இந்திய தேசத்தாலும், இந்திய முஸ்லிம்களாலும் மறக்கப்பட்ட மாபெரும் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள். இந்திய தேசத்திற்கும், முஸ்லிம்களுக்கும் வரப்பிரசாதமாக கிடைத்தவர். சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். கல்லூரியில் படிக்கும் போது மகாத்மா காந்தி அவர்களின் ஒத்துழையாமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று தனது படிப்பை பாதியில் கைவிட்டு சுதந்திர போராட்டத்தை கைக்கொண்டார். 

kayithe milladஅது முதல் மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 1920 முதல் பல்வேறு சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டார். இவரின் வீரியமான செயல்பாடுகளை பார்த்து 1936 ல் ஜின்னா அவர்கள் முஸ்லிம் லீக்கில் சேர்ந்து தேச விடுதலைக்கு பாடுபடுமாறு பணிந்தார். அதை உடனே ஏற்றுகொண்டார் காயிதே மில்லத். அதுமுதல் இந்திய தேசமும், முஸ்லிம்களின் நலன்களும் தனது இரு கண்களாக எண்ணி செயலாற்றினார்.

தனது உழைப்பால் சென்னை மாகாண முஸ்லிம் லீக் தலைவராக உயர்ந்து தீவிரமாக பணியாற்றினார். 1946 ல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக்கிற்கு 29 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், எதிர்கட்சியாக தேர்வு பெற்றது. அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்று 1946 முதல் 1952 வரை சிறப்பாக பணியாற்றினார். தேசப்பிரிவினையின் போது முஸ்லிம் சமூகம் எண்ணிலடங்கா துன்பங்களை எதிர்கொண்டது. பேரறிஞர். அண்ணா ஒருமுறை கூறினாரே "தமிழக அரசிற்கு அரண் காயிதே மில்லத்" என்று அதுபோல முஸ்லிம் சமூகத்தை காக்கும் அரணாக, அவர்கள் மீது எறியப்படும் கற்களை தடுக்கும் கேடயமாக விளங்கினார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

காயிதே மில்லத் அவர்கள் சமுதாய ஐக்கியத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து உழைத்தார்கள். "ஒற்றுமை என்னும்போது இங்கும் அங்கும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டும். விட்டுக்கொடுத்தல் இல்லாவிட்டால் ஐக்கியமில்லை. ஐக்கியம் இல்லாவிட்டால் சமுதாயத்தில் ஒன்றுமே சாதிக்க முடியாது" என்று பல இடங்களில் வலியுறுத்தி பேசினார். இந்திய முஸ்லிம்களையும், அவர்களின் தேசப்பற்றையும் சிலர் பலித்து பேசும் போதெல்லாம் உறுதியான பதில் தருவதில் முனைப்பு காட்டினார். "இந்தியா எங்கள் தாய்நாடு நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவுக்கு யார், யார் விரோதிகளோ அவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கும் விரோதிகள்" என்பதை உரக்க கூறினார்.  இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானின் கைக்கூலிகள்; அவர்கள் பாகிஸ்தானிற்கு போக வேண்டும் என்று இப்போது மட்டுமல்ல அப்போதும் சில தீய சக்திகள் கொக்கரித்தன. அவர்களுக்கு காயிதே மில்லத்தின் பதில் இதுதான். "இந்த நாட்டில் பிறந்த கொசுவைக்கூட, 'அந்நிய நாட்டுக்கு போ' எனக்கூறும் உரிமை இந்த நாட்டில் எவருக்கும் இல்லை" இதன் மூலம் முஸ்லிம்களை வேறு நாட்டிற்கு  போக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்கூறினார்.

