அது 1922. அப்போது இத்தாலியில் பாசிச ஆட்சியை நிறுவியிருந்தார் முசோலினி.

அதே பாசிச மனநிலையைக் கொண்டிருக்கும் இன்றைய பாசகவின் தாய்தான் அன்றைய இந்து மகா சபை. அந்த இந்து மகா சபையின் பார்வை உடனே இத்தாலியின் மீது திரும்பியது.

அப்போது இந்து மகாசபையின் தலைவராக இருந்தவர் சாவர்க்கர். இந்து மகா சபையின் ஆதரவுப் பத்திரிகைகளுள் ஒன்றான ‘கேசரி’யில் இத்தாலியின் பாசிச வடிவத்தையும், முசோலினியையும் சிலாகித்து, பாசிசத்தைப் பரப்பும் நோக்கில் கட்டுரைகளும், தலையங்கங்களும் தொடர்ந்து எழுதப்பட்டன. விதந்தோதப்பட்டன.

பாசிச இயக்க வடிவத்தில் அதீத ஆர்வம் கொண்ட இந்து மகா சபையினர் இந்திய ஒன்றியத்தை வன்முறை வழியிலோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலமாகவோ அன்றி எந்தவொரு வழியிலானலும் சரி. எத்தனை எத்தனை மனித உயிர்களைக் காவு கொடுத்தாயினும் சரி. ஒரு அகண்ட பாரத இந்து தேசியத்தை இம் மண்ணில் நிர்மாணிக்க வேண்டும் கட்டமைக்க வேண்டும் என்கிற ஒற்றைப்பாசிச நோக்கம் கொண்ட இந்து மகாசபையினர் அதற்கான செயல்வடிவ அமைப்புகளை இயக்கங்களை பல்வேறு வடிவங்களில் உருவாக்கி வந்தனர். அதன்படி 1925 இல், ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பே ராஷ்டிர சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) என்கிற தனித்ததொரு இயக்கம்.

இந்து மகா சபையின் முக்கியத் தலைவராக இருந்தவர் டாக்டர் மூஞ்சே. அவரின் வழிகாட்டுதலில், மூஞ்சேவின் சீடரும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ்.இன் முதல் தலைவரானார்.

1931 இல் முதல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற மூஞ்சே, இலண்டனிலிருந்து திரும்பும் வழியில் இத்தாலிக்குச் சென்றார். அங்கே, முசோலினியின் பாசிச அரசால் நடத்தப்பட்ட இராணுவப் பள்ளிகளை, இராணுவக் கல்லூரிகளையும், பாசிஸ்டுகளின் உடற்பயிற்சிக் கூடங்களையும், கல்வி நிறுவனங்களையும் பார்வையிட்டார்.

ஆறு வயதிலிருந்து பதினெட்டு வயதுவரையிலான சிறார்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளையும் வன்முறைச் சிந்தனைகளையும் அடிப்படையிலேயே அந்தப் பிஞ்சு மனங்களில் நஞ்சென விதைக்க... அந்தச் சின்னஞ்சிறுச் சிறார்கள் வளர வளர பாசிசக் கொடும் விருட்சமாகத்தானே விளங்குவார்கள். இதில் மாற்றுக் கருத்துகள் உண்டா என்ன?

முசோலினியின் பாசிச இயக்கத்தையும் பாசிச அரசையும் பார்த்து வியந்த மூஞ்சே, இதுதான் சரியான இயக்க வடிவம் என்று உறுதியாக முடிவெடுத்தார். ஏற்கெனவே இந்திய ஒன்றியத்தில் வன்முறை வழியிலான இந்து அடிப்படைவாதத்திற்கு நீண்டதொரு சாதகமான பக்கபலமான வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. அதை திலகர், சவார்க்கர், ஹெட்கேவர் உள்ளிட்ட பலரும் இயக்கமாக அமைப்பாக வடிவமைத்து அதைச் செயலாக்கி வந்தபோதிலும், மூஞ்சேவிற்கு நவீன இராணுவ மிடுக்குடன் கூடிய இத்தாலியின் பாசிச வடிவமும் உருவாக்கமுமே மிகவும் பிடித்துப் போயின. இத்தாலிப் பாசிச வடிவத்தை இந்திய இந்துத்துவச் செயற்பாட்டில் இணைப்பதன் மூலம் புதிய இந்துத்துவ இராணுவத் தேசிய உருவாக்கம் சிறப்பாக அமையும் என்று மூஞ்சே கருதினார்.

