலகம் இரண்டும் இந்தத்துறையின் முக்கியமான அம்சங்கள். தன் முதலாளி யார் என்பதே அவர்களுக்குத் தெரியாது. இங்கே வேலை செய்தாலும், அமெரிக்காவில் இருக்கிற முதலாளியோடு இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தச் சுரண்டலுக்கு இங்குள்ள பண்பாடுகள் தடையாக இருக்கிறபோது, மாற்றுப்பண்பாடாக அந்தக் கேளிக்கைகளின் மூலம் அவர்களை இந்த அமைப்பு ஈர்க்கிறது. அதற்கென்றே தனி வீடு பிடித்து, மது விருந்தும், நடனமும், நடிகைகளோடு உல்லாசமும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழல் அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே கூட மாற்றிவிடுகிறது. சிலர் ஏதாவது தொண்டு நிறுவனங்களையும், மன அமைதிக்கான அமைப்புகளையும் நாடி அமைதியைத் தேடுகிறார்கள். மிகச் சிலர்தான் இலக்கியம், கலை என்று ஈடுபடுகிறார்கள்.

தமிழ்ச்செல்வன்: உலகமயமாக்கல் சூழலில் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் கார்ப்பரேட் தனி மனித பலவீனம் என்றுதான் பொதுவாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னணியிலும் கார்ப்பரேட் கலாச்சாரம் இருக்கிறது. 

எஸ்.ராமகிருஷ்ணன்: தற்கொலை மனநிலையில் விழக்கூடியவர்களை மீட்பதிலும் நம்பிக்கையூட்டுவதிலும் உறவுகள் எப்போதுமே ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டுவந்திருக்கின்றன. அது குடும்ப உறவாகவும் இருக்கலாம், நட்புறவாகவும் இருக்கலாம். இப்போது அந்த உறவுகள் துண்டிக்கப்படுகின்றன.

‘நடுவில் உள்ளவள்’ என்று ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு நண்பர் என்னிடம், ‘இப்பதான் நடுவில் உள்ளவங்கன்னு யாருமே கிடையாதே’ என்றார். இரு மனிதர்களுக்கு நடுவே  ஆறுதல் அளிக்கவும், ஆலோசனை கூறவும் ஆளில்லாத நிலையில் தற்கொலை மனப்போக்கு அதிகரிக்கிறது.

தமிழ்ச்செல்வன்: ‘முதலாளித்துவம் மனித உறவுகளைப் பண உறவுகளாக மாற்றுகிறது’ என்றார் மார்க்ஸ். முன்னெப்போதையும் விட இப்போது அதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

லட்சுமணன்: விவசாய உற்பத்தி முறை மாற்றப்பட்டு, முதலாளித்துவ உற்பத்தியிலும் இது வரை இருந்த முறை பின்னுக்குத்தள்ளப்பட்டு இன்று எங்கும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. முன்பு ‘ஃபோர்டிசம்’ எனப்பட்ட தொழில் உற்பத்தி முறையில், ஒரு கார் தொழிற்சாலை இருக்கிறது என்றால் காருக்கான அனைத்துக் கருவிகளும் பொருள்களும் ஒரே வளாகத்தில் தயாரிக்கப்பட்டன. இன்று காரின் இன்ஜின் ஓரிடத்தில், வீல் ஓரிடத்தில், பிரேக் ஓரிடத்தில் என்று வேறு வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு இணைக்கப்படுகிட்னறன. தொழிலாளர்கள் முழுக்காரின் உற்பத்தியிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள். தற்காலிகத் தொழிலாளர்களுமாக ஒப்பந்தத் தொழிலாளர்களுமாக மாற்றப்படுகிறார்கள். தங்களுடைய இருப்பு பற்றிய பேரச்சம் எழுந்தவர்களாகத் தொழிலாளர்கள் வைக்கப்படுகிறார்கள்.

எண்பதுகளுக்கு முந்தைய முதலாளித்துவத்தில் தொழிலாளர்களின் சில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. நவீன முதலாளித்துவத்தில் அந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அந்த உரிமைகளை வழங்குவதற்கு மாறாக, மதம், சாதி, கேளிக்கைகள் என்று வேறு அடையாளங்கள் பொறிக்கப்படுகின்றன.  இதிலிருந்துதான் அச்சம், மனநலம் பாதிப்பு, தற்கொலை உணர்வு ஆகியவை ஏற்படுகின்றன.

நவீன முதலாளித்துவத்தின் தேவையிலிருந்து, தலித் தன் வரலாறு போன்ற முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. ‘உன் வலிகளை வெளிப்படையாகப் பேசு, பதிவு செய்’ என்று வழிகாட்டப்படுகிறது. அதில், இதுவரை வெளியே தெரியாமலிருந்த உண்மைகள் வெளிப்படுவது உண்மை. ஆனால், அதற்கான மாற்றை நோக்கிச் செல்வதற்கு மாறாக, ஒரு வடிகால் என்ற அளவிலேயே வைக்கப்படுகிறது.

