'நாம் தமிழர் கட்சி' கோவையில் வெளியிட்ட ஆவணம் அது வெளியிடப்பட்ட நாளிலிருந்து கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. பெரியாரின் மீதான பொய்யுரைகளுக்காக மட்டுமே அது விமர்சிக்கப்படவில்லை. இனவெறியை அடிப்படையாகக் கொண்டு வெற்று முழக்கங்களை 'மாற்று' அரசியலாக முன்வைத்து சிறுபான்மை மொழி, மதங்களைச் சார்ந்தவர்களை எதிரியாக சித்தரிக்கிறது. அதன் இந்த பாசிச அரசியல் தமிழகத் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களுக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் நிறைந்தது என்கிற காரணத்திற்காகவே விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
திரு.சீமான் ஆனந்தவிகடன் நேர்காணலில் “கொள்கை விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.” என்கிறார். எதிர்ப்பின் காரணமாக நாளையே நாம் தமிழர் கட்சி இந்த ஆவணத்தை திருத்தவோ, மாற்றவோ செய்யலாம். ஆனால் வரலாற்றுத் திரித்தல்கள், தகவல் திரித்தல்கள் மற்றும் முரண்பாடுகளுடன் பாசிச, இனவெறுப்பை கொள்கையாக வகுத்து 'மாற்று அரசியலாக' அறிமுகம் செய்ததற்கு என்ன பதிலை வைத்திருக்கிறார் திரு. சீமான்?
பெரியாரை விமர்சிக்கக் கூடாதா என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். பெரியாரையும் அவரது போராட்டங்களையும் யாரும் விமர்சிக்கலாம். ஆனால் அத்தகைய விமர்சனங்கள் சரியான தகவல்களோடும், நேர்மையுடனும் இருப்பதே 'மாற்றை' முன்வைக்கிற அரசியல் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் பெருமை சேர்ப்பதாகும். சீமானுக்கு முன்னர் பார்ப்பனீய சிந்தனையாளர்களும், 1994ல் பெங்களூர் குணாவின் பிரச்சார நூலும், தொடர்ந்து இந்துத்துவ இணையதளப் பிரச்சாரகர்களும் பலமுறை தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் எதிரானவராக பெரியாரை சித்தரித்திருக்கிறார்கள். பெரியாரை அவர் பேசிய, எழுதிய, நிலைப்பாடுகள் எடுத்த போராட்டச் சூழல்களிலிருந்து கருத்துக்களைப் பிரித்தெடுத்தும், பிழையாக தகவல்களைத் திரித்தும் பரப்பிய அவதூறு நோக்கிலான அத்தகைய விமர்சனங்களை பலரும் ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி உருவாகும் வரையில் பெரியார் தி.க. அமைத்துக் கொடுத்த மேடைகள் தோறும் 'நான் பெரியாரின் பேரன்...' என்று அறிவித்துக் கொண்ட திரு. சீமான், அந்த மேடைகள் ஒன்றில்கூட பெரியாரை விமர்சிக்கவுமில்லை; பிரதான எதிரியாக சித்தரிக்கவுமில்லை. ஆவண வெளியீட்டிற்குப் பின்னர் பெரியார் தி.க. கண்டிக்கத் துவங்கியவுடன் பதிலளிப்பதற்கு முடியாமல் "அண்ணன்களுக்கு கண்டிக்க உரிமையுண்டு" என்ற பெயரில் பதுங்குகிறார்.
இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் சனநாயகமற்ற, நாடகீய அரசியலிலிருந்து விடுதலையும் மாற்று அரசியலின் தேவையும் உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதனடிப்படையில் இந்திய அதிகார மையத்திடமிருந்து தமிழகத்தின் உரிமைகளையும், மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள வலுவான மாநில அரசும், தலைமைகளும் தேவை. ஆனால் அத்தகைய அரசு பொய்யான பிரச்சாரங்களின் மூலமும், இனவெறியின் மூலம் நிறுவப்படும்போது அது பாசிசக் குணமுடையதாகவே இருக்கும். மற்ற கட்சிகளின் அரசியல் கொள்கைகளையும், செயல்பாட்டு நடைமுறைகளையும் விமர்சித்து, அதற்கு மாற்றாக முற்போக்கான, சனநாயக அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான கொள்கையையும், திட்டங்களையும் வகுத்திருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி முன்வைத்துள்ள கொள்கைகள் இந்திய அரசாலும் அதன் அதிகார வர்க்கத்தாலும் ஏமாற்றத்திற்குள்ளாகிற தமிழக மக்களின் உரிமைகளையும், அரசியலதிகாரத்தையும் முழுமையாக அடையவும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான கொள்கை மாற்றங்களை உருவாக்கவும் உதவாது.
'தமிழ் உலகின் முதல் மொழி. தமிழர் உலகின் முதல் மக்கள்' என்பதும் 'தமிழ்', 'தமிழர்' தொன்மை, சிந்துசமவெளி நாகரீகம் உட்பட நாம் தமிழர் கட்சி ஆவணம் கட்டியமைக்கிற கதைகளும் வரலாற்று அடிப்படையிலோ, அறிவியல் அடிப்படையிலோ நிரூபிக்கப்படாத பழம்பெருமையைப் பேசுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் முரண்பாடுகளை அடையாளப்படுத்தி, வரிசைப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் அரசியலை வகுத்திருக்கிறது. நிகழ்கால அரசியலையும், எதிர்கால அரசியலையும் மாற்றியமைக்க பழங்கால ஆதி மனிதனையும், மனித சமூகத்தையும் தமிழ், தமிழர் என்ற அடையாளத்திற்குள் அடைத்து, அதனடிப்படையில் கொள்கைகளை வகுப்பதிலிருந்தே அதன் பாசிசமும், இனவெறுப்பும் துவங்குகிறது.
சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான பாசிசம்
நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் அசீவகம், உலகாய்தம், வள்ளுவம், வள்ளலாரியம் ஆகியவற்றை இணைத்து 'தமிழியம்' என்று தமிழர்களின் நெறியாக குறிப்பிடுகிறது. அதில் 3 வது முரண்பாடாக,
“தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்கும் இடையே முரண்பாடு” (நாம் தமிழர் கட்சி ஆவணம், பக்கம் 37)
அடையாளப்படுத்துகிறது. மேற்கொண்டு அதன் விளக்கமான பகுதியில்,
“3ம் முரண்பாடுகளான முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று உணர்ந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்.” (நாம் தமிழர் கட்சி ஆவணம்: பக்கம் 39)
ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகளின் கொள்கை ஆவணத்தைப் படிப்பது போன்ற பதட்டத்தை இது உருவாக்குகிறது. பார்ப்பனீய இந்துத்துவ அரசியலும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இணையும் புள்ளியும் இது. சாவர்க்கர், கோல்வால்கரின் இந்துத்துவ கோட்பாட்டிலிருந்து சற்றும் பிசகாமல் பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழுகிற இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாக சித்தரிக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி ஒடுக்குமுறை மற்றும் தனிப்பட்ட விருப்பின் காரணமாக தனது மதத்தை தேர்வு செய்த உரிமையை எதிர் நிறுத்துகிறது. அவர்களை "எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்" என்று சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான கண்காணிப்பையும், சந்தேகத்தையும் தமிழக மக்களிடையே விதைத்து, பிளவை உருவாக்க முனைகிறது.
முகமதிய மன்னர்கள் ஆட்சியையும், பிரித்தானிய காலனியாதிக்கத்தையும் "முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை" என்பதன் வழியாக இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் மீது பழி சுமத்துகிறது. "சட்டப் பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை" என்பதன் மூலம் இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் அன்னியப்படுத்துகிறது. "முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று உணர்ந்து வருவாராயின்" என்கிற பாசிச, இனவெறி நிபந்தனையை முன்வைக்கிறது.
சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களுக்கான தனிச் சட்டப் பாதுகாப்புகளை பறித்து பொதுசிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த மத நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் அயல்நாட்டு தொடர்புகளை எதிரியாகவே அவை சித்தரிக்கின்றன. இந்துத்துவா என்பது கலாச்சாரமென்றும், அத்தகைய 'கலாச்சார தேசியத்தை' பிறமதங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் அத்வானியும், இந்துத்துவவாதிகளும் வலியுறுத்தியதும் கவனிக்கத்தக்கது. அதே வகையில் நாம் தமிழர் கட்சி 'தமிழியத்தை' முன்வைக்கிறது. இவை ஒரு மதசார்ப்பற்ற, சனநாயக அரசிற்கு உகந்த கூறுகளல்ல.
இந்துத்துவ அரசியல் அதன் பழம்பெருமை, பழங்கதைகளை பெருமிதமான அடித்தளமாக வைத்து, நில எல்லையை முன்வைத்து, மற்ற மொழி, மதங்களைச் சார்ந்த மக்களை எதிரிகளாக சித்தரித்து அதன் அரசியல் கொள்கையை வகுத்திருக்கிறது. தேர்தல்களுக்கு ஏற்ப அவற்றிலிருந்து தந்திரமாக பிரச்சாரங்களையும், முழக்கங்களையும் தேர்ந்தெடுத்து முன்வைக்கிறது. இந்துத்துவ அரசியலின் நாயகர்களில் மன்னர்களுக்கு முக்கிய இடமளித்திருக்கிறது. மராட்டிய மன்னன் சிவாஜி இந்துத்துவ அரசியலுக்கு அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்.
அதேவகையில், நாம் தமிழர் கட்சியும் பழங்கால கதைகள், மன்னர்கால பழம்பெருமையை அடித்தளமாக வைத்து எல்லைகளை விரித்துக் கட்டி எழுப்புகிறது. அதன் நாயகர்களில் சோழமன்னர்களும், பிரதானமாக '25 பெருமைமிகு நாடுகளை வென்று ஆண்ட அருண்மொழித் தேவனாம் இராசராசன்' இடம்பெறுகிறார். நிகழ்கால அரசியலில் அதிகாரம் செலுத்துகிற ஆட்சியாளர்களும் சனநாயகத்தை கட்டுப்படுத்துகிற மாமன்னர்களாக இருக்கையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய மன்னர்காலப் பெருமிதம் எத்தகைய மாற்றத்திற்கு உதவப்போகிறது? மும்பையில் சிவசேனா கட்சியினருக்கு ஆதரவாக மும்பை வாழ் தமிழ்மக்களிடம் திரு. சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்ததையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரியார் மீதான அதன் விமர்சனங்களும் இந்த நேர்கோட்டில் தான் அமைந்துள்ளது. இந்துத்துவாவிற்கு தமிழகத்தில் அரசியல் களத்தை விரிவாக்குகிறது நாம் தமிழர் கட்சியின் கொள்கை.
சாதீய ஒடுக்குமுறை, ஒதுக்குதல், தீண்டாமை, அடக்குமுறைகள் குறித்து...
"நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால், நாம் மிகப்பெரியதொரு மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன.
ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. முதலில் அவை சமூக வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்துகின்றன; அவை தேசியத்திற்கு எதிரானவை ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. ஆனால், நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இவை அனைத்தையும் வென்றாக வேண்டும்." - டாக்டர் அம்பேத்கர்
அம்பேத்கரின் இக்கருத்தை தமிழ்த்தேசிய அரசியலுக்கு பொருத்திப் பார்ப்பது ஆக்கப்பூர்வமான, சனநாயக முறையிலான மாற்று அரசியலை கட்டியெழுப்ப அவசியமாகிறது. தமிழகத்தில் ஆழமாக பிறப்பு முதல் இறப்பிற்குப் பின்னர் வரையில் நடைமுறையில் இருக்கிற சாதீய அடக்குமுறை, ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலை முதன்மையான முரண்பாடாக நாம் தமிழர் கட்சி அணுகவில்லை. சாதியப் படிநிலையில் கீழ் படி முதல் மேல் படி வரை படிப்படியாக உயர்கிற அதிகாரமும், வெறுப்பும் கலந்த அடக்குமுறையை வாழ்வியலாகக் கொண்டிருக்கிற மக்களை அவற்றிலிருந்து விடுவிக்க சாதியொழிப்புத் திட்டம் எதையும் முன்வைக்காமல் "தமிழராக நாம் ஒன்றிணைவோம்" என்கிறது நாம் தமிழர் கட்சி. துல்லியமான திட்டங்ளை முன்வைக்காமல் 'தமிழர்' என்கிற முழக்கத்தை மட்டும் முன்னெடுப்பது ஒடுக்கப்படுகிற மக்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்காது. நாம் தமிழர் கட்சி சாதிய முரண்பாட்டை மிக எளிமைப்படுத்தி கடந்துசெல்வது, அதன் ஆதிக்கசாதி அரசியல்தன்மையை அப்பட்டமாக்குகிறது. இன்றைக்கு அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கிற ஆதிக்கசாதிகளின் அரசியலுக்கு எவ்வகையிலும் அது மாற்றாகவோ, மாறுபட்டதாகவோ இல்லை.
