(1942 ஜூலை 18,19,20 தேதிகளில் நாகபுரியில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாநாட்டின் அறிக்கை, பக்கங்கள் 100-106)

சட்டமன்ற உறுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவருமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பத்திரிகைகளில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது வருமாறு:

ambedkar 259“யுத்த மந்திரிசபையின் யோசனைகள் மன்னர் பிரான் அரசாங்கத்திடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தைக் காட்டுகின்றன. சிறுபான்மையினரின் உரிமைகள் மீது படையெடுப்பு என்று அவர்களே கண்டித்த யோசனைகளை இப்போது முன்வைத்திருப்பது வலிமை பெறுவதற்கு நேர்மையை அறவே பலிகொடுக்கப்பட்டிருப்பதையே புலப்படுத்துகிறது. இதனை மூனிச் மனோபாவம் எனக் கூறலாம். மற்றவர்களைப் பலி கொடுத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதுதான் இந்த மனோபாவத்தின் சாராம்சம். இந்த மனோபாவம்தான் இந்த யோசனைகளில் மேலோங்கியிருப்பதைக் காண்கிறோம்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திசைவழியில் இந்தியா முன்னேறுவதற்கு மன்னர்பிரான் அரசு முன்வைத்த யோசனைகளை இந்தியர்கள் வரவேற்காதது குறித்தும், இதனால் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸின் தூது தோல்வியடைந்தது குறித்தும் அமெரிக்கர்களும் பிரிட்டிஷ் மக்களும் திகைத்துப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கர்களை அவர்களது போக்குக்காக மன்னித்து விடலாம்.

ஆனால் பிரிட்டிஷ் மக்களும் சர் ஸ்டாப்போர்டு கிரிப்சும் உண்மையை நன்கு அறிந்தவர்கள். மிகச் சிறந்த யோசனைகள் என்று கூறி மன்னர் பிரான் அரசாங்கம் இப்போது முன்வைத்துள்ள இதே யோசனைகள்தான் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மன்னர் பிரான் அரசால் மிக மோசமானவை என்று வன்மையாகக் கண்டிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவை என்ற உண்மை சரிவர உணரப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மன்னர் பிரான் அரசு தனது முந்திய பிரகடனங்களுக்கு மாறாக இப்போது அரசியலமைப்புச் சட்டம் நோக்கிய முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், திடீரென்று முயற்சியில் இறங்கியிருப்பதும் மிகவும் வெட்கக்கேடானது என்று கூறவே செய்வார்கள்.

கிரிப்ஸ் யோசனைகள் மூன்று பகுதிகளைக் கொண்டவை. அவை வருமாறு:

(1) இந்தியாவுக்கு ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தரும் உரிமை கொண்ட ஓர் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்படும். இந்த சபையில் இடம் பெறுவோரில் பெரும்பாலோர் விரும்பும் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தரும் முழு அதிகாரத்தை இச்சபை பெற்றிருக்கும்.

(2) இந்தப் புதிய அரசியலமைப்பில் இந்தியாவின் தற்போதைய மாகாணங்கள் அனைத்தும் இடம்பெற மாட்டா; அந்த அரசியலமைப்புக்குக் கட்டுப்படத் தயாராக இருக்கும் மாகாணங்கள் மட்டுமே அதில் இடம்பெறும். புதிய அரசியல் அமைப்பில் சேருவதற்கோ அல்லது சேராமல் இருப்பதற்கோ மாகாணங்களுக்கு உரிமை வழங்கப்படும். இது பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும். சாதாரண பெரும்பான்மையைக் கொண்டே இந்த விஷயம் முடிவு செய்யப்படும்.

(3) அரசியல் நிர்ணய சபை பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இன மற்றும் சமய சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்துக்கும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்படும். இத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது அரசுரிமையை விலக்கிக் கொள்ளும். இதன் பிறகு, அரசியல் நிர்ணய சபை வகுத்துத் தந்த அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும்.