உலகமயமாக்கலும் தனியார்மயமாக்கலும் எப்படி இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக இருக்கின்றன என்று நிறையவே பேசப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தொண்ணூறாம் ஆண்டுகளில்தான் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்தக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டன என்று நமக்குத் தெரியும். ஆனால், இட ஒதுக்கீட்டிற்கான மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த வி.பி. சிங் அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்துதான், தனியார்மய, தாராளமய நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்று, நெருக்கடியில் சிக்குகிற தனியார் நிறுவனங்களை பெயில் அவுட் பண்ணுவதற்கு அரசு எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் செலவிடித் தயாராக இருக்கிறது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை மீட்கத் தயாராக இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் ஏழே ஏழு சதவீதம்தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. மீதி தொண்ணூற்று மூன்று சதவீதம் முறைசாராத் தொழிலாளர்கள்தான். அந்த ஏழு சதவீத அமைப்பு சார்ந்த பணியிடங்களிலும் நான்கு பங்கு தனியார் துறையில்தான். மூன்று பங்குதான் அரசுத்துறையிலும், பொதுத்துறையிலும். இந்த மூன்று சதவீதத்துக்கு உள்ளேதான் இட ஒதுக்கீடும், பொது ஒதுக்கீடும். எடுத்த எடுப்பிலேயே இட ஒதுக்கீடு அரசியல் பேசுகிற பலரும், அதற்கு உலைவைக்கிற இந்தக் கொள்கைகள் பற்றியோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றியோ வாய் திறப்பதில்லை.  இந்த நாட்டின் நில வளம், நீர்வளம், கனிம வளம், மனித வளம் பற்றியெல்லாம் ஒரு நிமிடம் கூட நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் கொண்டுவரப்பட்டதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம். சொந்த மக்களை அடித்து விரட்டி அந்த மண்டலப்பகுதிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்துகிற பொருளாதார நெருக்கடி சமூகத்தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் எதிர்வினையாற்றுகின்றன.

ராஜன்: நிதி மூலதனம் பற்றிப் பேசுகிறபோது, அது ஏதோ பிரைமரி இண்டஸ்ரி (அடிப்படைத் தொழில் - விவசாயம்), செகண்டரி இண்டஸ்ட்ரி (இரண்டாம் நிலைத்தொழில்) இரண்டுக்கும் அப்பாற்பட்டு தனித்து இயங்குவது போலப் புரிந்துகொள்ளக்கூடாது. செகண்டரி இண்டஸ்ட்ரியில் கிடைக்கிற உபரி லாபத்தைத்தான் சேவைத்துறையாகிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். அந்தத் தொழில்களில் நெருக்கடி ஏற்பட்டால் நிதிமூலதனமும் சீர்குலையும். இதைத்தான் அண்மையில் பார்த்தோம்.

மின்சாரம் உள்பட பல்வேறு உற்பத்திகள் அமெரிக்காவிலும் மற்ற பல மேற்கத்திய நாடுகளிலும் தேக்கநிலைக்கு வந்துவிட்டன. ஆகவேதான் அவர்கள் தங்களுடைய லாப உபரியை எடுத்துக்கொண்டு இந்தியா போன்ற நாடுகளுக்கு வருகிறார்கள். இங்கே உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமல்ல. இந்தியச் சந்தையிலேயே அவர்களுடைய கார்களும் டூ வீலர்களும் இதர பல பொருள்களும் கணிசமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உலகம் முழுவதும் அவர்களுடைய பணம்தான் உற்பத்தித் துறையிலும், உற்பத்தியல்லாத சேவைத்துறையிலும் பாய்கிறது என்பதுதான் பிரச்சனை, அதுதான் நாம் பேசிக்கொண்டிருக்கிற பண்பாட்டுத்தளத்திலும் சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

குமரேசன்: இதை இப்படிப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலாளித்துவம் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகவும் தனியார்மயமாக்கல், பொதுத்துறை அழிப்பு, சேவைத்துறை என்ற பெயரில் பங்குச்சந்தை சூதாட்ட முதலீடு என்றெல்லாம் மாற்று வழிகளைச் செயல்படுத்துகிறது. முதலாளித்துவ சந்தை விதிகளின் காரணமாக, இந்த நடவடிக்கைகள் தற்காலிக பலனளிப்பது போலத் தெரிந்தாலும், இறுதியில் அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வதாக முடிகிறது. அது மேலும் மேலும் நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. அதன் தாக்கம் மக்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் பிரதிபலிக்கிறது.