சிறுபான்மை மொழியினர் மீதான பாசிசம்
'இன்னார் தெலுங்கு பேசுகிற சாதியைச் சார்ந்தவர்', 'இன்னார் கன்னடம் பேசுகிற சாதியைச் சார்ந்தவர்' என்று சாதி வழியாக பல தலைமுறைகளுக்குப் பின்னால் சென்று மொழிப் பின்புலத்தை அடையாளப்படுத்தி ஒருவரைத் தாக்குவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அடிப்படையில் இது பாசிச குணமுடையது. தமிழகத்தில் தலைமைகளின் கொள்கை மற்றும் செயல்பாட்டை விமர்சிப்பதற்குப் பதிலாக இந்த அசிங்கமான, அருவருப்பான சாதிவெறி, இனவெறி மற்று மொழிவெறிப் பாசிசத்தையே நாம் தமிழர் கட்சி அதன் பிரச்சாரங்களில் முன்னெடுக்கிறது.
குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் பெரும்பான்மை மொழி வழி வந்தவர்களை மட்டுமே மையப்படுத்தி உருவாக்குகிற எந்த அரசியல் கொள்கையும், தேசியமும் ஆபத்தான பாசிச இனவெறுப்பை அரசியல் பாதையாக்குகிறது. சிறுபான்மை மொழி பேசுகிறவர்களிடம் அவர்களது மொழியை விட்டும் பெரும்பான்மையினரின் மொழியை "தாய்மொழியாகவும், வாழ்வியல் மொழியாவும்" ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதும், வற்புறுத்துவதும் சனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உரிமைகளை மறுக்கிற பாசிச அரசியலாகும். ஈழத் தமிழர்கள் மீது அவர்களது தாய்மொழி அல்லாத சிங்கள மொழியைத் திணித்தது சிங்கள இனவெறி அரசு. அத்தகைய அரசியலையே நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது.
"பிற மொழியாளர்கள், பிறமொழியாளர்களாகவே தொடர்ந்து வாழ்வதும் அல்லது அந்த பிறமொழிகளுக்கும் தாய்மொழி தமிழே என்று உணர்ந்தறிந்து, தமிழை வாழ்வியல் மொழியாகவும், அடுத்து, வழிவழியாகத் தாய்மொழியாகவும் ஏற்றுத் தமிழராக வாழ்வதும் அவர்களுக்குள்ள உரிமை." (பார்க்க: பக்கம் 33, நாம் தமிழர் கட்சி ஆவணம்)
மொழி ஆதிக்க பாசிசத்தை இதைவிட மென்மையாக வேறுவழியில் திணிக்க முடியாது. தமிழை தாய்மொழியாகக் கொண்டும், வாழ்வியல் மொழியாகக் கொண்டும், பிறமொழியை கற்று அயல்நாடுகளில் வாழுகிற தமிழர்களுக்கு அந்த நாடுகளில் இதே வகை பாசிசத்தைப் பொருத்தினால் எப்படியிருக்கும்? அவர்கள் தமிழ் மொழியைக் கற்கும் உரிமையை இழக்க மாட்டார்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் எழுத, பேச முடியாத தலைமுறையாக உருவாவதற்கு வழிவகுக்காதா?
தங்களது ஆவணத்தில் மொழி குறித்த நிலைபாடுகளில் இன்னும் பல இடங்களில் நாம் தமிழரின் மொழி ஆதிக்க பாசிசம் வெளிப்படுகிறது.
"அவரவர் நாட்டில் அவரவர்க்கு உரிமை தமிழர் நாட்டில் தமிழர்க்கு உரிமை" என்கிறது மற்றொரு முழக்கம். மராத்திய மண்ணிலிருந்து வேற்று மொழிக்காரர்களை வெளியேற்றும் வகையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பால் தாக்கரேவின் அரசியல்லுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த முழக்கம். இந்த முழக்கத்தை பிறமாநிலங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் பல தலைமுறைகளாக வாழுகிற தமிழர்களுக்குப் பொருத்திப் பார்க்க அச்சமாக இருக்கிறது. அவர்களது அரசியல் உரிமையையும், மொழியுரிமையையும் பறிக்கிற இந்த பாசிசப் போக்கு கண்டிக்கத்தக்கது. இத்தகைய அரசியல், தமிழர்களின் விடுதலைக்கும், உரிமைப் போராட்டங்களுக்கும் எதிரானது.
ஈழ அடையாளங்களைப் பயன்படுத்தலும், இப்பாசிசக் கொள்கையின் எதிர்விளைவுகளும்...
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழீழத்தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரனின் இடம் சமன்செய்ய முடியாதது. தமிழகத்தின் அரசியலும், சூழலும் ஈழத்தின் சூழலிலிருந்து வேறுபட்டது. ஆனால் திரு. வே. பிரபாகரனையும், ஈழத்தை தொடர்புபடுத்துகிற முழக்கங்களையும் அரசியல் கொள்கை ஆவணத்தில் வைத்திருப்பதன் ரகசியம் ஈழத்தமிழர்களின் ஆதரவை கவர்கிற திட்டம் தானே? இத்தகைய ஒரு பாசிச கொள்கையை முன்வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும், நீதிக்குமான போராட்டங்களுக்கு அது எதிர்விளைவுகளை உருவாக்குவதை ஈழத்தமிழர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.
