periyar with krishnamoorthy

ஸ்ரீமான் P.R. பரமசிவ முதலியார் எழுதியதற்கு பதில்

இந்த வியாசத்தின் காரணமான ஆதி வியாசம் 8-1-28 தேதி ‘குடி அரசில்’ வரையப்பட்டிருக்கிறது. அதற்கு ஸ்ரீ பரமசிவ முதலியாரின் மறுப்பு 22-1-28 ‘குடி அரசில்’ பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால் இதைப் படிக்கும் நண்பர்கள் மேல்கண்ட இரண்டு வியாசங்களையும் வைத்துக் கொண்டு வாசிப்பது நலமென தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நாம் “வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்து குறள் எழுதியிருந்தால் இக்கருத்துக்களை கூறியிருக்க மாட்டார்” என்று குறிப்பிட்டிருந்ததற்கு ஸ்ரீ முதலியார் அதை ஒருவாறு ஒப்புக் கொண்டு “தன்னலங்கொண்ட ஒரு கூட்டத்தார் ஏற்றுக் கொள்ளவில்லையானால் நீதியானது அநீதியாகி விடுமோ” என்று பதிலிருத்தியிருக்கிறார்.

இங்கு ஸ்ரீ முதலியார் பெண்களை தந்நலங்கொண்ட கூட்டத்தார் என்று குறிப்பிட்டது பெண்களுக்கு நீதி வழங்கியதாகுமா? என்பதை யோசிப்பதோடு பெண்கள் தர்மம் எழுதுவதில் ஆண்கள் இம்முறை கொண்டு பிரவேசிப்பது தன்னலங்கொண்டதாகாதா? என்பதையும் சிந்திக்க வேண்டுகின்றோம்.

(இந்த இடத்தில் ‘கருத்து’ இன்னது என்பதை முடிவு கட்டாவிட்டாலும்) “தமிழ்நாட்டில் வாழ்ந்த வாழுகின்ற பெண்ணரசிகளும் அக் கருத்துக்களை ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்” என்று எழுதியிருக்கின்றார். எந்தப் பெண்ணரசியாகிலும் தன்னை ஆண்பிறவிக்கடிமையென் றாவது தாம் அப்பிறவிக்கு கீழ்பட்டவர்கள் என்றாவது ஆண்தன்மையைவிட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது - எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராயிருந்தாலும் அவர் களை பெண்ணரசியென்று சொல்ல நாம் ஒருக்காலும் ஒப்போம்.

‘பல தலைமுறைப்பழக்கத்தால் பெண்கள் அக்கருத்துகளை ஏற்றுக் கொள்கின்றனர்’ என்று சித்திரபுத்திரன் எழுதியிருப்பதும் அதை தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தாழ்ந்த நிலையை ஏற்றுக் கொள்வது போலாகும் என்பதற்கு ஒப்பிட்டு சித்திரபுத்திரன் எழுதி இருப்பதும் “தாய்மார்களைப் பழித்து கூறியதாகும்” என்று ஸ்ரீ முதலியார் கூறுகின்றார்.

அதற்கு காரணம் காட்டுவதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் கிடைக்க வொட்டாமல் செய்து விட்டதால் அன்னார் அறியாமை உடையவராகி விட்டாரென்றும், பெண்களுக்கு அது பொருந்தாதென்றும் ஸ்ரீ முதலியார் சொல்லுகின்றார்.

இதை ஸ்ரீ முதலியார் ஆராய்ச்சியுடன் கூறியிருப்பதாக நமக்கு விளங்கவில்லை. ஏனெனில், எந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற கூட்டம் ஏற்பட்டதோ எந்தக் காலத்தில் எந்தக் கூட்டத்தாரால் ‘தாழ்த்தப்பட்டோருக்கு அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டதோ’ அந்தக் காலத்திலேயே அந்தக் கூட்டத்தாராலேயே பெண்மக்களுக்கும் அறிவு வளர்ச்சிக்குற்ற சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டு தாழ்த்தி அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இதை ஏன் ஸ்ரீ முதலியார் உணர முடியவில்லை என்பது நமக்கு அறிய முடியவில்லை.

