“திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவனாகயிருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. ஏனென்றால் இது “கல்வி” என்பது சம்பந்தமான ஆசிரியர் மகாநாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்சமாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்கு தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான்.

periyar 366நான் என்னுடைய ஒன்பதாவது பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத்திலுமே வாசித்தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உள்பட்ட காலத்திலும் என்னை பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்கு தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக் கொண்டு ஓர் திட்டத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத்தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன். அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொல்லை விளைவிப்பதும், அவர்களிடம் அடிபடுவதுமான காலந்தான், நான் ஏதாவது இரண்டொரு எழுத்தை கற்றக் காலமாயிருக்கும். இதை நான் அநேக சந்தர்ப்பங்களில் பல பொதுக் கூட்டங்களில் சொல்லி யிருக்கின்றேன். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டுதான் ஒரு சிலர் அதாவது என்னுடைய கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களோ அதனால் நஷ்டப்பட நேரிடுகிறவர்களோ என்னைக் கண்டிப்பதற்கு இதை உபயோகித்துக் கொள்கிறார்கள். என்னவென்றால் “நான் கல்வி அறிவு அற்றவனென்றும் அதனால் எனது கொள்கைகள் அறிவு அற்றதென்றும்” சொல்லியும் எழுதியும் வருவதைப் பார்க்கின்றேன். ஆனாலும் உங்கள் ஜில்லா போர்டு தலைவர் திரு. எம்.கே.ரெட்டியார் அவர்களுக்கு என்மீதுள்ள அன்பும் நம்பிக்கையும், நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே மகாநாட்டுக்கு தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியதால் வேறு வழியில்லாமல் நான் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

நீங்கள் எந்த விதமான சிறந்த உபந்நியாசத்தையோ எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஜில்லா போர்டு தலைவர் இந்த மகாநாட்டை திறந்து வைக்கும்போது செய்த வரவேற்புப் பிரசங்கமானது மிகவும் அற்புதமாகவும் ஆணித்தரமானதாகவும் பெரிய அநுபோகமும் ஆராய்ச்சியும் பொருந்தியதாகவும் இருந்தது. அது உங்கள் நிலையை விளக்கியதுடன் நீங்கள் செய்ய வேண்டியதையும் நன்றாய் எடுத்துக் காட்டி இருக்கின்றது. அவ்வுபன்னியாசம் உங்களுக்கு மாத்திரமல்லாமல் உங்கள் மாணாக்கர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் கிராமவாசிகளுக்கும் பொதுநல சேவைக்காரர்களுக்கும் மிகுதியும் பயன்படக் கூடியது.

அது போல நான் எதையும் எடுத்துச் சொல்ல முடியாது. தவிர அக்கிராசனம் வகித்தவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அதுபோல் ஆராய்ச்சியோடு ஒன்றும் சொல்ல முடியாது என்றும், ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய விஷயம் எதையாவது என் சொந்த முறையில்தான் சொல்லக் கூடும் என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என்கின்றவர்கள் ஒருவித தொழிலாளிகளே. அதாவது ஜீவனத்திற்காக வேலையோ கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக்காரர்களேயல்லாமல் உண்மையான ஆசிரியத் தன்மையுடையவர்கள் அல்ல என்பதே எனது அபிப்பிராயம். எப்படி ஒரு மனிதன் தன் ஜீவனத்திற்கு மூட்டை தூக்குகிறானோ, மாடு மேய்க்கிறானோ, வண்டி ஓட்டுகிறானோ, வக்கீல் வேலை செய்கிறானோ, குமாஸ்தாவாக இருக்கிறானோ அப்படியே உபாத்தியாயர் வேலை என்பதும் ஒரு தொழிலாகவே ஏற்பட்டு விட்டது.