தமிழ்ச்செல்வன்: இப்படிப்பட்ட ஏற்பாடுகளில் மொழி ஆளுமை ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. மொழியைக் கட்டுப்படுத்துவது, மொழியால் கட்டுப்படுத்துவது என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. ஆங்கிலம் இங்கே ஒரு கட்டளையிடும் மொழியாக வந்தது. இந்திய மொழிகளை அவர்கள் அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை. தங்கள் வசதிக்கேற்பவே எடுத்துக்கொண்டார்கள். மதுரையை மெஜூரா என்றார்கள், தூத்துக்குடியை டூட்டுக்கொரின் என்றார்கள். அதை இங்கேயிருந்த மிடில் கிளாஸ்காரர்கள், நம்முடைய ஊர்ப்பெயர்கள் மாற்றப்படுகின்றனவே என்ற உறுத்தலே இல்லாமல், வெள்ளைக்காரர்களுக்கு எப்படிச் சொல்ல வந்ததோ அதைத் தாங்களும் ஏற்றுக்கொண்டார்கள். மறுநாளிலிருந்தே அவர்களும் மெஜூரா, டூட்டுக்கொரின் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

குமரேசன்: மொழியின் மூலமாக மக்களிடையே நேரடி வினைபுரிவது கலை இலக்கியம்தான். எல்லாக் கால கட்டங்களிலும் கலை இலக்கியம் மூலமாகவே நியதிகள் கற்பிக்கப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டன. அந்த நியதிகளை எதிர்த்த மனப்போக்கும் கலை இலக்கியமாக வெளிப்பட்டிருக்கிறது. தற்போதைய பொருளாதார ஆதிக்கங்கள், அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் ஆகியவற்றை நியாயப்படுத்துகிற கலை இலக்கியப் படைப்புகள் வருகின்றனவா?

லட்சுமணன்: கலை இலக்கியங்கள் மக்களை ஊடகங்கள் வழியாகவே சென்றடைகின்றன. இன்று குறிப்பாக காட்சி ஊடகங்கள் இவற்றை ஹைஜாக் செய்துவிட்டன. உலகமயமாக்கல் சூழலில் ஊடகங்களும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன. தற்போதைய சுரண்டலையும் ஆதிக்கங்களையும் ஏற்கும்படி ஊடகங்களின் துணையோடு பெரிய அளவுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறது. வளரும் நாடுகளின் மக்கள் அரசியல் ரீதியாகக் காயடிக்கப்பட்டவர்களாக மாற்றப்படுகிறார்கள். மக்களின் கலை இலக்கியத் தேவைகள் வர்த்தகச் சரக்காக மாற்றப்படுகின்றன.

திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் ஒரு பக்கம் வட்டாரக் கதைகள் முன்னுக்கு வருகின்றன. இன்னொரு பக்கம், இதுதான் வட்டாரக் கதை என்று விறுவிறுப்புக்காக என வன்முறைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

இதில் ஒரு ஆக்கப்பூர்வமான அம்சமும் இருக்கிறது. பெண் விடுதலைச் சிந்தனைகள், தலித் விடுதலைச் சிந்தனைகள் இதே ஊடகங்கள் வாயிலாக வெளிப்படவும் செய்கின்றன. எந்த அளவுக்கு இவை முழுமையான பெண் விடுதலைக்கோ, தலித் விடுதலைக்கோ உதவப்போகின்றன என்பதில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெண்ணின் கோபங்களும், தலித் ஆவேசங்களும் எழுத்தாக, படமாகப் பதிவாவது தீவிரமாக நடக்கிறது. ஒரு விரிவான சந்தை இருக்கிறது என்ற வர்த்தக ஏற்பாட்டோடு இது கலந்திருக்கிறது என்றாலும், அந்தச் சிந்தனைகளும் பரவுகின்றன. உலகமயமாக்கலோடு கொண்டுவரப்பட்ட இணையத் தொடர்புகள், வர்த்தகப்போட்டிக்காக தரமான சரக்குகளைத் தர வேண்டியிருக்கிற பெரும் ஊடகங்கள் - இவற்றின் துணையோடு தலித் குரலும், பெண்ணின் குரலும் பதிவு செய்யப்பட்டு, விரிவான தளங்களுக்குச் செல்வது வரவேற்கத்தக்கதுதானே...

தமிழ்ச்செல்வன்: காட்சி ஊடகத்தைக் கட்டுப்படுத்துகிற ‘ரிமோட் கன்ட்ரோல்’ கையில் தரப்பட்டிருப்பது, வேகவேகமாக சானல்களை மாற்றுகிற பழக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஒரு நிகழ்ச்சி வேகமாக இல்லை என்றால் குழந்தைகளும் பெரியவர்களும் சலிப்படைகிறார்கள். அதைத் தவிர்த்துவிட்டு வேறு நிகழ்ச்சிக்குப் போகிற மனப்போக்கு, குறிப்பாக இளைஞர்களிடையே பரவியிருக்கிறது. இந்த சலிப்படைகிற உளவியல், குடிப்பழக்கம் போன்று பரவியிருக்கிறது. சமூகத்தில் இதனால் எந்த ஒரு ஆழமான சிந்தனைகளையும் கொண்டுசெல்ல முடியாத, மாறுபட்ட கருத்துகளை விவாதிக்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

