‘இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அவமானமாக உணர்வார்கள்’ என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து, இந்தியா முழுவதும் விமர்சனம் செய்யப்பட்டதுடன், கேலியாகவும் பார்க்கப்பட்டது. இப்போது அவரது கருத்து, அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஆங்கிலம் தொடர்பாக அமித் ஷாவின் கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. முக்கிய தலைவர்களின் வாரிசுகள் பலரும் வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் பட்டியலை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.
அமைச்சர் பியூஷ் கோயல் மகன் மற்றும் மகள் ஆகியோர் ஹார்வர்டு பல்கலையிலும், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் பிள்ளைகள் பாஸ்டன் பல்கலையிலும் படித்துள்ளனர். அமைச்சர்கள், சிவராஜ் சிங் செளகான், ஜோதிராவ் சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் பிள்ளைகள் மேற்கு நாடுகளில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஆங்கிலத்தில்தான் பயின்று வருகின்றனர். ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் வெளிநாட்டில் படித்தவர்கள்தான். ஆங்கிலம் கற்பதற்கு வெட்கப்பட வேண்டும் எனக் கூறும் அமித் ஷா, அவர்கள் அமைச்சரவை சகாக்களைப் பார்த்து கூறட்டும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அமித் ஷாவின் கருத்தினை கிண்டல் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி,
‘‘ஆங்கிலம் என்பது அணை அல்ல; அது ஒரு பாலம், ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல; அது ஒரு அதிகாரம். ஆங்கிலம் என்பது விலங்கல்ல; கைவிலங்கை உடைக்கும் கருவி” எனக் கூறியிருக்கிறார். தமிழ்நாடு அந்த கருத்தினை நூறாண்டுகளுக்கு முன்பே பற்றிக் கொண்டதுதான் அமித் ஷாக்களின் அச்சம்.
- விடுதலை இராசேந்திரன்