ஒவ்வொரு உபாத்தியாயரும் தங்கள் தங்களை உபாத்தியாயர் வேலைக்குத் தகுதி ஆக்கிக் கொண்டதின் கருத்தே அவர்களின் ஜீவனத்திற்கு ஏதாவது தொழில் வேண்டாமா என்கின்ற கருத்து கொண்டுதானேயல்லாமல் ஏதாவது ஆசிரியத் தன்மையில் ஆசை இருந்து ஏற்பட்டதாக எனக்கு தோன்றுவதில்லை. ஆதலால் இம்மாதிரி மகாநாட்டுக்கு உபாத்திமைத் தொழிலாளர் மகாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமான பெயராகும். அதுபோலவே உங்களிடம் தங்கள் பிள்ளைகளை படிக்கவிடும் பெற்றோர்களும், பிள்ளைகளின் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது வழி ஏற்பட சற்றுப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்களே யொழிய அவர்களும் படிப்பை வயிற்றுப் பிழைப்பைத் தவிர வேறு காரியத்திற்கு கருதுவதில்லை.

உங்கள் ஜில்லா, தாலூக்கா போர்டுகளும் முனிசிபாலிட்டிகளும் கூட அந்த கருத்துடன்தான் பள்ளிக்கூட நிர்வாகம் செய்து வருகின்றார்கள். கடைசியாக சர்க்காரும் கூட இவ்வளவு வரிப் பணத்தை படிப்புக்காக செலவு செய்தும் படிப்பு இலாக்கா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெற கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய்கின்றார்கள். அதனால்தான் பலவழிகளிலும் தற்கால கல்விக்கு வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது.

மனிதனுக்கு கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும் அவ்வறிவால் தான் இன்புறவும் மக்கள் இன்புறவுமான தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே. இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்மந்தமில்லாததாகவே இருக்கின்றது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாகவும் தொழிலாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படுவதாக இல்லை.

ஒரு நிமிஷத்திற்கு 100 கவி பாடக் கூடிய வித்வானானாலும் அவன் அக்கவி பாடுவதில் அதாவது ஒரு நிமிஷத்திற்கு நூறு அச்செழுத்தை கோர்க்கும் ஒரு கம்பாசிட்டருக்கு சமானமான தொழிலாளிதானே ஒழிய அவனை ஒரு பெரிய அறிவாளி என்று சொல்லிவிட முடியாது. அது போலவே ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லக்கூடிய ஒரு பண்டிதனோ ஒரு பாஷ்யக்காரனோ என்பவன், ஒரே தோலில் நூறுவிதமான செருப்புத் தைக்க கற்றுக் கொண்ட ஒரு சக்கிலிக்கு மேலானவனென்று சொல்லிவிட முடியாது.

ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லும் பண்டிதனுக்கு எப்படி செருப்பு தைக்க தெரியாதோ அது போல சக்கிலிக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாது. ஆனாலும், இருவர்களும் இரு தொழிலில் இரு வித்தையில் சிறந்தவர்களே ஒழிய அறிவாளிகள் என்று சொல்லிவிட முடியாது.

உதாரணமாக சில பெரிய சட்டம் படித்த வக்கீல்களை விட சிறிய சட்டம் படித்த வக்கீல்கள் கெட்டிக்காரர்களாய் இருக்கின்றார்கள்.

சிலருக்கு படிப்பெல்லாம், நெட்டுருப்போட்டு ஒப்புவிக்க முடிகிறதல்லாமல் தங்களுக்கு ஒரு காரியத்திற்கும் உபயோகப்படுவதில்லை.

உதாரணமாக ஒரு பெரிய விஞ்ஞான சாஸ்திரி அதாவது சைன்ஸ் படித்த பண்டிதன் ஒரு புளியமரத்தடியில் பேய் இருப்பதாக யாராவது சொல்லிவிட்டால் அந்தப் புளிய மரத்தடியில் நடக்க நேரும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுக்கத்துடன் நடக்கின்றான். தன் பெண்ஜாதியை பேயோட்ட கோயிலுக்கு அனுப்பிக் கொடுக்கிறான், உடற்கூறும் அதன் சிகிச்சையும் படித்த பெரிய பண்டிதனான டாக்டர் கூட தன் பெண்ஜாதியோ மகளோ வீட்டிற்கு தூரம் என்றால் உடனே வெளியில் உட்கார வைத்து விடுகிறான் அல்லது கோழிக்கூடு போன்ற சிறு அறைக்குள் இருக்கச் செய்து விடுகின்றான் அல்லது நிழல் மேலேபட்டால் தீட்டு என்று சொல்லி விடுகின்றான். இரவில் வெளியில் தள்ளி கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே படுத்து தூங்குகிறான். தனது குழந்தை நொண்டியாய்ப் பிறந்தால், தான் முன் ஜென்மத்தில் செய்த வினை என்று வருத்தப்படுகின்றான்.