1931 மார்ச் 19 இல், இத்தாலி பாசிச அரசின் சர்வதிகாரி முசோலினியைச் சந்தித்த மூஞ்சே, “உயர்வை விரும்பும், வளர்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும், தாங்கள் வழிநடத்துவதைப் போன்ற பாசிச அமைப்புகள் தேவை” என்று துதிபாடிவிட்டு பாசிச இந்துத்துவ இந்தியக் கனவினைக் கண்டபடியே இந்தியா வந்து சேர்ந்தார். அதைத் தொடர்ந்துதான், இந்துக்களை இராணுவ மயமாக்க வேண்டும் என்கிற செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.இன் செயல்திட்டமாக தமது சீடர் ஹெட்கேவர் மூலம் செயல்படுத்தினார் மூஞ்சே.

இந்து மகா சபையிடம் ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகள் இருந்தாலும் கூட, ஆர்.எஸ்.எஸ்.தான் அதை முசோலினியின் இராணுவ பள்ளி மாதிரியில் நடைமுறைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால், ஷாகா எனும் வகுப்புகள் உள்ளிட்ட பலவிதமான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்பிறகு மெல்ல மெல்ல இந்திய ஒன்றியத்தில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களிடையே மத அடிப்படைவாதத்தைப் புகுத்தி பிற மத மக்களின் மீதான வெறுப்புணர்ச்சியை உருவாக்கி ஊடுருவி தேர்தல் அரசியலுக்கென ஒரு முகத்தை உருவாக்கி அதைச் தேசிய அரசியல் கட்சியாகப் பெரிதாக்கி நாடாளுமன்றத்தில் மூன்று இருக்கைகள் பின் முப்பது இருக்கைகள் எனத் தொடர்ந்து பதிமூன்று நாட்கள் பின் பதிமூன்று மாதங்கள் என ஆட்சிக் கட்டிலைப் பிடித்து பின்னர் கூட்டணியாக ஆட்சிக் கட்டிலைப் பிடித்து இப்போது கடந்த பத்தாண்டுகளாக தனிப் பெருங் கட்சியாக வலுவாக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டுவிட்டது இந்துத்துவம். ஆட்சிக் அதிகாரத்தில் அமர்ந்த நாள் கொண்டு தனது மூலாதாரத் திட்டங்களை ஒவ்வொன்றாக ஒன்றன்பின் ஒன்றாக அமல்படுத்தி வருகிறது அதன் வரிசையில்தான் இப்போது இந்த அக்னிபாத் திட்டம் வந்திருக்கிறது.

அன்றைக்கு முசோலினியிடம் “இத்தாலி பாசிசம் சிறார்களுக்கு இராணுவ பயிற்சி கொடுப்பதைக் கண்டு நான் ஆர்வம் கொள்கிறேன்” என்று கூறினார் மூஞ்சே. இன்றைக்கு பதினேழரை வயதுச் சிறார்களை இராணுவப் பயிற்சிக்கு அழைக்கிறது பாஜக அரசு. அவர்களுக்கு அக்கினி வீரர்கள் என்கிற பட்டமும் அளிக்கிறது