பாகிஸ்தானில் கடைசியாக கூடிய ஒன்றுபட்ட முஸ்லிம் லீக்கின் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை அனைவரையும் ஆச்சர்யம் கொள்ள வைத்தது. இந்திய முஸ்லிம்களின் என்ன ஓட்டத்தை தெளிவாக படம் பிடித்து காட்டியது.  "நேற்றுவரை நாம் அனைவரும் ஒரே நாட்டின் சகோதரர்கள். இன்றுமுதல் நாம் வேறு, வேறு நாட்டினர். மதத்தால் நாம் இஸ்லாமியர்கள். ஆனால், நான் இந்தியன்! நீங்கள் பாகிஸ்தானியர்கள். இதை இருவரும் மறக்கலாகாதாது. எந்த சூழ்நிலையிலும் இந்திய முஸ்லிம்கள் பிரச்சனையில் தலையிட உங்களுக்கோ, உங்கள் நாட்டிற்கோ உரிமை இல்லை" என்று அவர்கூறியதை பலரும் வியப்பாக பார்த்தனர்.

முஸ்லிம் லீக் மீதும், முஸ்லிம்கள் மீதும் பல்வேறு அவதூறான குற்றச்சாட்டுகள் வீசப்பட்டபோது; பொறுமையாக, நிதானமாக பதில் அளித்தார். தனது உன்னத நோக்கத்தை மக்களிடம் நேரிடையாக கொண்டு சென்றார். "இந்தியாவில் எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சமமாகவும், கண்ணியமாகவும் வாழ வேண்டும், நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் லட்சியம், குறிக்கோள். நாட்டின் கண்ணியத்தை காப்பாற்றவும், பாதுகாப்பை பேணவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் உழைப்பதே எங்கள் குறிக்கோள். சிறுபான்மை மக்களின் நியாயமான உரிமைகளையும், நலன்களையும், பாதுகாப்பதே எங்கள் லட்சியம். அனைத்து சமூக மக்களிடையேயும் ஐக்கியத்தையும், நல்லென்னத்தையும் வளரச் செய்வது எங்கள் லட்சியம்" என்று மக்கள் மன்றங்களில் முழங்கினார்.

"தமிழ்தான், இந்த நாட்டின் அரசாங்க மொழியாக இருக்க தகுதி வாய்ந்த மொழி" என்று இந்திய அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்தார். தமிழ்மொழிக்காக மிகவும் வாதாடினார். இந்தி ஆதிக்கதிற்கெதிராக தனது போராட்டத்தை நாடாளமன்றதிலும், மக்கள் மன்றத்திலும் தனது உரைவீச்சால் செலுத்தினார். இந்தி வெறியர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்தினார். "மொழி வெறியர்கள், 'இந்தி' என்ற பெயரில் முதலில் எழுத்தை கொண்டு வந்து, முடிவில் அனைத்தையும் அழித்து விடுவார்கள்".  அதேநேரத்தில் அவர் எந்த மொழியின் மீதும் காழ்ப்புணர்வுடன் செயல்படவில்லை. எதையும் கண்மூடித்தனமாகவும் எதிர்த்ததும் இல்லை.  "நான் எந்த மொழியையும் வெறுப்பவனல்ல. இந்தி மொழி உட்பட எல்லா மொழிகளையும் நேசிக்கிறேன். சிறுபான்மை மொழிகள் மீது இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படும் போதுதான் எதிர்க்கிறேன்" என்று விளக்கினார்.  தமிழுக்காக எப்படி பலர் போராடுவதற்கு முன்பே அரசியல் நிர்ணய சபையில் வாதாடுனீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்; அவர் தமிழை எந்த அளவிற்கு சுவாசித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. "தமிழின் அழகு, இயற்கை, இன்பம், வாய்மை, தரம் என இத்தனை சிறப்புகளும் தமிழுக்கேயன்றி வேறு மொழி எதற்கும் இல்லை என்பதால்தான், அதனால்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று அப்போது கூறினேன்".

காயிதே மில்லத் அவர்கள் முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தார். கல்வி முன்னேற்றம் குறித்து தீவிரமாக அவர் சிந்தித்ததின் விளைவால் ஏற்படுத்தப்பட்டதுதான் "தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கம்". இந்த சங்கத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு புதிய கல்லூரிகள் கட்டும் முடிவை எடுத்தார். அதன் மூலம் உருவானதே சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முஹமது கல்லூரி போன்றவைகள். கேரளா, அதிராமபட்டினம் போன்ற இன்னும் பல இடங்களில் இதற்கான வேலைகளை துவக்கினார்.

