சிறுத்தைப் புலிகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால்  சிறுத்தைக்கும் சிறுத்தைப் புலிகளுக்குமான வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சிறுத்தைகள் இன்று இந்திய வனப் பகுதிகளில் இருந்து முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. இன்றைய இந்திய வனப் பகுதிகளில் இருப்பது சிறுத்தைப்புலி மட்டுமே. சிறுத்தைகள் தென் ஆப்ரிக்க புகுதியில் தொடங்கி இந்திய வனம் வரை பரவி இருந்தது. அனால் இன்று ஆப்ரிக்காவில் மற்றும் ஈரானில் (மிக குறைந்த அளவில் ஆசியா சிறுத்தைகள் இங்கு மட்டுமே) மட்டுமே உள்ளது. மாறாக சிறுத்தைப் புலி தென் ஆப்ரிக்க தொடங்கி இந்திய வனம் மட்டுமல்லாது ரஷ்யாவின் கிழக்கு பகுதி முதல் கம்போடிய , லாவோ பகுதி வரை பரவி உள்ளது. ஆனாலும் தொடர் வேட்டைகளால் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.

leopard_360சிறுத்தை உடலில் கரும் புள்ளிகள் உடல் முழுவதும் இருக்கும். ஆனால் சிறுத்தைப் புலியின் உடலில் தலை மற்றும் கழுத்து பகுதியில் கரும் புள்ளிகளும், உடல் பகுதியில் ரோஜா இதழ்களின் மடிப்பு போன்ற கரும் பட்டைகளும் (பல கோண வடிவம் ) இருக்கும். சிறுத்தை அளவுக்கு சிறுத்தைப் புலிகளால் ஓட முடியாது.

அதே போல சிறுத்தைப் புலிகள், ஜாக்வார் (ஜாக்வார் - இதற்கு சரியான தமிழ் பெயர் இருந்தால் வாசகர்கள் தெரியப்படுத்தவும்) போல இருந்தாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஜாக்வார் உடலில் இருக்கும் பல்கோண வடிவ கரும் பட்டைகள் சிறுத்தைப் புலிகளை விடப் பெரியதாக இருக்கும்.

165 செ.மீ நீளமும் 80 செ.மீ உயரமும் இருக்கும் சிறுத்தைப் புலி, 91 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். தன் உடலின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட உணவை மரத்தின் மேல் கொண்டு செல்லும் வலிமை உடையது. பொதுவாக மரத்தில் மேல் அமரும் சிறுத்தைப் புலி, தன் உணவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க, மரத்தின் மேல் கொண்டு செல்லும். சிறுத்தைப் புலிகளின் வாழ்விடங்களைப் பொருத்து அவற்றின் நிறத்தில் சிறிய மாறுபாடு காணப்படும். நிறக் குறைபாடு காரணமாக, உடல் முழுவதும் கருமை  நிறத்தில் இருக்கும் சிறுத்தை புலி, கருஞ்சிறுத்தை என்றழைக்கப்படுகிறது.

பொதுவாக சிங்கமும் புலியும் ஒரே வனப்பகுதியில் வாழாது. சிங்கம் வாழ சமவெளிப் பகுதியும், புலிகள் வாழ அடர்ந்த காடுகளும் தேவைப்படுகிறது. ஆனால் சிறுத்தைப் புலி இந்த இரண்டு விலங்குகளும் வாழும் வனப் பகுதிகளில் வாழும் தன்மை பெற்றது. நான்கு மாத பேறுகாலத்தில் இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை போடும். ஆனால் அவற்றின் ஐம்பது சதவீதம் மட்டுமே முதல் வருடத்தைக் கடக்கின்றன.

உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறும் சிறுத்தைப் புலிகளை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் மட்டுமே இயற்கையை சமநிலையில் வைத்திருக்க முடியும்.

- பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It