இதுதான் மன்னர் பிரான் அரசாங்கம் சமர்ப்பித்த திட்டத்தின் சத்தும் சாரமும். அரசியல் நிர்ணய சபை சம்பந்தமான யோசனை புதியது ஒன்றுமல்ல. போர் வெடித்ததும் அரசியல் நிர்ணய சபை சம்பந்தமான ஒரு யோசனை காங்கிரஸ் முன்வைத்தது. காங்கிரஸ் பிரேரபித்த இந்த யோசனை அச்சமயம் மன்னர்பிரான் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாகும். அரசியல் நிர்ணய சபை சம்பந்தமாக 1940 ஆகஸ்டு 14ஆம் தேதி காமன்ஸ் சபையில் திரு.அமெரி பின்வருமாறு கூறினார்:-

“காங்கிரஸ் தலைவர்கள்… சிறப்பு மிக்க ஒரு ஸ்தாபனத்தை, மிகவும் ஆற்றல் வாய்ந்த ஓர் அரசியல் எந்திரத்தை இந்தியாவில் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இந்திய தேசிய வாழ்க்கையின் எல்லா சக்திகளுக்காகவும் பேசுவதில் வெற்றி பெற்றிருந்தால், அவர்களது கோரிக்கைகள் என்னதான் அதிகமாக இருந்தாலும் நமது பிரச்சினை பல அம்சங்களில் இன்று எளிதானவையாக இருந்திருக்கும். அவர்கள் இன்று பிரிட்டிஷ் இந்தியாவில் எண்ணிக்கை ரீதியில் தனிப் பெரிய கட்சியாக இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இந்த அடிப்படையில் இந்தியாவுக்காகப் பேசும்     உரிமை அவர்களுக்கு இல்லை என்று இந்தியாவின் சிக்கலான தேசிய வாழ்வில் இடம் பெற்றுள்ள முக்கியமான சக்திகள் தம்மை வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான சிறுபான்மையினராக அல்லாமல் எந்த எதிர்கால இந்தியக் கொள்கையிலும் தனித்தன்மை வாய்ந்த சக்திகளாகத் தம்மைக் கருத வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இத்தகைய சக்திகளில் மாபெரும் முஸ்லீம் சமுதாயம் முன்னணியில் இருக்கிறது.

பூகோள ரீதியான தொகுதிகளில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அரசியல் நிர்ணய சபையால் வகுத்தளிக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். எந்த அரசியலமைப்புச் சட்ட விவாதங்களிலும் தங்களை ஒரு தனிச் சக்தியாகக் கருதப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

வெறும் எண்ணிக்கை அளவிலான பெரும்பான்மையினரின் செயற்பாடுகளுக்கு எதிரான ஒரு தனித்த சக்தி என்ற நிலையைத் தங்களுக்கு உத்தரவாதம் செய்யும் ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமே ஏற்க அவர்கள் உறுதிகொண்டுள்ளனர். ஷெட்யூல்டு வகுப்பினர் எனப்படும் ஒரு மாபெரும் அமைப்புக்கும் இது பொருந்தும். தங்கள் சார்பில் திரு.காந்தி எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் காங்கிரசால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டும் பிரதான அமைப்பான இந்து சமுதாயத்துக்கு வெளியேதான் ஒரு சமூகம் என்ற முறையில் தாங்கள் இருந்து வருவதாக அவர்கள் உணர்கின்றனர்.”

