‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர் தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணியை சுட்டிக்காட்டி அவரை மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த வேட்பாளரின் குற்றப் பின்னணியையும், கம்யூனிஸ்ட்  கட்சி அவரை வேட் பாளராக்கியதையும் விமர்சித்து, ‘தமிழ் இந்து’ நாளேட்டில் (எப்.25) சமஸ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி:

தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்தர். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பவர் ராமச்சந்திரன்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப் பகைத்துக்கொண்டு எவரும் அரசியல் நடத்த முடியாது என்கிறார்கள். அவர் நினைப்பவரே ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள், மாவட்டக் குழுப் பிரதிநிதிகள்; அவரை மீறி ஜெயிக்க முடியாது; ஜெயித்தால் செயல்பட முடியாது என்கிறார்கள். சுரங்கத் தொழிலில் திளைக்கும் ராமச்சந்திரனின் அத்துமீறல்களை எழுத எவரும் உள்ளே நுழைய முடியாது; அப்படி நுழைந்தால் ஊர் திரும்ப முடியாது என்கிறார்கள். கட்சியையும் சரி, மக்களையும் சரி; பணத்தையும் பயத்தையும் வைத்து அடித்துவிடலாம் என்று நம்புபவர் என்கிறார்கள்.

ராமச்சந்திரனின் மிக முக்கியமான பின்புலம் இந்தப் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் வலுவான சக்தி களில் ஒன்றாக இருந்த லகுமையா. ராமச்சந்திரனின் மாமனார். மூன்றாண்டுகளுக்கு முன் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுடப்பட் டும் கழுத்து அறுக்கப்பட்டும் கொடூரமாகக் கொல்லப் பட்டுக் கிடந்தபோது தமிழகம் ராமச்சந்திரனைக் கவனிக்க ஆரம்பித்தது. அடுத்து, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலர் பாஸ்கர் கடத்திக் கொல்லப்பட்டார்.

மூன்று கொலை வழக்குகள், 15-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி, கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என்று ராமச்சந்திரன் மீது அடுத்தடுத்து வழக்குகள் விரிந்தன. ராமச்சந்திரன், லகுமையா, அவரது அடிப்பொடி கள் என 17 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தருமபுரி ஆட்சியர் கிரானைட் மோசடி தொடர்பாக ஆய்வு நடத்தியபோது, ரூ.100 கோடி மதிப்பிலான முறைகேடு குற்றச்சாட்டு ராமச்சந்திரன் மீது சுமத்தப்பட்டது. அவரது குவாரிகள், சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் ராமச்சந்திரன் பெயர் இடம்பெற்றது. இந்த ராமச்சந்திரன் தன் வளர்ச்சிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பயன்படுத்திக்கொண்ட கதை முக்கியமானது. முதலில் மார்க்ஸிஸ்ட் கட்சியில் இருந்தார். அப்போதே அடாவடிகள் தொடங்கிவிட்டன என்றாலும், இவ்வளவு மோசமாக அவர் மாறவில்லை. 2006 தேர்தலில் தளி தொகுதியை ராமச்சந்திரன் கேட்டிருந்தார். மாறாக, கூட்டணியில் அந்தத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் தமிழகத்தில் வென்ற ஒரே சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தன் கைவரிசையைக் காட்டினார் ராமச்சந்திரன். மார்க்ஸிஸ்ட் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியது. அதேசமயம், எந்தக் கட்சி வேட்பாளரை ராமச்சந்திரன் தோற்கடித்தாரோ அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரனை சுவீகரித்துக் கொண்டது.

தா. பாண்டியனின் அணுக்கத் தொண்டரானார் ராமச்சந்திரன்.

இந்த விசுவாசத்துக்கான பரிசாக 2011 தேர்தலில் ராமச்சந்திரனுக்கு மீண்டும் தளி தொகுதி கிடைத்தது. ராமச்சந்திரன் வென்றார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் வழக்கம்போல் ராமச்சந்திரனின் ஆளுகை தொடர்ந்தது. தொடர்ந்துவந்த காலத்தில் ராமச்சந்திரன் கடுமையாக அம்பலப்பட்டுவிட்ட சூழலில், இந்தத் தேர்தலில் நிச்சயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, எல்லா விமர்சனங் களையும் கடந்து அவருக்கு தொகுதியை அளித்திருக் கிறார்கள்.                                                  

Pin It