நரம்பியல் அறுவை சிகிச்சை முறையில் இந்த புதிய கிராபின் (Graphene) சிகிச்சை மருத்துவரீதியில் முதல் முயற்சி. கிராபின் சிப் பதித்து மூளைக் கட்டிகளை அகற்றும் புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
புற்றுநோய் செல்களை கண்டறிய உதவும் இந்த கருவி அதன் கண்டுபிடிப்பாளர்களுக்கு நோபெல் விருதைப் பெற்றுத் தந்தது. புரட்சிகரமான இந்த கருவி மூளைப் புற்றுநோய் கட்டிகளை அறுவை செய்து அகற்ற உதவுகிறது. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்படும் இந்த முதல்முயற்சி மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனை என்று கருதப்படுகிறது. ஆரோக்கியமான நரம்பு திசுக்களுடன் ஒப்பிட்டு மூளையில் பொருத்தப்படும் இந்த சிப் புற்றுநோய் செல்களை உமிழப்படும் மின் சமிஞ்ஞைகளின் வேறுபாடுகளைப் பயன்படுத்தி துல்லியமாகக் கண்டறிகிறது.ஒரு தபால் தலையின் அளவில் இருக்கும் கிராபினால் செய்யப்பட்ட இந்த கருவி துரு பிடிக்காத எஃகை விட இருநூறு மடங்கு வலிமையானது; ஓர் அணுவளவே அடர்த்தி உடையது. கிராபின் மான்ச்செஸ்ட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே ஜைம் (Andre Geim) மற்றும் கான்ஸ்டண்டின் நோவோஸ்லவ் (Konstantin Novoselov) ஆகிய விஞ்ஞானிகளால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர்களுக்கு 2010ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபெல் விருது வழங்கப்பட்டது.
கிராபின் கண்டுபிடிக்கப்பட்டது முதல் விஞ்ஞானிகள் இதன் மகத்தான கடத்தும் பண்புகளைப் பயன்படுத்தி இதை புதிய மின் மற்றும் ஈர்ப்பு விசை உணரிகள், மற்ற கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
என்றாலும் இப்போது ராயல் சல்போர்டு மருத்துவமனையில் (Salford Royal hospital) பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த நெகிழ்வுத் தன்மையுடைய, மூளையில் பொருத்தக்கூடிய சிப் மருத்துவ உலகில் முதல் முயற்சி என்று போற்றப்படுகிறது.
“கிராபினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த புதிய கருவி இப்போது உலகில் முதல்முறையாக மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது” என்று ஆய்வுக் குழு தலைவர்களில் ஒருவரும் மான்ச்செஸ்ட்டர் நானோ மருத்துவத் துறை பேராசிரியர்களில் ஒருவருமான காஸ்ட்டஸ் கொஸ்டேலோஸ் (Kostas Kostarelos) கூறுகிறார்.
மூளை கணினி இடைநிலை (The brain-computer interface (BCI)) என்று அழைக்கப்படும் இந்த கருவி முன்பு கண்டறிய முடியாத அதிர்வெண்களை மின் தூண்டல்களாக மாற்றி கண்காணிக்க உதவும் வகையில் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழுவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
முதலில் இது புற்றுநோய் செல்களுக்கும் ஆரோக்கியமான செல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் மூளை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொள்ள முடியும். இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 12,700 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். இந்த நோய்க்கான சிகிச்சையில் எட்டப்படும் எந்த ஒரு சிறிய முன்னேற்றமும் ஒரு பெரிய சாதனையே.
இக்கருவியின் கண்டுபிடிப்பிற்குப் பின்னால் செயல்பட்ட ஆய்வுக் குழுவினர் பல்வேறு நோய்க் காரணிகளால் பாதிக்கப்பட்ட புற்றுநோய் செல்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். ஆரோக்கியமான செல்கள் மின் சமிஞ்ஞைகளை எவ்வாறு கடத்துகின்றன என்பதை சரியாகப் புரிந்து கொள்வதன் மூலம் இதை பக்கவாதம், வலிப்பு போன்ற வேறு பல நோய்களைக் கண்டறியவும் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
“இந்த கண்டுபிடிப்பு நரம்பியல் குறியீடுகளைப் புரிந்துகொள்ள, ஒரு மருத்துவ சிகிச்சையாக பயன்படுத்த உதவும். மருத்துவ உலகில் இது ஒரு மைல்கல்” என்று மூளை ஆய்வு மற்றும் சிகிச்சையில் கிராபினைப் பயன்படுத்துவது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய இன் ப்ரயின் நியூரோ எலக்ட்ரானிக்ஸ் (Inbrain Neuroelectronics) என்ற நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவரான காரலைனா அக்விலா (Carolina Aguilar) கூறுகிறார்.