வன்னி இனப்படுகொலைக்குப் பிந்தைய தமிழக அரசியல் முன்னெப்போதைக் காட்டிலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி இனப்படுகொலை உக்கிரத்தின் விளைவாகப் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழக அரசியலையும், ஈழத்து விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்த முடியாத அளவு அக்கட்சி குழப்பமாக பிணைத்துள்ளது. இதனடிப்படையில் ஈழத்தமிழர்களில் பலரும் பல நாடுகளில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவையும், உதவிகளையும் செய்துவருகிறார்கள். நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற அரசியல் மற்றும் கொள்கைகளின் விளைவுகள் நன்மையோ, தீமையோ அவை ஈழத்தமிழர்களையும் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கட்சி ஆவணத்தில் மிகக் கணிசமான பக்கங்களை திரு. வே. பிரபாகரனுக்கும், ஈழத்தமிழர் குறித்தும் ஒதுக்கியிருப்பது ஈழத்தமிழர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் ஈர்ப்பை உருவாக்கலாம். நாம் தமிழர் கட்சி புலிகளின் கொடியினை அடியொற்றிய கொடி. தமிழீழத்தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் மற்றும் ஈழத்தை முன்னிறுத்திய பிரச்சாரம் இவற்றை பயன்படுத்துகிற போது, அதன் கொள்கையின் விளைவுகள் ஈழத்தமிழர்களையும் பாதிக்குமென்பதை கருத்திலெடுக்க வேண்டும்.
வன்னி இனப்படுகொலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அதிகாரம் கைகட்டி வேடிக்கை பார்த்த ஏமாற்றத்தை, வேதனைகளை நெஞ்சில் தாங்கியும், இனப்படுகொலையின் உளவியல் தாக்குதலையும், நிர்மூலமாக்கப்பட்டுள்ள தமிழர் விடுதலைப் போராட்ட வலிகளிலும் வாழுகிற மக்கள் நிகழ்கால, எதிர்கால அரசியலை தேர்ந்தெடுப்பதிலும், கட்டமைப்பதிலும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் இருப்பது அவசியமாகிறது. அரசியல் இலக்குகளை அடைவதற்கு கொள்கைகளும், திட்டங்களும் இன்றியமையாதவை என்கிற அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியலுக்காக முன்வைக்கப்படுகிற கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். அத்தகைய விமர்சனங்களை புறந்தள்ளுகிற எந்த முயற்சியும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிகளைப் பெற உதவலாம். சமூகத்தையும், அரசியல் அதிகாரத்தின் தற்போதைய நிலைமையையும் மாற்றுகிற அரசியல் இலக்குகளை அடைவதற்கு எவ்வகையிலும் உதவாது.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை மாற்றுக் கொள்கை அல்ல. மற்றுமொரு அரசியல் கட்சியின் பிரகடனம். அது பாசிச, இனவெறியை அரசியலாக வைக்கிறது. சனநாயமுறையில், ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலில் அக்கறையுடையவர்கள் அதை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் காலத்தின் கட்டாயம்.
- யோ.திருவள்ளுவர்
A deep chill did ran through my spine reading these sentences. There is NO difference between this sentence and the Subramaniam Swamy's hate-filled harangue in DNA against Muslims and Christians (for which he was thrown out of Harvard).
If this document is simply due to some mischief mongers, then they need to be identified, exposed and removed from such higher posts. But if Seeman does believe in this 'aavanam', then in my opinion, Naam Tamilar is fast becoming an untouchable fascist party. Hope some sense prevails.
Thank you Keetru for publishing these articles exposing Naam tamilar's 'aavanam'
/////முகமதிய மன்னர்கள் ஆட்சியையும், பிரித்தானிய காலனியாதிக்கத்த ையும் "முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்த ை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை" என்பதன் வழியாக இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் மீது பழி சுமத்துகிறது.// //// முகமதியர் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், உருது, அரபி, ஆங்கில மொழிகள் தான் தமிழை ஆண்டன. சிறு குழந்தைக்கு கூட தெரியும். இந்த விஷயம் கட்டுரை ஆசிரியர்க்கு தெரியாமல் போனது வியப்பை அளிக்கிறது.
////"சட்டப் பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை"////
வெளிநாடுகளில் இருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளுக்க ு பணம் வருவது கட்டுரை ஆசிரியருக்கு தெரியாதா. கிறிஸ்தவ சபைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவது தெரியாதா?? நான் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன். எனக்கே இது உண்மை என்று தோன்றும்போது, உங்களுக்கு பொய்யாக தோன்றுவது உங்களின் உலக ஞான குறைவையே காட்டுகிறது.
சாதி ஒழிப்பு குறித்து பேசும் சீமான் தினத்தந்தி அதிபரை சந்தித்து என்ன பேசினார், எப்படி கெஞ்சினார் என்பது அவரது
மனசாட்சிக்கே தெரியும்.
தமிழ் இனத்திற்காக பாடுபட்ட பெரியாரையும், தமிழர்களுக்காக
பாடுபடும் வைகோவையும் கொச்சைப்படுத்து ம் சீமானுக்கு
ஜெயலலிதா மட்டும் தான் தமிழச்சி ???
இனியன் 9962268966
நாங்கள் விவாதித்தோம்.
எம் உயிர் குடித்தார்கள்…..
நாங்கள் விவாதித்தோம்.
எம் பெண்களின் மார்பு மேட்டில்
முலைக்காம்பில்
ஸ்ரீ பதித்தார்கள்…..
நாங்கள் விவாதித்தோம்.
எம் தலைவர்களே
எம்மை மிதித்தார்கள்
நாங்கள் விவாதித்தோம்.
மொத்தமாய் கொன்றே புதைத்தார்கள்…..
நாங்கள் இன்னும் விவாதிக்கிறோம்.
அயலானை
களத்தில் வீழ்த்துவதை விடவும்
எமக்கு முக்கியம்
எம்மவனை இணைய தளத்தில் வீழ்த்துவது!
அவர்கள் இன்னும் கொல்வார்கள்
நாங்கள் விவாதிப்போம்.
எம்மை வெல்வார்கள்…..
நாங்கள் விவாதிப்போம்.
இறுதியில் ஒரு நாள்
கடைசி தமிழனின் பிணத்தின் மீது
அவன் காரி உமிழும்போதுதான்
நாங்கள் உணர்வோம்….
ஓ…
இத்தனை நாளும்
நாம் மல்லாந்து படுத்துக்கொண்டு
எச்சில் துப்பியிருக்கிறோம்
என்பதை!