1940 ஆகஸ்டு 8 ஆம் தேதி வைசிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு விளக்கம் அளித்துப் பேசுகையிலேயே திரு.அமெரி மேற்கண்டவாறு கூறினார். இந்த அறிவிப்பில் சிறுபான்மையினருக்கு மன்னர் பிரான் அரசாங்கம் சார்பில் பின்கண்ட உறுதிமொழியை அவர் அளித்தார்:

“இப்போது இரண்டு முக்கிய விஷயங்கள் நம்முன் எழுந்துள்ளன. இந்த இரண்டு விஷயங்கள் குறித்து தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தும்படி மன்னர் பிரான் அரசாங்கம் என்னைப் பணித்துள்ளது. முதல் விஷயம் எந்த எதிர்கால அரசியலமைப்புத் திட்டம் சம்பந்தமாகவும் சிறுபான்மையினரின் நிலை குறித்ததாகும்… இந்தியாவின் தேசிய வாழ்க்கையிலுள்ள பெரிய, ஆற்றல் மிக்க சக்திகள் ஏற்காத எவ்வகையான அரசாங்க அமைப்பு முறைக்கும் அவர்கள் (மன்னர் பிரான் அரசாங்கம்) இந்தியாவின் சுபிட்ச வாழ்வு, சமாதானம் சம்பந்தமாக தங்களுக்குள்ள பொறுப்புகளை, கடமைகளை மாற்றுவது பற்றி சிந்திக்க முடியாது என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய ஓர் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் படி இந்த சக்திகளை நிர்ப்பந்தப்படுத்தும் எந்த முயற்சிக்கும் அவர்கள் உடந்தையாகவும் இருக்க முடியாது.”

அரசியல் நிர்ணய சபையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக 1941 ஏப்ரல் 23 ஆம் தேதி பேசும்போது அமெரி பின்வருமாறு குறிப்பிட்டார்:

“இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அல்லாமல், இந்தியர்கள் தாங்களாகவே வகுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பு அடிப்படையில் ஓர் இந்திய அரசியலமைப்பாக இருக்க வேண்டும். இந்திய நிலைமைகளையும் இந்தியாவின் தேவைகளையும் குறித்த இந்தியக் கண்ணோட்டத்துக்கு இணங்க அது வகுக்கப்பட வேண்டும். இதிலுள்ள ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அரசியலமைப்பும் சரி, அதனை வகுக்கும் அரசியல் நிர்ணய சபையும் சரி இந்தியாவின் தேசிய வாழ்க்கையின் பிரதான சக்திகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டின் விளைவாக தோன்றியவையாக இருக்க வேண்டும்.”

இவைதான் அரசியல் நிர்ணய சபை சம்பந்தமாக மன்னர் பிரான் அரசாங்கம் தெரிவித்த கருத்துகளும், அவர்கள் அளித்த உறுதி மொழிகளுமாகும். பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பொறுத்தவரையில், இது முஸ்லீம் லீக் முன்வைத்த கோரிக்கை. இந்த கோரிக்கையும் மன்னர் பிரான் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. இது குறித்து 1940 ஆகஸ்டு 1ல் காமன்ஸ் சபை யில் திரு.அமெரி பேசும்போது குறிப்பிட்டதாவது:

“காங்கிரஸ் ராஜ்யம் அல்லது இந்து ராஜ்யம் எனப்படும் அபாயங்களுக்கு எதிரான கருத்துப்போக்கு இந்தியாவை இந்து அரசுப் பகுதி என்றும் முஸ்லீம் அரசுப் பகுதி என்றும் முற்றிலுமாகப் பிரிக்க வேண்டும் என்று முஸ்லீம்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இத்தகைய கோரிக்கைக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பைப் பற்றி நான் எதுவும் கூறத் தேவையில்லை. நிரந்தரமான சிறுபான்மையினர் பிரச்சினையை அதற்குத் தீர்வு காணாமலேயே சிறுபிரதேசங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அது மாற்றிவிட்டது என்பதை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.”

