periyar bharathidasan 350பொதுவாக நகரங்கள் மாட மாளிகை, வீடு வாசல்களாலானவை. ஆனால் ஆக்ஸ்போர்ட் நகரம் கல்லூரிகளாலானது என்றும், மான்செஸ்டர் நகரம் மில்களாலானது என்றும் சிறப்பு முறையில் வழங்கப்படுவது போன்று கோயில்களாலான நகரம் ஒன்று உலகத்தில் உண்டு என்று கூறுவதானால் காஞ்சீபுரத்தைத் தான் கூற வேண்டியிருக்கும். காஞ்சீபுரத்தின் வீடுகளின் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் அந்நகரத்துக் கோயில்களின் எண்ணிக்கை. குளக்கரைகளெல்லாம் கோயில்கள். கழனி தோட்டங்களெல்லாம் கோயில்கள். வீட்டுப் புறக்கடைகளெல்லாம் கோயில்கள். சாமிகள் கணக்கோ சொல்லித் தொலையாது. கோயிலில்லாது கேட்பாரற்று, வெயிலிலுலர்ந்து, மழையில் நனைந்து வாடிவதங்கும் சாமிகளைப் பார்க்கவும் பரிதாப மாயிருக்கும். ஒரு கோயிலில் ஒரு சாமியல்ல. ஒன்று போலவே ஆயிரக்கணக்கான சாமிகள். சில கோயில்களில் சாமிகள் நாத்து விட்டிருக்கிறது. ஒரு லிங்கத்திலேயே 108, 1008 லிங்கங்கள். இரடி விழுந்தாலும் சாமியல்ல, சாமிகளின் மேலும், கோயிலன்று கோயில்களின் மேலுந்தான் விழ வேண்டும். நகரத்தை விட்டு ஒரு மைல் சென்று தனியிடம் தேடி வெளிக்கு உட்காருவதானாலும் அங்கும் ஒரு கோயிலோ, சாமியோயிருக்கப் பார்க்கலாம்.

அதிலும் சீக்கியர் மடம், சங்கரர் மடம் போன்ற பல வகுப்பினர் மடங்களும், கிறிஸ்தவாலயம், மகமதிய பள்ளிவாயில்கள், சைன புத்த கோயில்கள், சிவாலயங்கள், தென்கலை வடகலை வித்தியாசமுள்ள வைணவக் கோயில்கள் இவையன்றி பல ஜாதி வகுப்பினர் ஆதிக்கங்களிலுள்ள தனிப்பட்ட கோயில்கள் முதலிய எல்லாமத ஜாதி வகுப்பினரின் ஆலயங்களாலும் நிரம்பப்பட்டு மத வேற்றுமைகளுக்கு ஆஸ்பதமான சரித்திர சம்பந்தமுடையது இக்காஞ்சி மாநகரம். இன்றும் ஒவ்வோராண்டைய வைகாசித் திருவிழாவிலும் நடக்கும் தென்கலை வடகலைச் சண்டையில் போலீஸ் காவலிருக்கும் போதே மண்டையோடு மண்டையுருண்டு கோர்ட்டுக்கும் போவதைக் காணலாம்.