- நன்றி கல்யாணசுந்தரம்
முழுமையாக உருவிவிட்டீர்கள ்,கையது கொண்டு மெய்யது போர்த்தவேண்டிய நிலை.
பார்ப்பனர்கள் ஒருபோதும் திராவிடர்களாக மாற மாட்டார்கள்.ஆனா ல் இன்று சூத்திர தமிழன் பார்ப்பனாக மாறதுடிப்பதும். பார்ப்பன கருத்து கருவியாக ஊதுகுழலாக மாற விரும்புவதும் இன்று ஆவணமாக வெளிவந்துள்ளது.
திரு.பிரபாகரனின் தடத்திலேயே திரு.சீமானும் பயணப்பட விரும்புகிறார். அதாவது,நமக்குள் பல சாதிகளாக பிரிந்து அடித்துக்கொண்டு சாவோம்.(தேவர், பள்ளர்,சக்கிலிய ர்,அருந்ததியர்) .
ஆனால் பிற மாநில,மொழி மக்களை எதிர்க்க தமிழராய் ஒன்று படுவோம்.
கோவை கலவரத்தில் எல்லா சாதிகளும் சேர்ந்து முஸ்லிம் கடைகளை தாக்கினர்.பிரபா கரனும் தமிழ் முஸ்லிம்களிடம் இவ்விதமே நடந்து கொண்டார்.அதே சமயம் தனது சக தமிழ் குழுக்களை வேட்டையாடி ஒழித்தார்.
ஆனால்,புறப்பகையைக்காட்டிலும் உட்பகை பயங்கரமானது.என் பதை பிரபாகரனும் உணரவில்லை அவர் தம்பி சீமானும் உணரவில்லை.சாதிய ை வளர்ப்பவர் சா”தீ”யில் கருகுவர்.
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் தம்மைத் தமிழராக அடையாளப்படுத்து வதில்லை என்பதையும், எப்பொழுதுமே சிங்களவர்களின் அடிவருடிகளாக நடந்து கொண்டு தமிழர்களின் முதுகில் குத்துபவர்கள் என்பதையும் மறைத்துக் கொண்டு பிரபாகரனை வசைபாடுவது வெறும் அபத்தம். அதை விட அபத்தம் சீமான் சாதித்தீயை வளர்க்கிறார் என உளறுவது.
உட்பகை பயங்கரமானது, தமிழ்மண்ணிலேயே தமிழர்களின் பகைவர்கள் வளர்ந்து விட்டார்கள், மலிந்து விட்டார்கள் என்பதை உணர்ந்ததால் தான் நாம் தமிழர் தலைவர் சீமான் தமிழர்களை விழித்தெழச் சொல்கிறார்.
பெரியார் என்றொருவர் பிறந்திராவிட்டா ல் தமிழனின் கதி என்னவாகி இருக்கும் என்பதை தமிழ்த் தேசியவாதிகள் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். சாப்பிடுகிற மாம்பழத்தில் சூத்தை இருந்தால் அதனை மட்டும் வெட்டியெடுத்து விட்டு மிகுதியை உண்ண வேண்டும். முழு மாம்பழத்தையும் எறியக் கூடாது. குழந்தையைக் குளிப்பாட்டினால ் குளிப்பாட்டிய தண்ணீரோடு பிள்ளையையும் எறியக் கூடாது.
ஆரியத்தின் முகத்தை தோலுரித்துத் தமிழனுக்கு அவனது தன்மானத்தை மீட்டுத் தந்தவர் பெரியார்.
சாதி பேசித் தலை தாழ்ந்த தமிழனை தலை நிமிர வைத்தவர் பெரியார்.
பெரியார் இல்லை என்றால் தமிழன் இன்றும் வடமொழியை ஏற்று, பிராமணிய மேலாண்மையை ஏற்று, ஒரு குலத்துக்கு ஒரு நீதி கூறிய மனுநீதியை ஏற்று தற்குறியாகவும் நடைப்பிணமாகவும் வாழ்ந்திருப்பான ்.
பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனறு சொன்னதற்குக் காரணம் தமிழில் ஆங்கிலம் போல் அறிவியல் தொடர்பான படைப்புக்கள் இல்லை எனபதால்தான்.
இந்தி மொழியை பச்சைத் தமிழர் மாபொசி வரவேற்ற போது அதனை எதிர்த்துப் போராடியவர் பெரியார்தான். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று முழங்கியவரும் பெரியார்தான்.
பெரியார் ஒரு சமூகப் போராளி. மூடநம்பிக்கைகளை தகர்த்து எறிந்த கடப்பாரை. பெரியாரின் போராட்டம் பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும ் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.
நயன்மைக் கட்சித் தலைவர், பொதுத்தேர்தலில் தோல்வி யடைந்தபின், இருக்குமிடந்தெர ியாது ஓடி ஆங்காங்கு பதுங்கிக் கொண்டனர். அன்று பெரியார் ஒருவரே திராவிட-ஆரியப் போர்க்களத்திற் புகுந்து உடைபடை தாங்கி இடைவிடாது போராடி, கல்லாப் பொதுமக்கள் கண்ணைத் திறந்து கற்றோர்க்கும் தன்மான உணர்ச்சி ஊட்டி, பிராமணியத்தைத் தலைதூக்க வொண்ணாது அடித்து வீழ்த்தி, ஆச்சாரியார் கொண்டு வந்த இந்தியை எதிர்த்துச் சிறைத்துன்பத்தி ற்கு ஆளாகியவர். குலக்கல்வியை எதிர்த்துப் போராடியவர். கணக்கற்ற சீர்திருத்தத் திருமணங்களைநடத் தி வைத்தும், பகுத்தறிவு இயக்கத்தைத்தோற் றுவித்தும் மூட நம்பிக்கைகளை ஒழித்தும் வரலாற்றில் அழியாத இடம் பிடித்தவர்.
பெரியாரின் தொண்டு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்க ும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது.