குமரேசன்: ஊடகங்கள் இன்றைய பெரும் வர்த்தக நிறுவனக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதற்கு விளம்பர வருவாய் நோக்கங்கள் மட்டுமேயல்லாமல், இந்தக் கட்டமைப்பின் ஒரு அங்கமாகவே ஊடகங்கள் இருப்பதும் மையமான காரணமாக இருக்கிறது. சலிப்படையும் உளவியலின் இன்னொரு கூறாகத்தான், பெரிய வர்த்தகப் பத்திரிகைகளில் ஒரு பக்கக் கதைகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. என்னுடைய கேள்வி, இன்று வருகிற கதைகளும் கவிதைகளும் இதர படைப்புகளும் தற்போதைய பொருளாதார அமைப்பை நியாயப்படுத்துகின்றனவா, அல்லது அதை எதிர்க்கிற மனப்போக்கை வளர்க்கின்றனவா?

தமிழ்ச்செல்வன்: அதே வேளையில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவல்களை விரும்பிப் படிக்கிற ரசனையும் வளர்ந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வியும் இருக்கிறது. 

பி.கே. ராஜன்: தத்துவமும் அரசியலும் தொட முடியாத சில இடங்களையும் தொட்டுவிடுகிற வாய்ப்பு கலை இலக்கியத்திற்குத்தான் இருக்கிறது. தற்போதைய திணிப்புகளை மீறுகிற மனநிலையை உருவாக்கும் வேலையை கலை இலக்கியப் படைப்புகளால்தான் செய்ய முடியும். இன்று அந்த வேலை நடக்கிறதா? 

எஸ்.ராமகிருஷ்ணன்: கலை இலக்கியத்தில் மொழி கையாளப்படுவதோடும் இது சம்பந்தப்படுகிறது. பயன்பாடு, படைப்பாக்கம் இரண்டு நோக்கங்களுடனும் மொழி கையாளப்படுகிறது. தமிழ் மொழியின் சிறப்பு அது பயன்பாட்டு மொழியாகவும் இருக்கிறது, இரண்டாயிரமாண்டு வரலாற்றோடு படைப்பாக்க மொழியாகவும் இருக்கிறது. இதே மொழியைத்தான் திருவள்ளுவரும் கையாண்டார், இன்று நவீன எழுத்தாளரும் கையாள்கிறார். எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது, எந்த நடையில் பயன்படுத்துவது என்ற மனம்தான் மாறியிருக்கிறது.

மொழிக்கலப்பு ஒரு முக்கியப் பண்பாட்டுப் பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு மொழி பல்வேறு இனக்குழுக்களின் சொற்களிலிருந்து பெற்றுக்கொண்டுதான் தன்னை வளர்த்துக்கொள்கிறது. கலப்பில்லாத தூய தமிழ் என்பதை எழுத்திலும், கலப்புத் தமிழைப் பேச்சிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அணுகுமுறை இருக்கிறது. வேறு மொழிகளிலிருந்து வந்து இங்கே ஏற்கப்பட்ட சொற்களை திசைச்சொற்கள் என்று ஏற்கப்பட்டிருக்கின்றன. சீனாவில், வேறு மொழிகளிலிருந்து வந்த சொற்களைக் குறிப்பிட ஒரு தனி எழுத்துருவையே உருவாக்கியிருக்கிறார்கள்.

பயன்பாட்டில், தேவைக்கேற்ப கையாள்வது இயல்பாகியிருக்கிறது. பஸ்ஸ்டாண்டு என்றும் சொல்கிறோம், பேருந்துநிலையம் என்றும் சொல்கிறோம். மின்சார ரயிலை எலெக்ட்ரிக் ட்ரெய்ன் என்று சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை. எழுத்து, படைப்பு, இலக்கியம் என்று வருகிறபோதுதான் தூய மொழியா, கலப்பு மொழியா என்பது பிரச்சனையாகிறது. இலக்கியத்தில் தூய்மையான மொழிதான் மரபின் தொடர்ச்சியாக அமைகிறது. பிற்காலத்தில் இதிலேயும் மாற்றம் ஏற்பட்டு மணிப்பிரவாள நடை வந்தது. பாமர நடையில் எழுதுவது வந்தது. திராவிட இயக்க மொழிநடை என்றே கூட அலங்காரச் சொற்களோடு வந்தது. இன்றைக்கு, பேச்சு நடைக்கும் எழுத்து நடைக்குமான இடைவெளி வெகுவாகக் குறைந்திருக்கிறது.

அறிவுத்துறை சார்ந்து இயங்குகையில், கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்பத்திற்குமான மொழியாக தமிழ் இன்னும் தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை என்ற போதாமையை நாம் உணரவே செய்கிறோம். ஆங்கிலம் போல் மற்ற மொழிச்சொற்களை உள்வாங்கிக்கொள்ளாமல், சொல்வங்கியை உருவாக்கிக்கொள்ளாமல் ஏன் இங்கே ஒரு புனிதத்தன்மை புகுத்தப்பட்டது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது.