பெரிய வான சாஸ்திர பண்டிதன் கிரகணத்தின் போது ஊறுகாய்ச் சட்டியில் அருகம்பில்லைப் போட்டுவிட்டு கிரகணம் ஆரம்பிக்கும்போது ஒரு முழுக்கும் நீங்கும்போது ஒரு முழுக்கும் போடுகிறான். பெரிய ஞான சாஸ்த்திர பண்டிதன் என்பவனும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஊருக்குப் போனால் மோட்சம் என்று குறிப்பிட்ட குளத்து தண்ணீரில் (அது எவ்வளவு அழுக்காயிருந்தாலும்) முழுகினால் தான் செய்த அக்கிரமங்களின் பலன் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் நினைத்துக் கொண்டு முழுகி விட்டு இதுவரையில் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தன்னை தைரியப்படுத்திக் கொண்டு புதுக்கணக்கு போட்டு மறுபடியும் அக்கிரமங்களைச் செய்ய தைரியவானாகி விடுகிறான்.

பெரிய ஸ்தாவர சாஸ்திரமும் ஜீவ ஜெந்து சாஸ்திரமும் படித்தவன் நாயைக் கொன்றால் பாவம் இல்லை, நரியைக் கொன்றால் பாவம் இல்லை, கெருடனைக் கொன்றால், குரங்கைக் கொன்றால் பாவம் என்கிறான். பால் சாப்பிட்டால் மாம்ச பக்ஷணமல்ல, ஆடு, கோழி சாப்பிட்டால் மாம்ச பக்ஷணம் என்கின்றான்.

இம்மாதிரி எத்தனையோ காரியங்களில் படித்தவர்கள் என்பவர்களின் நிலைமை அறிவுக்கும், படிப்புக்கும் சம்பந்தமில்லாமலே இருக்கின்றது. எப்படிப் பல புஸ்தகங்கள் நிறைந்த அலமாரிக்கு ஒரு சிறிதும் புஸ்தகங்களின் தன்மை தெரியாதோ அதுபோலவே பல புஸ்தகங்களையும் அலமாரிக்கு பதிலாக அவைகளை உள்ளத்தில் வைத்து இருக்கிறதாகக் காணப்படும் நகரும் அலமாரிகளான பண்டிதர்கள் கடுகளவு பகுத்தறிவும் புஸ்தகத்தின் தன்மையும் அறியாதவர்கள் அனேகர்கள் இருப்பது எனக்குத் தெரியும். எனவே கல்வி என்றும் பெயர் வைத்துக் கொண்டு நாம் செய்யும் இம்மாதிரியான அநேக பிரயத்தனங்கள் மக்களின் ஒரு சிறு பகுத்தறிவிற்கும் உபயோகப்படாமலே இருந்து வருகின்றது.

உதாரணமாக நமது நாட்டின் சரித்திரம் என்பதாக சொல்லப்படும் எந்த பழஞ் சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மற்ற நாட்டார் எல்லோரையும் விட நாம் மேல் நிலையில் இருந்ததாகவே காணப்படுகின்றது. ஆனால் இன்று நாம் இருக்கும் நிலையானது மற்ற எல்லா நாட்டாரின் நிலைமையை விட தாழ்மையாகவே இருக்கின்றது.