"பிற மொழியாளர்கள், பிறமொழியாளர்களா கவே தொடர்ந்து வாழ்வதும் அல்லது அந்த பிறமொழிகளுக்கும ் தாய்மொழி தமிழே என்று உணர்ந்தறிந்து, தமிழை வாழ்வியல் மொழியாகவும், அடுத்து, வழிவழியாகத் தாய்மொழியாகவும் ஏற்றுத் தமிழராக வாழ்வதும் அவர்களுக்குள்ள உரிமை." (பார்க்க: பக்கம் 33, நாம் தமிழர் கட்சி ஆவணம்)
இந்தச் சிந்தனை பாசீச சிந்தனை என்று திருவள்ளுவர் சொல்வது சரி. சிறுபான்மை இனத்தை கட்டாயப்படுத்த முடியாது. இன்னும் சொன்னால் சிறுபான்மை பெரும்பான்மை என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. ஒரு நல்ல மக்களாட்சி முறைமையில் மொழி அல்லது மத அடிப்படையில் சிறுபான்மையாக இருப்போரது சுதந்திரங்கள் மதிக்கப்பட வேண்டும். "ஒரு மக்களாட்சி முறைமையில் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை எப்படி நடத்துகிறது என்பதை வைத்துத்தான் அதன் மதிப்பை எடைபோட வேண்டும்" என்று உலக உத்தமர் காந்தி சொன்னார்.
நாம் தமிழர் சிந்திப்பது போலத்தான் ஈழத்தில் பெரும்பான்மை சிங்கள - பவுத்தர்கள் சிந்திக்கிறார்க ள். "நாங்கள் பெரும்பான்மை. எமது மதம் பெரும்பான்மை. எனவே பெரும்பான்மைக்க ு உரிய உரிமைகளை சிறுபான்மையருக் கு வழங்க முடியாது. சிங்களத்தைப் படித்து நீங்களும் சிங்களவர்களாக மாறுங்கள். பெரும்பான்மை தேசியத்தில் கரைந்து விடுங்கள் என்கிறார்கள் சிங்கள ஆட்சியாளர்கள். இந்த வாதத்தை ஏற்க மறுப்பதால்தான் பெரும்பான்மை சிங்களவருக்கும் சிறுபான்மை தமிழருக்கும் இடையில் முரண்பாடு தோன்றி அது மோதலில் முடிந்தது. இப்போதும் முடிந்தபாடில்லை . அப்படியொரு நிலைமை தமிழகத்திலும் எழ வேண்டுமா? உண்மையில் நாம் தமிழர் ஆவணத்தை சிங்களவர்கள் தங்களது பக்கத்து பெரும்பான்மை - சிறுபான்மை வாதத்துக்கு பயன்படுத்தக் கூடும். அப்படிப் பயன்படுத்தினால் அதில் வியப்பு ஒன்றும் இருக்காது. இதனை நாம் தமிழர் கட்சி சிந்தித்துப் பார்க்கவில்லையா?
கனடாவை எடுத்துக் கொண்டால் இங்கு நூற்றுக்கும் அதிகமான மொழிபேசுவோர் வாழ்கிறார்கள். அரசு அத்தனை மக்களது தனித்துவத்தை மதிக்கிறது. அதுதான் கனடாவில் பலம் என்கிறது. அவரவர் மொழி, கலை, கலாசார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அவரவர் அடையாளத்தை இழந்து கனடியர்களாக மாற வேண்டும் என்று சொல்லப்படவில்லை . இதனை ஆங்கிலத்தில் Promoting Multi-culturism எனப்படுகிறது. ஆனால் அண்டை நாடான அமெரிக்காவில் இந்தப் பல்லின கோட்பாடு இல்லை. ஆங்கிலம் படித்து நாளடைவில் சிறுபான்மை தனது அடையாளத்தை இழந்து அமெரிக்கர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
தமிழ்த் தேசியம் பேசுகிறீர்களே, யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று முரசு கொட்டிய பாரதியையும் பரிதிமாக்கலைஞரை யும் உ.வே.சாமிநாதரைய ும் என்ன செய்ய உத்தேசம்?
தமிழ் என்றாலும் திராவிடம் என்றாலும் பொருள் ஒன்றுதான். தமிழை திராவிடம் என்று வடமொழியாளர் அழைத்தார்கள்.
தமிழைத் தாய்மொழியாக யார் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தமிழர்களே. திராவிடர்களே. ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தக ் கூடாது.
ஒருவன் ஒநே நேரத்தில் எப்படி தமிழனாகவும் இந்தியனாகவும் இருக்க முடியுமோ அதே போல் தமிழன் தமிழனாகவும் திராவிடனாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியும்.
தமிழ் உலகத்தின் முதல் மொழி, முதல் மனிதன் தமிழன், முதல் குரங்கு தமிழ்க் குரங்கு, தமிழ்மொழி மற்றும் தமிழர் தொன்மைக்கு சிந்துசமவெளி நாகரீகத்தை சான்றாகக் காட்டுவதற்கு வரலாற்று அடிப்படையிலோ, அறிவியல் அடிப்படையிலோ சான்றுகள் இல்லை. எண்பிப்ப முடியாத அல்லது எண்பிக்கப்டாத பழம்பெருமையை நாம் தமிழர் கட்சி ஆவணம் பேசுகிறது என திருவள்ளுவர் சொல்வது முற்றிலும் சரி. இப்படியான புராணங்களை கேட்க அல்லது படிக்க கிளு கிளுப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. தமிழர்களது வரலாற்றையும் நாகரிகத்தையும் எகிப்தியரது வரலாற்றையும் நாகரிகத்தையும் ஒப்பிட்டால் பின்னது 7,000 ஆண்டு பழமையானது. எகிப்தை ஆண்ட மன்னர்களையும் எந்தெந்த பிரமிட் யாரால் கட்டப்பட்டது என்பதையும் விலாவாரியாகச் சொல்கிறார்கள். அப்படியான பெருமை தமிழர்களுக்கு இல்லை. முச்சங்கங்கள் இருந்த கதையே கற்பனையாகத்தான் இருந்திருக்க வேண்டும். மன்னர்கள் அவைகளில் சில புலவர்கள் இருந்திருக்கிறா ர்கள். அவர்கள் ஒன்று கூடி மாநாடு நடத்தினார்கள் என்று சொல்வதற்கு இல்லை.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சொன்னார். “பாரதியை பார்ப்பான் என்பவனையும் பெரியாரைக் கன்னடன் என்பவனையும் கன்னத்தில் அறைவேன்!”