குமரேசன்: தமிழ் ஏன் கண்டுபிடிப்புகளுக்கான மொழியாக வளரவில்லை என்பதில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. தாய்மொழி வழிக்கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக, மூளைக்குள் ஒரு மொழிபெயர்ப்பு நடந்துகொண்டே இருக்கிறது. ‘ஹவ் ஆர் யு’ என்பதை ஆங்கிலத்தில் வாங்கி, பின்னர் ‘எப்படி இருக்கிறாய்’ என்று தமிழில் மொழிபெயர்த்தே மூளை புரிந்துகொள்கிறது. ‘நன்றாக இருக்கிறேன்’ என்று தமிழில் யோசித்து, ‘ஐயாம் ஃபைன்’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறது. இதில் ஒருவர் எவ்வளவு வேகமாகத் தனக்குள் மொழிபெயர்க்கிறார் என்பது வேண்டுமானால் மாறுபடலாம். மூளைக்குத் தரப்பட்ட இந்த இரட்டை வேலைப் பளுவும், இங்கிருந்த அடிமைத்தனமுமாகச் சேர்ந்துதான் கண்டுபிடிப்புகளும் வளரவில்லை, கண்டுபிடிப்புச் சொற்களும் உருவாகவில்லை. 

எஸ்.ராமகிருஷ்ணன்: அப்படிச் சொல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், பிற்காலத்தில் மொழிபெயர்ப்புக்கே கூட அவசியம் இல்லாமல், வீட்டிலும் பள்ளியிலும் பணித்தலத்திலும் முழுக்க முழுக்க ஆங்கிலமே கையாளப்படுகிற நிலை திணிக்கப்பட்டுவிட்டதையும் பார்க்கிறோம். தமிழ் பேசத்தான் தெரியும் எழுதவோ படிக்கவோ தெரியாத தலைமுறை உருவாகிவிட்டதே.

தமிழ்ச்செல்வன்: சிவத்தம்பி கூறியிருப்பது போல், தமிழைக் கற்பித்தல் என்பது நவீனப்படுத்தப்படவே இல்லை. அறிவியல்பூர்வமாக மொழியைக் கற்பித்தல் என்பது ஏற்கப்படவே இல்லை. மொழியைக் கற்பிப்பது பண்டிதர்களின் கையிலேயே சிக்கிவிட்டது. தமிழ்ப் பண்டிதர்கள் மொழியை மக்கள்மயப்படுத்த விரும்பவில்லை. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரும் கூட, பல்வேறு கற்பித்தல் முறைகள் நவீனப்படுத்தப்பட்ட போதிலும் கூட, தமிழைக் கற்பித்தலில் அது நடக்க தமிழ்ப்பண்டிதர்கள் அனுமதிக்கவில்லை.  மொழிசார்ந்த இயக்கமாகவும் வளர்ந்த திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபிறகு, இதை நோக்கிய முயற்சிகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக ஆழமான ஆய்வுகளே இல்லாமல் போய்விட்டது. தமிழுக்கு ஒரு நீண்ட தத்துவ மரபு இருக்கிறது. அந்த மரபு மேல்நோக்கிச் செல்லாமல் தடுக்கப்பட்டதில் தமிழ்ப்பண்டிதர்களுக்கும் திராவிட இயக்கம் சார்ந்த தமிழறிஞர்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது.

லட்சுமணன்: கேள்வி கேட்கிற பண்பாட்டை ஊக்குவிக்கிற சமூகத்தில்தான் கண்டுபிடிப்புகள் வரும். இங்கே அறிவுக்கு எதிரான வாதம் முன்னிறுத்தப்பட்டு, கேள்வி கேட்பதே பாவம் என்று போதிக்கப்பட்டிருக்கிறதே! இங்கே மதங்களும் சாதிச் சடங்குகளும் கேள்வி கேட்காதே என்றுதான் வலியிறுத்துகின்றன. கடந்தகாலத்தில் மட்டுமல்ல, இப்போதும் இதுதான் நிலை. ஒரு அரசியல் இயக்கத் தொண்டர், சில அம்பேத்கர் சிந்தனைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள முயன்றபோது, அவரது தலைவர், ‘நீ எதற்குத் தனியாகப் படிக்கிறாய்? அதுதான் நான் பேசியிருக்கிறேனே... இந்த கேசட்டைப் போட்டுக் கேள்,’ என்று சொன்னார்! அந்தத் தொண்டர் தானே படித்துத் தெளிவடைவதைத் தடுத்து, ‘நான்தான் அறிவு, நான்தான் மையம்’ என்று சொல்கிறவராக அந்தத் தலைவர் இருக்கிறார். 