army men 338மோடி தலைமையிலான இந்துத்துவ அரசின் திட்டம்தான் என்ன? இராணுவத்துறையில் ‘அக்னி பாத்’ எனும் புதிய திட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் ‘Tour of Duty’ என்று அழைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுவரை உள்ள துடிதுடிப்பான இளைஞர்களைத் தேர்வுசெய்து, ஆண்டுக்கு 45 ஆயிரம் வீரர்கள் இராணுவ முப்படைகளில் சேர்க்கப்படுவார்கள். இவர்களின் பணிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே. நான்காண்டுகளுக்குப் பிறகு இவர்களில் தகுதியுடையவர் என 25 சதவீதத்தினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை 15 ஆண்டு காலத்திற்கு தொடர் பணியில் அமர்த்தப்படுவார்கள். மீதி 75 சதவீதத்தினர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். நான்காண்டுகள் பயிற்சி பெற்று பணி முடித்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு ஓய்வூதியம் எதுவுமில்லை. அவர்களின் மாத ஊதியத்திலிருந்து சுமார் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை பிடித்தம் செய்து, அதே அளவுக்கு அரசும் தொகை செலுத்தி, நான்காண்டு முடிவில் ரூ.12 இலட்சம் வரை அளிக்கப்படும். அதாவது நாய் வாலை நறுக்கி நாய்க்கே சூப் கொடுப்பதுபோல. நான்காண்டுகளுக்கு பிறகு பணியிலிருந்து திரும்புகிறவர்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான எந்த உரிமையும் சலுகையும் அளிக்கப்படாது.

இந்த அக்கினி வீரர்கள் நான்காண்டுகள் இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்ட இளைஞர்கள். நவீன ரகத் துப்பாக்கிகள் உள்ளிட்ட கருவிகளை நன்கு இயக்கத் தெரிந்த இளைஞர்கள். இப்படியான இளைஞர்கள் வேலையின்றி ஊதியமின்றி விரக்தியில் திரிவது என்பது அந்தந்தத் தேசிய இனங்களின் பொது அமைதிக்கே ஆபத்தானது. வேலை வாய்ப்பை இழந்து வெளியேறும் அந்த அக்கினி வீர இளைஞர் பட்டாளத்தை இந்துத்துவ அரசியலுக்குள் எளிதாக இழுத்து வந்து, இந்துத்துவ பாசிச தனியார் இராணுவத்தை வலிமையாக கட்டமைத்து, இந்திய ஒன்றியத்தை முழுமையான இந்துத்துவப் பாசிச நாடாக ஆக்க பாஜக திட்டம் தீட்டுகிறது. அதற்கான ஒரு திட்டம்தான், இந்த அக்னி பாத்.

மோடி தலைமையிலான இந்துத்துவ அரசால் கொண்டுவரப்படும் இந்த அக்னி பாத் திட்டமும் அதற்கான இராணுவப் பயிற்சியும் ஷாகா வகையிலானது என்பதுதான் இங்கே முக்கியமானது. அரசு செலவிலான ஷாகாவே அக்கினி பாத் திட்டம்.

இது ஏதோ நசிந்து கொண்டுவரும் இந்திய ஒன்றியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிலைநிறுத்த ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட செலவுக் குறைப்புத் திட்டமல்ல. அல்லது மற்ற எல்லோரும் கருதுவதுபோல அரசுப் பணியை வெறும் ஒப்பந்தப் பணியாக மாற்றும் திட்டமுமல்ல.

மாறாக இதுவரை பக்தி நம்பிக்கையால் வெறும் கடவுள்களை மட்டுமே கும்பிட்டுவந்து கொண்டிருந்த சாதாரணக் குடிகளை ராணுவப் பணி என்கிற போர்வையில் ஆயுதப் பயிற்சி கொடுத்து திட்டமிட்டதொரு பாசிசப் படையைக் தீவிர இந்துத்துவ ஷாகா படையைக் குடிமக்களிடமிருந்தே கட்டித் திரட்டிக் கொள்ளும் ஏற்பாடே இந்த அக்கினிப் பாதைத் திட்டம் என்கிற பேராபாயத் திட்டம் என்பதை உணர வேண்டும் நாம்.

ஆம். இது அக்கினிப் பாதையல்ல. பாசிச அபாயப் பாதை.

- பாட்டாளி

Pin It