தவிர, பெண்களின் அறிவுத் திறத்திற்கு உதாரணமாக ஸ்ரீ முதலியார் ஒரு ஒளவை பிராட்டியை எடுத்துக்காட்டுகின்றார். அதே மூச்சில் திருவள்ளுவரையும் எடுத்துக் கொண்டிருப்பாரானால் தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளும் ஏதோ ஒருவருக்கு அறிவு வளர்ச்சி இருந்து வந்தது என்பதை ஒத்துக் கொண்டிருப்பாரானால் நாம் ஒன்று இரண்டு பெண்ணரசிகளைப்பற்றி பேச வரவில்லை என்றும் தற்காலத்து நிகழும் நூற்றுக்கு தொண்ணூற்தொன்பதே முக்காலே மூணுவீச அரைவீசம் பெண்களைப் பற்றி பேசுகின்றோம் என்பதையும் உணர வேண்டுகின்றோம்.

அன்றியும் இதனால் சித்திரபுத்திரன் தாய்மார்களைப் பழித்துக் கூறியவனானால் ஸ்ரீ முதலியார் ‘தாழ்ந்த ஜாதி’ என்பவர்களைப் பழித்துக் கூறியதாக ஏற்படவில்லையா? என்கின்றோம்.

உண்மையை பேசும்போது அதனால் யாருக்கு பழிப்பு ஏற்படுமானாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளாது அப்பழிப்புக்கு காரணமாயுள்ளதை ஒழிக்க முயலவேண்டியதே வீரன் கடமையாகும்.

தவிர ஒளவைப் பிராட்டியாரும் திருவள்ளுவரையே அரண் செய்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒளவையாரின் ‘தையல் சொற்கேளேல்’ என்கின்ற முதுமொழியை எடுத்துக் காட்டி, அதற்கு அரணாக வள்ளுவரின் ‘பெண்வழிச் சேரேல்’ என்கின்ற வாக்கை சுட்டிக்காட்டுகின்றார். மற்றும் ‘பேதமை என்பது மாதர்க்கணிகலம்’ என்ற பிராட்டியாரின் முதுமொழியையும் கூடவே குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் ஸ்ரீ முதலியார் தனது கடைசி ஆயுதத்தை எறிந்திருக்கிறார். ஆயினும் நமக்கு கவலையில்லை. பெண்களும் மனித ஜீவன் என்பதை ஒப்புக் கொள்ளும் எவரும் இம்மூன்றையும் ஒருக்காலும் நடுநிலைமை உள்ளார் வாக்கென்றோ உண்மை ஆராய்ந்த அறிவுடையோர் வாக்கென்றோ ஒப்புக் கொள்ள முடியாதென்பதே நமது துணிபு. அங்ஙனமில்லையாயின் அவ்வக்கால நிலைக்கேற்றதென்றாவது சொல்லியாக வேண்டும். இங்கு சற்று வாசகர்களுக்கு சங்கடமுண்டாகும் என்பது நமக்குத் தெரியும். ஆகிலும் குற்றமில்லை. முதலாவது ஒளவையும் வள்ளுவரும் சகோதரர்கள் என்பது ஒரு கதை. அக்கதையே ஆதி என்கின்ற புலைச் சிக்கும் பகவன் என்கின்ற பார்ப்பனனுக்கும் பிறந்த பிள்ளைகள் ஏழில் இவர்கள் இருவர் என்று சொல்லுகின்றது. இவற்றுள் மற்றொரு விசேட மென்னவென்றால் மேல்கண்ட ஆதிக்கும் பகவனுக்கும் புணர்ச்சி முடிந்ததும் பிள்ளையை பெற்று போட்டுவிட்டு போய்விட்டதாகவும் கதை கூறப்பட்டிருக்கின்றது.