1941 ஏப்ரல் 23 ஆம் தேதி காமன்ஸ் சபையில் பேசும்போது இந்தப் பிரச்சினை குறித்து அமெரி பின்வருமாறு கூறினார்:

“பாகிஸ்தான் கோரிக்கைக்கு குறுக்கே நிற்கும் மிகப் பெரும் நடைமுறை சிக்கல்களைப் பற்றி இங்கு நான் கூற வேண்டியதில்லை. இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை சீர்குலைக்கப் படுவதிலுள்ள பயங்கர அபாயங்களை எடுத்துரைப்பதற்கு 18ஆம் நூற்றாண்டைய இந்தியாவின் துயரமிக்க வரலாற்றையும் இங்கு நான் நினைவுகூர வேண்டியதில்லை. இன்று நம் கண்முன்னேயே காணும் பால்கன் நாடுகளின் கசப்பான அனுபவத்தை நான் எடுத்துரைக்க வேண்டியதில்லை. இந்த வகையில் பார்க்கும்போது, இந்திய நாட்டுக்கு நாங்கள் அளித்துள்ள ஒற்றுமைதான் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மிகப் பெரிய சாதனையாகத் திகழ்கிறது. அதற்காக நாங்கள் பெருமிதமடைகிறோம்.”

அரசியல் நிர்ணய சபை குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் ஓராண்டுக்கு முன்னர் வரைகூட மன்னர்பிரான் அரசாங்கம் இத்தகைய கருத்துக்களைத்தான் கொண்டிருந்தது.

அப்படியிருக்க இப்போது அரசியல் நிர்ணய சபையை அமைப்பது சம்பந்தப்பட்ட யோசனையை முன்வைத்திருப்பது காங்கிரசைத் திருப்திபடுத்துவதற்காகவும், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட யோசனை முஸ்லீம் லீகை திருப்திப்படுத்துவதற்காகவும் தான் என்பது தெளிவு. சரி, இனி தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை என்ன? இரத்தினச் சுருக்கமாகக் கூறினால் அவர்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு சாதி இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்துக்கள் அவர்களுக்கு ரொட்டிக்குப் பதிலாக கல்லைத் தருகின்றனர். அரசியல் நிர்ணய சபை என்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தவரையில் ஓர் ஏமாற்று வித்தையே ஆகும். அரசியல் நிர்ணய சபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை பற்றி எந்த சந்தேகமும் இல்லை; அரசியல் நிர்ணய சபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் பிரதிநிதிகள் எவரும் இருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் இதற்கு வகுப்புவாரி ஒதுக்கீடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அப்படியே தாழ்த்தப்பட்ட இனத்தோரின் பிரதிநிதிகள் இடம் பெற்றாலும் அவர்கள் எத்தகைய நிர்ப்பந்தமுமின்றி, சுதந்திரமாகவும், தீர்மானமாகவும் வாக்களிக்க முடியாது. ஏனென்றால், முதலாவதாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் மிகவும் சிறுபான்மை யினர்களாக இருப்பார்கள்.

இரண்டாவதாக, அரசியல் நிர்ணய சபையின் எல்லா முடிவுகளும் ஏகமனதான வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில்லை. எந்த ஒரு பிரச்சினையும் அது எத்தனை அரசியல் சட்ட ரீதியானதாக இருந்தாலும் அது பற்றி முடிவு எடுப்பதற்கு பெரும்பான்மை வாக்குகள் இருந்தாலே போதும். இத்தகைய நிலைமையில் அரசியல் நிர்ணய சபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குரல் எடுபடாது என்பது தெளிவு.

மூன்றாவதாக, மன்னர் பிரான் அரசு தெரிவித்துள்ள யோசனைகளின்படி, அரசியல் நிர்ணய சபைக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இப்போதைய முறை அரசியல் நிர்ணய சபைக்கு தாழ்த்தப்பட்ட இனப் பிரதிநிதிகளை நியமிக்கும் உரிமையை சாதி இந்துக்களுக்கு வழங்குகிறது. இத்தகைய தாழ்த்தப்பட்ட இனப் பிரதிநிதிகள் சாதி இந்துக்களின் கைக்கூலிகளாகவே இருப்பார்கள்.