இந்த, நம் தாழ்ந்த நிலைக்குக் காரணம் என்ன என்றால் தெய்வ எத்தனம் என்று வெகு சுலபமாக பதில் சொல்லி விடுகின்றார்கள். இப்படிப் பதில் சொல்லுபவர்களே தான் பெரும்பாலும் தங்களை ஆஸ்திகர்கள் என்றும், தெய்வ நம்பிக்கை உடையவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள். இம் மாதிரி தொட்டதற்கெல்லாம் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்காமலும் கண்டுபிடிக்க ஒரு சிறிதாவது முயற்சிக்காமலும் சோம்பேறி ஞானம் பேசுவதுதான் நமது மத இயலாகவும், பெரியோரின் ஞானமாகவும் ஆஸ்திகமாகவும் போய்விட்டது. இப்போது முன்னுக்கு வந்திருக்கும் மற்ற நாட்டார் எல்லோரும் தங்கள் புத்திக்கும் முயற்சிக்கும் மதிப்புக் கொடுத்தே மேல்நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த நிலையை முதலில் உபாத்தியாயர்கள் உணர வேண்டும். இந்த நிலைக்கு பிள்ளைகளையும் கொண்டு வர வேண்டும். அம்மாதிரி நிலைமை பெற்ற மக்கள் உள்ள தேசம் எந்த விதத்திலும் முன்னடைந்தே தீரும்.

இன்று இவ்விடம் பல அறிஞர்கள் பல விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தார்கள். அவைகளில் கிராம சீர்திருத்தம், இயற்கைப் பாடம், சாரணர் இயக்கம் முதலிய விஷயங்கள் முக்கியமானவை. அவைகளைப் பற்றி எனது அபிப்பிராயங்களையும் சிறிது சொல்கிறேன். உபந்யாசகர் தமிழ்நாட்டில் மட்டும் 27 இலட்சம் கிராமங்கள் இருப்பதாக சொன்னார்கள்.

கிராம சீர்திருத்தம்

அவைகள் உண்மையாகவும் இருக்கலாம். அக்கிராமத்தின் நன்மைக்கும் கிராம வாசிகள் முன்னேற்றத்திற்கும் இதுவரை அரசாங்கமோ அரசியல் இயக்கமோ, கிராம சீர்திருத்தக்காரர்களோ, அரசியல் ஜனப் பிரதிநிதிகளோ ஏதாவது ஒரு சிறிது நன்மை செய்திருக்கிறார்களா? ஆனால் ஒவ்வொருவரும் தம்தம் நலனுக்காக வேண்டி கிராமத்தார்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லியே மக்களை ஏமாற்றிப் பிழைப்பை வலுப்படுத்தியோ தாங்கள் ஓட்டுப் பெற்றோ மக்களின் நம்பிக்கை பெற்றோ சுயநலமடைந்து வருகிறார்கள். கிராமத்தின் நிலைமைகள் மாத்திரம் நாளுக்கு நாள் கீழ் நோக்கிக் கொண்டே போகின்றது.

உதாரணமாக எங்கள் ஜில்லாக்களில் அனேக கிராமங்கள் அக்கிராமச் சொத்தைவிட அதிகமான கடனுக்கு ஆளாகி கிராம மிராசுதார்கள் வெளிநாட்டு லேவாதேவிக்காரர்களுக்கு தங்கள் சொத்துக்கள் முழுவதையும் அடமானம் செய்திருக்கிறார்கள். இதற்கு காரணம் விளைவு இல்லை என்று சொல்லிவிட முடியாது. அல்லது விளைபொருள்களுக்கு விலை இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இவற்றுள் அனேக கிராமங்கள் வருஷம் மூன்று போகம் விளையக் கூடிய தண்ணீர் வசதிகளையும் நிலத் தோட்டத்தையும் நிரந்தரமாய் உடையவைகள். நெல், வாழை, கரும்பு, பருத்தி, புகையிலை, மஞ்சள் முதலிய விலை உயர்ந்த விளை பொருள்களையே அதிகமாக வெள்ளாமை உடைய பூமிகளாகவே இருந்து வருகின்றன. இப்பூமிகளை உடைய விவசாயிகளும் லேசான மிராசுதார்கள் அல்ல. அதாவது ஒவ்வொரு மிராசுதாரனும் வருஷம் ஒன்றுக்கு 1000 சலகை 2000 சலகை 3000 சலகை என்கின்ற எண்ணிக்கையான தானிய வருவாய் உடையவர்கள். (ஒரு சலகை நெல் 12 ரூபாய் விலை பெறுமானது)

இப்படிப்பட்ட மிராசுதார்களே 10 ஆயிரம், 50 ஆயிரம், ஒரு லட்சம், 2 லட்சம் ரூபாய்கள் 100-க்கு 10 முதல் 15 வரை வட்டியுள்ள கடனாளிகளாக இருக்கின்றார்கள் என்றால் சிறிய மிராசுதார்களைப் பற்றி விளக்க வேண்டுமா?