எஸ்.ராமகிருஷ்ணன்: படைப்பாக்கத்தைப் பொறுத்தவரையில், மிகவும் போற்றப்பட்ட பல தமிழ் இலக்கியப் படைப்புகள் கிராமங்களின் விழுமியங்களைப் பேசுகிறவையாக இருப்பதைப் பார்க்கலாம். நிலப்பிரபுத்துவம் மேம்பட்ட கட்டத்தில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாகின. இன்றைக்கு நவீன இலக்கியப் படைப்புகளுக்கு, அந்த செவ்வியல் இலக்கியங்களைப் படித்து சொல்லாடல்களையும் சித்தரிப்புகளையும் உள்வாங்கிக்கொள்ளலாமே தவிர, அவற்றையே முன்மாதிரிகளாகக் கொள்ள முடியாது. கம்பராமாயணம் போல் வராது, சங்க இலக்கியம் போல் வராது என்று சொல்கிற போக்கு அப்படி முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டதால் வருவதுதான்.

இடையில் யதார்த்த எழுத்து என்று ஒரு போக்கு, நடுத்தர வர்க்க மனநிலையிலிருந்து உருவானது. சொந்த வாழ்க்கை பற்றிய சித்தரிப்புதான் அதில் இருந்தது. வீட்டைவிட்டு வெளியே போனால் எத்தனை மரங்கள் இருக்கும், அவற்றில் எத்தனை குருவிகளின் குரல்கள் ஒலிக்கும்? அவற்றைப் பற்றிய சித்தரிப்பே இருக்காது. சமூகம் பற்றிய பார்வையும் இருக்காது. எண்பதாம் ஆண்டுகளில் அந்தப்போக்கிற்கு அடிவிழுந்து, அது ஒரு வெற்று யதார்த்தம் என்ற விமர்சனம் மேலேழுந்தது. பின்னர் சமூக யதார்த்தம் என்ற கதைப்போக்கு உருவானது. வாழ்க்கையை நெருங்கிப்பார்த்து எழுதுகிற போக்கு வளர்ந்தது. தொண்ணூறுகளில் சமூகத்தைப் பார்த்து எழுதுவதும் தொடங்கியது.

இன்றைக்கு மக்களின் வாழ்க்கையைப் பல தளங்களில் வெளிப்படுத்துகிற படைப்பு முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கின்றன. சிறுகதைகளாக, நாவல்களாக பாடல்களாக, திரைப்படங்களாக என பல்வேறு வடிவங்களில் அந்த முயற்சிகள் பயணமாகின்றன. கதை வடிவங்கள் மட்டுமல்லாமல், கட்டுரை எழுத்தும் வளர்ந்திருக்கிறது. அதில் பல்வேறு துறைகள் சார்ந்து நிறைய தகவல்கள் திரட்டப்பட்டு, கட்டுரையாக்கித் தரப்படுகின்றன. வட்டார வழக்கில் எழுதுவது, அதிலும் அடித்தட்டு மக்களுடைய மொழியில் அவர்களுடைய வாழ்க்கையை எழுதுவது என்ற வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே, தமிழர்கள் தங்களது இலக்கியப் பெருமையைப் புராதனத்தில் மட்டுமே தேடுவதிலும் ஈடுபடுகிறார்கள். புறத்தில் எவ்வளவு நவீன வாழ்க்கைக்கு மாறியிருந்தாலும், அகத்தில் சமகால இலக்கியங்களிலிருந்து விலகி, தொன்மை இலக்கியத்தையே போற்றுகிறார்கள் என்ற முரண்பாட்டையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஏன் இப்படி என்ற விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன.

சலிப்பு மனப்பான்மை என்பது ஊடகங்களால்தான் ஏற்படுத்தப்படுகிறது. ஐந்து நிமிடத்திற்கு சானலை மாற்ற விடாமல் வைத்துவிடுங்கள் என்றுதான் நிகழ்ச்சியை உருவாக்குகிற கலைஞர்களிடம் சொல்லப்படுகிறது! விஜய் டி.வி.யில் நீயா நானா விவாதத்தை அவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்பதும் நடககிறது. ஆனால், அந்த விவாதங்களில் பங்கேற்பவர்களும் சரி, பார்க்கிறவர்களும் சரி அதைத் தாண்டி, பொது விவாதங்களுக்கு வருவதில்லை! இப்படிப் பொதுவிவாதங்களுக்கு வருவதில்லை என்பதும் இன்றைய ஒரு முக்கியமான பண்பாட்டுப் பிரச்சனைதான்.

குமரேசன்: அப்படிப்பட்ட விவாதங்களிலாவது அரசியல் விமர்சனங்களும், பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய நிலைமைகள் பற்றிய விமர்சனங்களும் இடம்பெறுகின்றன. இலக்கியப் படைப்புகளில் அப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றனவா அல்லது தற்போதைய நிலைமைகள் நியாயப்படுத்தப்படுகின்றனவா? 