நான்காவதாக, அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ்காரர்களே பெரு எண்ணிக்கையில் இருப்பார்கள். அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை கட்சியினராக இருப்பார்கள். இதனால் அச்சபையில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருபவர் என்று திரு.காந்தி என்னதான் வருணிக்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்டவர்கள் இந்திய தேசிய வாழ்க்கையில் ஒரு தனித்த, வேறுபட்ட சக்தியினர் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்படுவதை அவர் முற்றிலும் எதிர்ப்பார்.

இத்தகைய சூழ்நிலையில், அரசியல் நிர்ணய சபையில் உள்ள பெரும்பான்மைக் கட்சியின் திட்டம் இப்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை ஒழித்து கட்டிவிடும்.

அரசியல் நிர்ணய சபையின் இயல்பை உணர்ந்தவர்கள் எவரும் மன்னர் பிரான் அரசு தான் தெரிவித்துள்ள யோசனைகள் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை அநேகமாக ஓநாய்களின் முன் எறிந்து விட்டனர் என்ற முடிவுக்கே வருவர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அரசியல் சட்டப் பாதுகாப்புகளை வழங்க அரசியல் நிர்ணய சபை மறுத்துவிட்டாலும் அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்பட்டு விடாது.

ஏனென்றால் மன்னர் பிரான் அரசாங்கம் தனது யோசனைகளில் ஒரு நிபந்தனையைப் புகுத்தியுள்ளது. அதாவது அரசியல் நிர்ணய சபை பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஓர் உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதே இந்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கையின் நோக்கம் என்று சிலர் வாதிக்கலாம். இந்த ஒப்பந்த யோசனை ஐரிஷ் சிக்கலுக்கு தீர்வு காணுவதற்கு மன்னர் பிரான் அரசு மேற்கொண்ட திட்டத்திலிருந்து கடன் வாங்கப்பட்டதாகவே தோன்றுகிறது.

மன்னர் பிரான் அரசு எத்தகைய பாதுகாப்புகளை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கும் என்பது பற்றி இந்த ஒப்பந்த யோசனை எதுவும் கூறவில்லை. இது ஒரு முக்கியமான விஷயம், ஏனென்றால் புதிய அரசியலமைப்பின்படி தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான அரசியல் பாதுகாப்புகளின் தன்மை, எண்ணிக்கை, அவற்றைக் கையாளும் முறை போன்ற விஷயங்களில் மன்னர் பிரான் அரசுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழக்கூடும்.

இரண்டாவது முக்கியமான விஷயம் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதார பிரமாணமாக இருக்கபோவது என்ன என்பதாகும். இந்த ஒப்பந்தம் அரசியல் நிர்ணய சபை வகுத்துத்தரும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமா? ஒப்பந்தத்துக்கு முரணாக அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் எந்த விதியும் செல்லுபடியற்றதாக ஆக்கப்படுமா? அல்லது இந்த ஒப்பந்தம் இரண்டு அரசாங்கங்களுக்கிடையேயான அதாவது இந்திய தேசிய அரசாங்கத்துக்கும் மன்னர் பிரான் அரசாங்கத்துக்கும் இடையேயான வெறும் சம்பிரதாயபூர்வமான ஒப்பந்தமாக மட்டுமே இருக்குமா? இந்த ஒப்பந்தம் முதலில் கூறிய வகையைச் சேர்ந்ததாக இருக்குமாயின் அது நாட்டின் சட்டமாக இருக்கும்.

இந்திய அரசாங்கத்தின் சட்ட இசைவாணை அதற்கு ஆதார அடிப்படையாக இருக்கும். இவ்வாறின்றி, இந்த ஒப்பந்தம் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்குமாயின் அது நாட்டின் சட்டமாக இருக்க முடியாது, அதற்கு எவ்வித சட்ட வலுவும் இருக்காது என்பது தெளிவு. அதன் பிரமாணம் அரசியல் பிரமாணமாகவே இருக்கும்.

