தலைவர் அவர்களே! மணமக்களே!! பெற்றோர்களே!!! தோழர்களே!!!! இன்று நடந்த இத் திருமணத்திற்கு நமது மாகாண அபிவிர்த்தி மந்திரியும், பிரபல கனவானுமான நண்பர் பி.டி.ராஜன் அவர்கள் தலைமை வகித்தது மிகவும் பாராட்டத்தக்கதாகும். சீர்திருத்த துரையில் மிக்க ஆர்வமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
அவரும் இம்மாதிரியான சீர்திருத்தங்களில் எப்போதும் முன்னணியில் நிற்பவர் என்பது நீங்கள் அறிந்ததேயாகும்.
சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்ல வேண்டுமானால், இத்திருமண மானது நேற்றே அரசாங்க ஆதாரத்தில் பதிவாகி விட்டது.
நமது சமூக முறையில் உள்ள வழக்கப்படி இன்று நடந்த இந்நிகழ்ச்சி மணமக்கள் இருவரும் சதிபதிகளாக குடும்ப வாழ்க்கையில் இறங்கி விட்டார்கள் என்பதை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்யப்படும் காரியமேயாகும்.
எனினும், இத் திருமண நிகழ்ச்சி இயக்கங்களில் நடக்கும் மற்ற திருமண நிகழ்ச்சியைப் போல் இல்லாமல் சிறிது மாறுபட்டிருக்கலாம். இத்திருமணங்கள் சுயமரியாதைத் திருமணம் என்றும், அப்படிச் சொல்ல வெட்கப்படுபவர்களோ இஷ்டமில்லாதவர்களோ சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.
எப்படியானாலும் திருமண தத்துவத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. ஒரு புருஷனும், ஒரு பெண்ணும் கூடி கூட்டு வாழ்க்கை நடத்துவது என்ற தத்துவத்திலேயே தான் இது நடைபெற்றிருக்கிறது.
ஆனால் அத்தத்துவத்துக்கு ஆக நடைபெறும் நிகழ்ச்சிகளில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். இவைகள் காலதேச வர்த்தமானத்தில் தானாகவே ஏற்பட்டு வருகின்றன.
மனிதன் சுபாவத்திலேயே மாறுபாட்டை விரும்புகிறவன், அதிலும் இந்த காலமானது அறிவு சுதந்திரத்தைக் கொடுக்கும்படியான காலமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. மாறுதலும், அறிவும் சேர்ந்துதான் சுயமரியாதை என்றோ சீர்திருத்தம் என்றோ சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் பற்றிப் பேசுவதை, சுயமரியாதை என்று சொல்லப்பட்டாலும், புராண மரியாதையோ, வைதீக மரியாதையோ, வேத மரியாதையோ கொண்டவர்களும் இன்று தானாகவே பல மாறுதலிலும், சீர்திருத்தங்களிலும் விழுந்து நீந்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வைதீகர்கள் என்று சொல்லப்படும் கூட்டங்களில் முதன்மை பெற்ற பார்ப்பனர்களே திருமணம் முதலிய வைதீகச் சடங்குகள் என்பவைகளில் பெரியதொரு மாறுதல்களை கையாடிக் கொண்டு வருகிறார்கள்.
அவர்களில் அநேகர் திருமணங்கள் ஒரு நாளில் முடிந்து விடுகின்றன. முன்பெல்லாம் ஒரு நாள் கல்யாணத்துக்காக என்றே கோவிலுக்குப் போய் முடித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கோவிலுக்குக்கூட போகாமலே வீட்டிலேயே ஒரே நாளில் திருமணத்தை முடித்துக் கொள்ளுகிறார்கள்.
காரணம் கேட்டால் "சுவாமி கோவிலில் மாத்திரம் தானா இருக்கிறார்? எங்கும் இருக்கிறார். அப்படிப்பட்டவரை கோவிலில் மாத்திரம் இருக்கிறார் என்று கருதி கோவிலுக்கு போவது அரை நாஸ்திகம்" என்று சொல்லி விடுகிறார்கள்.