இந்திய தேசத்தில் யாரும் தொடமுடியாத எல்லைகளை தொட்டவர் காயிதே மில்லத் அவர்கள். சுதந்திர போராட்ட வீரர், 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், 1962 முதல் 1972 வரை நாடாளமன்ற உறுப்பினர். கேரளா மஞ்சேரி தொகுதியில் நாடாளமன்றதிற்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் ஒருமுறை கூட அவர் அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ததில்லை என்பது தனிச்சிறப்பு. மிக எளிமையாகவே தனது வாழ்கையை அமைத்துக்கொண்டார். கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வர கார் வாங்கி தருகிறேன் என்று பலர் கூறியபோதும் தனக்கு அது தேவையில்லை என்று மறுத்து கடைசி வரை பேருந்து, ஆட்டோ, ரயிலிலே பயணம் சென்று வந்தார்.

மற்றவர் தன்னை எவ்வளவு விமர்சித்தாலும், எவ்வளவு கடுமைகள் காட்டினாலும் அதற்கு மிக கண்ணியமாகவே பதிலளிப்பார். அதனால்தான் அரசியலை கடந்து பல தலைவர்களும் அவரை போற்றினார்கள்.  "காயிதே மில்லத் பொறுமையின் பூஷணம், அடக்கத்தின் மொத்த உருவம், நாகரிகத்தின் நற்பண்பின் சிகரம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக தோன்றி இருக்கிறார். தொகுதிக்கு சென்று தனக்காக பிரச்சாரம் செய்யாமலேயே பெரு வெற்றி பெறுவதில் காயிதே மில்லத்திற்கு இணையான ஒரு பெருந்தலைவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் காண முடியாது". என்று அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கூறினார்கள்.

"பல இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டிற்கு தோல் கொடுத்தவர் காயிதே மில்லத் அவர்கள்" என்று முன்னாள் பிரதமர்  இந்திரா காந்தி அவர்கள் கூறினார்கள். 

"இந்தியாவில் ராஜாஜிக்கு அடுத்து இடத்தில வைத்து பார்க்கப்பட வேண்டிய தலைவர்" என்று ம.பொ.சி. அவர்கள் கூறினார்கள். 

"அண்ணாவின் மறைவுக்கு பிறகு இவரே எங்களுக்கு தமையனுக்குத் தமையனாய் விளங்கி வந்தார்" என்று காயிதே மில்லத் குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் எம்ஜிஆர்.

காயிதே மில்லத் அவர்களின் மரணத்தை அறிந்து அவரை பார்க்கவேண்டும் என்று தள்ளாத வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள். "அவருக்கு பதில் என் உயிர் போயிருக்கக்கூடாதா" என்று அவர் கதறிய காட்சி அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது. பெரியார், காயிதே மில்லத் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இந்திய தேசத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பல இக்கட்டான காலகட்டத்தில் கிடைத்த ஒரு சிறந்த தலைவர் காயிதே மில்லத். அவரை இந்திய ஆட்சியாளர்கள் மறந்திருந்தாலும், நாம் மறக்கலாகுமா? இந்திய முஸ்லிம்கள் அவரை போற்ற வேண்டியது மட்டுமல்ல; பின்பற்றவும் வேண்டும். இன்று இந்திய முஸ்லிம் சமூகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைக்கும் அவரிடம் தீர்வு இருக்கிறது. அவரை இன்னும் நாம் நெருங்க வேண்டும். அவர் எப்படி அனைத்தையும் எதிர்கொண்டார் என்பதை நாம் அறிந்துகொள்வது இக்காலகட்டத்தின் அவசியம். இந்தியனாக, தமிழனாக, முஸ்லிமாக, அரசியல்வாதியாக எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திவிட்டு சென்றவர் அவர். காயிதே மில்லத் அவர்களை நினைவுகூர்ந்து போற்றுவோம், பின்பற்றுவோம்!! அது நமது கடமை.

- வி.களத்தூர் சனா பாரூக்

Pin It