ஐரிஷ் சுதந்திர அரசு விஷயத்தில் நடந்தது போன்ற காரணங்களுக்காக, ஓர் ஒப்பந்தம் தேசிய அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செல்ல முடியாது. இத்தகைய ஒப்பந்தத்துக்குப் பின்னாலுள்ள ஒரே இசைவாணை அரசியல் இசைவாணையே ஆகும். இத்தகைய இசைவாணையைப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இயல்பையும் பொதுமக்களின் அபிப்பிராயத்தையும் பொறுத்திருக்கும் என்பது தெளிவு.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது பின்கண்ட கேள்விகள் எழுகின்றன: (1) ஒப்பந்த விதிகளைச் செயல்படுத்துவதற்கு மன்னர் பிரான் அரசிடம் எத்தகைய வழிமுறைகள் இருக்கின்றன? (2) இரண்டாவதாக, ஒப்பந்த விதிகளின்படி நடந்து கொள்ளுமாறு இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த மன்னர் பிரான் அரசு இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தத் தயாராக இருக்குமா? முதல் கேள்வியைப் பொறுத்தவரையில், ஒப்பந்தத்தை இரண்டு வகைகளில் செயல்படுத்தலாம்.

படைபலத்தைப் பயன்படுத்துதல், வாணிகப் போர் நடத்துதல். படைபலத்தைப் பொறுத்தவரையில் இப்பணிக்கு இந்திய சைன்யத்தின் சேவை கிட்டாது. அது முற்றிலும் புதிய இந்திய தேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும். எனவே, ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான இந்த வழிமுறையை மன்னர் பிரான் அரசு பயன்படுத்த முடியாது.

ஒப்பந்தப்படி செயல்படுமாறு தேசிய அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த மன்னர்பிரான் அரசு தனது சொந்தப் படைகளை அனுப்பும் என்று எதிர்ப்பார்ப்பதற்கில்லை. அதேபோன்று வாணிகப்போரும் சாத்தியமில்லை. இது தற்கொலைக்கு ஒப்பான கொள்கையாகும். நில ஆண்டுத் தொகைகளை வசூலிப்பது சம்பந்தமாக ஐரிஷ் குடியரசுடன் நடைபெற்ற ஐரிஷ் போர் அனுபவம் காட்டுவது என்ன? கடைக்காரர்களை ஏராளமாகக் கொண்ட ஒரு தேசம் இதை அனுமதிக்காது.

எனவே, இந்த ஒப்பந்தம் ஒரு வெத்துவேட்டாகத்தான் இருக்கப் போகிறது. இந்தியர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் மன்னர்பிரான் அரசாங்கம் இந்தப் பிரேரணைகளை முன் வைத்திருக்கிறது. ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தாங்களே வன்மையாகக் கண்டித்து நிராகரித்த அதே யோசனைகள் இப்போது இந்தியர்கள் முன் ஏன் வைக்கப்படுகின்றன என்பதை மன்னர் பிரான் அரசும் சரி, சர் ஸ்டாபோர்டு கிரிப்சும் சரி எவ்வகையிலும் விளக்கவில்லை.

அரசியல் நிர்ணயசபை அமைப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம், ஏனென்றால் அது சிறுபான்மையினருக்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் ஓர் ஏற்பாடாக இருக்கும் என்று ஓர் ஆண்டுக்கு முன்னர் மன்னர் பிரான் அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இப்போது அரசியல் நிர்ணயசபை அமைப்பதை அனுமதிப்பதற்கும் சிறுபான்மையினரை வல்லந்தப்படுத்துவதற்கும் அது தயாராக இருக்கிறது. பாகிஸ்தான் உருவாக நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஏனென்றால் அது இந்தியாவைத் துண்டாடிவிடும் என்று ஓராண்டுக்கு முன்னர் மன்னர் பிரான் அரசாங்கம் கூறிற்று.