கிராம சீர்திருத்தம் என்பது வீதி கூட்டுவதும், பள்ளிக்கூடம் கட்டுவதும் பஜனைமடம் உண்டாக்குவதும், உத்சவங்கள் செய்விப்பதும அதிக வெள்ளாமை விளையச் செய்வதுமான காரியங்களைச் செய்து விட்டால் போதும் என்று பலர் நினைக்கிறார்கள். இக்காரியங்களினால் எந்தக் கிராமமும் முற்போக்கடைந்து விடாது. கிராமக் குடித்தனக்காரருக்கு பகுத்தறிவையும், சிக்கனத்தையும், ஏழை மக்கள் நிலைமையையும் ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும். கிராமவாசிகள் கள்ளுக்கடை ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்து சுவாமி கோவில் கட்டுகிறார்கள். பரம்பரையாய் திருடுகின்ற ஜாதியார் என்கின்றவர்களுக்கு திருட அனுமதி கொடுத்து, அவர்களை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க இடம் கொடுக்காமல் இருப்பதாக வாக்களித்து அபயம் கொடுத்து அவர்களிடம் திருட்டில் பங்கு வாங்கி உற்சவம் செய்கிறார்கள்.

வெறும் புராணப் படிப்பைச் சொல்லிக் கொடுத்து தங்கள் பணங் காசையெல்லாம் பஜனைக்கும், உற்சவத்திற்கும் கல்யாணத்துக்கும் கருமாதிக்கும் கும்பாபிஷேகம் முதலிய காரியங்களுக்கும் செலவு செய்யச் செய்வதும், யாத்திரைக்கும் உற்சவத்திற்கும் சமாராதனைக்கும் சிலவு செய்து அவற்றில் போட்டி போட்டு தங்கள் வரும்படியையும் மேற்கொண்டு கடன் வாங்கியும் செலவு செய்ய பழகி விடுகிறார்கள். மற்றும் பக்தி என்றும், மதம் என்றும் முட்டாள்தனமாக கிரகித்துக் கொண்டு பட்டை நாமங்கள் போட்டுக் கொண்டும் சாம்பலை பூசிக் கொண்டும் குடும்பத்தை கவனிக்காமல் பாஷாண்டிகளாய் திரிவதும் புது நாகரீகம் என்னும் பேரால் தங்கள் வாழ்க்கைச் செலவை அதிகப்படுத்திக் கொண்டு, மோட்டார் வண்டி யென்றும் அனுபவிக்க உயர்ந்த சாமான்கள் என்றும், உயர்ந்த ஆடைகள் என்றும் பல வழிகளில் தங்கள் தேவைகளுக்கு மேலும் தங்கள் அனுபவிக்க வேண்டிய சுகத்திற்கு மேலும் போட்டி போட்டுக் கொண்டு முட்டாள்தனமாக தங்கள் பணங்களை செலவு செய்து விடுகின்றார்கள்.

போதாக் குறைக்கு அரசியல் புரட்டால் ஏற்பட்ட தொல்லையாகிய ஜனப்பிரதிநிதித்துவம் என்று சொல்லப்படும் ஸ்தானங்களாகிய யூனியன், பஞ்சாயத்து, தாலூகா ஜில்லா போர்டு, முனிசிபாலிடி சட்டசபை முதலிய ஸ்தானங்களின் தேர்தல்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு 1000, 5000, 10000, 50000 ரூபாய்கள் வரை தேர்தல்கள் செலவும் அவைகளினால் தங்கள் வாழ்க்கை கவனிப்பு கெடுதலும் ஏற்படுகின்றன.

