சேலத்திலும், வேலூரிலும் பொதுக் கூட்டங்களுக்கு 144 பிரிவுப்படி உத்திரவுகள் போட்டு சர்க்காரார் பொதுக் கூட்டங்களைத் தடுத்ததாகத் தெரிய வருகிறது.
இதே முறையை இனியும் ஆங்காங்கு கூட்டப்படும் பொதுக் கூட்டங்களுக்கும் கையாடப்படலாம். இதனால் கூட்டங்களில் ஏற்படும் காலித்தனங்கள் ஒருவாறு ஒழிந்து விடலாம் என்று சர்க்கார் கருதி இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம்.
இதைப் பற்றி சுமார் 6, 7 மாதங்களுக்கு முன் நாம் குடிஅரசில் எழுதியும் இருக்கிறோம். காங்கிரசின் பேரால் பொது ஜனங்களை ஏமாற்றி, தாராளமாய்ப் பணங்கள் வசூல் செய்து, அவற்றைக் காலித்தனம் செய்யப்படுவதற்காக, சில தோழர்களுக்குக் கொடுத்து, அவர்களைப் பெரிய தேசப் பக்தர்களாக்கி, உசுப்படுத்தி விடுவதால், கூட்டங்களில் இம்மாதிரியான தொல்லைகள் நடைபெற வசதிகள் ஏற்பட்டுவிடுகின்றன.
சர்க்காரார் ஒவ்வொரு ஆள்களுடையவும் ஜீவனத்துக்கு மார்க்கம் என்ன? என்பதைத் தெரிந்து சரியான மார்க்கமில்லாமல் இம்மாதிரி வாழ்க்கையிலிருந்து வருபவர்களிடம் ஜாமீன் நடவடிக்கை நடத்திப் பொது ஜனங்களுக்குச் சவுகரியத்தையும், அமைதியையும் உண்டாக்கித் தர வேண்டும் என்றும், பொதுக் கூட்டங்கள் விஷயத்திலும் குறைந்த அளவு 12 மணி நேரத்துக்கு முன்பாகிலும் மீட்டிங்கைப் பற்றி சர்க்காருக்குத் தெரிவித்து உத்திரவு பெற்று மீட்டிங்கை நடத்தும்படியான சட்டம் இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட ஒவ்வொரு கூட்டத்துக்கும் போலீசார் ஆஜராகிக் கூட்டத்தைக் காலித்தனமில்லாமல் அமைதியாய் நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும், நாகரீக தேசத்திலும் சுதந்திரமும், சகோதரத் துவமும், சமத்துவமுமுள்ள தேசங்களில் இந்தப்படியே நடக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறோம். இந்தப்படி செய்யாமல் எல்லாக் கூட்டங் களுக்கும் சர்க்கார் 144 போட்டுவிட்டார்கள்.
காங்கிரசின் பேரால் பணம் வசூல் செய்த காலம் முதல் கொண்டுதான், கூட்டங்களில் காலித்தனம் ஏற்படுவது என்பது ஆரம்பமாயிற்று என்று ஆதாரங்களோடு சொல்லலாம்.
இதற்கு உதாரணம் காங்கிரசுக்காரர்கள், தங்களைத் தவிர மற்றவர் களுக்குப் பொது மேடை (பப்ளிக் பிளாட்பாரம்) கிடையாது என்று ஆங்காங்கு சதா சர்வகாலம் பெருமை அடித்துக் கொள்ளுவதும் ஒன்றாகும்.
சுயமரியாதை இயக்கத்தைப் பொருத்தவரையில், எந்தக் குழப்பங் களிலாவது சுயமரியாதைக்காரர்கள் சம்மந்தப்பட்டிருந்தார்கள் என்று தெரிந்த போதெல்லாம் நாம் அவர்களை வன்மையாய்க் கண்டித்தே வந்திருக்கிறோம்.
நாளது வரை எந்தக் காங்கிரஸ் பத்திரிகையோ, காங்கிரஸ் தலைவர்களோ தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஈறாக எவரும் தங்கள் ஆள்களாலும், கூலிகளாலும் ஏற்பட்ட காலித்தனங்களைப் பற்றி ஒரு சிறு வார்த்தையாவது சொல்லிக் கண்டித்து இருப்பதாக நாம் காணவே முடியவில்லை.
அது மாத்திரமல்லாமல், அப்படிப்பட்ட காலித்தனங்களைக் காங்கிரஸ் பத்திரிகைகள், தேசீயப் பத்திரிகைகள், பார்ப்பனப் பத்திரிகைகள் என்பவைகள் தேசப்பக்தி என்பதாகப் பாராட்டியும், மிகைப்படுத்தியும் எழுதி எதிரிகளை அதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு இழிவுபடுத்தியும், காலிகளையும், காலித்தனங்களையும், உற்சாகப்படுத்திக் கொண்டும் வந்திருக்கின்றன. இதற்குப் பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.
