periyar on stageமனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்துவதைப் பற்றி ஆசாரச் சீர்திருத்தப் போர்வையை போர்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமான் பம்பாய் கே.நடராஜர் என்கின்ற பார்ப்பனரே வெகுதூரம் துக்கப்பட்டார் என்றால் மற்ற பிராமணர்கள் வருணாசிரம மகாநாடு கூட்டுவதில் நாம் ஒன்றும் அதிசயப்படவில்லை. ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் வருணாசிரமப் பிரசாரமும் மகாநாடும் நடத்த தைரியமுடையவர்களாயிருக்கிறார்கள் என்பது தெரிந்த பின்னும், பார்ப்பனர்களும் நாமும் சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டா என்றுதான் கேட்கிறோம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 08.01.1928)

விளங்கவில்லை

ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பு அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயம் ஒருவாரு முடிவு பெற வேண்டும் என்று பார்ப்பனத் தலைவர்களுக்கு எழுதியிருக்கின்றார். இதற்கு பார்ப்பனர்கள் ஒரே பதில் சொல்லி விட்டார்கள். அதாவது "தேசம் பெரியதே ஒழிய பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயம் பெரிதல்ல, ஆதலால் இந்த சமயத்தில் இதை எல்லாம் பேசுவது தப்பு” என்று சொல்லிவிட்டார்கள். ஸ்ரீ ஜோசப் அவர்களுக்கு இதை எழுதுவதற்கு முன்பே பார்ப்பனர்கள் இப்படித்தான் சொல்வார்கள் என்பது தெரியாமல் போய்விட்டதா? அல்லது தெரிந்திருந்தாலும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் தனக்கும் அக்கரை இருப்பதாய் காட்டிக் கொள்ளலாம் என்றா என்பது நமக்கு விளங்கவில்லை.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 08.01.1928)

Pin It