மற்றபடி ஒழுக்கங்களிலும் மிராசுதாரர்களாயிருக்கிறவர்கள் தாசி, வேசி, வைப்பு முதலிய விஷயங்களில் ஈடுபட்டு தங்கள் வீட்டு பெண்களை கவனியாமலும் அவர்களுக்கு வாழ்க்கையில் இன்பமில்லாமல் கொடுமைப் படுத்துவதும், அதனால் இம்மாதிரி மிராசுதாரர்கள் வீட்டுப் பெண்கள் பெரிதும் தங்கள் இயற்கை உணர்ச்சியை கட்டுப்படுத்த சக்தியற்றவர்களாகி தங்கள் வேலையாட்கள் வெளியாட்கள் முதலானவர்களுடன் இன்பம் அனுபவிக்க துணிவு கொள்ள வேண்டி ஏற்படுவதும், இதனால் குடும்ப கவனம் குறைந்து அவரவர்கள் இஷ்டம் போல் அவரவர்கள் கையில் சிக்கின பணத்தை பாழாக்குவதுமான வழிகளால் அநேக குடும்பங்கள் கெடுவதும், மற்றும் விவகார வியாஜியங்கள் முதலிய காரியங்களில் வக்கீல்களுக்கும் அதிகாரிகளுக்குமாக தங்கள் பொருள்களை அள்ளிக் கொடுத்து பாப்பராவதும், அதிகாரிகள் சிநேகத்திற்காகவும் பட்டம், பெருமை, முதலியவைகளுக்காகவும் பொருள்களை கவலையின்றி வாரி இறைத்து கடன்காரர்களாவதும் ஆகிய எத்தனையோ விதங்களில் கிராமங்களும் கிராம மிராசுதாரர்களும் 100-க்கு 80 பேருக்கு மேலாக கடன்காரர்களாகவும் ஒழுக்கமில்லாதவர்களாகவும் குடும்பங்களில் கவலை இல்லாதவர்களாகவும் இருந்து வருவதை நாம் தினமும் பார்த்து வருகின்றோம்.

இக் குறைகள் நீங்கினாலன்றி வேறு எந்த காரணத்தாலாவது நமது கிராமங்கள் முற்போக்கடைந்து விட முடியுமா என்று கேட்கின்றேன்.

எனவே இக் குறைகள் நீங்க எந்த அரசியலோ, மத இயலோ, கிராம சீர்த்திருத்த இயலோ, இதுவரையில் ஏதாவது செய்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றேன்.

உண்மையாய் ஏதாவது ஒரு கிராமம் திருத்தமடைய வேண்டுமானால் மேற்கண்ட குற்றங்கள் நீங்கத் தகுந்த கொள்கை கொண்டதாக கிராம சீர்திருத்தத் தன்மை ஏற்பட்டாலொழிய வேறு எந்த விதத்திலும் சீர்திருத்தம் ஏற்படாது. இவைகள் எல்லாம் என்னுடைய 35 வருஷ கிராமவாசிகளுடையவும் மிராசுதாரர்களுடைய சினேக அனுபவத்தினாலேயே சொல்லுகின்றேன். இந்த மேற்கண்ட காரணங்களால் வருஷம் பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் வரும்படி உடைய பெரிய பெரிய குடும்பத்தாரின் கடனுக்கும் சொத்துக்கும் சரி என்றும் சொத்துக்கு மேற்பட்ட கடன் என்றும் சொல்லும்படியான நிலையில் இருந்து வருகின்றது.

இயற்கைப் பாடம்

இனி இயற்கைப் பாடம் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

இந்த இயற்கைப் பாடம் என்பதை நமது சிறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைப் பற்றி உபாத்தியாயர்கள் மிகவும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது மக்களின் அறிவு வளர்ச்சிக்கு மிக்க அவசியமானதாகும். ஆனால் அநேக உபாத்தியார்களுக்கு இயற்கைத் தத்துவம் இன்னதென்றே தெரியாது என்பது எனது அபிப்பிராயமாகும்.