இந்த மாதிரி நிலையில் பதிலுக்குப் பதில் காலித்தனம் செய்ய இஷ்டமில்லாதவர்களுக்கும், காலித்தனத்தை வெறுப்பவர்களுக்கும் சர்க்காரிடம் முறையிட்டு, புதிய சட்டங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. இப்படிக் கேட்டுக் கொள்வதை காலித்தனத்தில் வெற்றி பெறக் கருதியிருப்பவர்கள் கோழைத்தனம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
காங்கிரசுக்காரர்களால்தான் இவ்வித நிலைமை ஏற்பட்டதென்பதை எடுத்துக் காட்டினோமேயானால், அதற்கும் தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் அவர்களைப் போன்ற தலைவர்கள் "காங்கிரசின் வீரத்தினாலும், ஆண்மையாலும், சர்க்காராரும் மற்றக் கட்சியாரும் பயந்து கொண்டு, புதுச் சட்டங்கள் மூலம் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்" என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனாலும் அது விஷயத்தில் நமக்குக் கவலை இல்லை. இந்தியாவுக்கு யோக்கியமான சுயராஜ்ஜியம் என்பது கிடைத்ததாக வைத்துக் கொண்டாலும், எப்படிப்பட்ட சுயராஜ்ஜிய ஆட்சியிலும் இப்படிப்பட்ட காலித்தனங்கள் நடவாமல் இருப்பதற்கு அவசியமான சட்டங்கள் செய்ய வேண்டியது அவசியமே ஆகும்.
இந்திய அரசாங்கம் இதற்கு முன்னையே இந்தக் காரியம் செய்து இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட காலித்தனங்களால் அவர்களுக்கும் சில சமயத்தில் அனுகூலமிருக்கிறபடியால், இதைப் பற்றி கவனிக்காமல் அவ்வப்போது அதுவும் தங்களுக்கு இஷ்டப்பட்டபோது கவனித்து தக்கது செய்து வருகிறார்கள்.
இனி வரப்போகும் தேர்தல் சம்பந்தமான பிரசாரங்களில், காங்கிரசுக் காரர்கள் பேசும் சந்தர்ப்பங்களில் எதிரிகளை அவன், இவன், அயோக்கியன், திருடன், தேசத் துரோகி, சர்க்கார் கூலிகள், அடிமைக் கூட்டம், குலாம் என்று எல்லாம் இழி மொழிகளில் பேசி வருவது போல் பேச நேரிட்டால், அவர் களுக்குப் புத்தி கற்பிக்காமல் இருப்பது என்பது சுலபத்தில் சகிக்கக்கூடிய காரியமாய் இருக்காது. அன்றியும் மற்றவர்கள் கூட்டங்களில் போய் காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய யோக்கியதைகளை எங்கு வெளிப்படுத்தி விடுவார்களோ என்று பயந்து கூட்டங்களில் கலாட்டா செய்து கலைக்க முயற்சிக்கும்போதும், அவர்களுக்குப் புத்தி கற்பிக்கவோ, பதிலுக்குப் பதில் செய்யவோ ஆசை ஏற்படாது என்று சொல்லவும் முடியாது.
ஆகவே கூட்டங்கள் ஒழுங்காயும் கண்ணியமான முறையிலும் நடைபெற வேண்டும் என்று கருதுகிற எவரும் சர்க்கார், பந்தோபஸ்தைக் கோரியே ஆக வேண்டிய நிலைமையை காங்கிரஸ்காரர்கள் உண்டாக்கி விட்டதால், இனி கூட்டங்கள் கிரமமாய் நடைபெற சர்க்காருக்குத் தெரிவித்து விட்டே கூட்டம் நடத்தக் கூடியதான ஒரு சட்டம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம்.
சேலத்தில் 144 ஏற்படக் காரணமாய் இருந்த விஷயங்களைப் பற்றி, தோழர்கள் அவனாசிலிங்கம் செட்டியாரும், வெங்கிடாசல ரெட்டியாரும் சேலம் கூட்டத்தில் எடுத்துச் சொல்லி, அதற்கு ஆக தங்கள் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் வந்திருக்கும் விஷயங்களைப் பார்த்தாலே எவருக்கும் சுலபமாய் விளங்கும்.
அதுபோலவே வேலூரிலும் யார் நடத்தையால் 144 போட வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதும் பத்திரிக்கைகளிலிருந்தே விளங்கும்.
அதாவது தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பாக 28.6.35ந் தேதியில் கோட்டை மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பல தோழர்கள் பேசுவார்கள் என்றும் பெயரைக் கண்டே 25.6.35 தேதியிலேயே, அதாவது 3 நாளைக்கு முன்பிருந்தே நோட்டீசுகள் வெளியிட்டு, தண்டோராவும் போட்டு வந்தும், இதையறிந்த காங்கிரஸ் காரர்கள் 28.6.35ல் அதே இடத்தில் போட்டிக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள். இதனால் கலெக்டர் 144 போட வேண்டி வந்து கூட்டம் நிறுத்தப்பட்டுப் போயிற்றாம். ஜஸ்டிஸ் கட்சி பிரசாரத்துக்கு ஆரம்பித்த உடன் காங்கிரஸ்காரர்கள் இம்மாதிரியான நடத்தையை மேற்கொண்டதானது மிகவும் இழிவானதும் பயங்காளித்தனமானதும் என்பதோடு, இதைக் காங்கிரஸ் பத்திரிகைகளும் தலைவர்கள் என்பவர்களும் கண்டிக்காமல் இருப்பது வெறுக்கத்தக்கது என்றும் சொல்லுவோம்.
ஆகையால் இந்த விஷயத்தில் சர்க்காரார் தங்கள் கடமையை உணர்ந்து கூட்டங்கள் ஒழுங்காய் நடைபெற பொறுப்பு ஏற்றுக் கொண்டு பந்தோபஸ்து செய்யவில்லையானாலும் 144 உத்திரவாவது போட்டு, காலித்தனங்கள் நடக்காமல் தடுத்ததை ஒரு அளவுக்காவது நல்ல காரியம் என்று சொல்லி பாராட்டித் தீர வேண்டியிருக்கிறது.
(குடி அரசு துணைத் தலையங்கம் 07.07.1935)