இத்தகைய அருஞ்சிறப்புகளமைந்த இக்காஞ்சீபுரத்தில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்காக சமீப காலத்தில் ஒரு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விசேடமென்ன வென்றால் உள்நுழையும் வழியின் இருமருங்கிலும் மதிற்சுவருக்குள், ஒரு பக்கலில் நிர்வாண புத்த சிலையொன்றும், மறுபக்கத்தில் பிள்ளையார் சிலையொன்றும், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் ஸ்டேஷனுக்கும், புத்த சிலைக்கும், பிள்ளையார் விக்கிரகத்துக்கும் உள்ள தொடர்பென்ன? இதற்கு முன்பு அச்சிலைகள் அக்கட்டிடத்துக்குச் சமீபத்திலுமிருந்ததில்லை. அவ்விடமும் ஓர் கக்கூஸ் கட்டப்பட்டிருந்தவிடம். ஆகையால் பழைமை பாராட்டவும் நியாயமில்லை. ஊரில் சாமிகளில்லை, அதற்காக வைத்திருப்பார்கள் என்றாலும், காஞ்சீபுரத்தைப் பற்றி முன்பே வர்ணிக்கப்பட்டாய் விட்டது. அவ்வக்கால அரசர்கள் தாங்கள் பின்பற்றிய மதங்களை தங்கள் ஆட்சியில் நிலை நாட்டி வந்தது போலிருக்குமோ வென்று பார்த்தாலும், அரசாங்க மதத்துக்கும் இச் சிலைகளுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பிறகு, ஏன், எப்படி அச்சிலைகள் அங்கு வைக்கப்பட்டன? அதிகாரியின் சம்மதமின்றியும், அவர் இடங்கொடாமலும் அவைகள் அவ்விடத்தில் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்க வழியில்லை. அவ்வாறு நேர்க்கினும் தம் மதத்தை நிறுவ ஒரு ஜைன விக்ரகத்தையல்லவோ ஒரு நயினாரானவர் வைத்தோ அன்றி அனுமதித்தோ யிருக்க வேண்டும்? புத்த சிலை நாட்டப்படுவானேன்? ஓர் வேளை பிற மதத்தினர்க்கஞ்சி ஜைன விக்ரகத்துக்குப் பலவழிகளில் வேற்றுமையில்லாது ஏறக்குறைய ஒத்ததான புத்த சிலையை நாட்டியிருக்கக்கூடுமோ என்னும் சந்தேகமுண்டாகிறது. இருப்பினுமிருக்கலாம். அப்படியானால் பெரும்பாலோரான பிற ‘இந்து’க்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை திருப்திப்படுத்த பிள்ளையார் விக்ரகமும், இடம் பெற்று விட்டதில் ஆச்சரியமில்லை யல்லவா?

மக்களின் அறிவு விருத்தியடைந்து வருமிக்காலத்தில், மதங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், சர்ச்சைகளும், நடந்து வருமிக்காலத்தில், அறியாமையும், மூடக் கொள்கையும், குருட்டு நம்பிக்கையும் பஞ்சாய்ப் பறந்து வருமிக்காலத்தில், கோயில்களையும், சாமிகளையும் பற்றிய ஓர் புத்துணர்ச்சி உலக முழுவதும் பரவி அவைகளை யொழிக்க முயற்சிக்கப்பட்டு வரும் இவ்விருபதாம் நூற்றாண்டில், எல்லா மதத்தினரும், எல்லா வகுப்பினரும், எல்லா கொள்கையினரும் வரக்கூடிய, எல்லோருடைய பணத்தினாலும், கட்டப்பட்டு எல்லோருக்கும் பொதுவான, அதிலும் அரசாங்கக் கட்டிடத்தில் புத்த, பிள்ளையார் சிலைகளை ஸ்தாபிக்கப் பட்டிருக்கிறதென்றால், அதன் பொருள் தானென்ன? மேலும் இக்காஞ்சீபுரத்தின் நிலைமை தெரிந்திருந்தும், இங்கு நடக்கும் மதச் சண்டைகளை அறிந்திருந்தும், அச்சண்டை சச்சரவுகளையடக்கி சமாதானத்தை நிலைநாட்டி வரவேண்டிய போலீஸ் இலாகாவுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலேயே இத்தகைய சிலைகளை நாட்டப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணக் கூடியதாயுள்ளது.

ஆகையால், காஞ்சீ நகர போலீஸ் தலைமையதிகாரியும், போலீஸ் மேலதிகாரிகளும் இவ்விடயத்தையூன்றி கவனித்து கூடிய விரைவில் அச்சிலைகளை அவ்விடத்தை விட்டகற்றி பொதுமக்களுக்கு திருப்தியையளிக்க முன் வருவார்களாக.

- ஒரு நிரூபர்

(குடி அரசு - கட்டுரை - 10.05.1931)

Pin It