இன்று இந்தியாவை இருகூறாகப் பிரிப்பதை அனுமதிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அரசாங்கம் சிறிதும் கூச்சநாச்சமின்றி கோட்பாட்டை எவ்வாறு காற்றில் பறக்க விடுகிறது என்பது தெரியவில்லை. யுத்தத்தின் விளைவாக மன்னர் பிரான் அரசாங்கம் மிகுந்த கிலி அடைந்து போயிருக்கிறது. என்பதுதான் இந்தக் கேள்விக்கு விடையாக இருக்க முடியும். பிரிட்டிஷ் அரசு நம்பிக்கை இழந்துபோனதன் விளைவே இந்தப் பிரேரணைகள்.

காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகளையும் லீக் முன்வைத்த கோரிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த யோசனைகளின் மூலம் அக்கட்சிகளுக்கு அளித்துள்ள சலுகைகளை எண்ணிப் பார்த்தால் மன்னர்பிரான் அரசாங்கம் எந்த அளவுக்குப் பெரும் பீதியடைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தியாவுக்கான அரசியல் அமைப்புச் சட்டம் ஓர் அரசியல் நிர்ணய சபையால் சாதாரண பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிற்று.

ஆனால் காங்கிரசின் இந்தக் கோரிக்கை சிறுபான்மையினரை வல்லந்தப்படுத்துவதாக இருந்தால் அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் உடந்தையாக இருக்காது என்று வைசிராய் அறிவித்தபோது, காங்கிரஸ் காரியக் கமிட்டி 1940 ஆகஸ்டு 22ல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் பின்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றிற்று:-

“எந்த சிறுபான்மையினரையும் கட்டாயப்படுத்துவது குறித்து காங்கிரஸ் என்றுமே எண்ணியதில்லை. அவ்வாறு செய்யும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஒருபோதும் வலியுறுத்தியதும் இல்லை. அவ்வாறிருக்கும்போது முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசியல் நிர்ணய சபை மூலம் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை ஒரு நிர்ப்பந்த நடவடிக்கையாக தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதையும், சிறுபான்மையினர் பிரச்சினை இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் தடைக்கல்லாக ஆக்கப்பட்டிருப்பதையும் கண்டு கமிட்டி மிகவும் வருந்துகிறது.”

காரியக் கமிட்டி மேலும் கூறியதாவது:

“சிறுபான்மையினரின் உரிமைகள் அவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் உடன்பாடு கண்டு முழு அளவுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.”

சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய முடிவு அரசியல் நிர்ணய சபையின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கூட கோரவில்லை என்பதையே இது காட்டுகிறது. எனினும் இந்த சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த பிரச்சினைக்கு முடிவு காணும் கூடுதல் உரிமையை மன்னர் பிரான் அரசாங்கம் அவர்களுக்கு அளித்தது. பாகிஸ்தான் பிரச்சினையிலும் இதே போக்கு கடைப்பிடிக்கப்பட்டதைக் காணலாம். பாகிஸ்தான் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று முஸ்லீம் லீக் கோரவில்லை.

முஸ்லீம் லீக் கோரியதெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் அடுத்தமுறை திருத்தியமைக்கப்படும்போது முசல்மான்கள் பாகிஸ்தான் பிரச்சினையை எழுப்புவதைத் தடுக்கக்கூடாது என்பதேயாகும். ஆனால் இப்போதைய யோசனைகள் மேலும் ஒருபடி மேலே சென்று, பாகிஸ்தானைத் தோற்றுவிக்கும் உரிமையை முஸ்லீம் லீகுக்கு அளித்துள்ளன. இவை அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட யோசனைகள், இந்துக்களும், முசல்மான்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும், சீக்கியர்களும் முழு மனதோடு பங்கு கொள்ளக் கூடிய ஒரு யுத்தத்துக்கு இந்தியாவை வழிநடத்திச் செல்லும் நோக்கம் கொண்டவை.