ஆகவே மாறுதலும், சீர்திருத்தமும் அதிசயமானதல்ல. அன்றியும் இம்மாறுதலால் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டதா என்று பாருங்கள். முதலாவது பணம் மிச்சம். அவற்றை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யலாம். நேரக் கேடு, அதிகமான தொந்திரவு, தொல்லை அலைச்சல் முதலியவை இல்லை. அர்த்தமற்றதும், மூடநம்பிக்கையானதும், காட்டுமிராண்டித் தனமானதுமான வேஷங்கள், காரியங்கள் ஆகியவைகள் இல்லை. வீணாக 5 நாள் விருந்து போடுவதிலும், பார்ப்பானைக் கொண்டு குப்பை செத்தை போட்டுப் புகைத்து நமக்கு விளங்காத விஷயத்தைப் பற்றி பேசுவதிலும் ஓதுவதிலும் என்ன பயன்? சீர்திருத்தம் என்பதினால் மனித சமூகத்துக்கு எவ்வளவு நன்மை இருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள்.
அன்றியும் இன்று நடந்த மற்றொரு சங்கதியையும் நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அதாவது மாப்பிள்ளைக்கு பெண் ஒரு சங்கலியைக் கழுத்தில் மாட்டிற்று. பெண்ணுக்கு மாப்பிள்ளையும் ஒரு சங்கலியை கழுத்தில் மாட்டினார்.
இது ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் சமமே ஒழிய ஒருவருக்கொருவர் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதற்கு அறிகுறியாகும். இதை ஒரு புரட்சியான காரியம் என்றே சொல்லலாம்.
மணமகள் பார்வதி தனக்கு தாலிகட்டிக் கொள்ள இஷ்டமில்லை என்றும், தாலி பெண் அடிமையைக் குறிக்கும் சாதனம் என்று சொல்லி தாலியை மறுத்ததால் இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் சங்கிலி போட்டுக் கொள்வது என்கின்ற ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.
இன்று நடந்த சீர்திருத்தங்களுக்குப் பெரிதும் பெண்ணும் பொருப்பாளி என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தோழர் வைசு.ஷண்முகம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர் என்பதையும், அவர் சுமார் 20 வருஷங்களுக்கு முன்பிருந்தே சீர்திருத்த தொண்டில் ஈடுபட்டு உழைத்து வருகிறவர் என்பதும் நீங்கள் அறிந்ததேயாகும். இத் திருமணம் இம்முறையில் நடக்க ஏற்பாடு ஆகி இருக்கவில்லை என்றால் பெண்ணுக்கு கலப்பு மணமாவது செய்து கொள்வதன் மூலம் சீர்திருத்த முறையில் திருமணம் செய்து செட்டிமார் சமூகத்துக்கே ஒரு முதல் வழிகாட்டி ஆக வேண்டும் என்பதே முக்கிய ஆசை. தோழர் வைசு. அவர்களும் இதற்காகவே எவ்வளவோ முயற்சி எடுத்து சீர்திருத்தத்தில் தக்க ஆர்வமுள்ள இந்த மணமகனை தேர்ந்தெடுத்தார்கள்.
இதை சீர்திருத்த மணம் என்பதோடு சுதந்திரக் காதல் மணம் என்றும் சொல்லலாம். மணமகன் வீட்டார்களும், இச்சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது. செட்டியார் சமூகத்தார்களும் இவ்வளவு பேர் தம்பதிகள் சகிதம் வந்திருப்பது சீர்திருத்த வெற்றியைக் குறிக்கின்றது.
இந்த வைபவங்கள் எல்லாம் பெரிதும் இச்சமூகம் கண்டு களித்து இதை பின்பற்ற வேண்டும் என்கின்ற நோக்கத்தை முன்னிட்டே நடத்தப்படுவதாகும்.
கடைசியாக கனம் மந்திரியார் அவர்கள் ஒருநாள் சாவகாசத்தில் அழைக்கப்பட்டும் அவருக்கு இன்று வேறு இடங்களில் முக்கியமான வேலைகள் அமைக்கப்பட்டிருந்தும், எவ்வித ஆக்ஷேபனையும் சொல்லாமல் மிக்க திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இன்று சரியாய் குறிப்பிட்ட நேரத்துக்கு விஜயம் செய்து நமது திருமண நிகழ்ச்சியை அலங்கரித்து பெருமைப்படுத்திக் கொடுத்த உதவிக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர் களாவோம் என்பதைத் தெரிவித்து விட்டு முடித்துக் கொள்கிறேன்.
(குறிப்பு: 07.07.1935 ஆம் நாள் நடைபெற்ற செட்டிநாடு கானாடுகாத்தான் தோழர் வைசு. சண்முகம் மகள் பார்வதி காரைக்குடி தோழர் ப.மெ.மெ.மெ. மெய்யப்ப செட்டியார் மகன் நடராஜன் திருமணத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு சொற்பொழிவு 14.07.1935)