நாம் தமிழர் ஆவணத்தை யார் யார் தயாரித்தார்களோ தெரியாது. அந்த ஆவணம் மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஆனாலும் "குளிப்பாட்டிய தண்ணீரோடு குழந்தையையும் எறிந்தது போல்" பார்ப்பனீயத்தை எதிர்த்த பெரியார் தமிழர்களுடன் பின்னிப் பிணைந்து, தமிழர்களின் மொழி, கலாச்சார பண்பாட்டுடன் இரண்டறக் கலந்து விட்ட சைவம், வைணவ மதங்களையும் எதிர்த்து எறிந்து விட்டார் என்று தான் சொல்லக்கேள்விப் பட்டிருக்கிறேன் .
எந்தளவுக்கு சைவமும், திருமாலியமும் பெரும்பாலான தமிழர்களின் வாழ்விலொரு அங்கம் என்பதைப் பெரியார் உணரத் தவறி விட்டார். தமிழர்களின் சைவமும், மாலியமும் இன்றும் தமிழ்நாட்டில் கோலோச்சுகிறது. ஊரெல்லாம் கோயில் உலகமெல்லாம் தமிழர்களால் கட்டியெழுப்ப படுகிறது. அதிலும் இலங்கைத் தமிழர்கள் கோயில் கட்டுவதில் சோழர்களை வென்று விடுவார்கள் போலிருக்கிறது. (அந்த வீண் விரயத்தை வேறொரு தலைப்பில் தான் எழுத வேண்டும்).
பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக் கொள்ளும் அவரது பிரதான சீடர்கள் கூட மஞ்சள் துண்டைக் கழுத்தில் சுற்றிக் கொண்டு மனைவிமாரைத் தங்கள் பெயரில் யாகம் செய்ய அனுப்புகிறார்கள ். பகுத்தறிவோ என்னமோ, பெரியார் பெரும்பாலான தமிழர்களின் நாடித்துடிப்பை, மதவுணர்வை, அவர்களின் கடவுள் நம்பிக்கையின் பலத்தை உணரத் தவறி விட்டார். பெரியார் உண்மையில் தமிழர்களில், அவர்களது மொழியில், பாரம்பரியத்தில் , கலாச்சாரத்தில் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் , தமிழர்களின் கோயில்களிலிருந் து, ஆரியத்தையும் பார்ப்பனீயத்தைய ும் அகற்றி கோயில்களைத் தமிழாக்கியிருக் க வேண்டுமே தவிர, பகுத்தறிவென்ற பெயரில், தமிழர்களுக்கும் , அவர்களது முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களாகிய பழம்பெரும் கலைப்பொக்கிசங்க ளான கோயில்களுக்குமி டையில் ஒரு நிரந்தர இடைவெளியை, எனக்கென்ன போச்சு என்ற உணர்வை ஏற்படுத்தி, அந்தக் கோயில்களில் தமிழர்களுக்குள் ள உரிமையைப் பெறப் போராடும் ஈடுபாட்டைக் குறைத்துக் கோயில்களையெல்லா ம் பார்ப்பனர்களின் முழுச்சொத்தாக மாற்றிய பெருமையில் விரும்பியோ விரும்பாமலோ பெரியாருக்கும் பங்குண்டு.
பெரியாரது காலத்தில் பார்ப்பனீயம் தமிழருக்கிழைத்த கொடுமையை விட, பெரியாரால் தமிழர்களின் தலையில் கட்டப்பட்ட திராவிடமும், தமிழர்களை வெறுக்கும் மலையாளிகளும் செய்தார்கள் என்பதற்கு முள்ளிவாய்க்கால ் அவலம் நல்ல எடுத்துக்காட்டா கும். பெரியார் காலத்தில் தமிழர்களுக்குப் பார்ப்பனீயம் எப்படியோ அப்படித்தான் இன்று மற்றைய திராவிடர்கள் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக இயங்கி, தமிழர்களின் முதுகில் குத்துகிறார்கள் . அதனால் இந்த திராவிடத்தை விட்டெறிந்து விட்டு நாம் தமிழர்களாவோம் என்கின்றனர் சீமானும் அவரது கட்சியினரும். பெரியார் சொன்னார் என்பதற்காக திராவிடத்தையும் , தமிழரல்லாதாரின் தமிழர்களுக்கெதி ரான அடாவடித்தனத்தைய ும் விமர்சிக்க்க் கூடாதென யாராவது சொன்னால் அது வெறும் அசட்டுத்தனமாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமையைப் பார்த்த பின்பும் சிறுபான்மையினங் களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எந்த தமிழனும் ஆதரிக்க மாட்டான், நாம் தமிழர் இயக்கமும் அப்ப்டிச் சொல்லவில்லை. நாம் தமிழர்களின் ஆவணத்தை இலங்கையுடன் ஒப்பிடுவது மிகவும் சிறுபிள்ளைத்தனம ாகும். முதலாவது இலங்கையில் போன்று ஒற்றையாட்சி இந்தியாவில் இல்லை. மொழி வழித் தேசிய இனங்கள் தமது சொந்த மாநிலங்களில் தமது மொழிழையும் கலாச்சாரத்தையும ் பேணிப்பாதுகாத்த ு, வளர்த்துக் கொண்டே, தமது குறிப்பிட்ட மாநிலத்தில் தமது மொழியும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவ தாக உணர்ந்து கொண்டு, தேசிய அளவில் இந்தியனாக விளங்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டத ன் நோக்கம். ஆனால் இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் தமது மொழியும் கலாச்சாரமும் பேணிப்பாதுகாக்க ப் படுவதாகவோ, தமது மாநிலத்தின் அரசியலும் பொருளாதாரமும் தமது கைகளில் இருப்பதாகவோ உணராததால் தான் சீமான் போன்றவர்கள் அதைப் பற்றி பேச வேண்டிய தேவை ஏற்பட்டது.
இன்று யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுக ிறார்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்கள் அதை எதிர்க்கிறார்கள ், அப்படியென்றால் ஈழத்தமிழர்களும் , தமிழ்நாட்டுத் தமிழர்களும் பாசிசவாதிகளா? ஈழத்தமிழர்களின் பாரம்பரிய மண்ணில், அவர்களின் மூதாதையர்கள் போரிட்டுக் காத்த மண்ணில் சிங்களவர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுக ிறார்கள், சொந்த மண்ணில் தமிழர்கள் சிறுபான்மையினரா க்கப்படுகிறார்க ள். தமிழ் மக்களின் வாழ்வாதாரமும்,ப ொருளாதாரமும் சிங்களவர்களின் கைகளுக்கு மாறுகிறது எனக் கூக்குரலிடும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் எல்லாம் பாசிசவாதிகளா?