இது சம்மந்தமாக மற்றும் பல பல கதைகளும் உண்டு. அன்றியும் மற்றும் பல பல ஒளவைகள் இருந்தார்கள் என்றும் சிலர் கூறுவார்கள். எனினும் இது விஷயத்தில் புராணக் கூற்றையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு தனி அறிவைக் கொண்டு மேற்கண்ட நீதிவாக்கியங்களும் குறள்களும் யாரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை கவனியாமல் வாக்கியங்களை மாத்திரம் கவனித்து அதுபோன்ற மற்ற வாக்கியங்களுக்கு பொருள் காணுவது போலவே இவைகளுக்கும் காணுவோமானால் மேல்கண்ட முதுமொழிகளின் கருத்தான ‘பெண்கள் சொல்லைக் கேட்கக்கூடாது’ என்பதும் ‘அறியாமை என்பது பெண்களது ஆபரணம். அதாவது அவர்களின் தன்மைக்கு ஏற்றது என்பதும் “பெண்கள் இஷ்டபடி நடக்கக் கூடாது” என்பதுமே பொருளாக விளங்குகின்ற கருத்துக்கள்தான் காணக் கிடைக்கும். இனி இதற்கு விசேட உரைகளும் தத்துவார்த்தங்களும் பல பல சொல்ல பல வித்துவான்கள் முந்தக்கூடும். ஆனாலும் தத்துவார்த்தமும் விசேட உரையும் சொல்ல முடியாத சப்தங்களும் எழுத்துக்களும் வாக்கியங்களும் செய்யுள்களும் உலகத்தில் கிடைப்பது அரிது என்பது நமக்கு தெரியும். ஆதலால் இதற்கு மாத்திரம் தத்துவார்த்தமும் விசேட உரையும் கொண்டு பொருள்கூற வரவேண்டிய காரணம் அறிவாளிகளால் ஒப்புக் கொள்ளக் கூடியதாகாது. ஒளவை முதுமொழியும் வள்ளுவர் குறளும் யார் சொன்னார்கள் என்பது இங்கு காண வேண்டிய விஷயமல்ல. மற்றபடி இவ்விரண்டும் நீதி நூல்களில் சிறந்ததாக எடுத்துக் கொள்ளப் பட்டிருக் கின்றது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். ஆதலால் தான் இதைப்பற்றி பேச முன் வருகின்றோம்.

இதில் குறுக்கே நிற்கும் சங்கடம் என்னவென்றால் இவ்வளவு உயர்ந்த தத்துவங்களை கொண்ட நீதிகளை உணர்ந்தவர்கள் இவ்வளவு பெரிய பிழைகளை இழைத்திருப்பார்களா என்னும் விஷயமாகும். ஆனால் எல்லா விஷயங்களுக்கும் இவ்வாயுதத்தை உபயோகிக்க முற்படுவதால் அவ்வாயுதம் சில சமயங்களில் உபயோகிப் பவர்களையே மோசம் செய்துவிடக் கூடும். அல்லாமலும் காலதேச வர்த்தமானத்தைக் கொண்டு தான் யாரும் எதையும் சொல்லியிருக்க முடியுமேயல்லாமல் பார்ப்பனர்கள் சொல்லுவது போல் எதையும் கடவுள் சொன்னார் என்பதும் அது எப்போதைக்குமே பொருந்தியது என்பதும் இக்காலத்திற்கு பொருத்தமற்றதாகும். இவ்விரு பெரியார்களும் உண்மை யாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்நீதிநூற்கள் சொல்லப்பட்ட காலம் ஆரிய ஆதிக்கம் பரவியிருந்த காலமென்பதையாவது ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

