ஒரு மாத சிறைவாசத்துக்குப் பின் கோவை சிறையிலிருந்து விடுதலையான கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ. மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோருக்கு கோவையில் எழுச்சியான வரவேற்பு வழங்கப்பட்டது. கோவையிலிருந்து மேட்டூர் வரை 40 வாகனங்கள் புடை சூழ தோழர்கள், கழகத் தலைவருக்கு வரவேற்பு தந்தனர். சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயாராகுமாறு கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக வழக்கு புனையப்பட்டு சிறையிலடைக்கப் பட்ட கழகத் தலைவர், இயக்குநர் சீமான், மணியரசன் ஆகியோர் 32 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு பிணை யில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரோடு ஜே.எம்.1 மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் போடப்பட்ட பிணை மனுக்கள் 3 முறை தள்ளுபடி செய்யப் பட்டது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் பிணை மனுதாக்கல் செய்யப்பட்டு, நிபந்தனையற்ற பிணை வழங்கியது. அந்த உத்தரவின் அடிப்படையில் சனவரி 20 ஆம் தேதி மாலை கழகத் தலைவர் உட்பட 3 பேரும் சிறையி லிருந்து வெளியே வரும்போது கோவை சிறைவாயிலில் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் எழுச்சியான வரவேற்பு வழங்கப் பட்டது.

சிறை வாயிலில் மதியம் 3 மணி முதலே தோழர்கள் வரத் துவங்கினர். கோவை மாநகரம், திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தோழர்கள் சிறையிலிருந்து வரும் தலைவர்களை காண ஆர்வத்துடன் வந்திருந்தனர். மாலை 5 மணிக்கே சுமார் 500க்கும், மேற்பட்ட தோழர்கள் குவிந்திருந்தனர்.

திருமலையம் பாளையம் பகுதி கழகத் தோழர்கள் 'ஜமாப்' வாத்தியங்களுடன் வந்து சிறப்பான எழுச்சி பறை முழக்கம் செய்தனர்.

சிறையிலிருந்து வெளியே தலைவர்கள் வரும்போது ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தோழர்களும் , பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் எழுப்பிய முழக்கத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. தலைவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்ல சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. ஆயினும் காவல்துறை அனுமதி மறுத்ததனால் காந்திபுரம் பெரியார் சிலை வரை வாகனத்தில் சென்று அங்கு அய்யா சிலைக்கும், அம்பேத்கர் படத்திற்கும், மார்க்ஸ் படத்திற்கும் மாலை அணிவித்தனர்.

அதன் பின் காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு குழுமியிருந்த தோழர்கள் மத்தியில் தலைவர்கள் உரை நிகழ்த் தினார்கள். அதன் பின் இயக்குனர் சீமான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். இரவு கோவையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் ஆகியோர் தங்கினர். அடுத்த நாள் காலை தோழர்கள் கோவை நோக்கி திரண்டனர்.

21-ம் தேதி காலை கழகத்தலைவரை வரவேற்க 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சேலம் மாவட்ட கழகத்தினர் கோவை வந்தனர். கோவை கழக அலுவலகத்திலிருந்து காலை 10.30 மணிக்கு வாகனப் பேரணி மேட்டூர் நோக்கி புறப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி த.தே.பொ.க. பொதுச் செயலாளர் மணியரசன் ஆகியோருக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு வழங்கப் பட்டது. புதுவைத் தோழர்கள் லோகு அய்யப்பன் தலைமையில் தனிப் பேருந்தில் வரவேற்க வந்திருந்தனர்.

விஜயமங்கலத்தில் தோழர் அர்ச்சுனன், விசு, துரை, கழகத் தோழர்கள் ஆடை போர்த்தி வரவேற்றனர். அங்கே கழகக் கொடியை ஏற்றி, தலைவர் கொளத்தூர் மணியும், பெ. மணியரசனும் உரையாற்றினர். பெருந்துறையில் சாதி ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கூட்டியக்கத்தின் அமைப்பாளர் இரத்தினசாமி மற்றும் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் திரண்டிருந் தனர். ஈரோடு வந்து சேர்ந்த போது அங்கு பெருமளவில் உணர்வாளர்கள் வரவேற்கக் காத்திருந்தனர்.

பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, தோழர்களிடையே கொளத்தூர் மணி, மணியரசன் இருவரும் உரையாற்றினர். பெ.மணியரசன் ஈரோட்டிலிருந்து தஞ்சைக்கு விடை பெற்றார். ரயில் நிலையத்தில் அவரை வழியனுப்பி விட்டு, தோழர்கள் ஈரோடு பெரியார் நினைவகம் சென்று பார்வையிட்டனர். பிற்பகல் 3 மணியளவில் ஒலி முழக்கங்களுடன் வாகனப் பேரணி புறப்பட்டது.

பவானி - அந்தியூர் சந்திப்பில் கழகத் தோழர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் வரவேற்றனர்.

கழகத் தோழர்களுக்கு 'சேலமே குரல் கொடு' அமைப்பின் நிறுவனர் பீயூஸ் மாறன் சிற்றுண்டி வழங்கினார். 5.30 மணியளவில் மேட்டூரின் எல்லையான காவேரி கிராசை வந்தடைந்த போது மேட்டூர் நகர விடுதலை சிறுத்தைகளின் சார்பில் வைரமணி தலைமையில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு தரப்பட்டது. 6 மணி யளவில் செயின்ட் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகிலிருந்து தாரை தப்பட்டை மேளவாத்தியம் முழங்க வரவேற்று, கழகத் தலைவர் அழைத்துச் செல்லப்பட்டார். வாகனங் களைவிட்டு இறங்கி கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர். மேட்டூரில் கழகத் தலைவரின் வீடுவரை சென்று வழியனுப்பி வைத்து, தோழர்கள் திரும்பினர்.

மேட்டூரில் கொளத்தூர் மணி அவரது இல்லத்தில் கைது செய்யப் பட்டபோது இதேபோல் திரண்டு வழியனுப்பிய தோழர்கள் விடுதலைக் குப் பிறகும் வீடு வரை வந்து வழி யனுப்பினர்.

தோழர்கள் அனைவரும் பெரியார் படிப்பகம் திரும்பினர். இல்லத்திலிருந்து 30 நிமிடத்தில் படிப்பகம் திரும்பிய கொளத்தூர் மணி தோழர் களிடையே உரையாற்றினார். அப் போது ஈழப் பிரச்சினையில் இனி அரசியல் கட்சிகளை நம்பிப் பயனில்லை. தேர்தலில் போட்டியிடாத இயக்கங்கள், சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக பிரச்சாரங்கள், போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக கழகத் தோழர்கள் அனைவரும் 15 நாட்கள் சிறை செல்ல தயாராக தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற அறை கூவல் விடுத்தனர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்களிடையே பேரெழுச்சி உருவாக்கியிருப்பதை உணர முடிந்தது.

செய்தி : மேட்டூர் சக்திவேலு,
கோவை சாஜித்

Pin It