சீமான் சொல்வதெல்லாம், மொழிவழி மாநிலங்களின் அடிப்படையில் தமக்கென சொந்தமாக மாநிலங்களை வைத்துக் கொண்டு, தமது நலன்களைக் காத்துக் கொண்டும், தருணம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களின் முதுகில் குத்தும் திராவிடர்கள் என்றழைக்கப்படும ் தமிழரல்லாதார்கள ின் கைகளில் தமிழ்நாட்டில் அரசியலும் பொருளாதார பலமும் உள்ளன. அவர்களிடம் தமிழர்கள் கைகட்டி வாய்பொத்தி நிற்கிறார்கள் இந்த இழிநிலை மாற வேண்டுமென்பது தான்.
தமிழன் என்ற அடையாளம் ஒன்று தான் தமிழர்களின் சொத்து, அதையும் பெருந்தன்மையுடன ் மற்றவர்களுடன் பங்கு போட்டுக் கொள்ள வேண்டுமென்பது தமிழனது சாபக்கேடாகத் தானிருக்க வேண்டும். யார் தமிழன் என்பதை வரையறுக்கும் உரிமை கூடவா தமிழனுக்கு கிடையாது? சிங்களப் பகுதிகளில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் கூட நாங்களும் சிங்களவர்கள் என அடம்பிடிப்பதில் லை. ஆனால் தமிழ்நாட்டில், வீட்டில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் பேசித் தமது கலாச்சார, பண்பாடுகளைக் கடைப்பிடிக்கும் மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் போது தாமும் வெளியில் தமிழைப்பேசுவதால ் தமிழர்கள் என்று தமிழர்களின் பாரம்பரிய மண்ணில் உரிமை கோருவதால் தான். யார் தமிழர்கள் என்ற கேள்வி எழுந்தது,
கனடாவில் அரசு வந்தேறியவர்களின ் தனித்துவத்தை மதிக்கிறது அதற்காக அவர்களின் மொழியை கனடாவின் அரச மொழிகளாக்கப் போவதில்லை. கனடா என்ற நாட்டைக் கட்டியெழுப்பிய மக்களின் மொழியாகிய ஆங்கிலமும், பிரஞ்சும் மட்டும் தான் அரசமொழி. பிழைக்க வந்த எந்தவொரு குடிமகனும் எனது மொழியையும் அரச மொழியாக்கு எனக் கேட்டால் செருப்படி தான் விழும். ஆங்கிலத்தை வெளியிலும், தமிழை வீட்டிலும் பேசும் எந்த ஈழத்தமிழனும் நான் ஆங்கிலத்தைப் பேசுவதாலும், கனடாவில் பல ஆண்டுகள் வாழ்வதாலும் நானும் ஆங்கிலேயன் தான் என அடம்பிடிப்பதில் லை ஆனால் தமிழ் நாட்டில் தமிழரல்லாத பலர் அவ்வாறு அடம் பிடிக்கிறார்கள் அதனால் தான் நாம் தமிழர் கட்சி அப்படியாக தமது ஆவணத்தில் வரையறை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் கனடா உதாரணமும் தமிழ்நாட்டுக்கு ப் பொருந்தாது.
நாம் தமிழர்களின் ஆவணம் தமிழர்களால் விவாதிக்கப்பட்ட பின்னர். தமிழர்கள் ஒப்புக் கொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற கருத்தை சீமான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
பல அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்ப ட்ட தமிழின் தொன்மையை வெறும் கற்பனையென நாசூக்காகக கதை விடுபவர்களை, - "தாயே தமிழே தலை சிறந்த பொற்செல்வி, எள்ளி நகைத்து நினைப்பழிப்போன் செந்நீர் வெள்ளம் குளித்து விளையாடுவேன் தாயே! என்பதுடன் மட்டும் கவிஞர் காசி ஆனந்தன் நிறுத்தவில்லை, தமிழைப்பழிக்கும ் "மாற்றானை நாயாய் அடித்து நடுத் தெருவில் வைப்பேன்" என்றும் பாடியுள்ளார். :-))))),
சிறப்பான ஆவணம் கொண்ட கட்சிகள் இன்று சீட்டுக்காக அரசியல் நடத்துகிறார்கள் , எவர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி எவ்வளவோ மேல்.
அவர்களுக்கு வன்னியர் ,இவர்களுக்கு ஈழம் ...மற்றபடி சீமான் கூறும் திராவிடம் ,தமிழன் ,முகமதியம் ,
கிறிஸ்துவம் ஈதெல்லாம் என்ன என்று இரண்டு நாள் கழித்து கேட்டால் நாம் தமிழர் யாருக்கும் தெரியாது ..
சீமானின் அரசியல் தெளிவானது ....தமிழ்நாட்டி ல் மாற்று அரசியலுக்கான வெளி இருக்கிறது..அதை
பயன்படுத்த முடியுமா என்று பார்க்கிறார் ? இந்த இரண்டு வருடத்தில் நாம் கூர்ந்து கவனித்து பார்த்தல்
சீமானுக்கு அந்த தகுதி இருபதாக தெரியவில்லை ...பிற்பட்ட வகுப்பை சார்ந்த சீமான், ஒடுக்கப்பட்ட மக்களிடம் சரியான நேர்மையான வழியில் நடக்கவில்லை ..அவர்களை நெருங்குவதற்கு அவர்
தயங்குவது நன்றாகவே தெரியும் ..அதற்க்கு காரணம் அவரின் சாதி பற்று என்பதை விட வெறி
என்றே நாம் உணர வேண்டி உள்ளது ...அவர் சேரும் ஆட்களும் அப்படி ஒன்றும் சிறப்பான நபர்கள்
அல்ல ...பாய்வோம் ,அடிப்போம் ,அடைவோம் என்று முழங்கியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்
என்பதை வரலாறு குறித்து வைத்து உள்ளது . சீமானின் உண்மை முகம் விரைவில் வெளிவரும் ..
நாங்களும் பார்க்க தானே போகிறோம்
RSS feed for comments to this post