மூளையில் இருக்கும் செல்கள் மின் தூண்டல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. இது நம் எண்ணங்கள், நடத்தை மற்றும் உலகைப் பற்றிய நம் கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. என்றாலும் இந்த செல்கள் இந்த வழியில் எவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன என்பதைக் கண்காணிப்பது விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய தலைவலியாக உள்ளது.
“மூளை செல்களால் உமிழப்படும் சில மின் சமிஞ்ஞைகளை நம்மால் ஆராய முடியும். ஆனால் மிகக் குறைந்த அல்லது மிக உயர்ந்த அதிர்வெண் உடைய சமிஞ்சைகளை உயிருள்ள ஒரு மூளையில் கண்டுபிடிப்பது மிகக் கடினம். தற்போது நடுத்தர அளவு அதிர்வெண் உள்ள சமிஞ்ஞைகளை மட்டுமே நம்மால் கண்காணிக்க முடியும். ஆனால் இந்த புதிய பி சி ஐ சிப் மூளையில் மிகக் குறைந்த மற்றும் மிக அதிக அதிர்வெண்கள் உடய பெருமளவு சமிஞ்ஞைகளை துல்லியமாகக் கண்டறிய உதவும்” என்று காஸ்ட்டஸ் கொஸ்டேலொஸ் கூறுகிறார்.
இந்த கருவியைப் பயன்படுத்துவதற்காக மண்டையோட்டின் ஒரு சிறிய பகுதி அகற்றப்படுகிறது. ஆயிரக்கணக்கான மின் தொடர்புகளைக் கொண்ட சிப் பாதிக்கப்பட்டவரின் மூளையின் மேற்பகுதியில் வைக்கப்படுகிறது.
மூளை செல்களை தூண்ட டிரான்ஸ்மிட்டர்கள் மின் சமிஞ்ஞைகளை அனுப்புகிறது. சிறிய ஏற்பிகள் இதை பெற்று பதில் வினை புரிகின்றன. நரம்பியல் செல்கள் போல் இல்லாமல் புற்றுநோய் செல்கள் மின் தூண்டல்களுக்குப் பதில் வினை புரியாது. இது கட்டிகளுக்கு மிக அருகில் இருக்கும் நியூரான்களை அடையாளம் காண ஆய்வாளர்களுக்கு உதவுகிறது.
பேச்சுடன் தொடர்புடைய மூளையின் பகுதிகளில் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஆய்வாளர்கள் அறுவை சிகிச்சையை அதிக கவனத்துடன் மேற்கொள்வர். கிராபின் சிப்பின் வழிகாட்டுதலுடன் விஞ்ஞானிகள் நோய்வாய்ப்பட்ட செல்களை துல்லியமாகவும் நம்பிக்கையுடனும் நீக்குவர். மூளையின் குறைந்த மற்றும் உயர் அதிர்வெண் சமிஞ்ஞைகளை கண்டுபிடிக்க உதவும் இந்த சிப்பின் திறன் பிற காரணங்களுக்காகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பக்கவாதம், வலிப்பு நோய்களால் பாதிக்கப்பட்ட மூளையின் பகுதிகள் மிகக் குறைந்த அதிர்வெண் சமிஞ்ஞைகளையே வெளியிடுகிறது. இந்த புதிய தொழில்நுட்பம் ஒருவர் இந்த நோய்களில் ஒன்றால் பாதிக்கப்படும்போது உடனடியாக என்ன நடக்கிறது என்பதை அறிய முடியும்.
கிராபினின் மகத்தான பண்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த தொழில்நுட்பம் மூளையில் நேரடியாக அறுவை சிகிச்சை செய்யவும் மூளை செல்களின் செயல்பாடுகள் பற்றி அறியவும் நோயுற்ற நிலையில் செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்வது பற்றிய புதிய புரிதல்களை நமக்குத் தரவும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.