தவிர, ஒளவை பிராட்டியார் பெய ராலோ வள்ளுவர் பெயராலேயோ சொல்லப்பட்ட நீதிகளை ஆக்கிய கர்த்தர் கள் நம்மைப் போன்ற மனிதத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை முதலா வதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்? இந்த இடத்தில் தெய்வத்தன்மைகள் என்று சொல்லப்படுவதை அதாவது மனிதத் தன்மைக்கு மேற்பட்டது என்பது எதையும் மூட்டை கட்டி வேறாக வைத்துவிட்டு பார்த்தால் தான் உண்மை விளங்கும். அப்படிக்கில்லாவிட்டால் யாரும் எதையும் சொல்ல இடமேற் பட்டு விடும். அப்படிப் பார்ப்போமானால்தான் இவர்கள் இப்படிச் சொன்ன தற்கும் நியாயம் கிடைக்கும். அதாவது அந்தக் காலத்திய நிலைமைக்கு யாராயிருந்தாலும் நீதி இப்படித்தான் சொல்லி இருக்க முடியும் என்கின்ற முடிவு காணலாம். எப்படி என்றால் கம்பர் அறிவுத்திறமுடைய கவி என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்காது. ஆனாலும் அப்படிப்பட்ட கம்பர் ராமாயணம் பாடினார் என்றால் ஆரியர் செல்வாக்குக் காலத்தில் ஆரிய ஆதிக்கத்தில் மக்களுக்கு உணர்ச்சி உள்ள காலத்தில் பாடியதானதால் அது வால்மீகி உரைத்த கருத்துகளை மாற்றி அதிலுள்ள அருவருப்புகளை நீக்கி ஆரியர்களுக்கே முழு உயர்வையும் ஆதிக்கத்தையும் வைத்து மக்கள் கொண்டாடும்படி பாடியிருக்கின்றார்.

அதுபோலவே இப்போதும் கூட எவ் வளவு அறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சி முதிர்ச்சியும் பலருக்கு இருந்தாலும் ஆரிய ஆதிக்கத்தை மறுப்பதற்கு பயப்படுகின்றார்கள். ஆரிய உயர்வையே பேசுகின்றார்கள். காரணம் ஆரியருக்குப் பயந்தல்ல வென்றும் சொல்லிக் கொள்ளலாம். மற்றென்னையோ வெனில் ஆரியப் பழக்க வழக்கமும் ஆரியர்கதைகளையே படிப்பதும் ஆரிய ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தின கடவுள் தன்மைகளையே வணங்கி வருவதும் ஆரியக் கதையை ஆதரித்து பாடுவதும் எழுதுவதும் ஆகிய குணங்களே ஆகும். எனவே இம் முறையில் குழந்தைப் பருவ முதல் வளர்ந்து சரீரத்தின் ரத்தத்தின் மூலமாகவும் மயிர்க்கால் மூலமாகவும் ஆரியத்தன்மையை ஏற்றுக் கொண்டு மூளையை நிரப்பிவைத்திருப்பவர்கள் வேறு என்ன செய்யக்கூடும். ஆதலால் அவர்கள் பரிசுத்த தன்மையும் மேன்மையும் உற்றவர்களானால் அக்காலத்திற்கேற்க கூறினார் என்பதோடு முடித்து விடுவது நன்று. அப்படிக்கில்லாமல் எக் காலத்திற்கும் ஏற்க வேண்டிய தென்போமாயின் அவைகள் குற்றம் குற்றமே. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றமே தான்.

பின்பு ஸ்ரீமான் முதலியார் சமத்துவம் என்பது பற்றி என்ன என்னமோ அவசியமில்லாத அநேகவற்றை சொல்லுகின்றார். அதைப்பற்றி இங்கு இது சமயம் ஒரு விவகாரமும் வைத்துக் கொள்ள அவ்வளவு அவசியமில்லை. ஆனால் கடைசியாக அவர் குறிப்பிடும் சமத்துவ கொள்கையை யாவது எடுத்துப்பார்ப்போமானால் அதிலும் முற்றும் முறையாய் சொல்லாமல் நழுவிவிட்டார். அதாவது “பெண்மக்கள் தமது உரிமையையும், தேவை யையும் ஆண்மக்கள் தடையில்லாமலும், ஆண்மக்கள் தமதுரிமைகளையும் தேவைகளையும் பெண்ணின் தடையின்றியும் அவர்களுக்குத் துன்ப மில்லாமலும் பெறுதலும் ஒருவர்க் கொருவர் உதவி செய்து வாழ்வதும் ஆண் பெண் சமத்துவமாகும்” என்று சொல்லுகிறார்.