நமது மக்களின் அறிவு வளர்ச்சி பெறாமலிருப்பதற்குக் காரணம், இயற்கையின் தத்துவம் இன்னதென்று அறிய முடியாமல் போனதே தான். மேல் நாட்டார்கள் குறிப்பாக வெள்ளைக்காரர்கள், நம்மால் தெய்வத் தன்மையென்றும் அற்புதம் என்றும், சொல்லத் தக்கதான அநேக ஆச்சரியப்படத்தக்க காரியங்களை செய்து கொண்டும் இனியும் அநேக ஆச்சரியங்களைக் கண்டு பிடித்துக் கொண்டும் வருவதற்கு அவர்கள் இயற்கையின் தத்துவத்தை அறிவதில் பெரிதும் கவலை எடுத்துக் கொண்டதே காரணமாகும்.

நமது பிள்ளைகளுக்கு நாம் இயற்கையின் தத்துவம் சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் மேல் நாட்டார் தங்கள் பிள்ளைகளுக்கு இயற்கையின் தத்துவத்தை சொல்லிக் கொடுப்பதின் யோக்கியதையும் ஒன்றுக்கொன்று நேர் விரோதமானது. நாம் நமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் போதே, “எல்லாம் கடவுள் செயல்; அவனின்றி ஓர் அணுவும் அசையாது; கடவுள் சம்மதம் இல்லாமல் நம்மால் ஒரு காரியமும் செய்ய முடியாது. ஆகையால் இதில் நம்பிக்கை வைத்து எல்லா பொறுப்பையும் கடவுள் மீது போட்டுவிட்டு பக்தியாய் இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொடுக்கின்றோம். மேல்நாட்டாரோ அப்படி இல்லாமல், “மனிதனால் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. முயற்சி செய்; பலனடைவாய். உனது சக்தியில் நீ சந்தேகம் கொள்ளாதே; உன்னால் ஆகுமோ ஆகாதோ என்று பயப்படாதே சகல அற்புதங்களும், அதிசயங்களும், உனது நம்பிக்கைக்குள்ளும், உனது முயற்சிக்குள்ளும் சிக்கிக் கிடக்கின்றது” என்று சொல்லிக் கொடுக்கின்றார்.

மழை பெய்யாவிட்டால் பார்ப்பானுக்கு பணம் கொடுத்து வருண ஜெபம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லிக் கொடுக்கின்றோம்.

மேல் நாட்டார் மழை பெய்யாததற்கு மேகத்தில் உள்ள கோளாறு என்ன என்று கண்டுபிடித்து, மேகத்தை கலக்கிவிட்டு மழை பெய்யச் செய்யும்படி சொல்லிக் கொடுக்கிறார்கள். இயற்கைத் தத்துவம் அறியத்தக்க அறிவுப் பெருக்கத்திற்கு நாம் குழந்தைகளை பழக்குவதில்லை.

குழந்தைகள் இயற்கை விசாரணையில் இறங்கினால் நம்மவர்கள் மிரட்டி நாஸ்திகம் என்றும் அதிகப் பிரசங்கம் என்றும் பயப்படுத்தி அடக்கி விடுகின்றோம்.

இவ்விதம் அடக்கும் தன்மையை பெரும்பாலும் நாம் மதத்தின் பேரால் செய்கின்றோம். நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கு இம்மாதிரி மதத்தின் பேரால் கடவுள் தண்டிப்பாரென்றும், பாவம் வரும் என்றும், நாஸ்திகம் ஆகும் என்றும் சொல்லி பயப்படுத்தி மக்களை முட்டாள்களாக்கிய கொடுமையேதான் முக்கிய காரணமாகும்.

மதத்தையும் கடவுளையும் நினைத்ததற்கெல்லாம், எடுத்ததற்கெல்லாம், தொட்டதற்கெல்லாம் சம்மந்தப்படுத்தி ‘எல்லாம் கடவுள் செயல்; எல்லாம் கடவுள் செயல்’ என்பதையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் தன்மையை அடியோடு நிறுத்திவிட வேண்டும்.

குறிப்பு:- 19.05.1928 அன்று பூந்தமல்லி கண்டோண்ட்மெண்ட் கட்டிடத்தில் நடந்த செங்கல்பட்டு ஜில்லா ஆரம்ப ஆசிரியர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து ஆற்றிய உரை)

(குடி அரசு 27.05.1928, 03.06.1928 இதழ்களில் வெளிவந்தது)

Pin It