நிர்வாண மழை நிற்கும்
தெருவினில்
ஏக்கத்துடன் மறைகிறாள்
அவ்வப்போது
பரிச்சயமான சிறுமியொருத்தி..

என்னென்று உற்று நோக்க
முறைப்புகள் மட்டுமே பதிலாய்,
நனைகிறாயா என்றவுடன்
நகைத்து விட்டு
மழையோடு கதைக்கிறேன் என்கிறாள்..

உறுத்தும் விழிகளினூடே
உட்புகுந்த மறுகணம்
தனிமை அடைத்த
நாற்சுவர்களுக்குள் நான்,
யூகிக்க விட்டு வைக்கவில்லை
மணித்துளிகள்..

செவிகளைக் கூராக்க
ஒரே குரல்தான்..
விசும்பலாகவும், ஏளன நகைப்பாகவும்
அக்குரல்
மிச்சப்பட்டிருந்த அச்சத்துடன் துரத்துகையில்,
"க்ரீச்" ஒலியுடன்
கதவுகள் திறக்கப்பட
ஓடுகிறேன் நான்..

"என்னப்பா செய்யுது?"
என் வியர்வையைத்
துடைத்து விட்டு கேட்கிறாள்
சிவந்த விழிகளுடன்
என் 6 வயது மகள்..

 - தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Pin It