ஆனால் அதே மூச்சில் “ஆண் உரிமை யாது, பெண் உரிமை யாது அன்னாரின் தனித்தனி தேவைகள் என்பவை யாவை என்பதைப் பற்றி ஆராய்வது வேறொன்று விரித்தலாகும்” என்று சொல்லிவிட்டார்.

இவ்வியாசத்தின் விவகாரத்தின் ஜீவநாடியே ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண் டும் என்பதேயாகும். அப்படி இருக்க ஸ்ரீ முதலியார் அதை ஆராய்வது வேறொன்று விரித்தல் என்னும் குற்றமாகிவிடும் என்பது உள்ளதை விரிக்கப் பயந்து மறைத்தல் என்கின்ற குற்றத்திற்கு ஆளாகுமே தவிர வேறில்லை என்று சொல்ல வருந்துகிறோம்.

தவிர “ஆணின் தன்மை, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் கொண்டு விளங்குகின்றது” என்றும் “பெண்ணின் தன்மை, அன்பு, மென்மை, சாந்தம் பேணுந்திறம் கொண்டு விளங்குகின்றது” என்றும் சொல்கின்றார். ஸ்ரீ பரமசிவ முதலியாரின் இம்முடிவுதான் திருவள்ளுவருக்கு வக்காலத்துப் பெற்று மறுப்பெழுத முன்வரச் செய்து விட்டதென்பது இப்போது நமக்கு நன்றாய் விளங்குகின்றது.

வன்மை; கோபம்; ஆளுந்திறம்; ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம்; அமைதி பேணுந்திறம் பெண்ணுக்குச் சொந்த மென்றும் சொல்வதானது வீரம்; வன்மை; கோபம்; ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம் அமைதி; பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்.

அன்றியும் மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலருக்கும் ஸ்ரீ முதலியார் குறிப்பிட்ட இருபாலார் குணங்களும் சமமாய் இருக்க வேண்டும் என்பதும் நமது கருத்தாகும். இருபாலுக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது. ஆனால் அது செயற்கையில் ஆண்களின் சுயநலத்தால் சூழ்ச்சியால் மாறுபட்டு வருகின்றது.

கர்ப்பமாகி பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகின்ற குணம் பெண் களுக்கு இருப்பதாலேயே பெண்கள் நிலை ஆண்களைவிட எவ்விதத்திலும் அதாவது வீரம், கோபம், ஆளுந்திறம், வன்மை முதலியவைகளில் மாறுபட்டு விட வேண்டியதில்லை என்றே சொல்வோம். கர்ப்பந் தரித்து பிள்ளை பெறாத காரணத்தாலேயே ஆண்மக்களுக்கு அன்பும் சாந்தமும் பேணுந் திறமும் பெண்களைவிட மாறுபட்டதாகிவிடாதென்றும் சொல்லுவோம்.

உண்மையான காதலுக்கு மதிப்புக் கொடுப்போமானால் உண்மையான காதல் இருக்குமேயானால் பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர மற்ற காரியங்கள் இரு பாலருக்கும் ஒன்று போலவே இருக்கும் என்பது உறுதி.

தவிர தற்கொண்டான் என்பதற்கு அன்பைக் கொண்டவன் என்கின்ற பொருளை வருவித்துக்கொள்ளுவது இங்கு வள்ளுவருக்கு காப்புச் செய்யக் கருதியதாகுமேயல்லாமல் குறளுக்கு நீதி செய்ததாகாது.

அன்றியும் பெண்ணிடமிருந்து ஆண் அறிய வேண்டிய குணம் இல்லை என்பதும் அப்படி இருந்தால் “தற்கொண்டாள்” என்பதாக சொல்லலாம் என்பதும் பொறுத்தமற்ற தென்றே சொல்லலாம்.

அது போலவே ‘தொழுதெழுவதையும்’ ஆணுக்கு குறிப்பிட்ட நியதி இல்லை என்பதும் பொருத்தமற்றதே யாகும். பெண்ணை கொள்ள ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொள்ள பெண்ணுக்கு உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால் பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் சம உரிமை என்பது.