அப்படியிருந்தும் சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் மன்னர் பிரான் அரசாங்கத்தின் அனுமதியுடனோ அல்லது அனுமதி இல்லாமலோ பிரதான கட்சிகளுக்கும் சிறு கட்சிகளுக்கும் இடையே பாரபட்சம் காட்டினார். எவற்றின் சம்மதம் அவசியமோ அவை பிரதான கட்சிகள் எனப்படுகின்றன. எவற்றுடன் கலந்தாலோசனை செய்வது மட்டும் போதுமானது என்று கருதப்படுகிறதோ அப்படிப்பட்ட கட்சிகள் சிறு கட்சிகள் எனப்படுகின்றன.கட்சிகளை வேறுபடுத்திக் காண்பதில் இது ஒரு புதுவகையான முறையாகும்.

மன்னர் பிரான் அரசாங்கமோ, வைசிராயோ தமது முந்திய அறிக்கைகளில் இதை ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. ‘இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் பிரதான சக்திகளின் சம்மதம்’ பற்றி அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.”

தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்த வரையில், எந்த ஓர் அறிக்கையிலும் முஸ்லீம்களுக்கு தரப்பட்டுள்ள இடத்துக்குக் கீழான இடம் தரப்படுவதை நான் பார்த்ததில்லை. 1941 ஜனவரி 10 ஆம் தேதி பம்பாயில் வைசிராய் நிகழ்த்திய உரையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை முசல்மான்களுடன் இணைத்துக் கூறியிருப்பதைக் காணலாம். அவரது உரையிலிருந்து ஒரு மேற்கோளை இங்கு தருகிறேன்:

“சிறுபான்மையினர்கள் இடையறாது பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இவர்களில் மாபெரும் முஸ்லீம் சிறுபான்மையினரையும் ஷெட்யூல்டு வகுப்பினரையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். கடந்த காலத்தில் சிறுபான்மையினருக்கு பல உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களது நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த உத்தரவாதங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை.”

ஆனால் இப்போது பரஸ்பரம் பகைமையை உண்டு பண்ணக்கூடிய வகையில் சிறுபான்மையினர் பிரித்துக் காட்டப்படுகின்றனர்; இதனால் அவர்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அரசியலமைப்பு ரீதியில் பார்க்கும்போது நாட்டில் இது அமைதிக்கேட்டையும் விசுவாசமின்மையையுமே தோற்றுவிக்கும். ஏற்கெனவே இதர நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டவர்களின் நட்பைப் பெறுவதற்காக செய்யப்படும் இந்த முயற்சியில் தங்களது உண்மையான நண்பர்களை இழக்க நேரிடும் என்பதை பிரிட்டிஷார் கவனத்தில் கொள்ள வேண்டும். மன்னர் பிரான் அரசு தீடீர் குட்டிக்கரணம் அடித்துள்ளதையே இந்த கிரிப்ஸ் யோசனைகள் காட்டுகின்றன.

சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் படையெடுப்பு என்று தாங்களே வருணித்த அதே யோசனைகளை இப்போது முன்வைத்திருப்பது வலிமை பெறுவதற்காக நேர்மை பலியிடப்பட்டிருப்பதையே காட்டுகிறது. இது மூனிச் மனோபாவமே தவிர வேறல்ல. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்களைப் பலியிடுவதே இந்த மனோபாவத்தின் சாரமாகும்.

இந்த மனப்போக்கே இந்த யோசனைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு நான் கூறும் யோசனையாகும்.

நேர்மைக்கும் நீதிக்கும் அவர்களால் போராட முடியவில்லை என்றால், தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் அவர்கள் வாய்மூடி மௌனமாக இருப்பதே உசிதம். அதன் மூலம் குறைந்தபட்சம் தங்களது மரியாதையையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

 

Pin It