periyar and gt naiduதமிழ் நாட்டிலுள்ள பதினொரு ஜில்லாக்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானங்களில் இது சமயம் திருச்சி நீங்கலாக (அங்கு மாத்திரம் பார்ப்பன பிரசிடெண்டு) மற்ற 10 ஜில்லாக்களில் பார்ப்பனரல்லாத பிரசிடெண்டுகளே இருந்து வருகிறார்கள்.  அதாவது ஸ்ரீமான்கள் செங்கல்பட்டுக்கு          ஆ.மு.ரெட்டியும், தென்னாற்காட்டுக்கு சீத்தாராம ரெட்டியும், வடஆற்காட்டுக்கு கிருஷ்ணசாமி நாயுடுவும், சித்தூருக்கு முனிசாமி நாயுடுவும், சேலத்திற்கு எல்லப்ப செட்டியாரும், கோயமுத்தூருக்கு ரத்தினசபாபதி முதலியாரும், தஞ்சைக்கு பன்னீர்செல்வமும், மதுரைக்கு போக்ஸ் துரையும், இராமநாதபுரத்திற்கு இராமநாதபுர ராஜாவும், திருநெல்வேலிக்கு குமாரசாமி ரெட்டியாருமாக இருக்கிறார்கள்.  இது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதால் இம்மாதிரி பார்ப்பனரல்லாத கனவான்கள் வரமுடிந்தது என்பதும், அதனாலேயே பார்ப்பனர்கள் நமது ஜஸ்டிஸ் கட்சியையும் அதன் தலைவரான பனக்கால் ராஜாவையும் வெட்டிப் புதைக்க வேண்டுமென்று சொல்லுவதும், இப்பொழுது ஏற்பட்ட அரைப் பார்ப்பனரான சுப்பராய மந்திரிசபையின் மூலம் இதை மாற்றி இத்தனை ஜில்லா போர்டுகளையும் பார்ப்பன மயமாகவும், பார்ப்பன அக்கிரகாரமாகவும், பார்ப்பன அன்ன சத்திரமாகவும்,பார்ப்பன வேத பாட சாலையாகவும் ஆக்கிக் கொள்ள பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து “பகீரத பிரயதனப்”படுகிறார்கள்  என்பதும் யாவரும் அறிந்ததே.  இது காரணமாகவே நமது அரைப் பார்ப்பன மந்திரி ஒரு ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்காவது அவர்கள் மறுபடியும் தேர்தலுக்கு நிற்பதற்கு லாயக்கில்லாமல் படிக்கு மெம்பர் ஸ்தானமே நாமினேசன் செய்யாமல் ஒரே அடியாய் அடித்து விட்டார்.  

ஆன போதிலும் ஏதோ ஒரு சட்டப்படி ஏற்பட்டிருந்த சட்ட சம்மந்தமான ஆதாரத்தைக் கொண்டு செங்கற்பட்டு, தென்னாற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி முதலிய ஜில்லா போர்டு பிரசிடெண்டுகள் மறுபடியும் நின்று ஏகமனதாகவும், 4-ல் 3 பங்கு பேர்களாலும், 3-ல் 2 பங்கு பேர்களாலும்,  அதிக மெஜாரிட்டியாய் தெரிந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.  ஆனாலும் பார்ப்பனர்கள் சும்மாவிராமல் நீதி இலாக்காவில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஆணவத்தால் இத்தனை தேர்தல்கள் பேரிலும் அந்தந்த ஜில்லா கோர்ட்டுகளில் தேர்தல்களை ரத்து செய்ய வேண்டுமென்று வியாஜ்ஜியம் தொடுத்திருக்கிறார்கள்.  இவ்வியாஜியங்களில் முக்கியமான வியாஜ்ஜியமாகிய தஞ்சாவூர் ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தேர்தலைக்  குறித்ததானதும் காங்கிரஸ் தலைவர், சுயராஜ்யக் கட்சித் தலைவர்,  பார்ப்பனத் தலைவர், மாஜி அட்வகேட் ஜெனரல்,  “அவதார புருஷர்”, “ஜஸ்டிஸ் கட்சியை வெட்டி புதைத்தவர்”,  “வகுப்புத் துவேஷத்தை ஒரேயடியாய் துலைத்தவர்” ஆகிய பெருமைகள் பெற்ற ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்களே வக்கீலாக வாதித்ததுமான வியாஜ்ஜியத்தை வெள்ளிக்கிழமை மாலையில் செலவுத் தொகையுடன் தள்ளி எலக்ஷனை உறுதிபடுத்தி இருப்பதாக தந்தி வந்திருக்கிறது.  ஆனால் ஸ்ரீமான்  பன்னீர் செல்வத்தின் வக்கீலோ “மூளை இல்லாத வகுப்பு” என்கிற பார்ப்பனரல்லாதார் வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீமான் வெங்கிட்டரமணராவ் நாயுடு என்பதையும் குறிப்பிடுகிறோம்.  

இது தவிர, சேலம் ஸ்ரீமான் எல்லப்ப செட்டியார் தேர்தல் விஷயத்தில் தேர்தல் நடக்காமலிருக்கச் செய்ய சேலத்து பார்ப்பனர்கள், முக்கியமாய் ஸ்ரீமான்   சி. ராஜகோபாலாச்சாரியார் முதல் கொண்டு, மந்திரியின் கையைப் பிடித்து எழுதி வைத்தும் மந்திரியின் நிபந்தனைப்படி தேர்தல் நடந்து அதில் ஏறக்குறைய ஏகமனதாய் செட்டியார் வெற்றி பெற்றும், மறுபடியும் அதை தள்ளுபடி செய்யும்படி ஜட்ஜு கோர்ட்டில் விண்ணப்பம் கொடுத்ததல்லாமல் மந்திரியை பிடித்தும் கெஜட்டு பிரசுரம் செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.  இத்தேர்தலை மந்திரி அடியோடு நிராகரித்து விட வேண்டிய ஏற்பாடுகள் செய்தாய் விட்டது என்றும் ஒரு பார்ப்பன கனவான் அதற்கு மந்திரிக்காக தக்க காரணங்கள் காட்டி ஜட்ஜ் மெண்ட் முதலியதுகள் கூட எழுதிக் கொடுத்திருக்கிறார் என்றும், மந்திரி இலாக்காவிலுள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதை ஆnக்ஷபிக்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறோம்.  வகுப்பு துவேஷம் ஒழிந்த தன்மைக்கு இது ஒரு சாக்ஷி.             

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1927)

Pin It