எஸ்.ராமகிருஷ்ணன்: நேரடியாகக் கட்சி அரசியல் வெளிப்படுவதில்லைதான். ஆனால், வாழ்க்கை மாற்றங்களைக் கவனித்து எழுத்தாக்குகிறபோது, இன்றைய அரசியல், பொருளாதாரம் இவற்றிற்கு எதிரான விமர்சனங்களாக அது உருவாகத்தான் செய்கிறது. அதனால்தான், அப்படி இயங்குகிற படைப்பாளிகளை அரசியல் அங்கீகரிக்க மறுக்கிறது. நான் மெக்காலே பற்றிய ஒரு கட்டுரையில் அவரை விமர்சித்திருந்தேன். உடனே எனக்கு, ‘மெக்காலேயால்தான் தலித்துகள் விடுதலை பெற்றார்கள். நாங்கள் மெக்காலே தினம் கொண்டாடப்போகிறோம்,’ என்று ஒரு கடிதம் வந்தது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் பற்றி நான் எழுதினால், இன்று இப்படி எதிர்வினை வருகிறது! ஆக, அரசியல் செயல்பாடு என்பது இலக்கியத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இது தனித்தனியாக நடக்கிறது, ஒரு ஒட்டுமொத்தமான குரலாக எழவில்லை என்பது உண்மை. அதற்கேற்ற அரசியல் களம் இன்னும் உருவாகாததுதான் காரணம். முன்பு தத்துவங்களைப்  படைப்பாளிகளை நாடினார்கள். தத்துவவாதிகள் எழுத்தாளர்களை வழிநடத்தினார்கள். இன்று அது இல்லை. இந்த நூற்றாண்டில் தத்துவவாதியாக, அறிவுவாதியாக ஒருவர் அமையவில்லை. அந்த வழிகாட்டலும் அமையவில்லை. இருக்கிறவர்கள் மேற்கிலிருந்து வாங்கிச் சொல்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இங்கிருந்து உருவாகவில்லை. கோட்பாட்டு வழிகாட்டல் இல்லாதபோது, படைப்பாளியின் அறியாமையும் சேர்ந்தேதான் அவரது படைப்பில் வெளிப்படும். அறிவுத்தளத்தில் செயல்படுகிறவர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளி பெரிதாக இருக்கிறது. படைப்பாளிகளை அறிவுத்தளத்தினர் அங்கீகரித்து, இணைந்து செயல்படுகிற போக்கு வளர வேண்டியிருக்கிறது.

தமிழ்ச்செல்வன்: தமிழ் எழுத்து வரலாற்றில் வாசகர்களுக்கும் பங்கிருக்கிறது. ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதப்பட்ட காலத்தில் வாசகர்கள் யார்? உயர் சாதிகளாகத் தங்களை வைத்துக்கொண்டவர்கள்தான். அவர்களுக்கேற்ற படைப்புகள்தான் அன்று வந்தன. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களிலிருந்து வாசகர்களும் படைப்பாளிகளும் வருகிறார்கள். படைப்புகளின் உள்ளடக்கமும் வடிவமும் அதற்கேற்றபடி மாறுகின்றன. பிற்காலத்தில், தலித் மக்கள், பழங்குடி மக்களிலிருந்து வாசகர்கள் வருகிறார்கள். படைப்பாளிகளும் உருவாகிறார்கள்.

குமரேசன்: உலகமயமாக்கல் சூழல் மக்களை வார்ப்பது போலவே, படைப்பாளிகளையும் வார்க்கிறது. முதலாளித்துவ சமுதாய அமைப்பையும், அதன் கொடூரமான சுரண்டல்களையும் ஆதரித்து எழுதவில்லை என்றாலும் கூட, அதை எதிர்த்து எழுதாமல் இருப்பதும், அதன் மீதான கோபத்தைக் கிளப்பாமல் இருப்பதும் கூட ஒரு வார்ப்பு வேலைதான். சிலர்தான் அதிலிருந்து விடுபட்டு மாற்றத்திற்காக எழுதுகிறார்கள். 

எஸ்.ராமகிருஷ்ணன்: சுயமான சிந்தனைகள் வருகிறபோது அதை அங்கீகரிக்கிற பண்பாடு வரவேண்டும். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய உலகம் அங்கீகரித்திருக்கிறதா என்று பார்க்கிற பழக்கத்தைக் கைவிட வேண்டும். ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே கூட நிகழ்கிறபோது, மேற்குலக அறிவியல் சமூகம் அதை அங்கீகரிக்கிறதா என்று எதற்காகக் காத்திருக்க வேண்டும்? அது சுயசிந்தனையை மழுங்கடிக்கிறது. அந்தக் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வருகிறபோதுதான் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் வளரும். அது பண்பாட்டிலும் இலக்கியத்திலும் வெளிப்படும். இப்போது ஓரளவுக்கு சுயசிந்தனை வெளிப்படத்தான் செய்கிறது என்றாலும் அது இன்னும் வேகப்பட வேண்டும். மேற்குலகினர் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தங்களுக்கு அங்கீகாரம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.

தமிழ்ச்செல்வன்: மேற்குலகின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிற சிந்தனையே அவர்கள் நம் மீது திணித்ததுதான். அவர்கள் தங்களை மேல் நிலையில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை அங்கீரிக்கிற அல்லது தள்ளுபடி செய்கிற தகுதி தங்களுக்கே உரியதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். அரசியல் அதிகாரத்தின் மூலமாகவும் அதை நிறுவினார்கள். அதிலிருந்து விடுபடும் உணர்வு மேலோங்க வேண்டும்.
 