இஃதில்லாதது எதுவானாலும் வன்மையும் கோபமுமே அல்லாமல் வைததல்ல என்றே சொல்லி விடுவோம்.

தவிர ஸ்ரீ முதலியார் அவர்கள் குறளில் ஆண்களுக்கும் வள்ளுவர் கற்பு கூறியிருப்பதாக சொல்லுகின்றார். இருக்கலாம், ஆனாலும் பெண்க ளுக்கு கூறியது போல் இல்லை என்றுதான் சொல்லுகிறோம் - அதாவது ஆண்களின் கற்புக்கு ஸ்ரீ முதலியார் அவர்கள் இரண்டு குறள்களை எடுத்துக் காட்டாக கூறியிருக்கிறார். அதாவது,

“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

 நிறைகாக்கும் காப்பே தலை”

“நிறை நெஞ்சமில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்

 பேணிப் புணர்பவர் தோள்”

ஆண்கள் கற்பை வலியுறுத்த கூறியதாகக் கூறுகிறார் போல் காண் கின்றது. இவைகள் அதற்காக கூறியதல்ல என்பது நமது அபிப்பிராயம்.

அதாவது, முதற் குறளுக்கு காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை. பெண்கள் தாங்களாகவே கற்பாயிருக்க வேண்டும் என்பது தான் கருத்து என்று கருதுகிறோம்.

இரண்டாவது குறள் விலைமாதரை புணர்கின்றவர்க்கு கூறிய பழிப்பு ரையே அல்லாமல் காதல் கொண்ட மற்றப் பெண்களைக் கூடித் திரியும் ஆண்களைக் குறித்து கூறியதல்ல என்பது நமதபிப்பிராயம். நிறை என்கின்ற வார்த்தை மாத்திரம் காணப்படுகின்றதே தவிர நிர்பந்தமில்லை.

ஆகவே இருபாலர்க்கும் சம நிபந்தனை குறளில் இல்லை என்பதற்கு மற்றும் பல குறள்களையும் நாம் கூறக்கூடும்.

தவிர கடைசியாக ஸ்ரீ முதலியார் நமக்கு உறுத்தும் அறிவுக்கு நாம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம். அவர் விரும்புவது போலவே ஆன்றோர் நூல்களில் ஐயம் தோன்றும் இடங்களில் ஐயவினாவாகவே எழுதி வருகிறோம். சில விஷயங்களில் தவறி இருந்தாலும் இனி அப்படியே எழுத விழைகின்றோம். ஆனால் இக்கற்பு விஷயத்தில் நாம் குறிப்பிட்ட குறளின் கருத்தில் நமக்கு ஐயமில்லை என்று கருதுவதோடு மற்றும் சில அறிஞர்களின் கருத்தையும் பெற்றோம் என்பதையும் தெரிவித் துக் கொள்ளுகின்றோம்.

மற்றும் குறள் விஷயத்திலும் குறளாசிரியர் விஷயத்திலும் நாம் கொண்டுள்ள பக்தி ஸ்ரீ முதலியார் கொண்டுள்ள பக்திக்கு மீறியதல்லவானாலும் குறைந்ததல்ல வென்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதற்கு அநேக சான்றுகள் உண்டு. மற்றபடி ஸ்ரீ முதலியார் குறிப்பிட்ட கடைசி குறள்கள் இரண்டையும் பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. ஏனெனில் சரி என்று பட்டதைச் சொல்லும் தன்மை எவனிடமிருந்தாலும் அவன் இக்குறள்கள் மாத்திரமல்ல இதுபோன்ற வசைகள் பலவற்றிற்கும் மற்றும் அநேக காரியங்களுக்கும் தயாராயிருக்க வேண்டியவன் தான் என்கின்ற முடிவால் கவலைப்படவில்லை.

('சித்திரபுத்திரன்', குடி அரசு - கட்டுரை - 12.02.1928)

Pin It