குமரேசன்: பண்பாட்டின் முக்கியமான வெளிப்பாடுதான் விழாக்கள். பொங்கல் போன்ற விழாக்களின் முக்கியத்துவம் என்ன? விழாக்களின் இன்றைய நிலை என்ன? 

எஸ்.ராமகிருஷ்ணன்: இயற்கையை வழிபடுதல், நன்றி தெரிவித்தல், மக்களோடு சேர்ந்து பகிர்ந்துகொள்ளுதல் என்ற அடிப்படையில்தான் பொங்கல் விழா தொடங்கியது. பின்னர், இதை இதை இந்த நாட்களில் செய்ய வேண்டும் என்ற வரையறைகள் கொண்டுவரப்பட்டு, சடங்குகளாக்கப்பட்டு மத அடையாளம் புகுத்தப்பட்டுவிட்டது. அதுவரையில் எல்லோருமாகக் கொண்டாடிய இந்த விழா, பின்னர் இந்துக்களின் விழாவாகக் கடத்தப்பட்டுவிட்டது. இப்போது அது மதம் சார்ந்ததாகவும் இல்லாமல் ஒரு வேடிக்கைக் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. இன்னொரு புறத்தில், விவசாயமே இல்லாமல் போய்விட்ட நிலையில், விவசாயத்திற்கான விழா மட்டும் எப்படி நடக்கிறது? இன்று  அது நம் மரபை நினைவுபடுத்துகிற விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பல மரபுகள் கைவிடப்பட்டுவிடலாம் என்ற நிலையில் விழாக்களை மதம் மறுபடியும் ‘ஆர்கனைஸ்’ செய்கிறது. புத்தாண்டு நாளில், நள்ளிரவில் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இது, புத்தாண்டு எங்கிருந்து வந்திருந்தாலும் அதை மதம் எடுத்துக்கொண்டதைக் காட்டுகிறது.

முன்பு பொங்கல் வாழ்த்து அட்டைகளில் ஒரு மாடு, பொங்கல் பானை, விவசாயி படங்கள் இருக்கும். இப்போது வாழ்த்து அட்டையும் இல்லை, விவசாயியும் இல்லை, பொங்கல் பானையும் இல்லை. குக்கர்தான்!

விழாக்கள் இரண்டு வகைகளில் முறைப்படுத்தப்படுகின்றன. மரபுவாதிகள், காலையில் வெள்ளை வேட்டி சட்டையோடு பொங்கல் வைத்து வணங்கிவிட்டு, பின்னர் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம், அப்படிப்பட்ட சடங்குகள் எதுவும் இல்லாமல், இது ஒரு கொண்டாட்டம் என்ற முறையில் மட்டுமே பங்கேற்கிறவர்களும் இருக்கிறார்கள்.

வேர் இல்லாமல் போய்விடுவோமோ, மரபின் தொடர்ச்சி விட்டுப்போய்விடுமோ, பண்பாட்டுக்கூறுகள் விட்டுப்போய் சமுதாயம் அழிந்துவிடுமோ என்ற அச்சமும் இந்த விழாக்களில் இருக்கிறது. ஆகவேதான் வெளிநாடுகளில் இருப்பவர்களும் சரியாகப் பண்டிகை நாட்களில் ஒரு சிறு அளவிலாவது வழிபாட்டை நடத்திக்கொள்கிறார்கள்.

லட்சுமணன்: பண்டிகைகளில் சடங்குகள் மட்டுமல்லாமல், வியாபார நோக்கமும் இணைந்துவிட்டது. பொங்கல் விழாவில், தமிழைப் போற்றுகிற அம்சமும், பின்னர் தமிழை வைத்து நடத்துகிற அரசியலும் சேர்க்கப்பட்டுவிட்டன. பொங்கலின் வரலாறு, தமிழர் பண்பாட்டு மரபு, முக்கியத்துவம் இதையெல்லாம் சொல்லாமலே வெறும் சன்னல் திரைச்சீலை அலங்காரம் போல் மாற்றப்பட்டுவிட்டது. பொங்கல் என்றால் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகர்கள் வந்து அவர்களுடைய கதைகளைச் சொல்வதாக ஊடகங்களும் மாற்றிவிட்டன.

தமிழ்ச்செல்வன்: இதைப் பற்றிய கேள்விகளையும் நாம் எழுப்பியாக வேண்டும். கேள்வி கேட்கிற பண்பாடு வளர்க்கப்பட வேண்டும். அதற்கு முற்போக்குச் சிந்தனைகளும் படைப்புகளும் துணைபுரிய வேண்டும். அந்த நம்பிக்கைகளை நம் பொங்கல் வாழ்த்தாகப் பரிமாறிக்கொள்ளலாம்.

Pin It